பக்கம்:ஆண் சிங்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



பண்ணையாருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவை வேண்டும் என்று அவர் கவலைப்பட்டதுமில்லை. அதனால் சமையல்காரி மாலை வேளையில் வந்து எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லாது போயிற்று.

ஆகவே, சத்திரம் மாதிரி மிக விசாலமான–பெரிய –அறைகள் மலிந்த –அந்த வீடு வெறிச்சோடியே கிடக்கும். எப்போதும் தனியாகவே வாழ்ந்து பழக்கப் பட்ட சூரியன் பிள்ளைக்கு தனிமை ஒரு சுமையாகவோ வேதனையாகவோ தோன்றியதில்லை. இது வரையில் தான். ஆனால் அன்று–எதிர்பாராத வகையிலே அந்தத் தடிப்பன்றியைப் பார்த்ததும்–அவருக்கு அவருடைய தனிமையே சோகமாய் சுமையாய் தோன்றியது.

அதன் பிறகு அந்த் உணர்வு வளர்ந்து வந்ததே தவிர, இல்லாது தேய்ந்துவிடவில்லை. காரணம், அந்தப் பன்றிதான். அவருடைய தனிமையைப் பயன்படுத் திக்கொண்டு அவருக்குத் தொல்லை கொடுப்பதற்கா கவே எங்கிருந்தோ வந்து முளைத்திருந்தது அது!

‘பன்றியா அது? எனக்கு என்னமோ அப்படித் தோணலே!’ இந்த எண்ணம் பண்ணையாரின் உள்ளத் தில் நன்கு வேரோடி விட்டது. அவர் சுற்றி வளைத்து விசாரித்துப் பார்த்ததில், அண்டை அயலில் பன்றி வளர்ப்பவர் எவருமேயில்லை என்று நிச்சயமாகிவிட்டது. சேரியில் வளரும் பன்றிகள் ஊருக்குள் வருவதில்லை. அப்படியே தப்பித்தவறி ஒன்றிரண்டு வரக் கூடும் என்று சொல்லலாமென்றாலோ பண்ணையார் பார்வையில் பட்டது போன்ற கொழுத்த பன்றி சேரியில் இல்லவே இல்லை. பின்,'தடிப்பண்ணி’ எங்கேயிருந்து வருகிறது? அதுதான் அவருக்குப் புரியவில்லை.

காலையில், பட்டப்பகலில், ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் எல்லாம் அந்தப் பன்றி தலை காட்டுவதே இல்லை. அந்திசந்தியில், ஆட்கள் எல் லோரும் வீட்டுக்குப் போய்விட்ட பிறகு, யாருமே இல்லாமல் பண்ணையார் மட்டும் தனியாக இருக்கிற போது தான் அது வரும். தோட்டத்தில் திரியும்.

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/67&oldid=1072172" இலிருந்து மீள்விக்கப்பட்டது