பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

80

அருள்நெறி முழக்கம்


பயன்படுத்தினர். தமிழிலக்கியங்கள் அனைத்திலும், கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் உயிர்நிலையாக அமைந்து கிடக்கின்றன.

பழங்காலத் தமிழ்ப்பெருமக்கள் நகரமனைய பெருங்கோயில்களை மூவா முழுமுதற்பொருளுக்கு எடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, கடல் தென்குமரி நாட்டிலே, நகரமனைய திருக்கோயில் இருந்ததாகத் தெரிகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பானைக் காரிக்கிழார் என்னும் தமிழ்ப்புலவர் பாடுகின்றார். தமது பாடலின்மூலம் அம்மன்னனுக்கு நல்லுணர்வு கொளுத்துகின்றார். யாருக்கும் தாழாத கொற்றக்குடை தாழ்க என்று கூறுகின்றார். ஆம். மன்னவனுக்கெல்லாம் மன்னவனாக, பிறவா யாக்கைப் பெரியோனாக விளங்கும் முக்கட்செல்வரின் திருக்கோயிலை வலம் வருவதற்காகக் கொற்றக்குடை தாழ்க என்று செவியறிவுறுத்துகின்றார்.

“பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே”

என்பன புறநானூற்று அடிகள். திருக்கோயில்கள் நகரமென்று நவிலப்பெறுகின்ற அளவுக்குப் பரந்து, விரிந்து அகன்றதாக அமைந்திருந்திருக்கின்றன.

கற்றவர்கள் போற்றும் கலித்தொகையிலும் “கடவுட் கடிநகர் என்று திருக்கோயில்கள் பேசப்பெற்றுள்ளன. இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கையிலே, நல்லனவே நாடிக் கைக்கொள்ளச் சாதனமாய் இருப்பது கடவுள் நெறியேயாம். கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் நல்ல தெளிவினின்று உருவாக்கும் உயர்ந்த நெறிகள். அதனால்தான்் முத்தமிழ்க் காப்பியம் ஆக்கித் தந்த இளங்கோவடிகள் "தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்” என்று அறவுரை கூறி நம்மையெல்லாம் அருள்நெறியிலே ஆற்றுப்படுத்துகின்றார்.