மறுநாள் தனபாக்கியம் விசேஷமாக சுகியன் தயாரித்திருந்தாள். அருமையாக ருசித்தது. அதில் பத்து எடுத்துக் கட்டிக் கொண்டு முத்துமாலை மங்கையையும் திரிபுரத்தையும் பார்ப்பதற்காகப் போனான்.
திரிபுரசுந்தரி பளிச்சென்று பட்டாடையோடு விளங்கினாள். “அத்தான் வாங்க” என்று முகமலர்ச்சியோடு வரவேற்றாள்.
"மாமா வந்தாச்சி” என்று கூவிக் கொண்டு ஓடிவந்த மங்கை அவன் கால்களைக் கட்டிக் கொண்டது.
“இது உனக்கு மாமா இல்லேடி, அப்பா முறை” என்று திரிபுரம் சொன்னாள்.
“உக்குங்...மாமாதான்...நல்ல மாமா” என்று. குழைந்தாள் மங்கை.
முத்துமாலை சிரித்தான். குழந்தையிடம் ஒரு சுகியனைக் கொடுத்து விட்டு, பாக்கியை திரிபுரத்திடம் தந்தான்.
“இது என்னது?” என்று உருட்டி உருட்டிப் பார்த்தது குழந்தை.
“சுகியன். தின்னுபாரு இனிச்சுக்கிடக்கும்”
குழந்தை அதை ருசி பார்த்தது. பிறகு ரசித்துக் தின்றது.
“என்ன, எப்படி இருக்கீங்க? ஏன் நின்னுக்கிட்டே இருக்கீங்க? உட்காருங்க” என்று திரிபுரம் உபசரித்தாள்.