அண்ணாமலைப் பேருரை/அண்ணாமலைப் பேருரை
அண்ணாமலைப் பேருரை
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தர் அவர்களே! இணைவேந்தர் அவர்களே! துணை வேந்தர் அவர்களே! பட்டத் தகுதிப்பேறு பெற்றிடும் பட்டதாரிகளே! நண்பர்களே!
இவ்வாண்டு, இங்கு இப்பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிடும் பெறற்கரிய பெரும் வாய்ப்பினை—பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்துள்ளீர்கள்! இது குறித்து மெத்தவும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்! எனினும் பெரும் தயக்கத்துடனும், நடுக்கத்துடனும்தான் இப்பேரவையின்கண் பேசத் தொடங்குகின்றேன் என்பதனைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது!
பொறுப்புச் சுமை
இப்பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரையும் ஒரு சேரச் சந்திப்பதும், வரவேற்பதும், அவர்கள் அனைவரும் ஒளிமயமான எதிர்காலத்தில் பல்துறைகளிலும் வளமான வாழ்வினைப் பெற்றுச் சிறந்திட வேண்டும் என்று வாழ்த்திடுவதும், மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிதான்—மனதிற்கிசைந்த பணிதான்! என்றாலும் எனக்கொரு தயக்கமும் நடுக்கமும் இது சமயம் ஏற்பட்டிடத்தான் செய்கின்றது.
பட்டம் பெற்று, பல்கலைக் கழகத்தினை விட்டு வெளியேறி வாழ்வுத் துறையில் அடியெடுத்து வைத்திடும் பட்டதாரிகளுக்குத் தக்கதொரு அறிவுரை கூறிடுவதும், அவர்தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியென விளங்கிடத்தகும் விளக்கவுரையாற்றிடுவதும் இலேசானதல்ல...சுலபமான காரியமும் அல்ல! இது மெத்தவும் பொறுப்பான வேலை...பொறுப்புச் சுமையுங்கூட!
இத்தகு பெரும் பொறுப்பினைச் சுமப்பதற்கான தகுதி, திறமை, சிந்தனைச் சிறப்பு என்னிடம் உள்ளனவா! எனது அறிவு, ஆற்றல், சிந்தனை ஆகியவற்றின் எல்லைகள் எத்துணை குறைவானது! என்பதையெல்லாம் எண்ணிடும்போது தான் எனக்குத் தயக்கமும் நடுக்கமும் ஏற்படுகின்றது!
பேரறிவாளர்களின் அடிச்சுவட்டில்!
இது மட்டுமல்ல, எனது தயக்கத்திற்கும் நடுக்கத்திற்கும் காரணம்! இதே பட்டமளிப்பு விழா மண்டபத்தில் இம் மேடையில் எவர் எவரெல்லாம் பேருரையாற்றியுள்ளனர் என்பதையும் எண்ணிடுகின்றேன்! எத்தகைய பெருமக்கள் அறிவூட்டும் ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளனர்! பண்பும் பயனும் மிகுந்த பேருரைகளை ஆற்றியுள்ளனர்! வாழ்வின் பல்துறைகளிலும் வியத்தகு மேதைகளாக விளங்கிட்ட விற்பன்னர்கள்! ஆழ்ந்த புலமையும் அனுபவச் செறிவும் படைத்திட்ட பேரறிவாளர்கள்! நீதி நெறியும் நேர்மைத் திறனும் பண்பும் தமது தனிச்சிறப்பெனத் திகழ்ந்த நிர்வாக மேதைகள்! இப்படிப்பட்ட பலவகையினரும் இப்பேரவையின்கண், ஆண்டுகள்தோறும் பட்டதாரிகளுக்கு அநுபவ அறிவுரைகளை வாரி வழங்கியபடி வந்துள்ளனர் அன்றோ!
இப்படிப்பட்ட மாமேதைகள் கூறிச் சென்றுள்ளதைக் காட்டிலும் சிறப்புற எதனைக் கூறிட முடியும் என்னால்? ஒரு கணம் இதனை எண்ணிப் பார்க்கின்றேன்; அந்தப் பேரறிவாளர்களின் அடிச்சுவட்டினைத் தொடர்ந்து, பொதுவாகப் பல்கலைக் கழகங்களின் பொறுப்பு குறித்தும், சிறப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினைப் பற்றியும் பேசுமாறு என்னைப் பணித்துள்ளீர்கள் என்று கருதிப் பேச தொடங்குகின்றேன்.
விளக்கமும் விமர்சனமும்
எனது தகுதி, திறமை, சிந்தனை ஆகியவற்றின் எல்லைக்கோட்டினை—வரையறையினை முழுக்க உணர்ந்திருப்பதின் காரணமாக என்னுள்ளும் ஓர் ஆறுதல் பிறக்கின்றது.
எனது சொந்தச் சிந்தனையின் விளைவுகள் என்பதாக எந்தக் கருத்துக்களையும் இங்கு கூறிடப் போவதில்லை நான்! அல்லது இது “அண்ணாதுரையின் சிறப்பு முத்திரை” பதிப்பிக்கப்பட்ட கொள்கை—கோட்பாடு என்று எதனையும் பிரகடனப்படுத்திடவும் மாட்டேன்!
கடந்த காலத்தில், இதே பேரவையின்கண் கற்றறிவாளர்கள் பலராலும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள கருத்துக் கருவூலங்களை, நல்லறிவுரைகளைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப் போகின்றேனே தவிர, வேறு இல்லை. ஆனால் அவற்றிற்கு ஆங்காங்கே சற்று விளக்கமும் விமர்சனமும், குறிப்புரையும் விரிவுரையும், எடுத்துக் காட்டுதலும் சுட்டிக்காட்டுதலும்—என்னால் முடிந்தவரை தந்திட முற்படலாம என்றுதான் கருதுகின்றேன்.
அது மட்டுமல்ல, அந்த நல்லறிவாளர்களின் கருத்துக்களையும் நல்லுரைகளையும் நாட்டின் சாமானியர்களின்—ஏழை எளியவர்களின்—பாமர மக்களின் கருத்தோட்டத்தையொட்டிச் சிறிது விமர்சனம் செய்ய முற்படுவதும் நல்லது—நாட்டிற்கு நன்மை பயப்பதுமாகும் என்றே நம்புகின்றேன்.சாமானியர்களின் எண்ணம்
சாமானியர்களின் சகாப்தம் இது! இது குறித்து எத்தகையவர்கள்—எத்துணைக் கருத்து வேறுபாடு —மாறுபாடு கொண்டு இருந்தாலும், சாமானியர்களின்—ஏழை எளியவர்களின் எண்ணங்கள் ஈடேற்றப்பட்டுத் தீரும் நேரமிது என்பதனை மறந்திடவே முடியாது. “ஏழை சொல் அம்பலம் ஏறும் காலம்” என்பதும் சரியே!
சாமானியர்கள், அவர்கள் எத்துணை ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்று உருக்குலைந்து காணப்படினும், அவர்தம் கருத்தோட்டத்தை மதித்திடல் வேண்டும்! அதன்படி நடந்திடவும் வேண்டும் என்பதைத்தான் உங்களுக்குச் சுட்டிக் காட்டிட விரும்புகின்றேன். சாமானியர்களின் விருப்பங்களை, எண்ணங்களை, எழுச்சியை எடுத்துக் காட்டிடும் பிரதிநிதியாகவே உங்களிடம் பேசிடவும் விரும்புகின்றேன்.
அன்றாட வாழ்க்கை நெறியாக
மதம், மார்க்கம் அல்லது எத்தகைய கருத்துக்களைப் போதித்திடும், புகட்டிடும் சிந்தனைக் கூடங்களாயினும்சரி, அவை தத்துவத் துறையாயினும் சரி அல்லது அரசியல் துறையேயானாலும் சரி, ஒழுக்க இயலாகட்டும் அன்றிப் பொருளியலேயானாலும் ஆகட்டும் அவையெல்லாம், சாமானியர்கள்—சராசரி மக்களுக்காகத்தான் உள்ளன என்பதில் ஐயம் ஏதுமில்லை!
எத்துறையானாலும், அவை போதிப்பது எதுவானாலும் அது பற்றிய விளக்கமும், விமர்சனமும் கற்றறிவாளர்களிடமிருந்தும் ஆய்ந்தறிந்த அனுபவ மேதைகளிடமிருந்துமே வந்திடக் காண்கின்றோம். இவற்றை, இச்சிந்தனைகளை நாட்டின் நடைமுறையாக—மக்களது அன்றாட வாழ்க்கை நெறியாகச் செயல்படுத்திடும் பொறுப்பு மிகப் பெரியது. ஆள்வோரின் பெருங்கடமை இதுவே!இன்று, நாட்டின் அறிவுக் களஞ்சியங்களாகவும் கருத்துக் கருவூலங்களாகவும் விளங்குபவை பல்கலைக் கழகங்களே! சிந்தனைத் தெளிவு, மதிநுட்பத்திறன். சேவையுள்ளம் ஆகியவற்றின் தூதுவர்களாய்த் திகழ்ந்திடும் வண்ணம் வருங்காலக் குடிமக்களைத் தயாரித்திடும் பொறுப்பு பல்கலைக் கழகங்களையே சாரும் இன்று!
எனவே, பல்கலைக் கழகங்களின் பொறுப்பு மிகப்பெரிது, இன்று! நாட்டின்—நாட்டு மக்களது வாழ்விலும் வளமான வளர்ச்சியிலும் அவற்றிற்கு மகத்தான பொறுப்பு—பங்கு உளது! அது நாள்தோறும் விரிவாகிக்கொண்டே செல்கிறது.
சமுதாயத்தின் பல்வேறு துறைகளையும், சுற்றுச் சார்புகளையும் பக்குவப்படுத்தி, மக்கள் பயனுறு வாழ்வு வாழ்ந்திட, வாழவைத்திடும் பணியினை மேற்கொண்டிடத்தக்க நல்ல குடிமக்களைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் தயாரித்து தரும் பெரும்பணி தொடர்ந்தபடிதான் உள்ளது.
செயற்களம் விரிவடைகிறது
முடியாட்சியும், சர்வாதிகாரிகளின் எதேச்சாதிகார ஆட்சி முறையும் தகர்த்தெறியப்பட்டு, மக்களாட்சி நடைபெறும் நாட்களில்—ஜனநாயக சகாப்தம் மலர்ந்துள்ள இக்காலத்தில், பல்கலைக் கழகங்களின் பணியும் பொறுப்பும் மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
முடியாட்சி அல்லது நிலப்பிரபுத்துவக் கெடுபிடி காலங்களில் பல்கலைக்கழகங்களின் பணியும் பொறுப்பும் என்ன? அரசவைகளை அலங்கரிக்கத்தக்க சில பாவாணர்களையும் பிரபுக்களின் பொன் மயமான மாளிகைகளில் கொலு வீற்றிருக்கத்தக்க பண்டிதர் சிலரையும் உண்டாக்குவது தானே! அவர்கள் மாளிகை வாசிகளின் பொருட்டே தவிர சராசரி—சாமானிய மக்களின் பொருட்டே அல்ல என்ற நியதி கோலோச்சிக் கொண்டிருந்தது அன்று.மக்களில் மிகப் பலராக உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஆனால் மிகச் சிலராகவே இருந்த மாளிகை வாசிகளைப் பற்றியும், மன்னர்களைப் பற்றியுமே பாவாணர்களும், கற்றறிவாளர்களும், மேதைகளும் கவலைப்பட வேண்டும் என்றிருந்த காலந்தானே அது!
மக்களிடமிருந்து ஒதுங்கி, எங்கோ ஓர் மூலையில் தனித்த ஒதுக்கிடத்தில் புலவர்கள், தமது அறிவையும் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையுங்கொண்டு, வரட்டுத் தத்துவத்திற்குத் தங்க முலாம் பூசிக்காட்டி வந்தனர்; அல்லது சமுதாயத்தின் மேல் தட்டிலுள்ளவர்களுக்கு மட்டுமே பாமாலை புனைந்து புகழ்மாலை சூட்டிக் களித்திருந்தனர் அன்று!
பல்கலைக்கழகங்களின் பொறுப்பும் பங்கும் முன்காலத்தினைப் போன்றதல்ல இன்று! மாளிகைக்குள்ளோ அல்லது மடங்களுக்குள்ளேயோ அடைபட்டுப் பணியாற்றிடும் சூழ்நிலை இல்லை; குறிப்பிட்ட வட்டாரத்திற்குள்—வளையத்திற்குள் சுற்றிச்சுற்றிச் சுழலும் முறையில் கடமையாற்றித் தீர வேண்டிய இசைகேடான கட்டமும் மாறிவிட்டிருக்கின்றது இன்று!
பல்கலைக் கழகங்களின் செயற்களம்—பணிபுரிந்திடும் அரங்கம் இன்று பரந்து விரிந்து கிடக்கிறது. அவற்றின் அடிப்படைக் குறிக்கோளில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் சாமானியர்கள் வாழ்வையும் தாழ்வையும் கருத்தில்கொண்டு பணியாற்றிடும் பாங்கினைப் பெற்றுச் செயல் புரிந்திடவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது இன்று!
மன்னர்கள், மாளிகை வாசிகளின் கூடாரத்திற்குள் அடைப்பட்டுக்கிடந்த பல்கலையும், மக்கள் மன்றத்திற்கு வந்திடல் வேண்டும். மக்களது பாமரத்தன்மையையும் ஏழ்மையையும் மேலும் அதிகரித்திடவோ அல்லது அவற்றை நிலைபெறச் செய்து நிரந்தரமாக்கிடவோ அல்ல! சாமானிய மக்களது வாழ்வினைச் சீர்படுத்திச் செம்மையுறச் செய்து, நல்வாழ்விற்கான நெறியில் ஒழுகிடப் பக்குவப்படுத்திப் பயிற்சி அளித்திடுவதற்காக—வாழும் வகையும் வழியும் காட்டிட! முன்னேற்றப் பாதையில் கைகொடுத்து விரைந்து அழைத்து சென்றிட!
உணர்த்திடும் வல்லமை!
சாமானியர்களிடம் இன்று சாமானியமற்ற காரியம்—மகத்தான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் கடமையாற்ற அந்தச் சாமானியன் முன்னிற்க வேண்டியுள்ளது!
ஜனநாயக உரிமை கடமையின் நிமித்தம் மக்களாட்சியை நிர்மாணித்திடும் பெரும் பொறுப்பு சாமானியர்களின் எண்ணத்தைப் பொறுத்துத்தான் உள்ளது இன்று.
மக்களாட்சி! ஜன நாயக அரசு! இச்சொல் எத்தனையோ இன்பக்கனவுகளை, ஏற்றம் மிகுந்த எதிர்கால வாழ்வினை—வளமான, நிம்மதியான சமுதாயச் சூழ்நிலையை அந்தச் சாமானியர்களின் எண்ணத்திரையில் நித்தம் நித்தம் எழிலோவியமாகத் தீட்டிக் காட்டிடுகின்றது! எண்ணிடும் பொழுதெல்லாம் மகிழ்ச்சிக்கிளர்ச்சி எழுகின்றது! நல்லாசை உணர்வுகள் தூண்டி விடப்படுகின்றன!
இத்தகு இன்பபுரிப் பயணத்தினை மேற்கொண்டிருப்பது இலேசான காரியமா? சலியாத உழைப்பும், எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்திடும் விடாத முயற்சியும், தடைக்கற்கள் அனைத்தையும் தாங்கிடும் இதய வலிமையும், பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் மிகமிகத் தேவைப்படுகின்றனவே!
நாணயம், நீதி, நேர்மை, தன்னம்பிக்கை, தன் முனைப்பு எனப்படும் சீரிய நற்குணங்களைப் பூண்டு ஒழுகினால்தானே இன்ப வாழ்வு கிட்டிடும்? தன்னை உணர்ந்து, தனக்காகவும் பிறருக்காகவும் பாடுபட்டால்தான் பயன் உண்டு! தன்னை மட்டுமல்லாது தனது உற்றார் உறவினர், ஊர்மக்கள் அனைவரின் தேவைகளையும் உணர்ந்து மதித்து நடந்திடும் பாங்குடன் கூடிய முயற்சி, உழைப்பினை மக்கள் அனைவரும், குறிப்பாகச் சாமானியர்கள் அனைவரும் பெற்றால்தான் இச் சீரிய செயல், நடைமுறைக் காட்சியாகிவிட முடியம்! மக்களது அன்றாட வாழ்க்கை நெறியாகவும் மாறிட முடியும்!
இப்பெரும் பொறுப்பினை மக்கள் மன்றத்திற்கு உணர்த்திடும் வல்லமை பல்கலைக் கழகங்களுக்கு உண்டு.
அறிவுப்புடம் போட்டு...
சாமானியர்களின் எண்ணமும் எழுச்சியும் அரசோச்சும் காலமிது என்று குறிப்பிட்டேன்! ஆம்; சாமானியர்கள் ஏழை எளியவர்தான் இன்று அரசினை அமைத்திடும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்!
ஏழை எளியவர்கள் தங்களது தலைவிதியை தங்களது வாழ்வையும் தாழ்வையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வல்லமை பெற்றுவிட்டனர், “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற சொற்றொடர் செயல் உருப்பெற்று உலாவரத் தொடங்கிவிட்டிருக்கிறது!
மாடமாளிகை, கூட கோபுரங்களில் மட்டுமே மன்னர்கள் பிறந்த காலம் மலையேறிவிட்டது! பட்டி தொட்டிகள் எங்கணும், குடிசைகள், குச்சு வீடுகள் அனைத்தும் இந்நாட்டு மன்னர்களின் பிறப்பிடமாய்த் திகழ்ந்திடும் நேரம் இது!
குடியரசுத் தத்துவம்—மக்களாட்சி முறையென்பது மாண்புமிகு ஏற்றம் பெற்றிடும் வகையில், நாட்டுக் குடிமக்களை வழிநடத்திச் சென்றிடத்தக்க விதத்தில், மாணவர்களை அறிவுப் புடம் போட்டு, ஆற்றல் மெருகேற்றிச் செயல் திறம் படைத்திட்ட செம்மல்களாய்ச் செம்மைப்படுத்தி, நல்ல குடிமக்களாய் உருவாக்கிடும்பெரும் பொறுப்பு — நல்வாய்ப்பு பல்கலைக் கழகங்களிடமே உள்ளது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்!
பல்கலைக் கழகங்களின் செயற்களம்—பணிபுரிந்திடும் அரங்கம் பரந்து விரிந்த வண்ணம் உள்ளது என்று குறிப்பிட்டேன். அதே சமயம் பல்கலைக் கழகங்களின் அடிப்படை வேலைமுறைகளில் மாற்றமேதுமில்லை; ஆனால் அவை சாமானியர்களின் எண்ணத்தினைப் பிரதிபலிப்பதாகவும் வலுப்படுத்திச் செயல்முறைப் படுத்திடுவதாகவும் அமைந்திடல் வேண்டும் என்பதனையும் வலியுறுத்திக் கூறிட விரும்புகின்றேன்!
நல்வழி காட்டிடும் குடிமக்கள்
பல்கலைக் கழகங்களின் முன்னுள்ள அடிப்படைத் தத்துவங்கள் தாம் யாவை?
மாணவர்களின் அறிவுத் தாகத்தினைத் தக்க விதத்தில் தீர்த்திடல் வேண்டும். அறிவின் பல்வேறு கூறுகளையும் தெரிந்து தெளிந்திட வழிகாட்டிடல் வேண்டும். கருத்துத் தெளிவும் சுதந்திரமும் செயல் திறனும் மிக்கோராய் வாழ்ந்திடும் உளப்பாங்கும் உறுதியும் மாணவர்களிடத்தில் மெத்தவும் அமைந்திடல் வேண்டும்.
சமரச நோக்கம், பரந்த மனப்பான்மை, சத்துள்ளது எது? சாரமற்றது எது? என்றெதையும் பகுத்துணரும் போக்கு, எந்தப் பிரச்சினையையும் அச்சம், தயை தாட்சண்யம், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நோக்கிடும் நெஞ்ச வலிமை, மற்றவர்களது கருத்தையும் கண்ணோட்டத்தையும், மதித்து நடந்திடும் நாகரிகத்திறன், நன்னெறியினை விட்டகலா சான்றாண்மை ஆகிய அருங்குணங்களே மனித வாழ்க்கையின் மாறாத அடிப்படைத் தத்துவங்களாக அமைந்துள்ளன!
இப்படிப்பட்ட அருங்குணங்களையெல்லாம் மாணவர்களிடம் ஊட்டி, வளர்த்து, பக்குவப்படுத்திப் பயிற்றுவித்து ஆண்டுதோறும் பட்டதாரிகளாக, நல்வழி காட்டிடும் குடிமக்களாக உருவாக்கிடும் நற்பணிதான் பல்கலைக் கழகங்களில் தொடர்கின்றது. மேலும் சீரும் சிறப்புமாகத் தொடர்ந்திடவும் வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள், பிரஸல்ஸ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்ட பின்வரும் கருத்துக்கள் நம் அனைவரின் கவனத்திற்கும் உரியனவாகும்:—
- “ஜனநாயகம் தக்க-சீரிய முறையில் செயல்பட வேண்டுமாயின் அதற்கான தனித்த சீரிய நெறி முறைகள் பின்பற்றப்படவேண்டும்—அரசாங்கம் அமைத்திடும் நல்முறைமை மட்டும் போதாது.”
- “ஜனநாயக உணர்வையும், நெறிமுறைகளையும் பல்கலைக் கழகங்கள் நன்கு ஊட்டி, உணர்த்திட வல்லனவாகும்.”
- “மற்றவர் கருத்துக்களை மதித்து இணைந்து செயல் புரிந்திடும் பண்பும் வேற்றுமைகளைப் பேசித் தீர்த்து நல்வழி கண்டிடும் கருத்தோட்டமும் ஜனநாயக முறைக்கு அவசியமாகும். தனி மனிதனின் பொறுப்புணர்ச்சியும், நியாய உணர்வும் ஜனநாயக பாரம்பரியத்திற்கு நல்லதோர் பாதுகாவலாக விளங்கும்.”
- “கடந்தகால குழப்பங்கள், கிளர்ச்சிகள் கருத்துக் குமுறல்களைப் பல்கலைக் கழகங்களில் அலசி ஆராயவேண்டும். அவற்றால் ஏற்பட்டுள்ள அழிவையும் அபாயத்தையும், சாதக பாதகங்களையும் உணர்ந்து, வருங்கால நல்வாழ்விற்கான சாத்தியக் கூறுகளையும், சந்தர்ப்பங்களின் அறைகூவலையும் ஏற்கத் தயாராக வேண்டும்!”
பட்டதாரிகளே! டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளபடி, சந்தர்ப்பங்களின் அறைகூவலை ஏற்றுச் சான்றாண்மைச் செயல்புரிவீராக! நற்கருமம் புரிந்திடும் நல்லோராய்—நல்வழிகாட்டிடும் குடிமக்களாய்த் திகழ்ந்திடுவீராக!
மானுடத்தின் மாண்பு அரசோச்ச...
ஜனநாயகம் என்பது மக்கள் அரசுமுறை என்பதோடு முடிந்துவிடவில்லை. புதுவாழ்விற்கான நல் அமைப்பும் அது! பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக் கூடமும் அதுவே! ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி, ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோளை அடைந்திடச் செயலாற்றிட வைத்திடும் பெருநோக்கம் கொண்டதே ஜன நாயகம் எனப்படுவது!
இப்பெரு நோக்கத்தின்படி ஒழுகினால் எந்த ஒரு தனிமனிதனின் செயல்திறமும் பயனின்றி வீணாகப் போய்விடாது. எந்த ஓர் ஆணும் சரி பெண்ணும் சரி வறுமைப் பிடிக்குள் சிக்கிச் சீரழியவே முடியாது! அடக்குமுறைக் கொடுமையினால் எவரும் சக்தியற்றவர்களாக்கப்படவே மாட்டார்கள். யாருடைய வளர்ச்சிக்கும் எதனாலும் எவராலும் தடையேற்பட்டுக் குந்தகம் விளைந்திடாது! இந்த நிலை நாட்டில் ஏற்பட்டிடல் வேண்டும்.
சர்வாதிகாரமும், கொடுங்கோன்மையும் பூண்டோடு கருவறுக்கப்பட்டாக வேண்டும். பகட்டும், வெற்றுரைகளும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் பொல்லாங்கும் அழிந்திடல் வேண்டும். அப்போதுதான் மனிதத்தன்மை மானுடத்தின் மாண்பு அரசோச்ச முடியும்! இச்சீரிய செயலில் ஈடுபடத்தக்க செயல் வீரர்களைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் பட்டதாரிகளாகத் தயாரித்து அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே எனது பேராவல்!
பொது நோக்கு; பொது நன்மை
வாழ்வின் தலைவாயிலில் நிற்கும் பட்டதாரிகளே! வளமான எதிர்காலம் உங்களை எதிர்நோக்கியபடி உள்ளது! உங்களது வாழ்வு எல்லா வளமும் பொருந்தியதாக அமையட்டும்!
ஒவ்வொருவரும் தமது சொந்த வாழ்வில் பல்வளமும் பெற்றிட விரும்பிடுவதும், அதற்கான உறுதி பூண்டு உழைத்திடுவதும், அவர்கள் பட்டதாரிகளானாலும், பட்டதாரியல்லாத பாமரரேயானாலும் மெத்தவும் அவசியமானதாகும்.
வாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதும், பாங்கான—கறைபடாத வாழ்வு வாழ்ந்திடத் தேவையான பொருளீட்டிடும் நோக்கமும் இன்றியமையாத ஒன்று, ஒவ்வொருவருக்கும்!
வாழ்வுத் தேவைக்கான பொருளீட்டிடும் நோக்கத்தினை அலட்சியம் செய்திடவே முடியாது, எவராலும்! அது கூடவும் கூடாது என்பேன்!
வாழ்வதற்கு பொருள் தேவை-மிக மிகத்தேவைதான்! ஆனால் வாழ்வின் குறிக்கோள்-அதிலும் பட்டதாரிகளே! வாழ்வில் நுழைந்திடும நும் போன்றோரின் குறிக்கோள் பொருளீட்டுவதோடு நின்று விடுகிறதா? நின்று விடத்தான் வேண்டுமா? நின்றுதான் விடலாமா? கூடாது, கூடவே கூடாது!
தனித்த வாழ்வில், சொந்தக் குடும்ப முன்னேற்றத்திற்கான அடிப்படையில் பணந்தேடிடுவது என்பது மட்டுமே வாழ்வின் குறிக்கோள் என்ற முறையில் நீவிரெல்லாம் ஒழுகிட வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை நான்! நான் மட்டுமல்ல—நாட்டுச் சமுதாயம் முழுமையுமே அப்படித்தான் கருதுகிறது.
பொருளீட்டிடும் நோக்கத்தோடு அதனுடன், அதையும்விடச் சிறந்த, உயர்ந்த மாண்புறும் பொதுநோக்கு, பொது நன்மை ஆகியனவற்றுக்காகவும் நீங்கள் உழைத்திடத்தான் வேண்டும்.
சமூகம் இதைத்தான் உங்களிடமிருந்து சிறப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது உங்கள் கடமை—சமூகக் கடமையுங்கூட.
தியாக மனப்பாங்கு
இத்தகு கடமையை—சமுதாயத்திற்கான அருந்தொண்டாற்றிடும் கடமையை உங்களிடமிருந்து சமூகம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில் சமூகத்திற்கு நீங்கள் பெரிதும் கடமைப்பட்டவர்கள்—கடன் பட்டவர்களும் ஆவீர்கள்! எப்படி?
ஒன்றை, பட்டதாரிகளான நீவிர் அனைவரும் முதற்கண் உங்கள் நெஞ்சத்தில் நிறுத்திட வேண்டுகிறேன்.
நீவிரெல்லாம் பல்கலைக் கழகத்தில் படித்திடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்—வாய்ப்பா அது! மிகச் சிலருக்கே கிட்டிடும் தனிச்சலுகையின் விளைவன்றோ அஃது.
இத்தனிச்சலுகை, பல்கலைக் கழகத்தில் பயின்றிடும் தனித்ததொரு சிறப்பான வாய்ப்பு பெற்றிட எல்லோருக்கும் முடியும் காரியமா? கிடைக்கத்தான் கூடுமா? கொடுத்திடத்தான் ஆகுமா?
பல்கலைக் கழகங்களை நிறுவி, அவற்றிற்கான நிலன்புலன், கட்டிடத் தேவைகள், கலைக்கூடங்கள், இருக்கை வசதிகள், விஞ்ஞான ஆராய்ச்சி மண்டபங்கள் இவைகளுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? அதுமட்டுமா? உயர் கல்வி போதனை தந்திடும் பேராசிரியர்களுக்கும், வல்லுநர்களுக்கும் வேண்டிய ஊதியமும், எல்லாவற்றையும்விடப் பல்கலைக் கழகங்களை ஆண்டாண்டுதோறும் கட்டிக்காத்து நிர்வகித்திட எத்துணைக் கோடி கோடிப் பணம் தேவைப்படுகின்றது? இதெல்லாம் எங்கிருந்து வருகின்றன?
பல்கலைக் கழகங்களுக்கான செலவின் பெரும்பகுதி சர்க்காரின் வருவாய்த்துறை மூலம் பெறப்படும் பெருநிதியிலிருந்து தானே தரப்படுகின்றன?
அரசின் பெருநிதிக்குப் பொருளினை வாரிவாரி வழங்கிடும் பெருமக்கள் யார்? எவர்? பெரும்பாலும் உழவர்களும் உழைப்பாளிகளுந்தானே!
சமூகத்தின் பெரும்பாலோரின் வரிப்பணத்திலிருந்து சமூகத்தின் சிறு அங்கமான சிலருக்குக் கல்லூரிப் படிப்பு பெறும் வாய்ப்பு தரப்படுகின்றது! பலரின் தியாகத்தால் மிகச் சிலர் சிறப்பு மிகுந்த அறிவுக்கண் பெறுகின்றனர்! ஆராய்ச்சித் திறன் மிக்கோராகின்றனர். மேதைகளாக்கப் படுகின்றனர்! பட்டதாரிகளாகின்றனர்!
பலரது உழைப்பால் விளைந்தசெல்வத்தின் பயனைத் துய்த்துப் பட்டதாரிகளாகியுள்ளீர்கள்! உங்களுக்காகத் தினையளவேனும் ஒவ்வொருவரும் தியாகம் செய்துள்ளனர் என்பதை உணருங்கள் முதலில்!
மக்களுக்கு, சமூகத்தில் மிகப் பெரும்பாலோராக உள்ள சாமானியர்களுக்கு நீங்கள் செலுத்திடப் போகும் நன்றிக் கடன் யாது? எப்படி? உழவர்களும் உழைப்பாளிகளும் செய்திட்ட தியாகத்திற்கு நீங்கள் திருப்பித் தந்திடப் போகும் பண்பு என்ன? அதுதான் தியாக மனப்பாங்கு! ஊருக்கு உழைத்திடும் பண்பு! அதனைப் பெறுவீர், செயல்படுவீர் இன்றே!செல்வமல்ல; சேவைக்காணிக்கை
சமூகத்தினிடமிருந்து நீங்கள் பெற்ற உபகாரத்தை எந்த விதத்திலாவது திருப்பிச் செலுத்திடாமற்போனால் சமூகத்தின் பெருநிதிப்பேழை வரண்டுவிடும்! நாளாவட்டத்தில் பொது வாழ்வே பாலைவனமாகிவிடும்! தேவையா அது?
ஏழை மக்களது வாழ்வெனும் பாலைவனம் சோலைவனமாகிடல் வேண்டும்! வருங்காலச் சந்ததிகளாவது வளமெலாம் பெற்று வாழ்ந்திட வழிவகை செய்திடுவது பட்டதாரிகளின் முதற்பெருங்கடமையாகின்றது!
பட்டதாரிகளே! பட்டம் பெற்றிடுவதின் மூலம் உங்களது நிலை உயர்கிறது! நினைப்பு மேலோங்குகின்றது! பண்பு பக்குவப்படுகின்றது! சமுதாயத்தில் சிறப்பானதோர் நல்லிடம் காத்துக் கிடக்கின்றது, உங்களுக்காக!
சொந்த வாழ்வினைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்திடும் பணியுடன் பட்டதாரிகள் நில்லாது, சமுதாயத்தைச் சீர்திருத்திச் செம்மைப்படுத்திடும் சேவைதனையும் செய்திட வேண்டுகிறேன்.
பணமல்ல, பண்பாடே உம்மிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது! நிலையாத செல்வம் வேண்டாம்; நிலை பேறான சேவைக் காணிக்கை செலுத்திடவாரீர்!
இருண்ட சந்துகளிலும் ஒளியேற்றிடுவீர்! சலிப்புற்றோருக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்திடுவீர்! ஆதரவற்றோருக்கு ஊன்றுகோலெனத் தொண்டாற்றுவீர்! மக்களின் அகமும் முகமும் மலர்ந்திட அறிவுரை தாருங்கள்! வறுமையை அகற்றுங்கள்! புத்தொளி காணுங்கள்! புது வாழ்வு—எல்லோரும் இன்புற்றிருக்கும் நல்வாழ்வு அமைத்திடுவோம் வாரீர்! வாரீர்! என்று அழைக்கின்றேன்.பொதுநலம் புரிந்திட வாரீர்! புத்துலகு சமைத்திட வாரீர் என்ற அழைப்பு எல்லோராலும் விரும்பத்தக்கதுதான்! குறை கூறிடவே முடியாத குறிக்கோளன்றோ இஃது! இது பற்றிக் கருத்து மாறுபாடும் வேறுபாடும் கொண்டிடுவோர் எவருமே இரார்! ஆனால், இக்குறிக்கோளினைச் செயல்படுத்திட முனைந்திடுவோர் எத்துணை பேர்? மிகச் சிலர் தானே! இந்தச் சிலர், பலராகட் டும்! முனைந்து செயலாற்றிடும் தியாக சீலர்களின் தொகை பெருகட்டும்! தீரர்களின் எண்ணிக்கை வளரட்டும்!
சொல்லும் செயலும் சிறக்க
சொல்வதெளிது; சொல்லிய வண்ணம் ஆங்கே செயல்படுவது அரிது என்பர் ஆன்றோர்!
ஆண்டாண்டு காலமாக நாம் கேட்டும், படித்தும் வந்திடும் நல்லுரைகள் ஏராளம், ஏராளம்! மிக மிக ஏராளம்! ஆனால் அவற்றின் செயலுருவந்தான் அந்த அளவுக்குக் காணவில்லை!
சொல்லிய வண்ணம் செயல்பட்டொழுகிடல் வேண்டும் என்பது, எந்தக் காலத்திலும் எவராலுமே மறுக்கப்படாத, மறுக்கவே முடியாத கோட்பாடாகத்தான் இருந்து வருகின்றது!
உபதேசங்களும் நல்லுரைகளும், வெறும் உபதேசங்களாகவும் நல்லுரைகளாகவும் மட்டுமே இருந்திடின் யாது பயன்? ஏட்டுச்சுரை கறிக்கு உதவிடுமோ? சர்க்கரை—சீனி என்று எழுதிக்காட்டிடின் நாவினில் இனிப்பு சொட்டிடுமோ!
உபதேசங்களும் நல்லுரைகளும் வாழ்வின் நெறியாக, நித்தியக் கடனாக, மாந்தர்தம் அன்றாடக் கடமையாக மாறிடில் அன்றோ நன்று, நல்லது? செயலின்றிச் சொல்லாரம் மட்டுமே வாழ்வில் நற்சுவை கூட்டிடுமா? அது வெறும் ‘சுவை’ தான்! சொற்சுவைதான்! பயனற்ற சொல்தானே!
- “ஜனநாயக மரபுகளின் தொடர்பாக மக்களுக்குக் கிடைத்திடும் அரிய நல்வாய்ப்புகளின் மூலம் சமுதாயம் பெற்றிடும் காரிய சாதனைகளைக் குறித்துப் பெருமைப்படும் சான்றோர்களாக—பண்பாளர்களாக நாமெல்லாம் விளங்கிடல் வேண்டும். இத்தகைய நனவுக் கனவுதான் செயலாக்கச் சிந்தனைதான் நமக்கெல்லாம் தேவை” என்று ஜெபர்சன் அவர்கள் உலகினுக்கெல்லாம் கூறியுள்ள கருத்து நமக்கெல்லாம் மெத்தவும் தேவைப்படுவதாகும்.
நனவுக்கனவு காண்போம்! செயலாக்கச் சிந்தனையின் வயப்பட்டிடுவோம்! சொல்லிடும் வண்ணமே செயற்பட்டிடுவோம்! சொல்லும் செயலும் சிறக்கப் பணியாற்றிடுவோம்! வாரீர்! வாரீர்! என்றுமையெல்லாம் அழைக்கின்றேன்.
பழைய பல்லவி பாடாதீர்
சமுதாயத்திற்குச் சேவை செய்திடுவோம், வாரீர்! கடமை அழைக்கிறது! காணிக்கை செலுத்திடுவீர் என்று பட்டதாரிகளாகிய உங்களை மீண்டும் மீண்டும் அழைக்கின்றேன்!
இந்த ஒப்புயர்வற்ற திருப்பணியில்—சமுதாயத்தைத் திருத்தி செம்மைப் படுத்திடும் திருப்பணியில் சேர வாரீர் என்றுமை அழைத்திடும்போது ஏளனப் புன்முறுவல் பூத்திடாதீர்! கண்ணிமைகளைச் சற்றே மேலுங்கீழுமாக அசைத்துக் காட்டி அலட்சியமுஞ் செய்திடாதீர்! “சொல்வதெளிது! ஆனால் செய்திடல் அரியதாயிற்றே!” என்ற பழம் பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கி விடாதீர்கள் என்றும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சமுதாயத்தைச் சீர்திருத்திடும் திருப்பணியில் ஈடுபடும் போது எத்தகைய கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் குறுக்கிட்டுக் குந்தகம் விளைவித்திடும் என்பதனை அறியாதவனல்ல, நான்! அதே சமயம சேவை புரிந்திட முனைந்திடுமபோது எத்தன்மைத்தான இருண்ட சூழ்நிலைகள் உம்மைக் கப்பிக்கொள்ளும்! சுற்றுச்சார்புகள் உருட்டு விழிகளைக் காட்டி மிரட்டிடும் என்பதையும் உதாசீனப்படுத்தி உதறித் தள்ளிவிட மாட்டேன், நான்!
சேவைப் பயணத்தை தொடங்கியுள்ள நல்லவர்களே! நீங்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ள ‘உலகம்’ எப்படிப் பட்டது என்பதும் நீங்கள் சந்திக்கப் போகும் விசித்திர நிகழ்ச்சிகள் யாவை என்பதுவும் எனக்குத் தெரிந்ததுதான்! தெரிந்துதான் அழைக்கின்றேன், திட நம்பிக்கையோடு, கடமையாற்றிட வாரீர் என்று!
கவர்ச்சிக்கும் கஷ்டத்திற்கும் இடையே...
எப்படிப்பட்ட உலகில், எத்தகு நிகழ்ச்சிகளையெல்லாம், நீவிர் காணப்போகின்றீர்கள் தெரியுமா?
உங்கள் தன்னம்பிக்கையைத் தகர்த்தெறிந்து தரை மட்டமாக்கிவிடக் கூடிய மந்த மதியினரைக் காண்பீர்கள் இந்த உலகில்—
மனத்தினில் உறுதி கொண்டு செயலாற்றிட முனைவீர்கள்! ஆனால் உங்கள் திடமனத்தையே அலைக்கழித்துக் குழப்பிடக்கூடிய நிலைமைகளைக் காண நேரிடும்!
பலகலைப் பயின்றதால், உமது உள்ளத்தில் ஆழப் பதிந்து வேரோடியுள்ள உயர்பண்புகள் அனைத்தும் எள்ளி நகையாடப்படும்! அதே நேரத்தில பண்பு என்பதற்கே நேர்மாறான நடையுடை பாவனைகளை, தானாவித நிகழ்ச்சிகளைத் தாராளமாகக் கடைப்பிடித்து வரும் குணக்கேடர், கோமான்களாய்க் கொலு வீற்றிருப்பதையும், சீமான்களாய் வீதி உலா வந்திடுவதையும் நீங்கள் கண்டிடத்தான் வேண்டிவரும்!
உழைக்காத சுயநலந்தேடிகளின் வேட்டைக் காடாக ஊர் விளங்குவதைக் காண்பீர்! அதுபோழ்தே உழைத்துழைத்து உருக்குலைந்திடும் உழைப்பாளி, உழைத்தும் போதிய பிழைப்பற்று, தனக்கு உரிய பங்கினையும் பெற்றிட முடியாமல்—சுயநலந் தேடிகள், சுகபோகிகள் அதனைத் தட்டிப்பறித்திடும் பரிதாபத்தையும் பார்க்க நேரிடும்!
கொடுங்கோலரின் கெடுபிடி, ஆணவக்காரர்களின் செல்வாக்கு, சுருங்கக் கூறுமிடத்து எல்லாவிதமான அடக்குமுறை தர்பார்களும் உமது சேவைக்குக் குறுக்கே நின்று தமது கண்களை அகல விரித்து, உருட்டி மிரட்டுவதைக் காண நேரிடும்! முன்னேற்றத்தினை நோக்கி எடுத்து வைத்திடும் ஒவ்வொரு காலடியின்போதும் பூசலும் போராட்டமும், சண்டையும் சச்சரவும் சூழ்ந்து கவ்விக்கொள்ளும், உமது கால்களைத் தட்டித் தடுமாறிடச் செய்திடும்; தள்ளாட வைத்துக் கீழே வீழ்த்திடவும் முனைந்திடும்!
பட்டதாரிகளே! உமது செயற்களம்—வாழ்க்கைப் பாதை கரடுமுரடானதுதான்! எத்தகைய மனவலிமையும் தன்னம்பிக்கையும் திடசித்தமும் படைத்த நல்லறம் விரும்பிகளையும் தளர்ந்திடச் செய்யும் சுற்றுச்சார்புகள் தாம் பெரிதும் உள்ளன! சேவைக்களத்தை விட்டுச் சுவையான சுகபோகிகளின் கூடாரத்தை நோக்கி மனதை ஈர்த்து இழுத்திடும் கவர்ச்சிகளும் சொல்லுந்தரத்தன்று!
கஷ்ட நஷ்டங்கள், தடைக் கற்கள் குறுக்கிடும் சேவைத்துறை ஓர்புறம். இந்த இரு வேறு நிலைகளுக்கிடையே தான் உமது பணி நடைபெற்றாகவேண்டும்; அதுவும் சிறக்க, மிகமிகச் சிறக்க நடைபெற்றுத் தீரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!
காக்கும் கரங்கள்!
ஒன்றை—என்றுமுள்ள ஓர் உண்மையினை நாமெல்லாம் எண்ணிப் பார்த்திடின், சேவை புரிந்திடச் சலிப்பு வராது; மாறாகச் சக்தி பிறந்திடும்; பெருகிடும் நம்மில்!
தொண்டுள்ளம் படைத்திட்ட நல்லோர் பலரின் சேவையினால்தான் உலகம்—நல்லவர்களின் உலகம் இன்றளவும் தொடர்ந்து நடைபோட்டு வருகின்றது என்பதை உணர்ந்திட வேண்டுகிறேன்!
ஊற்றுப் பெருக்கெடுத்து வற்றாது ஓடிடும் ஆற்று வெள்ளப் பெருக்கினைப் போன்று, அன்று தொட்டு இன்று வரை அல்லதை எதிர்த்து, நல்லதை நிலைநாட்டப் போராடி வந்துள்ள “பொது நலப் போர் வீரர்கள்” எத்துணை யெத்துணைப் பேர்! கணக்கிலடங்குமா?
சமுதாய நலம் பேணிப் பொது நலத்தினைக் காத்திடப் பெரும்போர் புரிந்தவர்களைத் தொடர்ந்து நாமும் சலியாது உழைப்போமாக! அப்போதுதான் நமது முன்னவர்கள், நல்லறத்தில் நாட்டங் கொண்ட நல்லவர்கள் காத்து அளித்துச் சென்றுள்ள சீரினை; செம்மைப்பாங்கினை, அருங்குணநலன்களைத் தொடர்ந்து காத்திட முடியும்; நம்மாலான அளவுக்கு நன்கு முயன்று மேலும் வளர்த்து வளப்படுத்தி வருங்காலக் குடிமக்களுக்கும் நிரம்ப விட்டுச் செல்லமுடியும்—செல்லவேண்டும் எனவும் விழைகிறேன்! சமுதாயத்தின் சீர்மையைக் காத்திடும் கரங்களாய் நீவீர் விளங்கிடவும் வேண்டுகிறேன்.
வாழப் புறப்படுங்கள்!
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என வாழ்ந்திட்ட மாண்புடைப் பெருமக்கள் மரபு நம்முடையது! ஈராயிரம் ஆண்டுகட்கும் முன்னரே இந்த உயர்பண்பு நம்மகத்தே—தமிழகத்தே ஊடுருவிப் பாய்ந்திருந்ததை இன்றும் உணரலாம்; இதனையே பழம்பெரும் சங்க நூலான புறநானூற்றில் காணலாம்.
“உண்டால் அம்ம இவ்வுலகம்
தமக்கென முயலா நோன்றாள்
.................................
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!”
வளமும் வண்மையும் பழமையும் பண்பும் படைத்திட்ட முன்னோர் வழிவந்தோர் நாம்; காணக்கிடைக்காத கருத்துக் கருவூலங்களைப் படைத்தவர் நம்மவர்! இத்தகு மேதகு பாரம்பரியச் சொத்து நம்மிடம் மிகவும் உண்டு.
நமது மரபுவழிப் பண்பாட்டுணர்வு நம்மிடம் ஆழப்பதிந்து அவ்வழி நடந்திட முனைந்திடுவோம்! நம்மால் தான் இருண்ட சூழ்நிலைகளைக் கிழித்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட முடியும்! தடைக்கற்களைத் துச்சமென மதித்துத் தொண்டுள்ளம் காட்டும் வழிநடப்போம்! சமுதாயத்திற்கான கடமையாற்றுவோம் என்ற தன்னம்பிக்கையோடு புறப்படுங்கள்; வாழப் புறப்படுங்கள்; உமது வாழ்வின் வளங்காணும் நேரத்துடன், சமுதாய நலன் கண்டிடும் நெஞ்சத்துடிப்பும், உமை விட்டு அகலாதிருக்கட்டும்! வெற்றி நமதே!
பேராற்றல் மிளிரட்டும்!
- “பொது நலம் புரிந்திடுவேன்” என்று புனிதப் பயணம் தொடங்கிடும் எவரும் ஒன்றைத் தமது கருத்தினில் இருத்திக் கொள்ளுதல் மிகமுக்கியம். பொது நலப் பயணத்தின்போது—பாதையின் குறுக்கே கற்கள் கொட்டிக் கிடப்பதைக் கண்டு மருளக் கூடாது; அதனை, நமக்காக மற்றவர்கள் அகற்றி நல்ல பாதையாகச் செப்பனிட்டுத் தந்திடுவர் என்று எதிர்பார்த்தல் கூடாது, அறவே! அதற்கு நேர்மாறாகப் பாதையில் மேலும் பற்பல தடைகள்—கற்கள் வீசப்படினும், அவற்றைப் பொறுமையோடு ஏற்றுத்தாங்கிடும் மனப்பாங்கினைக் கொண்டிடல் வேண்டும்.
“இலட்சியப் பயணத்தின்போது காணப்படும் தட்டுத்தடங்கல், குறுக்கீடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் தாங்கிப் பெறுகின்ற அனுபவம் சாமானியமானதல்ல! இத்தகு அனுபவத்தினால், தடைகளைத் தாங்கிடும் பயிற்சியினால் நமக்குள்ள ஆற்றல், அழுத்தம் திருத்தமாகி நமது வல்லமையும், வலிமையும் உரம்பெறும்; தடைகளைத் தகர்த்திடும் பேராற்றலாய் மலர்ந்து மிளிர்ந்திடும்; வெற்றிக்கான ஏறுநடை போட்டிடும் சக்தி பெருகிடும்” என்று ஆல்பர்ட் சுவிட்சைர் அறிவுறுத்தியுள்ளார் என்பதை ஒரு போழ்தும் மறந்திடலாகாது!
விந்தையும் வேதனையுமான கோளாறு
உலகில், மற்றை நாடுகளில் உள்ள பிரச்சினைகள் பலவும் ஒரே மாதிரியானவை. ஆனால் நமது நாட்டுப் பிரச்சினைகள் யாவும் வெவ்வேறானவை; முற்றிலும் மாறுபட்டவை; முரண்பட்டவை; விந்தையானவையுங்கூட!
நமது பிரச்சினைகள் பிறநாட்டுப் பிரச்சினைகளைப் போன்றவை அல்ல! பல்வகையும், பல்துறையும் சம்பந்தப்பட்ட தனித்தனிப் பிரச்சினையாக—புதிராகக் கூடக் காணப்படுபவை.
ஏதோ ஓர் துறையில், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் மட்டுமே ஏற்பட்டுள்ள கோளாறு, சிறு கீறல் அல்லது சிராய்ப்பு போன்றதும் அல்ல, நமது பிரச்சினை! அப்படிப்பட்டதாயின் பேரூக்கத்துடன், திறமையாகக் கவனித்துச் செப்பனிட்டுச் சீர்திருத்திவிடலாம், உறுதியாக உழைத்து! ஆனால் நமது பிரச்சினை அப்படிப்பட்டதல்லவே!
நமது பிரச்சினைகளே வேறு! விந்தையான கோளாறுகள்! வேதனையானவையுங்கூட!
அடிப்படையைத் தகர்த்திடும் அரிப்பு
சிறுகச் சிறுக அரித்து ஆற்றங்கரையே உடைந்துவிடும் போலாகிவிட்டது; கடல் நீர் ஊருக்குள்ளேயே புகுந்துவிடும், அரிப்பைத் தடுக்கத் தக்கது செய்திடாவிடின், என்பதெல்லாம் நாம் கேள்விப்படும் சொற்றொடர்கள்! என்ன பொருள் அதற்கு?
ஆற்றங்கரையின் மீது நீரலைகள் ஓயாமல் மோதி மோதிக் கரையைக் கணத்திற்குக் கணம் அரித்துக் கரைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதானே! மண் அரிப்பைத் தடுத்தாக வேண்டும்—தவிர்த்தாக வேண்டும்! இன்றேல் கரையே கரைந்துவிடும். கரை உடைபடுவது மட்டுமல்ல, வெள்ளப் பெருக்கெடுத்து ஊர் அழியும், வயல் வெளிகள் பாழ் நிலமாகிவிடும்! அத்துடனா? ஆற்றுநீர் வாய்க்கால் வழியோடி வயலுக்கு நீராகிச் செந்நெல் கதிர் விளைய உதவிடும் நல்வாய்ப்பில்லாமலுமன்றோ போய்விடும்! வீணாகிடும்!
சிறுகச் சிறுக ஆளையே விழுங்கிவிடும் நோய்! உடலின் சத்தான பகுதியைச் சிறுகச்சிறுக அரித்தே ஆளைச் சாகடித்து விடும் என்று சில நோய்களின் கொடூரத்தைக் குறிப்பிட்டுக் கூறுவர்.
பசுமையான மரமேயானாலும் ஆணிவேரைச் செல்லரித்தால்! மரம், பசுமைகுன்றிக் கெட்டுப் பட்டுப் போய்விடுமன்றோ?மண் அரிப்பு, உடலரிப்பு, செல்லரிப்பு போன்றதொரு நோய்—அரிப்பு நோய்க்குணம் படைத்திட்ட தன்மை—நிலைமைதான், நம்மை—நமது எண்ணத்தினை, சிந்தனைக் கருவூலத்தினை பீடித்துக் கிடக்கின்றது! நமது பிரச்சினையின் தன்மை இதுதான்! அடிப்படையைத் தகர்த்திடும் அரிப்பு!
தக்கன எவை, தகாதன யாவை?
விவசாயம் செய்திட வேண்டின் வயல்வெளிகள் தேவை முதலில்! வயல்வெளிகள் ஏராளம் உண்டு, நமக்கு! நிலத்தினைப் பண்படுத்தி சீராக உரமிட்டு, தேவையான நீர் பாய்ச்சிடின் நெற்கதிர் மணிகள் குலுங்கிடும்! உழைப்பு, தரமான பண்பட்ட உழைப்புதான் தேவை, நிலத்தினின்றும் நல் விளைச்சலைக் கண்டிட!
நிலமற்ற விவசாயியைப் போன்ற நிலை இல்லை நமக்கு, எண்ணக் கருவூலங்களைப் பொறுத்தமட்டில்! சிந்தனைச் சோலைகள் ஏராளம் நம்மிடம்! நல்ல எண்ணங்களை, எழிலான ஏடுகளை சிறப்பான சிந்தனையின் விளைவுகளைத் தேடி அலைந்திடும் பிரச்சினையில்லை நம்மைப் பொறுத்தவரையில்! ஆனால் நமது குறை என்ன, கோளாறுதான் யாது?
