பக்கம்:தேன்பாகு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


பழக்கமான கஷாயமெல்லாம் போட்டுக் கொடுத்தோம். ஜூரம் நிற்கவில்லை. கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு. ஐயா, நீங்கள் வந்து பார்த்துக் காப்பாற்ற வேண்டும்" என்று அழாக் குறையாகச் சொன்னான்.

"அப்படியா நீ நல்ல மனிதனாயிற்றே! உனக்குக் கஷ்டம் வரக்கூடாதே, நீ பயப்படாதே, நான் எப்படியும் சொஸ்தம் செய்து விடுகிறேன், நான் கேட்கும் மருந்துச் சரக்குகளை மாத்திரம் விடாமல் வாங்கித் தா" என்று சொல்லி, அவன் வீட்டுக்குப் போனார். நோயாளியின் கையைப் பார்த்தார். பிறகு ஒரு மாத்திரையைத் தேனில் குழைத்துக் கொடுத்து விட்டு, "இந்த ஜூரம் மிகவும் பொல்லாதது. இதற்கு ஒரு கஷாயம் போட வேண்டும். கத்தரி வேரும் வேறு சரக்கும் காய்ச்சி அந்தக் கஷாயத்தைத் தயார் செய்ய வேண்டும்" என்றார்.

"கத்தரி வேர்தானா பிரமாதம்! நம் வீட்டுக் கொல்லையிலே இருக்கிறது" என்றான் மட்டியப்பன்.

"ஒரு மணங்கு வேர் வேண்டும். நான் வீட்டுக்குப் போய்க் கஷாயம் போட ஏற்பாடு செய்கிறேன். நீ வேர் அனுப்பு" என்று உத்தரவு செய்து விட்டு வைத்தியர் மிடுக்காகத் தம் , வீட்டுக்கு நடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/63&oldid=1396503" இலிருந்து மீள்விக்கப்பட்டது