பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கழுதைக்குக் காட்டிற்குள்ளே கொஞ்சம் நுழைந்தால் பசும்புல் நிறையக் கிடைக்கும் என்று தோன்றியது. விரைவில் குடிசைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு காட்டில் உள்ளே புகுந்து மேயத் தொடங்கிற்று. உள்ளே போகப்போகப் பசும்புல் நிறைய வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதை மேய வேண்டும் என்ற ஆசையால் அது அதிகத் தூரம் சென்று விட்டது. திடீரென்று சூரியன் மறைந்து நன்றாக இருட்டும் கட்டத் தொடங்கிவிட்டது.

அந்த வேளையிலே ஒரு புலி எதிரே வந்தது. புல்லை மேயவேண்டும் என்ற பேராசையால் உயிருக்கே ஆபத்து வரும் போலிருந்தது. இருந்தாலும் நடந்து போனதை எண்ணி வருத்தப்படுவதில் பயனில்லை என்று அதற்குப் பட்டது. அதனால் கடக்கிட்டி முடக்கிட்டி தைரியத்தை இழக்காமல் புலியிடமிருந்து தப்பவேண்டும் என்று எண்ணமிட்டுக்கொண் டிருந்தது.

புலி பலமுள்ளதாக இருந்தாலும் இயற்கையாகவே சந்தேகமுள்ள மிருகம். இந்தச் சந்தேகமும் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு உதவியாக அமைந்தது.

எதிரே வந்த புலி கடக்கிட்டி முடக்கிட்டியின்மேல் உடனே பாய்ந்து கொல்ல முயற்சி செய்யவில்லை. ‘நான் பார்த்துள்ள விலங்குகள் போல் இது இல்லையே! இது ஏதோ புது