பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இவர்கள் பேசியதையெல்லாம் விழித்துக் கொண்டு படுத்திருந்த திருடன் நன்றாகக் கேட்டுக்கொண்டான். அதை அப்படியே நான்காவது திருடனுக்குச் சொல்லிவிட்டான்.

"திருட்டுத் தொழிலிலும் இப்படி நயவஞ்சகமா?" என்று அவர்களுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. "அவர்கள் இரண்டு பேருக்கும் நல்ல புத்தி வருமாறு செய்ய வேண்டும்" என்று அவர்கள் இருவரும் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார்கள்.

அதன்படி அமாவாசை இரவில் நடுச்சாமத்திற்கு முந்தியே அவர்கள் கிழவனுடைய குடிசையில் புகுந்து பதுங்கிக்கொண்டார்கள். கிழவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். கடக்கிட்டி முடக்கிட்டியும் தூங்கிக்கொண்டிருந்தது.

முன்பே ஏற்பாடு செய்துகொண்டது போல் முதல் இரண்டு கூட்டாளிகளும் நடுச்சாமத்தில் குடிசைக்குள் நுழைந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து முன்னால் வந்த கூட்டாளிகள் அவர்கள் மேல் பாய்ந்தார்கள். இருட்டாக இருந்ததால் திடீரென்று பாய்ந்தது யாரென்று கண்டு கொள்ள முடியவில்லை.

அவர்கள் நான்கு பேர்களுக்குள்ளும் பெரிய குத்துச்சண்டை நடந்தது. இப்படி நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் தாக்கியதால் நான்கு பேரும் மயங்கிக் கீழே விழுந்து விட்டார்கள்.