பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

83

அருள்நெறி முழக்கம்


நெறியினையும், வழிபாட்டுணர்வினையும் வளர்க்கின்றன என்பதையும், இன்றைய தமிழகத்திலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்குப் புறம்பான கருத்துக்கள் பேசப்பெறுவது தனித் தமிழ் நாகரிகத்திற்கு மாறுபட்ட செயல் என்பதையும் நினைவிற்குக் கொண்டுவந்து, தமிழர் தமது இயல்பு தெரிந்து பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த பெருவாழ்வினை வாழ வேண்டும் என்பதையும், தமிழர் குறுகிய பல வெறுப்புணர்ச்சிகளுக்கும், சாதிப் பிணக்குகளுக்கும் ஆளாகக் கூடாது என்பதையும் கூறி வந்தோம்.


முடிப்புரை

பேரன்புடையீர்!

பண்டு தமிழர் வாழ்ந்த நிலை, இடையில் வாழ்ந்த நிலை, இன்று வாழும் நிலை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்ப்போம். சிந்தனையின் பயனாக, தளர்ந்துள்ள தமிழ்க்குடியினர் பீடுடைப் பெருவாழ்வு வாழ வேண்டுவன செய்வோமாக. தமிழ்நாடு வாழ, தமிழர் நிலை உயர, தமிழ்மொழி சிறப்புற, தமிழ்ப் பண்பாடு மலர, பல துறைகளிலும் பணியாற்றி வருகின்ற தமிழரசுக் கழகத்தினரைப் பாராட்டுகின்றோம். தமிழ்த் தொண்டே தவத்தொண்டு என்று எண்ணி, இலக்கியத் துறையில் பணியாற்றும் அன்பர் திரு. ராபி. சேதுப்பிள்ளை அவர்கள் இவ்விலக்கிய மாநாட்டின் தலைவராக இருப்பது மிகவும் பொருத்தமானதொன்று.

இந்த வாழ்த்துரை வழங்குகின்ற உணர்விற்கு இளமைக் காலத்திலேயே வித்திட்ட பெருமை திரு.பிள்ளை அவர்களுக்கு உரியது. மாநாட்டைத் தொடங்கி வைக்கும், கலை வளர்க்கும் செல்வர் செட்டிநாட்டரசர் அவர்களுக்கு நமது வாழ்த்து. பன்மொழிப் புலமையோடு அன்றி, பண்பிற் சிறந்த பேருள்ளம் படைத்து, நாளும் நல்லனவே நாடிச் செய்யும் திருத்தொண்டர்