திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து


"வானதூதர் அவரிடம், "பிடியும், மீனை உறுதியாகப் பிடியும்" என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார். வானதூதர் அவரிடம், "மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளும்; ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால் குடலை எறிந்துவிடும்" என்றார்." - தோபித்து 6:3-4.

தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

வானதூதர் இரபேல்[தொகு]


1 அப்பொழுது தம் தந்தை தோபித்துக்கு மறுமொழியாகத் தோபியா,
"அப்பா, நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வேன்.
2 ஆனால் எப்படிக் கபேலிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவேன்?
அவருக்கு என்னைத் தெரியாது; எனக்கும் அவரைத் தெரியாது.
அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும்,
என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும்
நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன்?
மேதியாவுக்கு எவ்வழியாகச் செல்வது,
எவ்வாறு செல்வது என்று எனக்குத் தெரியாது" என்றார்.
3 அப்பொழுது தோபித்து தம் மகன் தோபியாவிடம்,
"ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார்;
நானும் கையொப்பமிட்டேன்.
அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும்
ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம்.
அதைப் பணத்துடன் வைத்துள்ளேன்.
இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்
அவரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தேன்.
இப்பொழுது உன்னோடு செல்வதற்கு
நம்பிக்கை வாய்ந்த ஒருவரை நீயே தேடிப்பார்.
நீ திரும்பும் வரைக்குமுள்ள கூலியை அவருக்குக் கொடுப்போம்.
கபேலிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று வா மகனே" என்றார்.
4 தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித்
தோபியா வெளியே சென்றார்.
சென்று, தம்முன் நின்ற வானதூதர் இரபேலைக் கண்டார்.
ஆனால் அவர் கடவுளின் தூதர் என்பது அவருக்குத் தெரியாது.
5 அவரிடம், "இளைஞரே, எங்கிருந்து வருகிறீர்?" என்று வினவினார்.
அதற்கு அவர், "உன் உறவின் முறையினர்களாகிய
இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன்.
வேலை தேடி இங்கு வந்துள்ளேன்" என்றார்.
"மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா?" என்று தோபியா கேட்டார்.
6 அதற்கு அவர், "ஆம், பன்முறை அங்குச் சென்றுள்ளேன்.
அது எனக்கு அறிமுகமான இடம்.
எல்லா வழிகளையும் நான் அறிவேன்.
அடிக்கடி மேதியாவுக்குச் சென்று, இராகியில் வாழும்
நம் உறவினர் கபேலுடன் தங்கியிருக்கிறேன்.
எக்பத்தானாவிலிருந்து இராகிக்குச் செல்ல இரண்டு நாள் ஆகும்;
ஏனெனில் எக்பத்தானா மலைப் பகுதியில் உள்ளது" என்றார்.


7 தோபியா, "இளைஞரே, நான் சென்று
என் தந்தையிடம் சொல்லி விட்டுத் திரும்பும் வரை எனக்காகக் காத்திரும்.
நீர் என்னுடன் வர வேண்டும்.
உமக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன்" என்றார்.
8 அதற்கு அவர், "சரி, நான் காத்திருக்கிறேன்;
ஆனால் மிகவும் தாமதியாதீர்" என்றார்.


9 தோபியா உள்ளே சென்று தம் தந்தை தோபித்தை நோக்கி,
"நம் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள்
ஒருவரைக் கண்டுகொண்டேன்" என்றார்.
அவரிடம் தோபித்து, "மகனே, அவருடைய இனம் எது, குலம் எது,
உன்னுடன் செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்தவரா என அறியும் பொருட்டு
அவரை என்னிடம் அழைத்து வா" என்றார்.


