180
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
வரியாக இருந்து வரலாறாக, முடிந்தவர்.
ஒளித்துளியாக இருந்து - ஒசையாக லயம் கலந்தவர்.
ஒளிக்கொழுந்தாக இருந்து - பிழம்பு நுனியின் வருடலாக நீண்டவர்.
துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர்.
இறைவனின் முதல் மூச்சான காற்றாக இருந்து - பூந் தோட்டத்திலே புகுந்து வரும் தென்றல் ராணியாகத் திகழ்ந்தவர்.
இருளைத் தினந்தோறும் குடித்தும், ஒளியாக இருக்கின்ற நிலவு இன்னும் வரவில்லை.
தோட்டத்தில் விழா நடத்துகின்ற பூக்கள் இன்னும் கூம்பவில்லை.
மன்னனின் அந்தப் புறச் சுவற்றுக்குப் பின்னால், இன்பத்தின் முணுமுணுப்பு இன்னும் துவங்கவில்லை.
ஏழையின் குழந்தை இன்னும் பசிக்காக அழவில்லை.
மின்மினிப் பூச்சிகள், தங்கள் தங்கள் சிங்காரத்தைக் காட்ட வயல் பக்கம் போகவில்லை.
இறந்து போனவன் கல்லறை மேல், மெழுகு வத்தியினுடைய நரம்பில் ஒளியை ஏற்ற, வெட்டியான் வரவில்லை. அப்போது தொடுவானம், மோன முத்திரையிட்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இங்கு மங்குமாகச் சிதறியிருக்கின்ற புல் பூண்டுகள், தங்களுடைய சிறிய தலைகளை ஆட்டி, கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.
நிர்மலமான இந்த சூழ்நிலையில், திக்குத் தவறிய சில பறவைகள், கண்டபடி வானத்தில் மிதக்கின்றன:
அதோ தலைக்கு நேரே ஒரே ஒரு பருந்து மட்டும் கவலையற்ற சர்வாதிகாரியைப் போல், உயரத்தில் மிதக்கிறது.