இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒவ்வொரு நேரமும் அந்தச் சிவாலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குடம் குடமாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து கொட்டினாள், கனகவல்லி. ஒரு நாள் 'ஏன் அம்மா, இப்படித் தீர்த்தத்தை எடுத்து வந்து கொட்டுகிறாய், ஏதாவது பிரார்த்தனையா?' என்று கேட்டார் குருக்கள்.
"ஆமாம், பிரார்த்தனைதான்" என்றாள் கனகவல்லி.
"என்ன பிரார்த்தனை?" என்று கேட்டார் குருக்கள்.