வல்லிக்கண்ணன்81
கொடுத்திட்டுப் போவாக, அப்புறம் என்ன?” என்று பிடிப்பில்லாமல் பேசினாள் திரிபுரம்.
“இந்தத் தடவை இந்த ஊருக்கு அவான் வரும்போது பார்த்துப் பேசணுமின்னு நினைக்கிறேன். போன தடவை வந்தப்போதான் அவாளைப் பார்க்கவே இல்லே. அப்போ நீங்கள்ளாம் வந்துட்டுப் போயி அஞ்சாறு வருடம் இருக்குமே. இருக்காது?”
“அஞ்சு வருசம் ஆச்சு. அடிக்கடி எங்கே வர முடியுது? ஒரு தடவை வந்திட்டுப் போறதுன்னு சொன்னா எவ்வளவு சிரமமா இருக்குது”
“அதுவும் சரிதான்” என்றான் முத்துமாலை. சட்டென்று எழுந்து கொண்டான். “சரி, நான் வாரேன்... மங்கை, போயிட்டு வாரேன்” என்று கிளம்பினான்.
“டா-டா” என்று விரல்களை அசைத்தது குழந்தை. “சீரியோ! பை பை” என்றது.
அதில் எதுவும் அவனுக்கு விளங்கவில்லை. “பிள்ளைகள் சீக்கிரமே புத்திசாலிகள் ஆகிவிடுகின்றன. இந்தக் காலத்திலே” என்று எண்ணியவாறே வெளியேறினான்.
—திரிபுரம் ரொம்பப் பெரியவளாயிட்டா. எனக்கே போதிக்க முன்வந்திருக்கிறா, பணமும் பவிசும் ஆட்களை ரொம்பவும் மாத்திப் போடும்கிறது சரிதான்...
அவனுக்குக் குடிக்க வேண்டும்போல் வந்தது. அப்போதே குடித்தாக வேண்டும். வழக்கமா ராத்திரி தான் குடிப்பான், திரிபுரத்தைப் பார்த்தபிறகு அவள் பேச்சைக் கேட்ட பிறகு, அவனுக்கு ஒரு வறட்சி ஏற்பட்டது. கசப்பு முட்டி வந்தது. நெஞ்சு எரிவது போலிருந்தது. குடித்தால் தான் அது தணியும்.
குடிக்கப் போனான். ராத்திரி வருகிற வரை குடித்துக் கொண்டேயிருந்தான். இருட்டியதும், முத்துமாலையின்