பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

30

அருள்நெறி முழக்கம்


கண்டான் என்றால் அதுவும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் என்பதை யாரும் மறுக்கவும்-மறக்கவும் முடியாது. இயற்கையின் நியதிகளுள் ஒன்றான ஆகர்ஷண சக்திக்கு நியூட்டனின் அறிவு பெயர் கொடுத்தது. நியூட்டனின் அறிவு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்ததில்லை.

கடவுள் நெறியை ஒதுக்கி - அருள்நெறியை அகற்றி மனிதன் வாழலாம். எப்பொழுது என்றால் மனிதனின் அறிவு உயிருள்ள ஒன்றை உண்டாக்கினால்தான். அப்படி இல்லாது போனால் மனிதன் இயற்கைக்குக் கட்டுப்பட்டான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். அறிவுக்கு ஒர் எல்லையுண்டு. அது எல்லையைக் கடக்குமானால் அழிவுப்பாதையில்தான் கொண்டுபோய் முடிக்கும். ஒன்றின் கழிவை, ஒன்றின் உணவாக்கியவன் ஆண்டவன். எல்லாம் ஒரே நியதியில் இருந்தால் உலகம் எப்படி வாழ முடியும்? ஆதலால்தான் ஆண்டவன் கூட்டுறவு வாழ்வை அமைத்துக் கொடுத்தான்.

மனிதனால் - மனிதனின் அறிவால் - ஆராய்ச்சியால் செய்யமுடியாத ஒன்றைச் செய்யும் ஆற்றல் அருளியலுக்குத்தான் உண்டு. அந்த அருளியலின் திறமையைக்கான வேண்டுமானால் திருவுருவங்களை வாழ்த்தி வணங்கி வழிபட வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அவனைப் பற்றிக் கவலைப்படாமலிருக்க முடியுமா? கவலைப்படாமலிருப்பது நன்றி மறந்த செயலாகும். மனித உணர்ச்சி இருக்குமானால் அருளியலைக் கண்டு வணங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அவனைக் கண்டவர்கள் - அவனது நியதியை அறிந்தவர்கள் அவன் மறுக்கக் கூடிய பொருள் அல்லன் என்பதை நன்குணர்வார்கள். அவனை மறக்காமலிருப்பது மனிதனின் கடமை. ஏ! மனிதனே, உனக்கு வேண்டிய அனைத்தும் ஆக்கித்தந்த கடவுளுக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன் என்பதை மறவாதே.