பக்கம்:தேன் சிட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முரண்பாடுகள்

33


இரண்டு கருத்துக்களையும் தனித்தனியே ஆமோதிக் கின்றவர்களும், வற்புறுத்துகின்றவர்களும் எங்கு மிருக்கிறார்கள். அதேபோல முதலாளித்துவம் பொதுவுடைமை, குடியரசு சர்வாதிகாரம், விடுதலை கட்டுப்பாடு என்று இப்படிப்பட்ட முரண்பட்ட கொள்கைகளையும் அவற்றிற்குத் தனித்தனியேயுள்ள வெறிமிகுந்த ஆதரவுகளையும் எடுத்துக் கூறிக் கொண்டே போகலாம்.

திரைப்படத் தணிக்கையைப்பற்றி நேற்று மாலை நடந்த ஒரு கூட்டத்திற்கு நான் தற்செயலாகப் போக நேர்ந்தது. திரைப்படக் கலை நல்ல முறையில் வளருவதற்குத் தணிக்கை மிகவும் தேவை என்று ஒரு கட்சி அழுத்தம் திருத்தமாகப் பேசிற்று; இக்கலை வளர வேண்டுமானால் தணிக்கை அறவே கூடாது என்று மற்றொரு கட்சி வன்மையாக வற்புறுத்தியது. இந்தக் கருத்து வேறுபாட்டில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்று நான் மெதுவாக அங்கிருந்து நழுவி அமைதியை நாடிக் கடற்கரைக்குச் சென்று ஓரிடத்தில் அமர்ந்தேன். மணல் வெளி அசைவற்று அமைதியாக இருந்தது. கடல் அலைகள் ஓய்வின்றி உருண்டு சுருண்டு தரையில் மோதின. நிலத்திற்கும் கடலுக்கு முள்ள முரண்பாட்டைக் கவனிப்பதற்கு முன்பே அருகில் அமர்ந்திருந்த சில இளைஞர்களின் முழக்கம் என் சிந்தனையை வேறெங்கும் செல்லவிடாது தாக்கியது. "பாரத நாடு உலகிற்குத் தந்துள்ள தத்துவ ஞானத்திற்கு இணையே கிடையாது. அதை நான் இமயமலையின் உச்சியிலிருந்து முழங்கவும் பின் வாங்கமாட்டேன்" என்று முழங்கினான் ஒருவன்.

தே. சி.-31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/34&oldid=1144946" இலிருந்து மீள்விக்கப்பட்டது