பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. அண்ணா ஒரு வானவில்

நீலவான் நிர்மலமாக இருந்தது! முகிற் கூட்டங்கள் திடீரென்று அதை மூடிக்கொண்டன!

மின்னல் கீற்றுகள் மேகத்தின் முதுகில் வரி வரியாகச் சூடுகள் போட்டன!

மேகங்கள் துடித்து அலறின! கண்ணீர்த் துளிகளை உகுத்து உகுத்து; அவை கருத்து விட்டன!

நடுவானத்திலே நடைபெறும் - இந்த ரணகளப் போரைக் கண்டு, சூரியன் அச்சப்பட்டது!

ஒருவனை மற்றொருவன் உலகத்தில் அடித்துக் கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல; அருணனும் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

மனிதக் கூட்டத்தினிடையே நடந்தது கொண்டிருக்கும் சண்டையில் - நான்கு பேர் புகுந்து அமைதியை நிலைநாட்டுவதைப் போல - மழையும்; ஒரு கணம் அமைதியை நிலை நாட்டியது!

மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித்திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின!

அதன் விளைவு, வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது!