பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

157



ஒரு மனிதனுடைய வாழ் நாட்கள், பறக்கின்ற பறவையைப் போல செல்லுகின்றது என்றால் - அந்தப் பறவைகள் கூடு கட்டுகிற இடம், விண்மீன்கள் மீதுதானா?

என்னுடைய மன உளைச்சலிலிருந்து, நான் விடுதலை பெறுவதற்காக, என் கையில் ஒரு விளக்கு இல்லையே - என்று, இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன்.

அவன் தன் நெற்றியைச் சுருக்கிக், கால்களை அகல விரித்து, உன்னை நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா? ஒளி தரும் சூரியனைப் பகலிலே தந்தேன்?

நீ தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு -

மல்லிகை மணக்கும் பூங்காவில் ஓய்வெடுத்தபின் -

வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின் -

உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள் என்று நான் சொல்லவில்லையா?

மறைபட்ட பொருளை வெளியாக்கி - சிறைபட்டச் சீவனை விடுதலை செய்து -

முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கி -

குழந்தையை வாலிபனாக்கி

வாலிபத்தை வயதாக்கி -

மேலை கீழாக்கி - கீழை மேலாக்கி

சகதியிலே நீ விழாமல் இருப்பதற்காக, உனக்கென ஓர் ஒளியை உருவாக்கியவன் நான்.

அந்த ஒளி - வானத்தில் நிலவாகவும் - பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ உணரவில்லையா?

நீ, கேட்ட பிறகு உன் கோளுக்கு இணங்கி, அதோ அந்த வான வட்டத்தை, உனக்காகப் பரிசளிக்கிறேன்.

அதன் பெயர் நிலவு.