பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்

17


பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறோம்?

நல்ல உணவு உண்ண, அழகான உடை உடுத்த, அரண்மனை போன்ற வீட்டில் ஆனந்தமாக வசிக்க, புசிக்க, ரசிக்க, வசிக்க என்பதற்காகத் தானே பணம்!

பணக்காரர்களால் இந்த மூன்றையும் அனுபவிக்க முடிகின்றதா? அருகில் போய்ப் பாருங்கள். அவர்கள் வாழும் வண்டவாளம் தெரியும்.

பணக்காரன் பத்தியச் சாப்பாடுதான் சாப்பிடுகிறான். பசியிருந்தாலும் சாப்பிட முடியாத பயங்கர வியாதிகள்.

ஆடம்பர உடைகளை உடுத்தி, அழகு பார்க்க முடியாத பணக்கார உடம்பு. குண்டாக, தொப்பையாக அல்லது ஒல்லியாக, துள்ளித் துரத்தும் நோய்க் கூடாக உள்ள உடலினால் எந்த உடை போட்டால் எழிலாக இருக்கும்? எடுப்பாக இருக்கும்? எண்ணிப் பார்த்தீர்களா?

படுக்கையில் படுத்தால் ஆயிரம் கவலை. புரட்டி விடும் பிடுங்கல்கள். சுமைகள், சோகங்கள், புரண்டு புரண்டு படுத்து, மிரண்டு மிரண்டு விழித்துக் கழிக்கும் தூக்கமில்லாத இரவுகள். உடல் உறவிலே சிக்கல்கள். திக்கல்கள், விக்கல்கள், இப்படியா வாழ்வது! இதுவா வாழ்கிற லட்சணம்?

இதுதான் சோகச் சதிராடும் புதிரான வாழ்க்கை.

ஆக ஒருவருக்கு என்ன வேண்டும்? எதற்கு முதல் ஸ்தானம் தரவேண்டும். இந்நேரம் புரிந்திருக்குமே!