பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

அண்ணா—சில நினைவுகள்


திருந்ததை எண்ணி வியந்தவனாய் நாளைக் காலை புறப்படுகிறோம். அதற்கும் மறுநாள்தான் பொதுக் கூட்டம். அதைப்பத்தி நீங்க நினைக்கவே வேண்டாம் அண்ணா! சமாளிச்சிக்கிறோம்!” என்றேன். “ஒண்ணு செய்யேன். இந்த மாதிரி நான் வரமுடியலேங்கிறதை எடுத்துச் சொல்லி, மனோகரனை அழைச்சிகிட்டுப் போயிடேன்“ என்ற ஆலோசனையை அன்புடன் வழங்கினார்கள்.

1957-ல் மாயூரம் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு நாஞ்சில் மனோகரனைப் போட்டியிடச் செய்து, அவரை அரசியல் பிரவேசம் செய்யவைத்தோம். அங்கே தோல்வி யுற்றார். எனினும், என் ஆருயிர் நண்பர் சம்பத் செய்த தவற்றால், தென் சென்னையில் 1962-ல் போட்டியிட்டு, அமோக வெற்றி கண்டார். அண்ணாவுக்குப் பதிலாக அவரை அழைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், அண்ணாவே சொல்லிவிட்டதால் உடனே வெளியில் சென்று, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தும் விளக்கினேன். தனக்கு வேறு வேலையிருப்பதாகச் சொல்லி, வர மறுத்து விட்டார் மனோகரன் M.P. திரும்ப அண்ணாவிடம் இதைத் தெரிவித்து, “பரவாயில்லை அண்ணா! ராகவானந்தம் வருவார். அவரை வைத்துக் கூட்டத்தை நடத்தி விடுகிறேன். 21-ந் தேதி காலையில் நேரே இங்கே வந்து உங்களைப் பார்க்கிறேன். நீங்க ஒடம்பைக் கவனிச்சிக்கீங்க-” என்று கூறியவாறே புறப்பட்டேன். சிந்தனை ரேகை படர்ந்த சோகமுகத்துடன் அண்ணா தலையசைத்தார்கள்.

அண்ணாவின் உடல் காய்ச்சலால் அவதியுறுவதை எண்ணியபடியே, எங்கள் மாநாட்டு நடவடிக்கைகளில் மூழ்கினேன். அண்ணா வருவதாக ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரத்தால் ரயில்வே சந்திப்பு எல்லை. முழுதும் திரளாக மக்கள் குழுமி நின்றனர், என் தலைமையில்