பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15


தொல்லை களையும் உபத்திரவங்களையும் தந்து கொண்டிருந்தாரோ அதே நிலைதான் மீண்டும் உருவானது. இந்தக் குறை கஸ்தூரி பாயிடம் இல்லை!

இளம் வயதுக் காந்தியிடம் பெருங்குறைகள் குடி கொண்டிருந்தன. பாரிஸ்டர் படிப்புக்காக மூன்றாண்டுக் காலம் இங்கிலாந்தில் இருந்து அனுபவம் பெற்ற பின்பும், பாரிஸ்டர் பட்டம் பெற்ற கல்வித்துறை அறிவு இருந்தும் கூட கல்வி அறிவு அறவே அற்ற கஸ்தூரி பாய் மீது அவர் கொண்ட பழைய அழுக்காறுகள் நீங்கியபாடில்லை!

தீய நண்பன் மூட்டிவிட்ட பொய்யுரை, கற்பனைப் பழி காந்தியை விட்டு அகலவில்லை. சிறு சிறு குடும்ப விஷயங்களுக்கு எல்லாம் கூட அவர் மனைவி மீது சந்தேகப்படும் நிலைவெட்ட வெட்டத் துளிர்க்கும் மரமாக முளைத்தது.

இங்கிலாந்தில் இருந்தபோது கஸ்தூரி பாய்க்கு படிக்க, எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவார்! ஆனால், தந்தை இறந்த போதும் அவரின் சிற்றின்ப ஆசை விடாததைப் போன்று, இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்ட பிறகும் கூட சிற்றின்ப உணர்வு அவரை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.

ஒரு முறை அவர் மனைவியைத் தாய் வீட்டுக்குக் கோபமாக, துன்புறுத்தி அனுப்பிவிட்டார். அங்கே கஸ்தூரிபாயும் மனம் நொந்திருந்தார். ஆனால் சிற்றின்ப உணர்வால் உந்தப்பட்டு அவரை மீண்டும் அழைத்து வந்தார்.

xxx