பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரசாதமல்ல, தின்பண்டம்

திரே ஒரு தட்டில் புளியோதரை, லட்டு, வடை, தேன் குழல் முதலிய தின்பண்டங்களுடன் அண்ணா ஒரு நாள் காஞ்சிபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது நான் போக நேரிட்டது. “வாய்யா! இந்தா, சாப்பிடு!” என்றார்கள். “ஏதண்ணா இந்த நேரத்தில் இதெல்லாம்?” என்று விசாரித்தேன். “நம்ம வரதராஜ சாமி பிரசாதம்” என்று சாதாரணமாகச் சொன்னார். எனக்கோ பேரதிர்ச்சி! “என்னண்ணா? கோயில் பிரசாதம் என்று கூசாமல் சொல்கிறீர்கள்! நீங்கள் எப்படி இதைச் சாப்பிடலாம்? உங்கள் பேச்சைக் கேட்டதனால் நான் கோயிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவதில்லை. பண்டிகை கொண்டாடுவதில்லை. புரோகிதர் வைத்துத் திருமணம் செய்தால் உறவினர் வீடுகளுக்குக் கூட போவதில்லை”...... என்று சிறிது பதற்றத்துடன் சொல்லிக் கொண்டே போனேன்.

சாவதானமாக அண்ணா கையமர்த்தினார். நானும் பேச்சை நிறுத்திவிட்டு, ஆவலை விழியில் கூட்டி, அண்ணா என்ன பதில் உரைக்கப் போகிறார் என எதிர்பார்த்தேன். “இரய்யா. நீ சொன்னது எல்லாமே சரிதான். ஆனா, நான் செய்யிற இந்தக் காரியம், அடியோட வேறெ சமாச்சாரம்! நான், என் வீட்டுக்கு இவ்வளவு பக்கத்திலெ இருந்தாலும், இந்த வரதராஜர் கோயிலுக்குப் போனதில்லே. எங்க ஊரிலேயே இருந்தாலும், சங்கராச்சாரியாரைப் பார்த்ததில்லே. எந்தக் கோயிலுக்கும் அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை பூஜை செய்றதில்லை. ஆனா இந்தப் பிரசாதம் ஏதுண்ணு கேட்டியானா, இது நைவேத்யம் செய்த பிரசாதமில்லை. பணம் கொடுத்து வாங்கி வந்த தின்பண்டம் (snacks) நொறுக்குத் தீனி ஒட்டலில் வாங்குவது