பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

23

மேற்குத் திசையிற் சென்று, கோமுகிப் பொய்கைக் கரையில் ஒரு புன்னைமரத்து நிழலிலே இருந்தான். இருக்குங்கால், அவர்கள் வருகையை அறிந்த அத்தீவின் காவல் தெய்வமாகிய தீவதிலகை, அங்குவந்து அவர்களைக் கண்டு, ஆபுத்திரனை நோக்கிச் சில சொல்லத்தொடங்கி, "அக்காலத்தில் இத்தீவில் உன்னை மறந்து தனியே விட்டுவிட்டுக் கப்பலேறிச் சென்ற ஒன்பது செட்டிகள், பின்பு உன்னைக் காணாது வருந்தி இத்தீவிற்கு மீண்டுவந்து, உன்னைத்தேடி, நீ இறந்துபோன வரலாற்றைத் தெரிந்து தாங்களும் உடனே உண்ணா விரதம்பூண்டு உயிர் துறந்தார்கள்; அவர்களுடைய, உடல் எலும்புகள் இவை; காண்பாயாக. அச்செட்டிகளது உபகாரத்தைப் பெற்று உடன்வந்தோர் சிலர் அவர்கள் இறந்தது தெரிந்து, பிரிவாற்றாது தாங்களும் உயிர் துறந்தனர்; அவர்களுடைய உடல் எலும்புகள் இவை, பார். உனக்கு அரச பதவியை அளித்த அன்புமயமான உனது பழைய உடம்பின் எலும்பு, இப்புன்னை மரத்து நிழலில் அலைகள் குவித்த மணலால் மூடப்பட்டிருப்பதையும் பார்ப்பாயாக, இங்ஙனம் தன்னுயிரையும், தனக்கிரங்கிய பிற உயிர்களையும் கொன்ற கொலைஞனுகிய நீயன்றோ, இப்போது சாவகநாட்டுப் புண்ணியராசனாய் விளங்குகின்றாய்; இஃது என்ன விந்தை"? என்று ஆபுத்திரனைப் பழிப்பவள்போல் புகழ்ந்து கூறினாள். ஆபுத்திரன், மணலைத் தோண்டித் தன்னுடைய பழைய உடம்பின் எலும்புகளைக் கண்டு ஆச்சரியமும், துக்கமும்கொண்டு மயங்கி நின்றான். ஆபுத்திரனை நோக்கி இச்செய்திகளை உரைத்த தீவதிலகை, பின்பு மணிமேகலையை நோக்கிக் கூறத் தொடங்கினாள்:- "மணிமேகலாய்! உனது பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது; அதற்குக் காரணத்-