144
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
என் நாக்கில் விளையாடும் ஒளியலைகள் எங்கோ இருந்து வந்தவையல்ல!
உன்னைக் கண்ட பிறகு - அது மகிழ்ச்சியால் தெளிந்த பிறகு, ஏற்பட்ட ஓசையாகும்!
கதிரவனே! உனது புகழின் ஆழத்தை, உலகைச் சுற்றியிருக்கின்ற கடலும் கொண்டிருக்கவில்லை.
உனது பெருமையின் உயரத்தை, உலகின்மேல் கொப்பளம் போல் குவிந்திருக்கும் மலைகள், கொண்டிருக்கவில்லை.
உனது விரிவு, திக்கை உடைத்துக் கொண்டு வெளியே செல்லுகிறது!
உன்னுடைய விரிந்த விசாலத்தில், நான் ஒரு சொட்டு இயற்கையாகவே இருக்கின்றேன்.
என்னைக் கடையேற்ற, ஆயிரம் கோயில்களைக் கட்டியவன் நீ! ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தடவைகள் பூசை செய்தவன் நீ!
நான் படைத்த பூக்களின் வண்ணங்களை, என் எண்ணம் ஏன் கவனம் வைக்கவில்லை? சுவையாகப் படைத்த கனிகளின் சுவையை, நான் அறிந்தவனல்லன்!
இவ்வளவையும் நீ செய்த பிறகும் நான் கடைத்தேற முடியவில்லை!
மடையுடைத்துக் கிளம்புகின்ற உன்னை, மனக் கண்ணில் கண்ட பிறகுதான், என் அகக் கண் திறக்க ஆரம்பிக்கின்றது!
ஏ, சுடரொளி! மேகம் மூடிய வானத்தின் கீர்த்தியே! உனது ஆதிக்கத்தால் கேட்பாரற்றுக் கிடக்கின்ற விதைகள் முளைக்கின்றன. வெளுத்துப்போன இலைகள் பச்சையாகின்றன!
நெளியும் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் ஆகின்றன!
பறவைக் குஞ்சுகளின் இறக்கைகள் முதிர ஆரம்பிக்கின்றன.
அருவியின் அலையோசை, அருகில் இருக்கும் வெட்டுக் கிளியின் காதிலே பாய்கின்றது.