பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேஷ் தன்னுணர்வு பெற்றார்; இறுகிச் சில்லிட்டிருந்த உதடுகளில் பற்கள் தெரிய, மாம்பழக் கீற்றாகப் புன்னகை ஒன்று வாய் பிளந்தது.

“வாங்க, மிஸ்டர் மகேஷ்!” என்று குடும்பத்தின் தலைவர் ரஞ்சித் தம் தம் பங்கிற்கும் முகமன் மொழிந்தார்.

ஆறுதல் சுவீகாரம் எடுத்துக்கொண்ட அமைதியில், மகேஷின் முறுவல் வாய் கொண்ட மட்டிலும் விரிந்தது: பெருக்கெடுத்த வேர்வையில் ‘ஜோஸ்’டவல் நனைகிறது!---- எர்ணாகுளத்தில் ஜோஸ் ஜங்க்ஷன் ஸ்தலத்தில், கன்னி இளமானாகக் கண்ணடித்துக் கொண்டிருக்குமே ஜோஸ் துணிக்கடை, அக்கடையின் முதலாளியான எம்.எம்.மேனோன் இவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட புள்ளி; ஆப்த சிநேகம். ஒரு திருவோணச் சமயத்திலே, மேனோன் சிநேகம் ரஞ்சித் தம்பதியருக்கும் கிட்டியது: பாபுவுக்கு மலையாளம் ஒட்டியது!

“மகேஷ் ஸாரே! சுகம்தன்னே? எந்தா விசேஷம்?” என்று குரலை நீட்டி இழுத்துக் குசலம் விசாரித்தான் வாண்டுப் பயல் பாபு; வாயெல்லாம் நெய் மணக்க, அன்பும் மணக்க விசாரணை செய்தான்.

மகேஷூக்கு வாயெல்லாம் பல்!--இப்போதெல்லாம் பாபு தன்னை ‘அங்கிள்’ என்று விளிக்காதது அவர் மனத்தை என்னவோ பண்ணியது. ஆக, தன் நெஞ்சுக்குத் தற்போது ஓர் உணர்வு மாற்றம் தேவை என்பதைப் புரிந்துகொண்டார் அவர் கவர்ச்சியான உதடுகளில் கவர்ச்சியான புன்முறுவல் ஒன்றை நெளியவிட்டார். மாடியினின்றும் சிதறிய இசை அலைகளில் கண்கள் சொக்கின. மாடியை அண்ணாந்து பார்த்த பிறகு, “நம்ம நந்தினிக் குட்டிக்குப் ‘பாப் ம்யூஸிக்’ என்றால், பசிக்கவே பசிக்காது போலிருக்குதே! நான் சொல்றது சரிதானே, ரஞ்சனி?” என்று வினவினர். மலையாள வாடை அடிக்காமல் பேசியதில் அவருக்குத்

32