பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அறிவியல் தமிழ்

பரிசு பெற்றது) ‘அம்புலிப் பயணம்’ ஆகிய நூல்கள் சிறுவர்க்காக எழுதப்பெற்றவை; இனிய எளிய தெளிவான நடையில் அமைந்தவை. இவர்களைத் தவிர, திரு. எஸ். எஸ். இராமசாமி, திரு. பெ. தூரன், பேராசிரியர் சவரிமுத்து முதலியோரும் சில அறிவியல் நூல்களை எழுதியுள்ளனர். கோவையிலிருந்து வெளிவரும் ‘கலைக்கதிர்,’ என்ற கிங்கள் இதழ் பல்லாண்டுகளாகப் பல அரிய கட்டுரைகளைத் தாங்கி தமிழ் கூறு நல்லுலகில் உலா வந்து கொண்டுள்ளது. சிறிது காலம் உலா போந்த ‘அணுக்கதிர்’ (சென்னை) இதழும் அறிவியல் பணியாற்றி உள்ளது.

பொது மக்களுக்கென நூல்கள் வெளியிடுவதில் பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகம் பரிசுத் திட்டங்களை ஏற்படுத்தி எழுதுவோருக்கு ஊக்கம் காட்டி வருகின்றது. மொழி பெயர்ப்பு நூல்கட்கும் முதல் நூல் கட்கும் பரிசுகள் அளித்து வருகின்றது. மொழி பெயர்ப்பு நூல்களில் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் ‘அணுக்கரு பெளதிகம்’ (1966) இங்ஙனம் பரிசு பெற்று வெளிவந்த மொழி பெயர்ப்பு நூலாகும். அங்ஙணமே, பேராசிரியை ஈ. த. இராஜேசுவரி அம்மையாரின் ‘அணுப் புராணம்’ (1953) என்ற முதல் நூலும் பரிசு பெற்ற முதல் நூலாகும். பரிசுத் திட்டங்களின் கீழ் இங்ஙனம் வெளி வந்த வேறு நூல்களைப்பற்றிய குறிப்புகள் கிடைக்க வில்லை.

இரண்டாவதாக, அறிவியல் தமிழில் பாட நூல்களின் வளர்ச்சியினை ஆராய்வோம். உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் தமிழ் பயிற்று மொழியாக அமைந்த காரணத்தால் இம் மட்டத்தில் எண்ணற்ற அழகிய தமிழ் நூல்கள் பல துறைகளிலும் வெளி வந்திருப்பதைக் கண்டு மகிழலாம். தனியார் துறை இதில் செய்துள்ள தொண்டு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டியதொன்று.