பக்கம்:இருட்டு ராஜா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54இருட்டு ராஜா

 ஒரு பொம்பிளே. இந்த வழியிலே ராத்திரி நேரத்திலே ஆம்பிளைகளே நடக்க பயப்படுவாங்க. பொம்பிளை இப்படி வரலாமா?” என்று முத்துமாலை அனுதாபத்தோடு பேசினான்.

அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கோடு, இயல்பாக தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறவன் போல. மடியிலிருந்து ஒரு பீடியை எடுத்து வாயில் கல்விக் கொண்டு, தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியைக் கிழித்தான். வெடித்த வெளிச்சத்தில் அவளைச் சிறிது கவனிக்க முடிந்தது.

சாதாரணமான ஒரு பெண். வறுமையின் பாதிப்பு. தெரிந்தது. சோகமும் பயமும் அவள் முகத்தில் குடியிருந்தன.

“நீ எங்கிருந்து வர்றே? இந்த ஸ்டேஷனிலே ஏன் இறங்கினே?” என்று கேட்டான் முத்துமாலை.

அவள் ஒரு ஊரின் பெயரைச் சொன்னாள். அம்மா சாகக்கிடக்கிறாள். மகளை வைத்து எப்படியோ காப்பாற்றிவிட்டாள். அவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்து, அவளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டு நிம்மதியாகச் சாகவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றித் தருவதுபோல் பாசாங்கு செய்தான் சகுனி மாமனான ஒருவன். அம்மாவுக்கு ஏதோ ஒரு வழியில் அண்ணன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி வருவான். மதுரையில் பழக்கடை வைத்திருப்பதாகச் சொன்னான். மதுரையில் தனக்குத் தெரிந்த நல்ல மாப்பிள்ளை இருப்பதாகவும், செலவு எதுவுமே இல்லாமல் தனபாக்கியத்தைக் கட்டிக்கொடுத்து விடுவதாகவும், தனது பொறுப்பில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றும் அம்மாவிடம் இனிப்பாகப் பேசினான். அவளும் நம்பி, மகளை அவனோடு அனுப்பி விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/56&oldid=1139112" இலிருந்து மீள்விக்கப்பட்டது