பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



முதல் பிள்ளை வளரும்வரை, அது உழைத்து, இரண்டாவது பிள்ளை வருகிறவரை, அது சுருங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

அண்ணா இருந்தார் என்பதற்கும் - இறந்தார் என்பதற்கும் - பலருக்கு வித்தியாசமே தெரியவில்லை.

இருந்தாரும் - இறந்தாரும் ஒன்றுபோலத் தெரிந்தாலும் - இருந்தார் என்றால், ஒரு காலத்தில் இருந்தவர் என்றும், இறந்தார் என்றால் - இப்போது இல்லாதவர் என்றும் பொருளாகும்.

இன்னும் நூறாண்டுகட்குப் பிறகு, இறந்தார் என்றாலும் - அப்போதும், இல்லாதவர் என்பதுதான் பொருளாகும்.

அப்படியானால், அண்ணா எல்லா ஊழிக் காலத்திற்கும் இருக்கிறார் என்றுதான் பொருளே தவிர, ஊழியைவிட்டே ஒதுங்கிவிட்டார் என்பதல்ல.

அண்ணா, ஒரு வியப்பான கலவை. அதைக் கலந்தவன் எங்கும் கலந்தவன்.

அவனை நோக்கி ஓடுகின்ற ஆத்மாக்கள் - அண்ணாவிடம் தங்கி, இளைப்பாறிவிட்டே செல்ல வேண்டும்.

காலத்தின் கட்டளை இது.

இதைக் கூற நீ யார்? என்று, என்னைக் கேட்டால்; அவர்கட்கு இதே ஓர் உவமை.

கண்ணுக்கு முன்னால் காட்சியிருக்கிறது.

கண்ணுக்கும் காட்சிக்கும் இடையே இருப்பது தூரம் மட்டுமல்ல - காற்றும் இருக்கிறது.

காற்றின் அனுமதியின்றிக் கண்ணொளி காட்சியைத் தீண்ட முடியாது

எனவே, காலத்தின் கட்டளைப்படி, அறிவை நோக்கி ஓடுபவன்; அண்ணாவிடம் இளைப்பாறவே வேண்டும்.

உருண்டு இரைச்சலிடும் அலையொத்த கடல் போன்றது - காலம்.