பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33



அவர் ஆயிரம் ஆயிரம் பாடல்களைத் தந்து எண்ணற்ற கதாபாத்திரங்களைக் காட்டினார் என்றாலும், அவருடைய காவியத்தில் நீக்கமற நிறைந்திருப்பவர் ராமபிரான் மட்டுமே! அதனால்தான் அது ராம காவியமாக விளங்குகிறது.

கலைமணி அவர்களும் நூலில் பல உத்திகளைக் கையாளுகிறார். அதில் பல சக்திகளையும் சித்திகளையும் காண முடிகிறது. என்றாலும், நீக்கமற நிறைந்திருப்பவர் அறிஞர் அண்ணா மட்டுமே!

தமிழ் வசன நடைக்குப் புதியதொரு வாழ்வைத் தந்தவர் அண்ணா! அவரைப் பற்றிய இவருடைய நூல், ஒரு புதியவராக, இன்னும் சொல்லப்போனால், தமிழ் உலகிற்கு ஒருவரமாகத்திகழ்கிறது. இவர் அஞ்சலிக்கு எடுத்துக்கொண்ட அத்துணை மலர்களும் காயா மலர்கள், மண மலர்கள், தேயாமணிகள், தெவிட்டா நறுங்கனிகள், இந்த நூலில் புலவர் என்.வி. கலைமணி ஓர் எழுத்தாளனாக, கட்டுரையாளனாக, கதாசிரியனாக, கவிஞனாக, ஞானாசிரியனாக, வரலாற்று வல்லுநனாக, ஆன்மீகவாதியாக, நாத்திகனாக, சித்தனாக, இன்னும் சொல்லுவதற்கு அரியபல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.

இவற்றோடு, அவர் ஒரு ரச வாதியாகவும் திகழ்கிறார். இந்த நூலில், பலர் கவிதைகளை வசனமாக்கிவிடும் வல்லமையாளர்களாக உலா வரும்போது, இவர் வசனத்தைக் கவிதையாக்கித் தந்துள்ளார்.

அன்புச் சகோதரா கலைமணி அவர்கள, என்னை நோக்கி இந் நூலுக்கு ஒரு கருத்துரை தாருங்கள் என்றார்.

இந்த ஒப்பரிய நூலுக்கு நான் கருத்துரை தருவதைவிட, அஞ்சலிக்கு அஞ்சலி செலுத்துவதே பொருத்தம் எனக் கருதுகிறேன்.

வணக்கம்.

26.2.96

சென்னை

அன்பன்
புலவர் நாகசண்முகம்