10 தோபியா வெளியே சென்று அந்த இளைஞரை அழைத்து,
"என் தந்தை உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்.
அவர் உள்ளே சென்றதும் தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.
அதற்கு இரபேல், "வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக" என்று வாழ்த்தினார்.
"எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு? நான் பார்வையற்ற மனிதன்.
விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது.
ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று
இருளில் கிடக்கின்றேன்;
நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன்.
மனிதரின் குரலைக் கேட்கிறேன்;
ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை" என்று கூறினார்.
அதற்கு அவர், "அஞ்ச வேண்டாம்.
விரைவில் கடவுள் உமக்கு நலம் அருள்வார்.
துணிவுகொள்ளும்" என்றார்.
பின்பு தோபித்து அவரிடம்,
"என் மகன் தோபியா மேதியாவுக்குச் செல்ல விரும்புகிறான்.
நீ வழிகாட்டியாக அவனோடு போக முடியுமா?
தம்பி, உனக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன்" என்றார்.
இரபேல் அவரிடம், "சரி, நான் அவருடன் போகிறேன்.
எனக்கு வழியெல்லாம் தெரியும்.
பன்முறை மேதியாவுக்குச் சென்றுள்ளேன்.
அதன் சமவெளிகள், மலைகளெங்கும் பயணம் செய்துள்ளேன்.
அவையெல்லாம் எனக்கு நன்கு பழக்கம்" என்றார்.
11 அதற்குத் தோபித்து இளைஞரிடம்,
"தம்பி, உன் குடும்பம் எது? குலம் எது? சொல்" என்றார்.
12 அவர், "குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன?" என்றார்.
அதற்கு அவர், "தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன்
எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன?" என்று வினவினார்.
13 இரபேல் அவரிடம், "நான் உம் உறவினர்களுள் ஒருவரான
பெரிய அனனியாவின் மகன் அசரியா" என்றார்.


14 தோபித்து இளைஞரிடம்,
"தம்பி, நீ உடல்நலமும் பிறநலன்களும் பெற்று வாழ்க!
உண்மையைத் தெரிந்து கொள்ளவே
உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன்.
எனவே என்மீது சினங்கொள்ளாதே.
நீ என் உறவினர்களுள் ஒருவனே;
நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்.
பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா,
நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன்.
அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு.
அவர்கள் நெறி பிறழாதவர்கள்.
உன் உறவினர்கள் நல்லவர்கள்.
நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன்.
உன் வரவு நல்வரவாகுக!" என்று கூறினார்.
15 அவர் தொடர்ந்து, "உனக்கு நாள் ஒன்றுக்கு
ஒரு திராக்மா [*] சம்பளமாகக் கொடுப்பேன்.
மேலும் என் மகனுக்கு ஆகும் செலவுகளைப் போன்றே
உன் செலவுகளையும் ஏற்றுக் கொள்வேன்.
16 என் மகனுடன் செல்;
உனக்குரிய சம்பளத்தை விட மிகுதியாகவே கொடுப்பேன்" என்றார்.
17 இரபேல் அவரிடம், "அஞ்ச வேண்டாம். நான் அவருடன் போவேன்.
நாங்கள் நலமே சென்று திரும்புவோம்;
ஏனெனில் பாதை பாதுகாப்பானது" என்றார்.
பிறகு தோபித்து அவருக்கு வாழ்த்துக் கூறி,
"எல்லாம் நலமாக அமையட்டும், தம்பி" என்றார்.
பிறகு தம் மகனை அழைத்து அவரிடம்,
"மகனே, பயணத்திற்கு ஏற்பாடு செய்;
உன் சகோதரனுடன் புறப்படு.
விண்ணகக் கடவுள் உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தி
நலமே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாராக.
அவருடைய தூதர் உங்களை நலமே வழி நடத்துவாராக" என்றார்.
தோபியா புறப்படுமுன் தம் தந்தையையுயம் தாயையும் முத்தமிட்டார்.
அப்போது தோபித்து அவரிடம், "நலமே சென்று வா" என்றார்.


18 ஆனால், அவருடைய தாய் அழுதுகொண்டே தோபித்திடம்,
"ஏன் என் குழந்தையை அனுப்பினீர்?
அவன் நமக்கு ஊன்றுகோலும் உறுதுணையும் அல்லவா?
19 பணமா பெரிது? நம் குழந்தை அதைவிட மதிப்பு வாய்ந்தவன் அல்லவா?
20 ஆண்டவர் நமக்கு அருளிய வாழ்வே நமக்குப் போதுமே!" என்றார்.
21 தோபித்து அவரிடம், "கவலை வேண்டாம்.
நம் மகன் நலமே சென்று திரும்புவான்.
அவன் நலமுடன் உன்னிடம் திரும்பும் நாளை நீ காண்பாய்.
22 எனவே கவலை வேண்டாம், அன்பே;
அவர்களைப்பற்றி அச்சம்கொள்ள வேண்டாம்.
நல்ல தூதர் ஒருவர் அவனுடன் சென்று,
பயணத்தை வெற்றியாய் முடித்து,
நலமே திரும்ப அழைத்து வருவார்" என்றார்.
23 அதைக்கேட்ட தோபியாவின் தாய் அழுகையை நிறுத்தினார்.


குறிப்பு

[*] 5:15 - ஒரு திராக்மா என்பது ஒரு நாள் கூலிக்குச் சமம்.
தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.


அதிகாரம் 6[தொகு]

எக்பத்தானாவுக்குப் பயணம்[தொகு]


1 இளைஞர் புறப்பட்டுச் சென்றார்.
வானதூதர் உடன் சென்றார்.
அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது.
பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து,
திக்ரீசு ஆற்றோரமாய்த் தங்கினார்கள்.
2 தோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்ரீசு ஆற்றில் இறங்கினார்.
பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து
அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார்.
3 வானதூதர் அவரிடம், "பிடியும், மீனை உறுதியாகப் பிடியும்" என்றார்.
இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார்.
4 வானதூதர் அவரிடம், "மீனைக் கீறி அதன் பித்தப்பை,
இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளும்;
ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும்.
ஆனால் குடலை எறிந்துவிடும்" என்றார்.
5 அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை,
இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார்.
மீனின் ஒருபகுதியை சுட்டுச் சாப்பிட்டார்.
மீதியை உப்பிட்டு வைத்துக்கொண்டார்
6 மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து
பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


7 பின் இளைஞர் வானதூதரிடம், "சகோதரர் அசரியா, மீனின் இதயம்,
ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்?" என்று வினவினார்.
8 அதற்குத் தூதர் அவரிடம்,
"பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன்
மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால்
அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள்.
இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது.
9 வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில்
பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள்" என்றார்.
10 அவர்கள் மேதியா நாட்டினுள் சென்று
எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.


11 இரபேல் இளைஞரை நோக்கி,
"சகோதரர் தோபியா" என்று அழைத்தார்.
அதற்கு அவர், "என்ன?" என்றார்.
அவரிடம் அவர், "இன்று இரவு நாம் இரகுவேலின் வீட்டில் தங்கவேண்டும்.
அவர் உமக்கு உறவினர்.
அவருக்குச் சாரா என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.
12 அவளைத் தவிர அவருக்கு வேறு குழந்தைகள் இல்லை.
வேறு எவரையும்விட நீரே அவளுக்கு நெருங்கிய உறவினரானதால்,
அவளை மணந்துகொள்ளும் உரிமை உமக்கே உண்டு;
அவளுடைய தந்தையின் உடைமைகளை அடையவும் உமக்கு உரிமை உண்டு.
அவள் அறிவுள்ளவள், துணிவு மிக்கவள், மிக அழகானவள்.
அவளுடைய தந்தையும் நல்லவர்" என்றார்.
13 இரபேல் தொடர்ந்து, "சகோதரரே, அவளை மணந்து கொள்ளும் உரிமை
உமக்கு உள்ளதால் நான் சொல்வதைக் கேளும்.
இன்று இரவே அவளைப்பற்றி இரகுவேலிடம் பேசி,
அவளை உமக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்போம்.
இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது
திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.
நீர் அவளை மணப்பதற்கு இரகுவேல் தடை எதுவும் சொல்ல முடியாது;
மற்றொருவருக்கு அவளை நிச்சயம் செய்யவும் முடியாது என்பது எனக்குத் தெரியும்.
அவ்வாறு செய்தால் மோசேயின் நூலில் விதித்துள்ளபடி
அவர் சாவுக்கு உள்ளாவார்;
ஏனெனில் தம் மகளை மணப்பதற்கு மற்ற எல்லா ஆண்களையும்விட
உமக்கே அதிக உரிமை உண்டு என அவருக்கும் தெரியும்.
இப்பொழுது, சகோதரரே, நான் சொல்வதைக் கேளும்.
பெண்ணைப் பற்றி இன்று இரவு பேசி,
அவளை உமக்கு நிச்சயிப்போம்.
இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது,
அவளை நம்முடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்புவோம்" என்றார். [*]


