பக்கம்:தேன்பாகு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


மட்டியப்பன் பிறருக்கு மனமார ஒரு பொருளைத் தரமாட்டான். அந்தக் கத்தரிக் காயைப் பறித்து, வெளியூர்ச் சங்தைக்குப் போய் விற்றுக் காசு சம்பாதித்தான். தன்னுடைய வீட்டிற்குக் கூட அதை உபயோகிக்கவில்லை.

அந்த ஊர் வைத்தியர் எல்லாருக்கும் வேண்டியவர். அவர் பேசும் வார்த்தைகளிலேயே பாதி வியாதி தீர்ந்துவிடும். வைத்தியத்திலும் அவர் திறமை பெற்றவர். நல்ல அநுபவமும், புத்தி கூர்மையும் உடையவர். அவருடைய மகள் கர்ப்பமாக இருந்தமையால் பிரசவத்திற்காகப் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவள் வாய்க்கு வேண்டிய உணவுகளையும் தின்பண்டங்களையும் வைத்தியர் மனைவி செய்து கொடுத்தாள். ஒருநாள் அவள் கத்தரிக்காய் வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அவளுடைய தாய் வைத்தியரிடம் தெரிவித்தாள்.

"நம்ம ஊர் மட்டியப்பன் வீட்டில் கத்திரிச் செடி பயிர் பண்ணியிருக்கிறார்களாம். நன்றாகக் காய்க்கிறதாம். கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள்" என்று அவள் சொன்னாள்.

வைத்தியர் மட்டியப்பனிடம் போய்க் கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் வைத்தியர் கேட்பதைக் கொடுக்க மறுக்க மாட்டார்கள். மட்டியப்பனுக்கோ கொடுக்க இஷ்டம் இல்லை வைத்தியரிடம் விலை கேட்பதும் நன்றாக இராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/60&oldid=1341781" இலிருந்து மீள்விக்கப்பட்டது