பக்கம்:இருட்டு ராஜா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78இருட்டு ராஜா

 வேறு ஒரு பெரிய பெண் எட்டிப் பார்த்தது. பன்னிரண்டு வயது இருக்கும்.அவளுடன் ஒரு பையன் வந்தான். எட்டு வயது இருக்கலாம்.

“இவ தான் மூத்தவ, காந்திமதி. அடுத்தது.நடராசன், மூன்றாவது தான் மங்கை” என்று அவள் அறிமுகப் படுத்தினாள்.

பிள்ளைகள் ஆரோக்கிய மினுமினுப்புடனும் விலை உயர்ந்த உடைகளின் பளபளப்போடும் விளங்கின.

பணத்துக்குக் கவலையில்லை, செழிப்பா வாழ்றாங்கன்னு தெரியுது என்று முத்துமாலையின் மனம் கணித்தது.

திரிபுரம் ஆளுக்கு ஒரு சுகியன் கொடுத்து விட்டு, மீதியை உள்ளே கொண்டுபோய் வைத்தாள். பெரிய பெண்ணுக்குச் சில உத்திரவுகளிட்டுவிட்டு வெளியே வந்தாள்.

“இப்போ எந்த ஊரிலே இருக்கீங்க?” என்று கேட்டு வைத்தான் முத்துமாலை.

“பம்பாயிலே தான். ஆனா ஒரு இடத்திலே இருக்க முடியிறதில்லே. டில்லி, கல்கத்தா, மெட்ராஸ் அங்கே இங்கேயின்னு சுத்திக்கிட்டே இருப்பாங்க. மெட்ராஸிலே ஒரு வீடு வாங்கி, எங்களை அங்கேய வச்சிட்டு, தான் வழக்கம் போல பிசினஸை கவனிக்கலாம்னு நினைச்சிருக்காங்க. வீடு கூடப் பார்த்தாச்சு.”

“அப்ப இந்த ஊருக்கு வந்து தங்கறதா எண்ணம் இல்லையாக்கும்?” .

“வடக்கேயே பெரிய ஸிட்டிகளிலே இருந்து பழகிப் போச்சு. இங்கே வந்தா பிள்ளைகளுக்கும் பிடிக்காது. அவுகளுக்கும் பிடிக்காது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/80&oldid=1139368" இலிருந்து மீள்விக்கப்பட்டது