பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

137



திருக்குறள் ஆராய்ச்சியிலே சென்றவன் இன்றுவரை திரும்பியதில்லை!

சிலப்பதிகாரத்துள் புகுந்தவன், காலம் போதவிலையே என்று - தடுக்கி வீழ்ந்து விட்டான்!

கலிங்கத்துப் பரணிக்குள் கரை காணச் சென்றவன்

- போர்க்கள் ஓசையிலேயே, மூச்சுத் திணறி விட்டான்!

அகம், புறங்களை அலசுகிறேன் என்று சென்றவர்கள்

- அந்த எல்லையை விட்டு இதுவரை வந்ததில்லை.

தமிழ் இலக்கியத்தின் பொருள், ஆழ்கடலையும் மிஞ்சியது!

அத்தகைய கடலிலே புகுந்து, அழகழகான முத்துக்களையும் - பவழங்களையும் தேடிப் பெற்றுவிட்ட தென்றலே, உன்னை எவ்வாறு உலகிற்கு புகழ்ந்து காட்டுவேன்!

இலக்கியக் கடலினுள் மட்டுமா நீ, புகுந்தாய்? அதன் உச்சியிலேயே ஆனந்தத் தாண்டவமாடிப், புதியதொரு இலக்கியப் பரம்பரையினையே உருவாக்கிவிட்ட, உன் பெருமை வாழ்க!

கடல்மேல் பரதமாடிய தென்றலே, அத்தோடு மட்டுமா நின்றாய்?

விரிந்து பரந்து கிடக்கும் இலக்கியச் சோலைகளுள்ளும் - புகுந்து விட்டாய்! நீ போக முடியாத இடம் ஏது?

அந்தச் சோலையினுள்ளிருக்கும் பற்பல இலக்கிய உள்ளங்கள் என்ற மலர்களின் நறுமணத்தை உன்னோடு சேர்த்துக் கொண்டாய்!

மதுரைத் தமிழ்ச் சங்கங்களில், முன்பு எப்படி தமிழ் இலக்கியங்கள் வளர்ந்தனவோ, அதைப் போன்ற நிலையை மீண்டும் நாட்டிலே உருவாக்கி விட்டாயே!

உன் செயற்கரிய செயலால் நாவலர்களும், பாவலர்களும், கலைஞர்களும், கவிஞர்களும் இலக்கிய உணர்வு பெற்று நாட்டை இலக்கியப் பூக்காடாக்கி விட்டார்கள்.