பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



நான், தலைதூக்கி வான்முகட்டை நோக்கினேன். அப்போது ஒரு சிப்பி, வான் துளியைக் கவர்ந்து கொண்டு - மூடிய வாயைத் திறக்காமல் - கடலின் அடிவயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது.

'சிப்பியே!’ என்றேன்.

‘ஆக்க வேலை அதிகமிருக்கிறது - பயணத்தைத் தடுக்காதே' என்று, அது கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இதனை வாயால் கூறிற்று என்று நினைக்காதீர்கள் மவுனத்தால் கூறியபடியே போய்க் கொண்டிருந்தது.

அறுந்தப் பட்டத்தை நோக்கிச் சிறுவர்கள்'துரத்திக் கொண்டு போவதைப் போல - நீரில் அலைபாய்ந்து செல்லும், நான்; சிப்பியை நோக்கி, ஒட ஆரம்பித்தேன்.

சிப்பி, கடல் பஞ்சின் குகையில் வந்து அடங்கியது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன்.

‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் சிப்பியே!’ என்று கேட்டேன்.

‘புதிய நீர்த்துளி விசும்பைவிட்டு நழுவிற்று; அதனைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன்’ என்றது.

'இதற்கு மேலே என்ன செய்யப் போகிறாய்? என்றேன். நான் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து, இதனை நல்முத்தாக்கி வெளியே விடப் போகிறேன்' என்றது.

அறிஞர் அண்ணா அவர்களும், வானத்திலிருந்து நீர் விழுவதைப் போல - புதிய பிரச்னைகள் கீழ் நோக்கி விழுகிற நேரத்திலெல்லாம், சிப்பியாக நின்று - அதைக் கவர்ந்து விடுகிறார்.

மலரில் விழுந்த நீர்த்துளி, பனித்துளியின் உருவோடு தேனாகிறது. முத்துச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி, நீரைப்போல இளகி இல்லாமல், இறுகியிருக்கிறது. அதனைத்தான் நாம், முத்து என்கிறோம்.

இதழில் விழுந்தால் தேன் - சிப்பியில் விழுந்தால் முத்து.