பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை 9

தெரிவிக்கப்பட்டிருக்கின்றமையாற் போலும் , அன்றியும் துறைமுகப் பட்டினமாகிய தொண்டி என்னும் தலைநகரைச் சிறப்பித்துக் கூறும் 'தொண்டிப் பத்தினை'த் தன்னுட் கொண்ட நெய்தற் திணையை இந் நூலுள் இரண்டாவதாக வைத்துத் தொகுத்திருப்பதும் இக்கருத்தினை வலியுறுத்தும்.

சுருங்கிய அடிகளில் முதல் கரு உரி என்னும் அகப்பொருள் மூன்றினையும் எஞ்சாது நயம்படப் புலப்படுத்தலில் இந்நூலுக்கு இணையாகக் கூறத்தக்க தொகை நூல்கள் வேறில்லை என்றே கூறலாம். இதனாலன்றே தொல்காப்பிய அகத்திணை யியலுள்,

'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்.'

என்ற சூத்திர உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் முதல் கரு உரி என்னும் மூன்று பொருளும் கூறி, நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஒருங்கே அமைந்தற்கு,

  • மனைநெடு வயலை வேழஞ் சுற்றும்

துறைகெழும் ஊரன் கொடுமை நாணி நல்ல னென்னும் யாமே அல்ல னென்னுமென் தடமென் றோளே.”

என்னும் இந்நூற் பாட்டினை உதாரணமாகக் காட்டி வியந்துள்ளார். எனவே, "தினையளவு போதாச் சிறு புல் நீர் நீண்ட, பனையளவு காட்டும் படித்தால்” என்னும் உவமை இந்நூலுக்கும் சாலப் பொருந்தும்.

இந்நூற் பாக்களெல்லாம் நோக்கு முதலிய செய்யுள் உறுப்பினைக் கொண்டு சொற்சுவை பொருட்சுவை இன்றி விளங்குகின்றன. மரம், செடி, கொடி, பூ, விலங்கு, ஊர்வன, நீர் வாழ்வன முதலிய அஃறிணைப் பொருள்களின் இயற்கைத் திறங்களையும், மலை, ஆறு, பொய்கை, கடல் முதலியவற்றின் இயற்கை எழில்நலன்களையும் படிப்போரது கண்முன் நிறுத்திக் காட்டும் பான்மையை இந்நூற் பாட்டுக்களில் ஆங்காங்குக் கண்டு மகிழலாம்.