பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடக்காகக் கேட்டால் மடக்குவார்


1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாய்த் தெரியத் தொடங்கும் நேரம். அண்ணா ஒரு சிறிய டிரான் சிஸ்டர் ரேடியோவை அருகில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே நாங்கள் சிறு கூட்டமாகத் தரையில் உட்கார்ந்து காதைத் தீட்டிய வண்ணம் காத்திருக்கிறோம். அப்போது யார்தான் எதிர் பார்த்தோம், காங்கிரஸ் கப்பல்,காகிதக் கப்பலாய் மூழ்கு மென்று; காங்கிரஸ் கோட்டை மணற்கோட்டையாய்ச் சரிந்து வீழுமென்று!

முதல் முடிவு, சென்னை பார்க்டவுனில் காங்கிரஸ் தோற்று, சுதந்திரக்கட்சி வேட்பாளர் டாக்டர் ஹண்டே வெற்றி என்பது. புன்னகை பூத்தார் அண்ணா. அடுத்த முடிவு வரும்போது நான் கீழே போயிருந்தேன். அண்ணா பெருங்கூச்சலிட்டு என்னை விளித்து, மாயூரம் கிட்டப்பாவின் முதல் தி.மு.க. வெற்றியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது மலரத் தொடங்கிய அண்ணாவின் முகம் செந்தாமரையாய் ஒளி வீசியது எனினும் தி.மு.க. வெற்றியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அண்ணாமட்டும் மகிழ்வினைப் பெருக்காமல், ஒரளவு கவலை படர்ந்த முகத்தினராய்க் காணப்பட்டார்! எங்கள் குதூகலத்துக்கு எல்லையுண்டோ?

திடீரென்று, விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் வெற்றி என்று வானொலியின் சிறப்பு ஒலிபரப்பு வெளியிட்டதும், நாங்கள் எழுந்து நின்று குதிக்கத் தொடங்கி விட்டோம். “என்னய்யா இது! உண்மையைத் தான் சொல்றானா? அப்படின்னா காமராஜ் தோல்வியா?