திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது; யாழின் இன்னிசை நின்றுவிட்டது." - எசாயா 24:8

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]

தீர் பற்றிய செய்தி[தொகு]


1 தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு:
தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்;
தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும்
வருவார் போவார் இல்லாதபடிக்கும்
பாழாய்ப் போய்விட்டது;
சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி
அவர்களை வந்தடைகின்றது.


2 கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,
வாய் திறவாதீர்;
உங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர்.


3 பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;
சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும்,
நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.


4 சீதோனே, வெட்கப்படு;
'நான் பேறுகால வேதனை அடையவில்லை;
பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை;
இளைஞரைப் பேணவுமில்லை;
கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை' என்று கடல் சொல்கின்றது;
கடற்கோட்டை கூறுகின்றது.


5 இச்செய்தி எகிப்தை எட்டும்போது,
தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.


6 கடற்கரை நாட்டில் வாழ்வோரே,
தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.


7 பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,
களிப்புமிகுந்த நகர் இதுதானா?
தொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு
அடியெடுத்து வைத்த நகரா இது?


8 அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்
இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும்,
உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான
தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்? [*]


9 செருக்குற்றோர் சீர்குலையவும்,
நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும்
அவமதிப்பு அடையவும்
படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார்.


10 தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து;
இனி இங்குத் துறைமுகமே இராது.


11 கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்;
கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு
ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.


12 "ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே,
இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய்,
எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ;
அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்" என்கிறார் அவர்.


13 இதோ, கல்தேயர் நாட்டைப் பார்,
இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்;
இவர்கள் சீதோன் நாட்டைக்
காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்;
அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர்.
அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர்.
நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.


14 தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்;
ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.


15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள்
தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும்.
எழுபது ஆண்டுகளுக்குப்பின்,
விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:


16 "மறக்கப்பட்ட விலைமாதே!
யாழினைக் கையிலெடுத்து,
நகரைச் சுற்றி வலம் வா.
உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு;
பண் பல பாடு."


17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர்
தீர்நகரைத் தேடிவருவார்.
அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி,
மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.


18 ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய்
ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும்.
அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை;
பதுக்கி வைக்கப்படுவதுமில்லை;
அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு
நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.


குறிப்பு

[*] 23:1-8 = எசே 26:1-28:19; யோவே 3:4-8;
ஆமோ 1:9-10; செக் 9:1-4;
மத் 11:21-22; லூக் 10:13-14.


அதிகாரம் 24[தொகு]

அனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து,
அதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து,
அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.


2 அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும்,
பணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும்,
பணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும்,
வாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும்,
கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும்,
வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ
அவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.


3 நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;
முழுவதும் சூறையாடப்படும்.
ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.


4 நிலம் புலம்பி வாடுகின்றது.
மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது,
மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.


5 நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது;
ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்;
நியமங்களைச் சீர்குலைத்தார்கள்;
என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.


6 ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது.
அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.
அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்;
சிலரே எஞ்சியிருப்பர்.


7 திராட்சை இரசம் அழுகின்றது;
திராட்சைக் கொடி தளர்கின்றது;
அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.


8 மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.
அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது;
யாழின் இன்னிசை நின்றுவிட்டது.


9 பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்;
மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.


10 குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது;
யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.


11 திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது;
மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;
விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.


12 பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது;
நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.


13 நாட்டில் மக்களுக்கு நேரிடுவது
ஒலிவமரத்தை உலுக்குவது போலவும்,
அறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப்
பறிப்பது போலவும் உள்ளது.


14 எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி
மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்;
ஆண்டவரின் மாட்சி பற்றி
மேற்கிலிருந்து ஆரவாரம் செய்கின்றார்கள்.


15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப்
பெருமைப் படுத்துங்கள்;
கடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுங்கள்.


16 மண்ணுலகின் எல்லையிலிருந்து
'நீதியுள்ளவருக்கு மாட்சி'
என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;
நானோ, "இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன்,
எனக்கு ஐயோ, கேடு;
எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்;
துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்" என்றேன்.


17 உலகில் குடியிருப்போரே, திகில், படுகுழி,
கண்ணி, உங்களுக்கெதிரில் இருக்கின்றன.


18 திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்;
படுகுழியிலிருந்து ஏறுகின்றவர்
கண்ணியில் சிக்கிக் கொள்வார்;
ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன;
நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.


19 பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;
நிலவுலகம் பிளந்து விரிகின்றது;
மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.


20 குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது;
குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது;
அதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது;
அது வீழ்ச்சியடையும்; இனி ஒருபோதும் எழாது.


21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும்
நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.
22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்;
சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள்.
நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.
23 நிலா நாணமுறுவாள்;
கதிரவன் வெட்கமடைவான்;
ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும்
எருசலேமிலும் அரசாள்வார்.
அவர்களின் பெரியோர் முன்னிலையில்
அவர்தம் மாட்சி வெளிப்படும்.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை