அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அகில வளமை

விக்கிமூலம் இலிருந்து
கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது
அகில வளமை அருளக்கேள் அம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்டமாய் இருக்க
மூவாதி மூவர் மிக்கஒரு மிக்கஒரு
சிங்காசனத்தில் சிறந்து இருக்கும் வேளையிலே
மங்காததேவி மாது திரு இலட்சுமியாள்
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியாள்
பார் ஏழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றாய் எழுந்திருந்து நாராயணர் பதத்தை
தெண்டனிட்டு இலட்சுமியும் செப்புவாள் அம்மானை
தேவரீர் என்னைத் திருக்கல்யாணம் முகித்துக்
கோவரிக் குண்டக் குடியிருப்பிலே இருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறியத்
தேவரீர் நீர்தான் செப்பிட்டீர் என்றுரைத்தாள்
பின்னும் அந்த இலட்சுமியாள் பெருமாள்தமைத் தொழுது
என்றும் இருக்க இறவாது இருப்போனே
ஆதியால் சூச்சம் அளவெடுக்காக் கூடாது
நாதியாய் நின்ற நாராயணப் பொருளே
தேவாதிக்கு எல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக்கு எல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கும் எதிரி உலகமதில் உண்டோகாண்
தமக்கும் எதிரி வந்த தன்மை மிகஉரையும்
யுகத்துக்குகம் பிறந்து உலகிடத்திலே இருக்க
அகத்து வந்த ஞாயம் அருளுவீர் எம்பெருமாள்
என்று திருவும் ஈதுரைக்க மாயவரும்