14 அப்பொழுது தோபியா மறுமொழியாக இரபேலிடம்,
"சகோதரர் அசரியா, அவள் ஆண்கள் எழுவருக்கு
மண முடித்துக் கொடுக்கப்பட்டவள் என்றும்,
மணவறையில் அவளை அணுகிய அன்றிரவே
அவர்கள் இறந்தார்கள் என்றும்,
ஒரு பேய் அவர்களைக் கொன்றது என்றும் கேள்வியுற்றியிருக்கிறேன்.
15 இப்போது எனக்கு அச்சமாக உள்ளது;
ஏனெனில் அவளுக்குப் பேய் ஒரு தீங்கும் இழைப்பதில்லை;
ஆனால் அவளை நெருங்குகின்றவரையே கொன்றுவிடுகிறது.
என் தந்தைக்கு நான் ஒரே மகன்.
நான் இறக்க நேர்ந்தால், என்னைப்பற்றிய வருத்தம்
என் தாய் தந்தையின் வாழ்வை முடித்து,
அவர்களைக் கல்லறைக்குக் கொண்டு போய்விடும் என அஞ்சுகிறேன்.
அவர்களை அடக்கம் செய்ய வேறு மகன் இல்லை" என்றார்.


16 அதற்கு வானதூதர் அவரிடம்,
"தம் தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள்ள
உம் தந்தை உமக்குக் கட்டளையிட்டதை மறந்துவிட்டீரா?
ஆதலால் நான் சொல்வதைக் கேளும்.
சகோதரரே, அந்தப் பேயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
சாராவை மணந்து கொள்ளும்.
இன்று இரவே அவள் உம்முடைய மனைவி ஆவாள் என்பது உறுதி.
17 நீர் மணவறையில் நுழைந்ததும்
மீனின் ஈரலிலிருந்தும் இதயத்திலிருந்தும் சிறு பகுதியை எடுத்துத்
தூபத்திற்கான நெருப்பிலிடும்.
அதிலிருந்து கிளம்பும் புகையைப் பேய் மோந்தவுடன் அது ஓடிவிடும்.
இனி ஒருபோதும் அவளை அண்டாது.
18 அவளுடன் நீர் கூடுமுன் முதலில் நீங்கள் இருவரும்
எழுந்து நின்று மன்றாடுங்கள்;
விண்ணக ஆண்டவர் உங்கள்மீது இரங்கிக் காத்தருள வேண்டுங்கள்.
அஞ்சாதீர்! உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப் பெற்றவள்.
நீர் அவளைப் பேயினின்று விடுவிக்க, அவள் உம்மோடு வருவாள்.
அவள் வழியாக உமக்குக் குழந்தைகள் பிறக்கும்.
அவர்கள் உமக்குச் சகோதரர்கள்போல் இருப்பார்கள் என நம்புகிறேன்.
எனவே கவலை வேண்டாம்" என்றார்.
19 சாரா தம் தந்தை வழி உறவினர் என்று சொன்ன
இரபேல் கூறியதைக் கேட்ட தோபியா
அவளை மிகவும் விரும்பித் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.


குறிப்பு

[*] 6:13 = எண் 36:6-8.


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை