அகல் விளக்கு/அத்தியாயம் 13

விக்கிமூலம் இலிருந்து

மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லோருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இண்டர் வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான்.

தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும் என்று குறித்திருந்தார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றேன். அவன் நாற்காலியில் சாய்ந்தபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மேசையில் ஆங்கிலப் புத்தகம் திறந்தபடியே இருந்தது. ஒலி செய்யாமல் சென்று மேசைப் பக்கத்தில் உட்கார்ந்தேன். புத்தகத்தின் இடையே புகைப்படம் இருப்பதுபோல் தோன்றியது. குடும்பத்தாரின் படமோ, அல்லது சந்திரனின் படமோ என்று மெல்ல எடுத்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் படமாக இருந்தது. கீழே "க. இமாவதி" என்று கையெழுத்தும் இருந்தது. படத்தை உற்று நோக்கினேன். நாடகத்தன்று அவனோடு பேசிய அந்தப் பெண்தானோ என்று எண்ணி மறுபடியும் பார்த்தேன். அவ்வாறுதான் தோன்றியது.

படத்தைப் பழையபடியே வைத்துவிட்டேன். சந்திரன் இன்னும் எழவில்லை. சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தேன். மாலன் சொன்னபடி காதலாகத்தான் இருக்குமோ என்று எண்ணினேன். எப்படியாவது போகட்டும். தேர்வு நெருக்கத்தில் நன்றாகப் படித்துக் களைத்துபோய் இப்படித் தூங்குகிறானே, இதுவே போதும் என்றும் எண்ணினேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி மறுபடியும் ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். கையெழுத்தையும் பார்த்தேன். பழையபடியே புத்தகத்தின் பக்கத்தைத் திறந்தாற் போல் வைத்தேன். அப்போதும் சந்திரன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பிறகு வந்து பார்க்கலாம் என்று எழுந்து வந்தேன். அவன் விழித்துக்கொண்டு "என்ன வேலு" என்றான்.

"ஒன்றும் இல்லை, அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்."

"எதைப்பற்றி?"

"உன் படிப்பைப் பற்றி"

"எனக்கும் எழுதியிருக்கிறார்" என்று சொல்லி நிறுத்தி, சிறிது பொறுத்து, "சரி" என்றான்.

நான் வந்துவிட்டேன்.

எங்களுக்கும் கல்லூரித் தேர்வுகள் நெருங்கின. சந்திரன் முதலானவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கின. மாலனும் நானும் போட்டியிட்டுப் படிப்பது என்று எங்களுக்குள் தீர்மானம் செய்துகொண்டோம். ஒரு நாள் மாலை அவன் என்னிடம் வந்து, "வேலு! கோயிலுக்குப் போய் வருவோம்" என்றான். நான் இசைந்து எழுந்தேன்.

வழியில் அவன், "மற்றவர்கள் யாருக்கும் சொல்லாதே. நான் எப்போதும் தேர்வுக்கு முன் ஓர் அருச்சனை செய்வது வழக்கம். அதோடு ஒரு பிரார்த்தனை செய்து கொண்டு, தேர்வு வெற்றி எனத் தெரிந்தவுடனே போய் அந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருவேன். எஸ்.எஸ்.எல்.சி-யும் அப்படித்தான் தேறினேன். இப்போது அதற்காகத்தான் போகிறேன். நீயும் தேர்வை முன்னிட்டு அருச்சனை செய்; ஒரு பிரார்த்தனையும் செய்துகொள்" என்றான்.

என் மனத்தே பெருஞ்சோர்வு வந்தது. படித்த பையன் இப்படி எண்ணுகிறானே. எண்ணுவதையும் இவ்வளவு உண்மை என எண்ணுகிறானே. இவனிடம் என்ன சொல்வது என்று வருந்தினேன். "கோயிலுக்குப் போகலாம், வழிபாடு செய்யலாம். மனத்தைக் காக்கும்படி வேண்டலாம்; சோர்வைப் போக்கி ஊக்கம் தரும்படியாகவும் வேண்டலாம்; ஆனால் தேர்வில் வெற்றி தருமாறு வேண்டுவதா? அதற்கு லஞ்சமாக அருச்சனையும் பிரார்த்தனையும் செய்வதா? எனக்கு இப்படிப்பட்ட போலி வழிபாடு பிடிக்காது. நான் திரும்பிப் போகிறேன்" என்றேன்.

"நீ நம்பாவிட்டால் போகட்டும், துணைக்காவது என்னோடு வா" என்று என் இரு கைகளையும் பற்றிக் கொண்டான். அவனுடைய அன்புக்காகத் துணையாகப் போய் வந்தேன். திரும்பி வந்தபோது, "உனக்கு இதனுடைய பயன் எல்லாம் இப்போது தெரியாது; போக போகத் தெரியும்" என்றான்.

"பார்த்தாயா? நீ என்னை வென்றுவிட்டதுபோல் பேசுகிறாய்" என்று உற்றுப்பார்த்தேன்.

"சரி, சரி. வா" என்று கைகளைப் பற்றினான்.

"நான் கடவுளை மிகப் பெரிய சக்தியாக எண்ணி வழிபடுகிறேன். ஒழுங்கான ஆட்சித் தலைவராக மதித்து அன்பு செலுத்துகிறேன். சின்ன சின்ன பொருளை எல்லாம் பார்த்து விதிகளை மாற்றி உதவி செய்யும் சிறுமை அவரிடம் இல்லை" என்றேன்.

அவன் அதற்கும் ஒன்றும் விடை கூறாமல், "எப்படியாவது இருக்கட்டும்" என்று நழுவினான்.

தேர்வுகளில் இருவரும் நன்றாகவே எழுதிக்கொண்டு வந்தோம். ஆனால் மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் சோர்வும் காணப்பட்டன. இருந்தபோதிலும் விடா முயற்சியோடு படித்து எழுதினான்.

சந்திரனுடைய அறைக்கும் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து வந்தேன். தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் போய் எப்படி எழுதினான் என்று தெரிந்து வந்தேன். ஆங்கிலத்தில் பாடங்கள் மறந்து போவதாகவும் தமிழில் நன்றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங்களும் விஞ்ஞானப் பாடங்களும் நிறைய இருப்பதாகச் சொன்னான். அவனுக்குத் தேர்வில் உண்மையான ஆர்வம் இருந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன்.

ஆங்கிலத் தேர்வு நடந்த மூன்று நாட்களும் மாலையில் அவனுடைய அறைக்குப் போய், "எப்படி எழுதினாய்." என்று கேட்டேன். "ஏறக்குறைய எழுதியிருக்கிறேன்" என்று சொல்லி வினாத்தாள்களைக் காட்டினான்.

தமிழ்த் தேர்வு நடந்த இரண்டு நாட்களிலும் கேட்டபோது, "நன்றாக எழுதியிருக்கிறேன்" என்றான்.

கணக்குத் தேர்வு நடந்த இரண்டு நாட்களும் போயிருந்து கேட்டேன். "நூற்றுக்கு ஐம்பது வரும். அவ்வளவுதான்" என்றான்.

"வாலாசாவில் நூற்றுக்கு நூறும் தொண்ணூற்றெட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த நீ, எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்து என்னை வல்லவன் ஆக்கிய நீயா இப்படிச் சொல்வது?" என்றேன்.

"என்ன செய்வது?" என்று இரண்டு சொற்களில் முடித்தான்.

விஞ்ஞானப் பாடத்துத் தேர்வு அடுத்துத் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் விடுமுறை தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்காக வந்திருந்தது. விடுமுறையில் வெளியே போய்ச் சுற்றுகிறானா, ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறானா பார்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். சந்திரன் குப்புறப்படுத்திருந்தான். விம்மி விம்மி அழுவது கேட்டது. கண்களைத் துடைப்பதைக் கண்டேன். பக்கத்தில் ஒரு கவர் ஓரம் கிழிக்கப்பட்டிருந்தது. தனியே ஒரு கடிதம் கிடந்தது.

சுவர் ஓரத்தில் பளபளப்பான தாள் ஒன்று இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பெண்ணின் படமும், மற்றொன்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அழைப்பிதழோ என்று ஐயுற்றேன். அவனுடைய தங்கை கற்பகத்தின் திருமண அழைப்பிதழோ என்று எண்ணினேன். என் மனம் பகீரென்றது. சந்திரனுக்கும் விருப்பமில்லாத இடத்தில் கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார்களோ? கற்பகத்தின் திருமணமா? இவ்வாறு எண்ணியவுடன், என் கண்களும் கலங்கின; என் இதயமும் விம்மியது. "சந்திரா?" என்றேன். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, "இப்போது வராதே, போய்விடு" என்றான். எனக்கு அழுகை வந்துவிட்டது. "உன் துயரத்தில் எனக்கும் பங்கு உண்டு! சந்திரா! இதற்காகக் கலங்காதே. என்ன செய்வது!" என்றேன்.

அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். "உனக்கும் தெரியுமா?" என்றான்.

"அதோ தெரியுதே" என்று திருமண அழைப்பிதழைக் காட்டினேன்.

"வேலு! மோசம் செய்து விட்டாளே!" என்று அறையின் கதவைத் திறந்தான். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. உடனே படுக்கையில் விழுந்து விம்மி அழுதான். "இதோ, பார்" என்று பக்கத்தில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டியபடியே, "படி, படித்துப் பாரடா" என்றான். படித்துப் பார்த்தேன்.

அன்புள்ள அண்ணா,

இத்துடன் என் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். நேரில் வந்து கொடுக்க எண்ணினேன். ஆனால் தேர்வுக்கு உரிய காலம் அல்லவா? இன்னும் மூன்று நான்கு நாளில் எல்லாம் முடிந்து விடும். பிறகு நான் நேரில் வருவதற்குள் நீங்கள் ஊர்க்குப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவீர்களோ என்று எண்ணியே தபாலில் அனுப்பியுள்ளேன். மன்னிக்க.

தேர்வுகள் நன்றாக எழுதியுள்ளேன். இனி உள்ளவற்றையும் நன்றாக எழுதிவிடுவேன். நீங்களும் அவ்வாறே செய்திருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரிய க. இமாவதி.

கடிதத்தைப் படித்த பிறகு என் உள்ளத்தின் துயரம் போயிற்று. உண்மை விளங்கிற்று. சந்திரனைப் பார்த்தேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தான்.

"தேர்வு முடிந்ததும், ஊர்க்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அப்பாவுக்குச் சொல்லி அவளை மணம் செய்துகொள்ள..." என்று வாக்கியத்தை முடிக்காமலே அழுதான். "இப்படி ஒரு திருமண அழைப்பு அச்சிட எண்ணினேன். அவள் செய்துவிட்டாள்" என்று தான் கிழித்து வீசியதைக் காட்டினான். மறுபடியும் குழம்பிய குரலில், "அவளுடைய வாழ்க்கை தொடங்குகிறது; என் வாழ்க்கை முடிகிறது" என்று கதறினான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். கிழிந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். முன் பார்த்த அதே பெண்ணின் படம் இருந்தது. கீழே "இமாவதி" என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில் மணமகனின் படம் இருந்தது. அதன் கீழே "சிவசங்கரன்" என்று அச்சிட்டிருந்தது.

"இனிமேல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும்." என்றான் சந்திரன்.

"பைத்தியம் உனக்கு" என்றேன்.

"உனக்குக் காதல் என்றால் என்ன என்று தெரியாது. நீ ஒரு மண்டு, மக்கு, உணர்ச்சியற்ற மரம்" என்றான்.

"இருக்கலாம். ஆனால் இது காதல் அல்ல. அவள் கலங்கவில்லை. நீ மட்டும் இப்படி அழுகிறாய். இதுவா காதல்? அவள் விரும்பவில்லை. நீ மட்டும்...."

சந்திரனுக்குக் கோபம் வந்தது. அழுது சிவந்த கண்களே கோபக்கண்களாக மாறி, என்னை பார்த்து, "எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா? எழுந்து போ" என்றான். மறுபடியும் குப்புறப்படுத்து, "பைத்தியமா! நீயா இப்படிச் சொல்கிறாய்?" என்று சொல்லிக்கொண்டே அழுதான்.

இனி என்ன சொல்லியபோதிலும் தவறாகவே கருதுவான் என உணர்ந்தேன். நான் ஓர் ஆண்டு தவறி விடவே, இவன் மேல் வகுப்புக்கு வந்து என்னைப் பற்றிக் குறைவாக எண்ணுகிறான்; அறிவிலும் அனுபவத்திலும் தான் பெரியவன் என்று கருதுகிறான்; அதனால்தான் அறிவுரை கூற எனக்கு உரிமை இல்லை என்கிறான். கல்லூரிக்கு வந்த பிறகு பழகிய பழக்கத்திலும் என்னைச் சிறு பையன் போலவும் தான் வளர்ந்த தமையன் போலவும் கருதி நடத்துகிறான்; அதனால்தான் நானாக நெருங்கிச் சென்ற காலங்களிலும் புறக்கணித்திருக்கிறான்; நான் அன்பினால் பணிந்து போனதை, இவன் தவறாக உணர்ந்து உயர்வு மனப்பான்மை கொண்டு விட்டான்; ஒருகால் எனக்குக் கணக்குக் கற்றுக்கொடுத்த காரணத்தாலேயே நான் அறிவில் சிறியவன் என்றும் தான் அறிவு முதிர்ந்தவன் என்றும் எண்ணிவிட்டானோ; வயதிலும் இவன் என்னைவிட ஓராண்டுதான் மூத்தவன்; அப்படி இருக்க நான் ஏன் இவனிடம் இப்படிப் பணிந்து இந்தச் சிறுமைக்கு ஆளாகவேண்டும் என்று என் உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. எழுந்து வந்துவிடலாமா என்று தோன்றியது. உடனே அவனிடம் நான் கொண்டிருந்த நன்றியுணர்ச்சியும் குடும்பப்பிணைப்பும் என்னைத் தடுத்தன. அழுது கொண்டிருந்த அவன் பக்கத்திலேயே இருந்தேன்.

சிறிது பொறுத்து, "நடந்தது நடந்துவிட்டது. அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்; மோசம் செய்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக இப்போது என்ன செய்வது? அழுது அவளுடைய மனத்தை மாற்றி விடமுடியுமா? எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு படிக்க உட்காரு. அல்லது வெளியே எங்காவது போய் வரலாம், வா. இதை மறப்பதற்கு வழி அதுவே" என்றேன்.

அவன் ஒன்றும் கூறாமல், குப்புறப் படுத்தபடியே கிடந்தான்.

எதை நினைத்துக்கொண்டோ, சிறிது நேரத்தில் ஒரு பெருமூச்சு விட்டு விம்மினான். "நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் தேர்வுக்குப் படிக்கப் போவதில்லை; ஊருக்கும் வரப் போவதில்லை என்று எழுதிவிடு" என்றான்.

இப்போது எதைச் சொல்லியும் பயன்படாது போல் இருக்கிறது. அழும் வரையில் அழுது ஓயுமாறு தனியே விட்டு, பிறகு வந்து சொல்லலாம் என்று எண்ணி எழுந்தேன். "இருக்கட்டும், பிறகு வருவேன்" என்று சொல்லிப் புறப்பட்டேன்.

அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன்.

அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. எழுந்துப் போய்ப் பார்த்தேன். அவன் படுக்கையில் உட்கார்ந்து இரண்டு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தான். கிழிந்த அழைப்பிதழையும் கடிதத்தையும் எடுத்து மறைத்துவிட்டிருந்தான். "உடம்பு நன்றாக இல்லை. ஒரே மயக்கம். வயிற்று நோவு. படிக்க முடியவில்லை" என்று பொய்யான காரணத்தை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படித்திருப்பாய். அதனால் வந்திருக்கும்" என்றான் ஒருவன்.

"அல்லது, கண்ட வேளையில் எல்லாம் தேநீர் குடிக்கிறாயாமே, அதனால் வந்திருக்கும், சனியன்" என்றான் மற்றொருவன்.

"என்னவோ, தொல்லை" என்று சந்திரன் கண்களைத் தேய்த்து கைத்துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு கவலையும் இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் இப்படி நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது நேரத்தில் கவலையை மறந்து நடக்கவும் முடியும், படிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொண்டேன்.

நண்பர்கள் போனபிறகு சென்று சன்னல் வழியாகப் பார்த்தேன். பழையபடியே படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் விம்மலும் கண்ணீரும் இல்லைபோல் தெரிந்தது.

நாலைந்து முறை எழுந்து எழுந்து போய்ப்பார்த்தேன். அவன் அதே நிலையில் இருந்தான். மாலைச் சிற்றுண்டிக்கு நேரம் ஆயிற்று. போய் அழைத்தேன். "எனக்கு தேவை இல்லை. வீணாகத் தொந்தரவு செய்யாதே; என் அறைப் பக்கம் வராதே" என்று கடிந்தான்.

பேசாமல் திரும்பினேன். நான் சிற்றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகே நின்று பார்த்தேன். அவன் அங்கே இல்லை. என் நெஞ்சு திடுக்கிட்டது. கதவை மெல்லத் தள்ளிப்பார்த்தேன். பிறகுதான் அது வெளியே பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். எங்கே போயிருப்பான் என்று எண்ணிக் கவலைப்பட்டு நின்று கொண்டிருந்த போது, அவன் குளிக்கும் அறைக்குப்போய் முகம் அலம்பிக் கொண்டு திரும்பியதைக் கண்டேன். என் உள்ளம் குளிர்ந்தது. என்னைப் பார்த்ததும் பேசாமல், சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான்.

சிறிது நேரத்தில் நண்பர் சிலர் வந்து, "ஏன் இப்படி அழுமூஞ்சிபோல உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? வெளியே சுற்றிவிட்டு வந்து படிக்க உட்காரலாம். வா" என்று அவனை வற்புறுத்தி அழைப்பது கேட்டது. அப்படியாவது அவர்களோடு போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவன் புறப்படுவதாக இல்லை. நண்பர்கள் வெளியே வந்தனர். சிறிது கழித்துப்போய் எட்டிப்பார்த்தேன். கட்டிலின் மேல் படுத்து அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். இன்னும் சில நண்பர்கள் வந்து கதவைத் தட்டினர். "அட என்னப்பா! இரவெல்லாம் கண் விழித்தாயா? இப்போது தூங்குகிறாயே" என்றார்கள். "ஆமாம்’பா இப்போது எழுப்பித் தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து போய்வாங்க" என்று படுத்தபடியே அனுப்பி விட்டான். நானும் எங்கும் வெளியே போகவில்லை.

விடுதி முழுதும் விளக்கொளி பரவியது. ஒரே நோக்கமாக மாணவர்கள் எல்லாரும் தம் தம் அறையில் படிக்கத் தொடங்கினார்கள். சந்திரனுடைய அறையில் மட்டும் விளக்கு இல்லை. அந்த வழியே வந்த சிலர், "இது நடிகமணி சந்திரனுடைய அறை அல்லவா? எங்கே சிவகாமி காணோமே! இமாவதியைத் தேடிக்கொண்டு போயிருப்பான்" என்று பேசிக்கொண்டு போனார்கள். அதைக்கேட்டபோது என் மனமே கலங்கியது என்றால், உள்ளே ஒரு மூலையில் படுத்துக்கிடந்த சந்திரனுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்குமோ? அந்தப் பாவிப் பெண் இமாவதி அப்படி இவனை ஆசை காட்டி ஏமாற்ற வேண்டுமா?... இல்லை, இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்தால் அப்படி ஆசை காட்டியவளாகத் தெரியவில்லையே. நண்பன் ஒருவன் மற்றொரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது போலவே எழுதியிருந்தாள். காதல் செய்து மணந்து கொள்வதாக ஆசைகாட்டியிருந்தால் இப்படி உண்மையான நட்புரிமையோடு திருமண அழைப்பு அனுப்பிருக்க முடியுமா? அழைப்போடு கடிதம் ஒன்று எழுதியிருக்க முடியுமா? கடிதத்தில் கலங்காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதாகவும், இனியும் அவ்வாறு எழுதிக் குறையை முடிக்கப் போவதாகவும் குறிக்க முடியுமா?

அதே கடிதத்தில் சந்திரனும் நன்றாக எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியுமா? ஒரு வேளை போலி ஆசைகாட்டி அவனை ஏமாற்றிய வேசித்தனம் உடையவளாக இருந்தால், இப்படி உண்மையன்பு உள்ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற்றியவள் தன் ஏமாற்று வித்தையை வெளிப்படையாகக் காட்டி அழைப்பிதழை அனுப்புவாளா? இருக்கவே இருக்காது. இமாவதி உண்மையாக நல்ல பெண்ணாகவே இருக்க வேண்டும். சந்திரனிடத்தில் அன்பு மிகுந்த பெண்ணேதான்.

ஆனால் அந்த அன்பை இவன் காதல் என்று எண்ணிவிட்டான், பைத்தியக்காரன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு செலுத்தினால் அது நட்புத்தானே? அப்படிப்பட்ட அன்பை ஒரு பெண்ணும் ஒருவனிடம் செலுத்த முடியாதா? அதுவும் நட்புத்தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தில் அன்பு நட்பு எல்லாம் உண்டு அல்லவா? பெண் அன்பு செலுத்தினால் அதை ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். என்னிடம் என் தங்கை அன்பு செலுத்துவதுபோல், ஒரு பெண் உடம்பின் எண்ணம் இல்லாத அன்பைச் செலுத்த முடியாதா? இவ்வளவு கூர்மையான அறிவு உள்ள சந்திரன் இதை உணராமல் அலைகின்றானே! இவனுடைய அறிவையும் அழகையும் கண்டு அந்தப் பெண் அன்பு கொண்டிருப்பாள்! அந்த அன்பை உடம்பின் எண்ணம் இல்லாமல் நட்பாக வளர்த்திருப்பாள்! அவளால் முடிந்தது; இவனால் முடியவில்லை. காதல் என்று கோட்டை கட்டிவிட்டான். இன்று கலங்கி நிற்கிறான் என்று பலப்பல எண்ணினேன்.

உணவு நேரத்தில் சில மாணவர் வந்து கதவருகே நின்று, "எங்கே போயிருக்கிறான். காணோமே" என்றார்கள். அவர்களில் ஒருவன், "இதோ பூட்டு இல்லையே! விளக்கு அணைத்துவிட்டு உள்ளே இருக்கிறான்" என்றான். "சந்திரா! சந்திரா!" என்று கதவைத் தட்டினார்கள். அதற்குள் ஒருவன், "பாமா கதவைத் திறவாய்" என்று பாட்டுப் பாடத் தொடங்கினான். சந்திரன் உள்ளே இருந்து, "எனக்கு உடம்பு நன்றாக இல்லை கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு வருவேன். தொந்தரவு செய்யாதீர்கள்" என்றான். அவர்கள் அங்கிருந்து உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள்.

நான் போய் அழைத்தாலும் அதே போல்தான் சொல்வான் என்று உணர்ந்து நானும் உணவுக்குப் புறப்பட்டேன். புறப்பட்ட நேரத்தில் மாலன் வந்து சேர்ந்தான். "என்ன! பக்கத்து அறையில் உங்கள் ஊர் ஆள் இல்லையே! விளக்கே காணோமே! ஆள் இல்லா விட்டாலும் விளக்குப் போட்டுப் பூட்டிவிட்டு மின்சாரத்தைச் செலவு செய்வது கல்லூரி நாகரிகம் ஆயிற்றே" என்றான். "உஸ்" என்று அவனைத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். வழியில், "அவனுக்கு மனம் நன்றாக இல்லை என்று குறிப்பாகச் சொன்னேன். "ஏன்? ஏதாவது காதல் வந்து முற்றி விட்டதோ? அதுவும் தேர்வு நெருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் தேர்வு முடிந்த பிறகு வந்து தொலையக் கூடாதா?" என்றான். "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று மழுப்பினேன்.

உண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரனுடைய அறை பூட்டியிருந்தது. உள்ளே விளக்கு இல்லை. மனம் திடுக்கிட்டது. இன்னொரு பக்கம், "அப்படி எங்கும் போயிருக்க மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் உணவுக் கூடத்துக்கு வருவதாகச் சொன்னான் அல்லவா? அதன்படி உணவுக்குத்தான் போயிருப்பான். நம் எதிரே வரவில்லை. ஒருகால் தெற்குப்படி வழியாக இறங்கிப் போயிருப்பான்" என்று ஒருவகையில் ஆறுதலும் அடைந்தேன்.

என் முக வாட்டத்தை உணர்ந்த மாலன், "ஏன் அப்படிக் கவலைப்படுகிறாய்? சந்திரனுக்காகவா? உன்னை அவன் ஒரு பொருளாகவே கருதவில்லையே. நீ மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய்?" என்றான்.

"இவன் எப்படி இருந்தாலும் இவனுடைய அம்மா, அப்பா அத்தை எல்லாரும் நல்லவர்கள். குடும்பமே நல்ல குடும்பம். இவனும் என்னிடம் மிகமிக அன்பாக இருந்தான். இருவரும் ஓர் உயிர் போல் மூன்று ஆண்டுகள் கழித்தோம்" என்றேன்.

"சந்திரனுடைய ஊர் எது?" என்றான்.

ஊர் முதலியவற்றை எல்லாம் விரிவாகக் கூறினேன். அன்றுதான் மாலனும் தன் ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினான். சிறிது நேரம் வரையில் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு சந்திரனைப் பற்றிய எண்ணம் வந்துவிட்டது. மாலனை உட்காரவைத்து விட்டே எழுந்து போய்ப் பக்கத்து அறையைப் பார்த்தேன். பழையபடியே கதவு பூட்டியிருந்தது. திரும்பி வந்தேன்.

"இன்னும் வந்திருக்க மாட்டான்" என்றான்.

"வரவில்லை" என்றேன்.

"சரி, சரி படி நம் கடமையைச் செய்யவேண்டும்" என்று அவன் எழுந்து சென்றான்.

நேரம் ஆக ஆக என் கவலை மிகுதியாயிற்று. என் அறையின் வாயிற்படியிலேயே நின்றேன். கால் நோகவே, உள்ளே நாற்காலியைச் சன்னல் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு, வழியில் போவோரை எல்லாம் பார்த்திருந்தேன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ்வாறே இருந்தேன்.

ஒருகால் இமாவதியையே தேடிக்கொண்டு போய் விட்டானோ? திருமண ஏற்பாடு உண்மைதானா என்று கேட்டு வருவதற்காகப் போனானோ? அல்லது வேறு யார் வீட்டுக்காவது போயிருப்பானோ? அவனுக்கு இந்த ஊரில் யார் நண்பர்கள்? யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. உணவுக் கூடத்துக்குப் போய் உண்ட பிறகு, தனியே இருப்பதற்குப் பிடிக்காமல், அங்கிருந்து யாரேனும் ஒரு நண்பனுடைய அறைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணினேன். உடனே எல்லா அறையையும் பார்த்துவர வேண்டும் என்று மனம் தூண்டியது. எழுந்து அறையைப் பூட்டி விட்டு மெல்ல எல்லாப் பக்கத்தையும் சுற்றி வந்தேன். மாலனின் அறைப் பக்கமாக வந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

 "என்ன? எங்கே போய் வருகிறாய்? அவனையா தேடுகிறாய்?" என்றான்.

"இல்லை தூக்கமாக இருந்தது. அதை மாற்றுவதற்காக இப்படி உலாவி வருகிறேன். நீ எழுந்து வரவேண்டா, படி நானும் போய்ப் படிக்கப் போகிறேன்" என்றேன்.

சந்திரனைக் காணாமலே என் அறைக்குத் திரும்பினேன். சரி, வெளியே யாருடைய வீட்டுக்கோ போயிருக்கிறான். காலையில் திரும்பி வந்துவிடுவான் என்று எண்ணி, படிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்தேன். படித்துக் கொண்டிருந்தபோது கதவு திறக்கும் ஒலி கேட்டு இருமுறை எழுந்து எழுந்து போய்ப் பார்த்தேன். அவனுடைய அறை பூட்டியது பூட்டியபடியே இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது நேரம் படிப்பு, சிறிது நேரம் சந்திரன் நினைவு இப்படியே மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள்ள மரங்களிலிருந்து ஆந்தையின் ஒலியும் சுவர்க்கோழியின் ஒலியும் கேட்டன. தூக்கம் வந்தது. கடைசியாக எழுந்து போய் ஒரு முறை பார்த்துவந்து உறங்கிவிட்டேன்.

இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாலும், அலாரம் அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக் கொடுத்து என்னை எழுப்பி உட்கார வைப்பார். அப்படி ஆழ்ந்து உறங்கும் வழக்கம் உடைய நான் அன்று எதிர்பாராமல் 2 மணிக்கு விழித்துக் கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது என் மனத்தில் இருந்த கவலையும் திகிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

எழுந்து விளக்கிட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். எங்கும் ஒரே அமைதி நிலவியது. கிழக்குப் பகுதியில் தொலைவில் இரண்டு அறைகளில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. எம். ஏ. படிக்கும் மாணவர்கள் யாரேனும் இன்னும் உறங்காமல் தேநீர் குடித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருகால் சந்திரன் வந்திருக்கக்கூடும் என்று எண்ணி, கதவருகே போய்ப் பார்த்தேன். பூட்டிய பூட்டு அப்படியே இருந்தது. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன்.

அன்று அலாரம் 5 மணிக்கு வைத்திருந்தேன். ஆனால் அது அடிக்கவில்லை. அலாரத்துக்குச் சாவி கொடுக்க மறந்துவிட்டேன் என்பதைப் பிறகு கண்டேன். நான் விழித்தபோது மணி 5-30 ஆகியிருந்தது. பரபரப்போடு எழுந்தேன். மாணவர்கள் படிக்கும் குரல் பல கேட்டன. மரங்களில் காக்கை, குருவிகளின் பேச்சும் பாட்டும் கேட்டன. இன்பமான குயில்கள் இரண்டு மாறி மாறிக் கூவும் காதல் பாட்டின் இசையும் கேட்டது. இத்தனை குரல்களையும் கேட்டுக் கைகால் நீட்டித் திமிர்விட்டபடியே சிறிது நேரம் கிடந்தேன். சந்திரன் நினைவு வந்தது; பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை அவனுக்காகக் கவலைப்பட்டுப் படிக்க வைத்ததை எண்ணினேன். இன்னும் சில மணி நேரத்தில் அவனுடைய விஞ்ஞானப் பாடத்தின் தேர்வு தொடங்குமே, படிக்காமலே, இருந்தால் அவன் எப்படிப் போய் எழுதுவான் என்று கவலைப்பட்டேன். முந்திய நாள் பகலில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "இனிமேல் தேர்வு எழுதமாட்டேன்; ஊருக்குப் போகமாட்டேன். அப்பாவுக்கு எழுதிவிடு" என்று சொன்னான். அதை நினைத்தவுடன் என் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது.

உடனே எழுந்து சந்திரனுடைய அறையைப் பார்த்தேன். ஒரு மாறுதலும் காணப்படவில்லை. பரபரப்போடு திரும்பி வந்தேன். என் அறைக்குள் நுழைந்தபோது சன்னலின் கீழே ஒரு சாவி இருப்பதைக் கண்டேன். அது சந்திரனுடைய அறையின் சாவிபோலவே இருந்தது. அதை எடுத்துச்சென்று அவனுடைய அறையின் பூட்டைத் திறந்தேன் அது திறந்தது. என் மனம் மிகக் கலங்கியது. முந்திய இரவு நான் உணவுக் கூடத்துக்குப் போயிருந்தபோது, தன் அறையை பூட்டிச் சாவியைச் சன்னல் வழியாகப் போட்டுவிட்டு வெளியேறிப் போயிருப்பான் என எண்ணினேன். நொந்தேன். அவனுடைய அறைக்குச் சென்றேன். மேசைமேல் ஏதேனும் கடிதம் வைத்துவிட்டு போயிருக்ககூடும் என்று பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை. அறை வழக்கம் போலவே இருந்தது. அவனுடைய தோல்பை மட்டும் காணோம். பெட்டி முதலியவை அப்படியே இருந்தன. பெட்டி பூட்டப்பட்டுச் சாவி கீழே வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. அறையைப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து சென்றேன். அவனுக்கு எல்லாச் செய்தியும் சொன்னேன். "வா, போகலாம். உடனே தபால் நிலையத்துக்குப் போய் அவனுடைய அப்பாவுக்கு ஒரு தந்தி கொடுப்போம்" என்றேன்.

அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். தபால் நிலையத்துக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அதற்குள், நான் மாலனோடு பேசிய செய்தி எப்படியோ விடுதி முழுவதும் பரவியது. நாங்கள் திரும்பியவுடன் மாணவர் பலர் எங்களை நோக்கி வந்து, "என்ன செய்தி" என்று கேட்டார்கள். என் அறையை நோக்கி வந்தபோது சந்திரனுடைய அறைக்கு எதிரே மாணவர் சிலர் கூடியிருந்தது கண்டேன். ஒரு வேளை சந்திரன் திரும்பி வந்துவிட்டானோ? அதனால்தான் கூட்டம் இருக்கிறதோ என்று எண்ணிச் சிறிது மகிழ்ந்தேன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங்கம் என்னை நோக்கி விரைந்து வந்து, "உண்மையாகவா? நம்பவே முடியவில்லையே! அன்று சிறுநீர் அறையில் ஏற்பட்ட பிணக்கின் போது, அவ்வளவு அஞ்சாமையோடு என்னை எதிர்த்துப் பேசினானே! அவனுடைய தைரியத்தையும் தெளிவையும் நான் மனமாரப் போற்றினேனே! அப்படிப்பட்டவனா மனம் தளர்ந்து இப்படிச் செய்திருப்பான்?" என்று வருந்தினான்.

செய்தி விடுதிக் காப்பாளர்க்கு எட்டியது. அவரும் வந்தார். என்னைக் கேட்டார். நான் சொன்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, "ஊருக்குத்தான் போயிருப்பான் பார்க்கலாம். தந்திபோன பிறகு என்ன செய்தி வருகிறது என்று பார்ப்போம்" என்றார்.

திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எங்காவது போய்க் கடலிலோ வேறு எங்கோ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்று எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் சென்று சொன்னேன். அவன் உடனே படிப்பகத்துக்கு அழைத்துச் சென்று, செய்தித் தாளில் விபத்து தற்கொலை முதலான செய்திகளைத் தேடிப் பார்த்தான். ஆங்கிலத்தாள் தமிழ்த்தாள் இரண்டிலும் பார்த்த பிறகு, "கவலையே வேண்டா, அப்படி நடந்திருக்காது, நடந்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும்" என்றான்.

அன்றைய தேர்வில் நான் நன்றாக எழுதவில்லை. எழுதும்போது, சந்திரனுடைய தேர்வுபற்றி அடிக்கடி எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் இண்டர் படித்துக் கடைசியில் இப்படி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டானே என்று வருந்தினேன்.

மாலையில் சந்திரனுடைய வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். அதில் எல்லாச் செய்திகளையும் விரிவாக எழுதியிருந்தேன்.

அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆகவேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது. அயர்ந்து படுத்தேன்.

காலையில் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தபோது "உன்னைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள்" என்று என் வகுப்பு மாணவன் ஒருவன் வந்து சொன்னான். எதிர்பார்த்தபடி சாமண்ணா வந்திருந்தார். அந்த ஊர்ப் பள்ளியின் தலைமையாசிரியரும் வந்திருந்தார். என் கடிதத்தை அவர்கள் பார்க்கவில்லை. ஆகையால் விரிவாகச் சொன்னேன். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. அவரால் பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. "மகன் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும்; தேர்வு போகட்டும், படிப்பும் போகட்டும், அவனுடைய அம்மாவிடத்தில் இதோ உன் பிள்ளை என்று கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும். இல்லையானால், நான் அவளை உயிரோடு பார்க்கமுடியாது" என்றார்.

தலைமையாசிரியர் என்னையும் மாலனையும் தனியே அழைத்துப்போய், அந்தப் பெண்ணைப்பற்றிக் கேட்டார். அந்தப் பெண்ணும் அவனும் சேர்ந்து எங்காவது வெளியூர்க்கு ஓடிப்போயிருக்கலாம் என்றார். பெற்றோர்கள் செய்யும் திருமண ஏற்பாட்டை விரும்பாமல், அப்படிக் காதலர்கள் ஓடிப்போவது உண்டு என்று இங்கே நடந்ததும் அங்கே நடந்ததுமாகச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார். "இப்போது நேரே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்குப் போய் அங்கே கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒருவேளை அந்தப் பெண்ணே அங்கே இருந்தால் அவளையே கேட்டு விடுவோம். இதில் தப்பு ஒன்றும் இல்லை" என்றார்.

சாமண்ணாவை விடுதியில் என் அறையில் தனியே விட்டுவிட்டுப் போகலாம் என்றேன். தலைமையாசிரியர் அதற்கு உடன்படவில்லை. தனியே இருந்தால், அவர் மிகத் துயரப்பட்டுக் கலங்குவார் என்றார். அதனால் சாமண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கல்லூரிக்குச் சென்றோம். அங்கே அந்தப் பெண்ணின் பெயர் சொல்லிக் கேட்டோம். சிறிது நேரத்தில் அவளே வந்து எங்கள் முன் நின்றாள். "என்ன செய்தி? நீங்கள் யார்?" என்றாள்.

நான்தான் பேசினேன். "நான் சந்திரனோடு படிப்பவன் பக்கத்து அறை" என்றேன்.

தொடர்ந்து பேசுவதற்குள், "வேலுவா? வணக்கம், அவர் சொல்லியிருக்கிறார்" என்றாள்.

"அவர் சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா. இவர் அந்த ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்" என்றேன்.

அவள் முகம் வாடியது. "என்ன செய்தி? சந்திரனுக்கு உடம்பு நன்றாக இல்லையா?" என்றாள்.

"சந்திரன் முந்தா நேற்று இரவு போனவன் இன்னும் வரவில்லை; தேடுகிறோம்."

அவள் முகம் வெளிறியது. "அப்படியா? என்ன காரணம்? தேர்வு?" என்று தன் வலக்கைச் சுட்டுவிரலை உதட்டில் சுவைத்தபடி தரையை நோக்கி நின்றாள்.

"காரணம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதற்காக வந்தோம்" என்றார் தலைமையாசிரியர்.

"அய்யோ! தெரியாதே! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே! தேர்வு நன்றாக எழுதவில்லையா? அப்படி இருந்தால் எனக்குத் தெரிவித்திருப்பாரே. இரண்டு நாளைக்கு முன்தான் நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன காரணமோ?" என்றாள்.

சாமண்ணா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தார். அவள் அவருடைய கலக்கத்தைக் கண்டதும், "என் நெஞ்சு பகீர் என்கிறதே! நான் அண்ணன் தம்பி இல்லாத பெண். அவர் என்னோடு அன்பாகப் பழகினார். எனக்கு அண்ணன் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தேன். படிப்பைப் பற்றியெல்லாம் எனக்குத் தைரியம் சொல்லுவார்" என்றாள். தரையை நோக்கிய அவளுடைய கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. முந்தானையால் கண்களைத் துடைத்தாள். கலங்கி நின்றாள். முந்தானையை வாயருகே வைத்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். "அவர் கிடைத்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள். என் வீட்டு முகவரிக்கு எழுதுங்கள். 10, நடுத்தெரு இராயப்பேட்டை" என்றாள்.

நான் அந்த முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

"சரி போகலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுது அம்மா. சாமண்ணா, பெருங்காஞ்சி, வாலாசா தாலுக்கா" என்று தலைமையாசிரியர் விடைபெற்று நகர்ந்தார். சாமண்ணா ஒன்றும் பேசாமலே கலங்கிய கண்களோடு தொடர்ந்தார்.

நான் விடைபெற்றபோது "விடுதியில் என் முகவரிக்கு எழுதுங்கள். அறை எண் - 90" என்றேன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் கைகூப்பினாள் அவளுடைய கண்கள் இன்னும் கலங்கியிருந்தன.

வழியில் தலைமையாசிரியர் என்னைப்பார்த்து, "பெண் நல்ல பெண்; உண்மையானவள். இவன் தப்பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற்றவில்லை. இவன்தான்-" என்று நிறுத்திவிட்டார்.

"அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும், கேட்டுப் பார்த்துத் திருமண ஏற்பாடே செய்திருக்கலாமே" என்றார் சாமண்ணா.

கடற்கரையில் எங்காவது திரிகின்றானோ பார்க்கலாம் என்று அன்று மாலை கடற்கரைக்கும் போய், வருவார் போவோரை எல்லாம் பார்த்துக் காத்திருந்தோம். மறுநாள் சாமண்ணாவும் தலைமையாசிரியரும் தங்கள் ஊரார் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பார்த்துச் சோர்ந்து போய் சந்திரனுடைய பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்க்குச் சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_13&oldid=7887" இலிருந்து மீள்விக்கப்பட்டது