பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அரவிந்தர் ஆசிரமத்தில் பண்டாரங்கள் இல்லை; காவி கட்டிய துறவிகளுமில்லை; இந்த ஆசிரமத்தில் பண்டைக் கால பன்னக சாலைகளில் இருந்த பழக்க வழக்கங்களும் இல்லை என்பதை நாம் முதலில் முக்கியமாக உணர வேண்டும்.

இந்தப் பாண்டிச்சேரி ஆசிரமத்தில் இருப்பவர்கள் எல்லாரும் சாதகர்களே! துறவிகளோ, சாமியார்களோ சந்நியாசிகளோ அல்லர்!

சாதகர்கள் என்றால் யார்? என்று கேட்பீர்கள், புரிகிறது நமக்கும் சாதகர்கள் என்றால், அவர்களுடைய வாழ்க்கை ஆன்மீக அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

இந்த உலகத்தில், நாம் ஜடம் உயிரற்றது என்று சொல்லும் இந்த மண்ணிலே தெய்வீக ஒளியைத் தோற்றுவிக்க ஒவ்வொரு சாதகனும் முயற்சிக்க வேண்டும் என்பதே சாதகர்கள் எனப்படு வோருடைய இலட்சிய நோக்கமாகும்.

பாண்டிச்சேரி ஆசிரமம், ஏதோ ஒராயிரம் சாதகர்கள் திரண்டு வந்து, இந்த இடத்திலேதான்் ஆன்மீக தெய்விக ஒளியைத் தோற்றுவித்தாக வேண்டும் என்ற திட்டங்களால் நிறுவப்பட்ட ஆசிரமம் அல்ல.

அரவிந்தர் முதன் முதலில் பாண்டிச்சேரி நோக்கி வந்தார். இங்லிஷ்காரர் தொடர்பே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஓரிடத்தைத் தேடினார். பிரெஞ்சுக்காரர் ஆதிக்கத்தில் அப்போது பாண்டிச்சேரி இருந்தது. எனவே ஆங்கிலேயனுடைய தொல்லைகள் எதுவும் ஏற்படாத ஊராக இருந்தது - அரவிந்தருக்குப் பாண்டிச்சேரி!

அரவிந்தருடன், நான்கைந்து சாதகர்களும் பாண்டிச் சேரிக்கு வந்து, ஒரே குடும்பத்தவரைப் போல ஒரு சிறிய வீட்டில் வாடகைக்குத் தங்கினார்கள்.