பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அன்னி பெசண்ட் அம்மையாரின்


1938-ம் ஆம் ஆண்டு இறந்த விடுதலை வீராங்கனை அன்னி பெசன்ட், மேலும் ஓர் பதினான்கு ஆண்டு காலம் வாழ்ந்திருப்பாரானால் ஆங்கிலேயரையே எதிர்த்து ஓர் ஆங்கிலப் பெண் கேட்ட சுதந்திரம் கிடைத்திருப்பதைக் கண்ணாலே கண்டிருக்கலாம்! பாவம் அண்ணி துரதிருஷ்டசாலி!

காந்தியடிகளைப் போல், அன்னி பெசண்டைப் போல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யைப் போல விரல்விட்டு எண்ண்க்கூடிய தன்னலமற்ற தியாகிகளின் உழைப்பும், உரமும்தான்; இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது என்பதை மட்டும் எவராலும் மறக்கவோ, மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அன்னிபெசன்ட்: காலம் இந்தியாவுக்குத் தந்த ஒரு கடமைக் கொடை!

அன்னி பெசண்ட் அம்மையார்: இந்திய புண்ணிய பூமிக்கு ஆன்மீகம் தந்த ஞான சிம்மாசனம்!

அன்னி பெசண்ட் அம்மைப் பெருமாட்டி: இந்தியாவுக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அறப்போர் தத்துவம் தந்த போராளி!

அன்னி பெசண்ட் பிராட்டி: உலக மனித நேயத் தத்துவத்துக்கு பண்பு வழங்கிய அன்புருவம்!

காலம் பொன் போன்றது என்ற பழமொழிக்கு மதிப்பளித்துப் பொதுவாழ்வுக் கடமையாற்றிய பெண்ணுலக வித்தகர்!

அன்னை தெரசாவைப்போல அயல்நாட்டிலே பிறந்தவர்! அன்னைக்கு முன்பு வாழ்ந்து மறைந்த அன்னை!