பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



புன்னைப் பூ அழகானது. என்றாலும், சிறு காற்றையும் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து கீழே உதிர்வதைப் போன்ற என் சமுதாய பலவீனர்கட்கு, வைரம் பாய்ந்த தேக்கின் பலத்தையும் வளத்தையும் வழங்கிட நினைப்பாயா நீ?

அவற்றின் உடல்களை ஆரோக்கிய முறையிலே வளர்க்க - சந்தனக் காற்றை நீ, ஊட்டுவது ஏன், என்பதை அறிந்தேன்.

மூங்கில் மூலமாக இசையை எழுப்பி, அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கிறாய்.

இவையும் சீர்திருத்தமல்லவா? பொதுநலத்தொண்டல்லவா? தென்றலே: இந்த உதவிகளை இருண்ட காட்டுக்கு மட்டுமா செய்கிறாய்? நோய்வாய்ப்பட்ட நம் சமுதாயத்திற்குமன்றோ கூலிபெறாமல் புரிகிறாய்!

நீயன்றோ நீனிலம் புகழும் சீர்திருத்தவாதி! உன் சேவை நீடு புகழ் வாழ்க! வளர்க நின் கடமை உள்ளம்.

சிறுகாலே! சந்தனக் காட்டிலே நீ தவழ்ந்து வரும்போது 'பூ'வை அணைக்கிறாய்!

'பூ' என்றால், பூ, உலகம்தானே! பூவான பூமியை - உலகத்தை, நீ கட்டி அணைக்கின்றாய்.

பூவை நீ அணைக்கும்போது, அதனுள்ளிருக்கும் தாதுவான மகரந்தத்தையும் அன்றோ - மகிழ வைக்கிறாய்!

அந்த தாதுக்களும், உன்னை உளமார சிரித்து, வாழ்த்தியன்றோ, இனிமையாக வரவேற்கின்றன!

பூவான பூமியை, நீ அணைத்து உலா வரும்போது, அந்தப் பூமியில் வதியும் மகரந்தம் போன்ற மக்களும் - உன்னைக் கண்டு இதயப்பூர்வமாக சிரித்து, வாழ்த்தி, வரவேற்கிறார்கள்.

தென்றலே! நீயும் மனித இனத்தின் உள்ளங்களை ஆட்கொண்டு அவர்களை அகமகிழ வைக்கின்றாய்!

மக்கள் உள்ளமும் மலரைப் போன்று மென்மையானது அல்லவா!