அகல் விளக்கு/அத்தியாயம் 8

விக்கிமூலம் இலிருந்து

அந்த ஆண்டிலும் இருவரும் தேறி மேல் வகுப்புக்கு வந்தோம். முன்போலவே சந்திரனைத் தலைமையாசிரியர் பாராட்டினார். ஆனால் இந்த முறை அவன் ஆங்கிலத்தில் மட்டும் முதன்மையாக வர முடியவில்லை. அதையும் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். சந்திரன் ஆங்கிலத்தில் இரண்டாம் தரமாக இருந்தான். அதற்காகக் கவலைப்பட்டான்.

அவனைத் தேற்றுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். "ஒரே ஒரு பாடத்தில் இன்னொரு பையன் முதன்மை பெற்றுவிட்டானே என்று கவலைப்படுகிறாயே. நான் எல்லாப் பாடத்திலும், நாற்பதும் நாற்பத்தைந்துமாக வாங்கியிருக்கிறேனே? என்னைப் பற்றி எண்ணிப்பார், நான் கவலைப்படுகிறேனா? போனால் போகட்டும் என்று விடு. இந்த ஆண்டில் முயற்சி செய். எஸ்.எஸ்.எல்.சி தான் முக்கியம் அதில் எல்லாப் பாடத்திலும் முதன்மை பெற்று விட்டால் போதும். அதுதான் பெரிய சிறப்பு என்று சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு சோர்வுடன் இருந்தான்.

பள்ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காலையில் சந்திரன் வீட்டில் அவனுடைய அப்பா சாமண்ணாவின் குரல் கேட்டது. உள்ளே எட்டிப் பார்த்தேன். சோர்ந்து வாடிய முகத்தோடு கற்பகமும் உட்கார்ந்திருந்தாள். வெளியே பின்வாங்கி வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். சாமண்ணா தம் அக்காவிடம் கற்பகத்தைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். "நான் எவ்வளவோ சொன்னேன். அவளுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். கேட்காமல் ஒரே பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போச்சு. பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். இந்த வயதிலே இவ்வளவு பிடிவாதம் கூடாது. அதற்காகத்தான் பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்" என்றார்.

அத்தை குறுக்கிட்டு, "நாங்கள் எல்லாம் என்ன படித்தோம்? ஓர் எழுத்தும் தெரியாது. கையெழுத்தும் போடமாட்டோம்; உள்ளூரிலே பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கே படித்தாய், முடித்தாய், கையெழுத்துப் போட, கடிதம் எழுத, ஒரு புத்தகம் படிக்கத் தெரிந்து கொண்டாய், அது போதாதா, கற்பகம்?" என்றார்.

மறுபடியும் சாமண்ணா, "இப்போதுதான் தெரியுது அந்த அளவுக்கும் படிக்க வைத்திருக்கக் கூடாது. அதுவே என் தப்புத்தான். வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக் கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளணும் அதுதான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல். நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ., எம்.ஏ., படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான். நம் இனத்திலே நம் வட்டாரத்திலே அப்படி எவன் இருக்கிறான்? எங்களுக்கு அல்லவா தெரியும், இந்தத் தொல்லை எல்லாம்? எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன் அக்கா. நீ வேணுமானால் சொல். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால், நாளைக்குக் கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவேன். இன்னொன்றும் சொல்லிவிட்டேன். இந்த வருசம் மட்டும்தான் படிக்க வைப்பேன். சந்திரன் எஸ்.எஸ்.எல்.சி. தேறி விட்டானானால், அப்புறம் இங்கே ஒரு குடும்பம் இருக்காது. நீயும் இங்கே படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திரனோடு வீட்டுக்கு வந்து விடணும்" என்றார்.

"சரிதானே அம்மா?" என்று மகளைப் பார்த்துக் கேட்டார். அவளுடைய குரல் கேட்கவில்லை. ஒருகால், தலை மட்டும் அசைத்திருப்பாள்.

"சரி. இருந்து போகட்டும் எனக்கும் ஒரு துணை ஆச்சு" என்றார் அத்தை.

என் உள்ளம் குளிர்ந்தது. வந்தது தெரியாமல் திரும்பிவிட்டேன்.

மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத அன்போடு பழகியது போல் அவர்களால் பழக முடியவில்லை. சில நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே முன்னும் பின்னுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். "பெண்களே, இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுவார்கள். முறுக்கிக் கொள்வார்கள்" என்றான் சந்திர

அடுத்த மாதத்தில் வேலூரிலிருந்து என் அத்தையும் அத்தை மகள் கயற்கண்ணியும் மகன் திருமந்திரமும் வந்து எங்கள் வீட்டில் பத்துநாள் தங்கியிருந்தார்கள். அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. சில நாள் என் தங்கை தனியே இருக்க கயற்கண்ணியும் கற்பகமும் ஒரு கட்சியாக இருந்தார்கள். மற்றும் சில நாள் மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டையே அமர்க்களம் செய்தார்கள். அது கால் தேர்வின் நெருக்கமாக இருந்தபடியால், எனக்கு ஒரு வகையில் இடையூறாக இருந்தது. ஆனாலும் கற்பகத்தின் ஆடல் பாடல்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன். கற்பகம் இல்லாமல், என் தங்கையும் கயற்கண்ணியும் மட்டும் சேர்ந்து விளையாடிய போது, அவர்களைக் கடிந்துரைத்தேன். "கயற்கண்ணியின் குரல்தான் வீட்டையே தூக்கிக் கொண்டுபோகுது. அப்பப்பா! படிக்கவே விடமாட்டேன் என்கிறாள்" என்று அவள்மேல் குறை சொல்வேன். கற்பகம் வந்து அவர்களுடைய ஆட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எவ்வளவு ஆரவாரம் கேட்டாலும் வாய் திறக்காமல் பொறுமையாக இருப்பேன். என்னுடைய போக்கு எனக்கே வேடிக்கையாக இருந்தது. அந்தப் பெண்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டார்களோ, தெரியவில்லை.

இவ்வளவு மகிழ்ச்சியான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால், அத்தைமகள் கயற்கண்ணி இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அத்தையோடு ஊருக்குப் போகமாட்டேன் என்றும் சொன்னாள். இங்கேயே இருந்து படிக்க விரும்புவதாகவும் சொன்னாள். அத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனதைக் கண்டு என் மனம் மிக மகிழ்ந்தது. "இந்த வருசம் ஊரிலே படித்துப் பரீட்சையிலே தேறிவிடு. அடுத்த வருசம் அப்பாவுக்குச் சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன்" என்று ஆறுதல் கூறி அத்தை அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய நல்ல காலம், அவள் அந்த ஆண்டில் முழுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கே வந்து படிக்கும் முயற்சிக்கு இடம் இல்லாமற் போயிற்று. பள்ளிக்கூடப் படிப்புப் போய், சமையலறைப் பயிற்சி அவளிடம் உரிமையோடு வந்து சேர்ந்தது.

கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, "இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே" என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். நான் பார்த்துக்கொண்டே பேசாமல் இருப்பேன். அவளை ஒழுங்குபடுத்த விட்டதனால் எனக்குத்தான் தொல்லை. குறிப்போ புத்தகமோ பொருளோ நான் வைத்த இடம் வேறு; ஒழுங்குபடுத்தியபோது அவள் வைத்த இடம் வேறு. அதனால் எது எங்கே இருக்கிறது என்று தேடிக் காலத்தைப் போக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவளை நான் தடுப்பதே இல்லை.

சில நாட்களில் சந்திரனுடைய வீட்டுக்குப் போனால் வலிய ஏதாவது ஒரு காரணம் பற்றி என்னோடு பேச வருவாள். ஒரு காரணமே இல்லாதபோதும், கணக்குப் புத்தகத்தை எடுத்து வந்து, ஏதாவது ஒன்றைக் காட்டி, "இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்கள்" என்பாள், "சந்திரன் சொல்லிக் கொடுப்பதில்லையா?" என்று நான் கேட்டால், "அண்ணனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. அதனால் நான் கேட்பதில்லை" என்பாள். அந்தக் கணக்கைப் படித்துப் பொறுமையோடு போட்டுக் காட்டுவேன். ஒரு நாள் கணக்குப் போட்டுக் காட்டி முடிந்த பிறகு, முன் பக்கத்தைத் தள்ளிப் பார்த்தேன். அதே கணக்கை அவளே சரியாகப் போட்டு வைத்திருந்தாள். அதை நான் கண்டு கொண்டதால், "அதெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்" என்றாள். "வேறு சுருக்கமான வழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக உங்களைப் போடச் சொன்னேன்" என்று பொய்யான காரணத்தை சொன்னாள்.

அரைத் தேர்வு நெருக்கத்தில் நானும் சந்திரனும் மும்முரமாகப் படிக்கத் தொடங்கினோம். விளையாட்டையும் பொழுது போக்கையும் குறைத்துக் கொண்டோம். வீட்டில் கற்பகத்தின் ஆரவாரம் கேட்டாலும் முன்போல் பொறுத்திருக்காமல், கடிந்து பேசத் தொடங்கினேன். அவளும் தேர்வு நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள். முன்போல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வந்து போனாள்.

அரைத்தேர்வில் இருவரும் நன்றாக எழுதினோம். சந்திரன் வரலாறு தவிர மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றிருந்தான். வரலாற்று ஆசிரியர் வேண்டும் என்றே கெடுத்ததாகச் சொல்லி அவனே மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டும் "வரலாற்றில் எண்கள் குறைந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதே. கணக்கில் வல்லவர்களாக இருப்பவர்களுக்கு அந்தக் குறை இருப்பது உண்டு. கணக்குக்கும் வரலாற்றுக்கும் உறவு இல்லை" என்றார். எனக்கு யாரும் இப்படித் தேறுதல் கூற வேண்டிய தேவையே இல்லை. நான் எதிலுமே ஐம்பதுக்கு மேல் எண்கள் வாங்கவில்லை என்றால், முதன்மையைப் பற்றிய பேச்சு ஏது?

மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காரணமோ என்னவோ தெரியவில்லை; முந்திய ஆண்டு வராமல் விலகியிருந்த சிரங்கு இந்த ஆண்டில் தை பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல்ல காலம்; அது முன்போல் யானைச் சிரங்காக வராமல் நமட்டுச் சிரங்காக வந்தது. அதுவும் ஒரு வகையில் பொறுக்க முடியாததாக இருந்தது. இப்போதுபோல், நல்ல ஊசி மருந்துகள் அப்போது அதற்குக் கிடைக்கவில்லை. ஆகவே மேற்பூச்சையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் நடக்கும் போதும் உட்காரும் போதும் சொரிந்துகொண்டே இருக்க நேர்ந்தது. வீடு, வகுப்பு, தெரு என்ற வேறுபாடு அதற்கு இல்லை. நன்றாக ஆழ்ந்து படிக்கும்போதும் கை சொரிவதில் ஈடுபட்டிருக்கும்.

எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே 'சொஞ்சரி சொஞ்சரி' என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என் தாயும் பாக்கிய அம்மையாரும் கற்பகமும்தான்.

மருந்து பூசிப் பூசி அது ஒருவாறு அடங்கியது எனலாம். ஆனால் அடங்கிய நோய்ப்பொருள் உள்ளே அமைதியாய்க் கிடந்த பிறகு வேறு வடிவில் வெளிப்பட்டது போல், நிமோனியாக் காய்ச்சல் வந்துவிட்டது. இருபது நாள் படுக்கையில் கிடந்து வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் தவிர, வேறு யாரும் என்னை அணுகவில்லை. தங்கையும் தம்பியும் அணுகி வந்தாலும் பெற்றோர் தடுத்து விட்டார்கள். கற்பகம் வந்தாலும் அவ்வாறே தடுத்தார்கள். தொத்தக்கூடிய நோய் என்று தடுத்தார்கள். ஆனாலும் கற்பகம் நாள்தோறும் திண்ணை வரையில் வந்து என் தங்கையிடம் பேசியிருந்து விட்டுச் செல்வாள். படுக்கையில் இருந்த என் செவிகளில் அவளுடைய குரல் நாள்தோறும் விழுந்தது. சில நாட்களில் மெல்ல வந்து ஒரு நொடிப் பொழுதில் எட்டிப்பார்த்துத் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் போவாள்.

சந்திரன் சில நாளுக்கு ஒரு முறை வந்து போவான். பாக்கியம்மா மட்டும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் வந்து எதிரே உட்கார்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு, 'தம்பி கஞ்சி சாப்பிட்டதா? இரவு தூங்கினதா?' என்று அன்போடு கேட்டுவிட்டுப் போவார். அப்போதுதான் அந்த அம்மாவின் உண்மையான அன்பு எனக்குப் புலப்பட்டது. காய்ச்சல் விட்டுத் தேறிய பிறகு அம்மா ஒருநாள் பாக்கியத்தின் அன்பைப் பற்றிக் குறிப்பிட்டார். "உனக்கு காய்ச்சல் தன்னை மீறி இருந்தபோது இரவில் தூங்கிவிட்டுக் கவனிக்கத் தவறிவிடுவேனோ என்று பயந்து பாக்கியமும் என்னோடு வந்து படுத்துக்கொள்வாள். நான் தூங்கிவிடுவேன். தூங்கி விழித்தபோது பார்த்தால் அவள் உன் பக்கத்தில் உட்கார்ந்து விழித்திருப்பாள். பிறகு நான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவளை உறங்கும்படி வற்புறுத்துவேன். இப்படி எல்லாம் உன்னைக் காப்பாற்றினாள். உன் தொண்டை வறண்டு போகாதபடி பாலும் கஞ்சியும் கொடுத்துக் காப்பாற்றினாள். வேறு யார் அப்படிக் கண் விழிப்பார்கள்!" என்றார். அதைக் கேட்ட போது என் உள்ளம் உருகியது. ஆனாலும் பாக்கியத்திடம் முன்போல் நெருங்கிப் பழக முடியவில்லை. உள்ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற்று.

அந்த நோயால், என் முடிவுத் தேர்வு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். உடம்பு தேறிய பிறகும் அளவுக்கு மேல் படிக்கக் கூடாது என்று எல்லாரும் சொல்லத் தொடங்கினார்கள். சந்திரன் அவ்வப்போது வந்து அந்த இருபது நாளில் நடந்த பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான். இரவில் சாப்பிட்ட பிறகு படிக்கவே கூடாது என்று அம்மா கடுமையாகச் சொல்லிவிட்டார்.

தேர்வு நெருக்கத்தில் சந்திரன் பாக்கிய அம்மையாரின் வீட்டில் இரவும் பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்ற போது அவன் தலை மிக ஒழுங்காக வாரப்பட்டிருந்தது கண்டு, "இன்று மிகச் சீராகத் தலை வாரி வந்திருக்கிறாயே" என்றேன்.

"நான் வாரியது அல்ல. பாக்கியம்மா வாரிவிட்டார்கள்" என்றான்.

அதைக் கேட்டபோது எனக்குச் சிறிது பொறாமை ஏற்பட்டது. என்னிடம் உள்ளத்தில் அன்பு வைத்திருக்கிறாரே தவிர, இவ்வளவு நெருங்கி அன்பு பாராட்டுவதில்லையே என்று எண்ணினேன். உடனே நானே என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தாலும் நான் நெருங்கிப் பேசாமலும் பழகாமலும் இருந்தது என் குற்றம்தானே என்று உணர்ந்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.

இரவும் பகலும் அந்த அம்மாவின் வீட்டிலேயே இருந்து படித்த அவன், ஒருநாள் நான் போனபோது அங்கே இல்லை. "எங்கே தம்பி வந்தாய். போகிறாய்?" என்று அந்த அம்மா கேட்டார். "சந்திரனைப் பார்க்க வந்தேன்" என்றேன். "அது வீட்டில் இருக்கும்" என்றார். அன்று இரவும் அவன் அங்கே போகவில்லை. கணக்கில் ஒரு சந்தேகம் கேட்பதற்காகத் தான் போயிருந்தேன். அங்கே இல்லாமற் போகவே மறுபடியும் அவனுடைய வீட்டுக்கே போய்ப் பார்த்தேன்.

"பாக்கியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஏன் அங்கே போகவில்லை?" என்று கேட்டேன்.

"எனக்கு அங்கே இருந்து படிப்பதைவிட இங்கிருந்து படிப்பதே நன்றாக இருக்கிறது" என்றான். அவனுடைய முகமும் வாட்டமாக இருந்தது.

"அண்ணன் போக்கு மனம் போன போக்கு. மறுபடியும் நாளைக்கு அங்கேதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று போய்விடுவார்" என்றாள் கற்பகம்.

"சே! உன்னை யார் குறுக்கே பேசச் சொன்னார்கள்" என்று சந்திரன் எரிச்சலோடு கடிந்து கூறினான்.

அதைக் கேட்டவுடன், நான் காரணம் வேறே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாக்கியம்மா வீட்டில் சந்திரனுக்கும் அந்த அம்மாவுக்கும் அல்லது சந்திரனுக்கும் அந்த அம்மாவின் தம்பிக்கும் ஏதோ கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், என்ன காரணம் என்று அவனைக் கேட்கவில்லை. எரிச்சலோடு பேசுவதால் இப்போது கேட்கக்கூடாது. நாளை மறுநாள் அவனே சொல்லட்டும் என்று, என் கணக்குச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு நானும் அவனும் முனைந்து படித்துக் கொண்டிருந்தோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போவதும் நின்றது. அப்போதும் அவன் பாக்கியம் வீட்டுக்குப் போனதை நான் பார்த்ததில்லை. அந்த அம்மாவும் அதைப் பற்றி யாரிடமும் குறிப்பிடவில்லை. தேர்வு நெருக்கடியால், நானும் அந்த அம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. அவர் மட்டும் எங்கள் வீட்டுக்கும் சந்திரன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.

நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்தது. ஆனால் படிக்க உடம்பு இடம் தரவில்லை. சோர்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விழிப்பாக இருந்தார்கள். காலையில் எழாதபடி தடுத்தார்கள்.

அதற்கு நேர்மாறாக சந்திரன் முன்போல் படிக்கவில்லை என்று அத்தை குறை சொன்னார். அவனும் அடிக்கடி சோர்ந்து போவதாகவும், போன ஆண்டில் படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில்லை என்றும், குணமும் முன்போல் இல்லை என்றும், தாம் கண்டித்து அறிவுரை செய்வதால் தம்மோடு முன்போல் பேசுவதில்லை என்றும் அம்மாவிடம் சொல்லி வருந்தினார். "அப்படித்தான் இருப்பார்கள் சின்னப் பிள்ளைகள். தவிர, படிப்பு பொல்லாதது; பெரிய சுமையாக இருக்கும். அதனால் சரியாகப் பேசவும் மனம் இருக்காது" என்று அம்மா தேற்றியனுப்பினார்.

தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், "என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவலை இல்லாமல் முழுநேரமும் திருவிழாப் பார்த்து அனுபவித்திருக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.

திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். புலிவேடம், கரிவேடம், சாமியார் வேடம், குறத்தி வேடம் என்று இப்படிப் பலர் பல வேடம் போட்டுக்கொண்டு வேடிக்கை செய்தார்கள். ஆண் பூதமும் பெண் பூதமும் ஆடிய ஆட்டங்கள் நன்றாக இருந்தன. எல்லாவற்றையும்விடப் பூக்கடைக்காரர்கள் சேர்ந்து நடத்திய வாணவேடிக்கை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில் இருந்த செவிடர்களின் காதுகளிலும் வாணவெடிகள் கேட்டிருக்கும். பாம்புகள் போலவும், பூமாரி போலவும் வகை வகையான மத்தாப்பு ஒளியோடு வெடித்த வெடிகளுக்குக் கணக்கில்லை.

வாண வேடிக்கைக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என்றும், அதுபோல் எந்த ஆண்டிலும் நடந்ததில்லை என்றும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் இரவு ஒருமணி வரையில் வாணம் வெடித்தபடியே இருந்தது. ஊரே அதிர்ந்து போயிற்று. வானுலகம் மண்ணுலகத்தோடு சேர்ந்து கூத்தாடுவதுபோல் இருந்தது, அந்த ஒளியும் ஒலியும். என் தம்பி கடைசி வரையில் கண் விழித்திருந்து ஒவ்வொரு வெடிக்கும் எழுந்து எழுந்து துள்ளித் துள்ளிக் குதித்தான். என் தங்கையும் கற்பகமும் முந்திய ஆண்டில் மகிழ்ந்தது போலவே பார்த்து மகிழ்ந்தார்கள். அத்தை, அம்மா, பாக்கியம், எல்லோரும் எங்கள் வீட்டின் திண்ணையை அடுத்து உட்கார்ந்தபடியே பார்த்துக் களித்தார்கள். பாக்கியத்தின் தந்தையும் தம்பியும் அவர்கள் வீட்டுத் திண்ணைமேல் படுத்திருந்தார்கள்.

எங்கள் அப்பா எங்கள் திண்ணையில் படுத்துவிட்டார். சந்திரனும் நானும் படுக்காமல், உட்கார்ந்தபடியே நெடுநேரம் பார்த்திருந்தோம். ஆனால் முந்திய ஆண்டில் இருந்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. மூன்றாம் ஆண்டில் அவன் வந்த புதுமையில் இங்கும் அங்கும் பரபரப்பாகச் சென்று திருவிழாவைப் பார்த்தோம். இந்த ஆண்டில் தேர்வு முடிந்த பிறகும், படிப்புச் சுமை இல்லாத நிலையிலும் எங்கள் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. நான்கு பேருக்கு இடையில் நாங்களும் கண்விழித்திருந்தோம். சந்திரனுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தது. எனக்கு உறக்கமே வந்துவிட்டது. காரணம் நோயினால் என் உடம்பு அவ்வளவு சோர்ந்து போயிற்று. அவனுக்கு மகிழ்ச்சி இல்லாத காரணம், தேர்வில் நன்றாக எழுதாத குறையாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையும் அவன் என்னிடம் வாய்விட்டுச் சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_8&oldid=7877" இலிருந்து மீள்விக்கப்பட்டது