பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனன்முத லாய கிரகங்க ளால்வரும் இன்பதுன்பம் ;
மனம்கொள அன்னவர்ப் போற்றுதல் நன்றெனும் வாய்மை சொல்வார்;
சினம்கொளும் வேலவ, ரத்ன கிரியினிற் சேர்பவனே,
கனம்கொள் நின்னை வணங்கின் அக் கோள்செயல் காண்கிலமே (46)

காண்கிலள் யாரையும் ; ஊணும் வெறுத்தனள் ; கைவளைகள்
பூண்கிலள் ; சற்றும் துயில்கிலள் ; ரத்னப் பொருப்பவனை
ஏண்பெறக் கண்டிலன் ; என்செய்கு வேன் ? என ஏங்குகிறாள்;
சேண்பெறும் சீருடை வேலவ னே, அருள் செய்குவையே. (47)

செய்யினில் நெல்விளைந் தால்தான் பயன் உண்டு ; சீருடைய
கையிற் பொருள் இருந் தாற்பயன் உண்டு : கவின்கன்னியை
மைய லுடன்மணம் செய்தாற் பயன்உண்டு ; மாஇரத்ன
ஐய கிரிப்பால வேலனைப் போற்றின் அனைத்தும் உண்டே. (48)

உண்டிடும் போது விருந்தின ரோடே உணல் அறமால் ;
பண்டையர் தாம்தமக் கென்றுலை ஏற்றார் ; பரிவுடனே
கொண்டநின் கோலம் பணிந்தேன் ; விருந்தெனக் கொள்ளூவையோ?
மண்டு புகழ்ரத்ன வெற்பினிற் பால, மயிலவனே, (49)

மயிலினை' ஓங்கார நல்வடி வென்றுன்னி வாழ்த்துகிலேன் ;
உயர்சக்தி வேலினை ஞான உருஎன் றுணரகிலேன் ;
பயில்வள்ளி இச்சா சக்திதெய் வானை படர்செயலாய்
நயந்திலன் ; என்செய்வேன்? ரத்ன கிரியை நயந்தவனே. (50)

நயப்பும் வெறுப்பும் இரவும் பகலதும் நண்ணுகிலா
துயஓர் வழிசொல்ல வேண்டும் ; இரத்தின ஓங்கலிலே
மயல் அற நிற்கும் வடிவேல, நீப மலரணிந்தாய்,
அயர்வறச் செய்யும் குணசீல, பால, அயில் முருகே. (51)

முருகா, குமரா, இரத்தின நற்கிரி முன்புநின்ற
குருவே, குகனே, குறைவிலா நல்எழிற் கோலம் உளாய்,
மருவேறும் நீப மலர்மாலை பூண்டுயர் வானவனே,
உருஏறும் நின்அடி போற்ற இடம் இலை உள்ளத்திலே. (52)

இடம் இல்லை நெஞ்சில் ; அணுஎன் றிதனை இயம்புவரால் ;
நடைமுறை நோக்கிடின் இம்மனம் எங்கெங்கோ நாடுறுமே :
அடைதரும் இஃதை அடக்குதற் கோர்ஆ றறைகுவையோ ?
மிடைதரு சீர்கொள் இரத்தின வெற்பினில் வேலவனே. (53)