நல்ல எண்ணங்களும், எழிலான ஏடும், சிறப்பான சிந்தனையின் விளைவான நல்லுரைகளும் நம்மிடம் மிக அதிகந்தான்! ஆனால் உள்ளனவற்றைச் சரிவர, சீராக உணர்ந்து செம்மைப்படுத்திடும் பணிதான் மெத்தவும் தேவைப்படுகின்றது இன்று.
அடுக்கடுக்கான தத்துவங்கள்! மலை மலையெனக் குவிந்துள்ள ஏடுகள்! திரள்திரளான கருத்துக் குவியல்கள்! இவற்றை இனவாரியாகத் தரம்பிரித்திட வேண்டும்; வகைப்படுத்தி, முறைப்படுத்திப் பகுத்துத் தொடர்பாகத் தொகுத்திட வேண்டும்! தக்கன எவை, தகாதன யாவை? நன்மை எது, நச்சுக்கருத்தினர் நுழைத்தவை எவையெவை! என்று சரிபார்த்து, ஒப்பு நோக்கிச் சீர்மைப்படுத்திடும் பணியே இன்று நம் முன் உள்ள மாபெரும் பணியாகும்!
மறுமலர்ச்சிக் கட்டம்
வாழ்க்கை நெறியெனக் கடைப்பிடித்திட வேண்டிய நல்ல பண்பாடு நம்மிடம் உள்ளது. தேவையென்று தேடிடும் நிலைமையில்லை! காலத்தின் கோளாறினால் நமது பண்பாட்டின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்கிட வேண்டும்! தும்பு தூசு தட்டிப் பொலிவினை வெளிப்படுத்திட வேண்டும்! ஓட்டடைகளை அகற்றித் துப்புரவு செய்திடல் மெத்தவும் அவசியமாகும்; நமதல்லாத நச்சுக் கருத்துக்களைக் களைந்தெறிந்தாக வேண்டும்; கலப்படமற்ற பண்பாடாக மிளிரச் செய்தாக வேண்டும்.
சுருங்கக் கூறுமிடத்து நம்மை நாமே உணர்ந்தாக வேண்டும்! நாம் யார்? நமது பாரம்பரியம் என்ன? நமது கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, வாழும் நெறி எத்தன்மையது? என்று மறுபரிசீலனை செய்து தீரவேண்டிய நேரம் இது! நமது சிந்தனைச் சோலையைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்தி மறுமலர்ச்சி பூத்திடச் செய்திட வேண்டிய காலம் கட்டம்! இப்பெரும் பணியில் நீங்கள் உங்களை மனதார ஈடுபடுத்துக் கொண்டு பாடுபட வேண்டுகின்றேன்.
நமது வேலைச்சுமை!
உயர் எண்ணங்கள் மலர்ந்திடும் சோலை என வாழ்ந்த மரபினர் நாம்! கடமை வீரர்கள், கண்ணியத்தின் காவலர்கள், கட்டுப்பாட்டின் வழி நடப்பவர்கள்; நல்லன, நலன் பயப்பன அல்லாது வேறேதும் அறிந்திடோம் யாம்! என்று ஊர்மெச்சும் பெருமித வாழ்வு நடாத்தினர் நம்மனோர்! ஆனால்!நமது பெருமித வாழ்வில், உயர் எண்ணங்கள் மலர்ந்திடும் சோலையில், முட்புதர்களும் காளான்களும்—கரையான்களும் மண்டிவிட்டன! நமது சிந்தனை ஆழியில் நச்சுக்கிருமிகள் வேரூன்றிப் பரவிப் பல்கிப் பெருகிட இடமளித்து விட்டோம்! அதன் விளைவு என்ன?
நமது எண்ணச் சோலையில் கள்ளி காளான்களின் நச்சுக் கருத்து உலா வருகிறது! நச்சரவங்கள் படமெடுத்தாடுகின்றன! கரையான்கள் அடிமரத்தைச் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன! காற்றோட்டம் இல்லை! வெளிச்சம் புக முடியவில்லை! சோலையின் நன் மரங்களில் சில பட்டுப் போகின்றன! வாடி வதங்கிடும் நிலையில் சில! அருஞ்செடிகள் அழுகிடும் நிலையில்! உலவிட முடியாத சூழ்நிலையன்றோ உருவாகியுள்ளது, நம்மரும் எண்ணச் சோலைதன்னில்!
இருட்குகையெனக் காட்சியளித்திடும் சிந்தனைப் பூங்காவில்—எண்ணச் சோலையில் காய்கதிரவனின் ஒளிக்கதிர்கள் பாய்ந்திட வழிவகை காண்போம்; அறிவுச்சுடர் கொளுத்தி அறியாமை இருளினை அகற்றிடுவோம்!
கள்ளி, காளான்களைக் களைந்தெறிந்து, மண்டிக் கிடக்கும் முட்புதர்களை வெட்டி வீழ்த்தித் தோட்டத்தைத் துப்புரவு செய்வோம்—தடைபட்டுக் கிடந்திடும் தென்றல் காற்று உட்புகுந்து வீசட்டும்! துர்நாற்றம் தூர விலகட்டும், பட்ட மரம் துளிர்க்கட்டும், பசுமை கொழிக்கட்டும்! பாழ்மண்டபமாக உலவிடவும் முடியாத சோலை, மீண்டும் எழிற் பூங்காவாகத் திகழட்டும்! உயர் எண்ணங்கள் மலர்ந்து மலிந்திடட்டும்!
புதிய எண்ணங்கள், புத்தம் புது ஆராய்ச்சிகள், கால வேகத்தையொட்டி ஏற்பட்டுள்ள கருத்து மாற்றங்கள் நமது சிந்தனைப் பூங்காவினுள் தென்றலென வீசித் தெளிவும் தெம்பும் பிறந்திட வழியமைப்போம். வாரீர்! வாரீர்! இதுவே நமது வேலை, வேலைச்சுமை என்பேன்!
புகழ்பூத்த பொற்காலம்
நம்மவர் வாழ்ந்த விதம் காண்போம்! அவ்விதம் நாமும் வாழ்வோம்! அதற்குத் தடையாக உள்ளவற்றைத் தகர்த்தெறிவோம்; நம்மை உணர்வோம்! உண்மை உருவினைத் தெரிந்து தெளிவோம்! அப்பெருமித வாழ்வினை மீண்டும் படைத்திடுவோம்! திடநோக்குடன் பாடுபடுவோம் என்று உங்களை அழைக்கின்றேன்.
தூரதூர தேசங்களிலெல்லாம் பல்வேறு தட்பவெட்பங்கள் படைத்திட்ட பெரும் பெரும் நிலப்பரப்புகளெங்கினும் புகழ்க்கொடி நாட்டிப் பரப்பிய, புகழ் பூத்த பொற்காலம் கண்ணெதிரே தெரிகின்றது! நமது மரபு வழிப் பொற்காலம் காண்போம்! வாரீர்!
நற்பேரிலக்கியங்கள்! அரும்பெரும் நுண்கலைகள்! சிந்தையைக் குளிர்வித்திடும் சிற்ப நுட்பங்கள், கட்டிடக் கலைகள்! மானுட உலகினுக்கே வழிகாட்டிடும் வாழ்வொழுக்க விதிகள்— நெறிகள்—நியதிகள் மலர்ந்து மலிந்த நாடு, நமது நாடு!
இன்று, இவையெல்லாம் காலவெள்ளத்தால் சிதறுண்டு கிடக்கின்றன! சூறைக்காற்றில் சிக்குண்டு சீரழிந்து காணப்படுகின்றன! வேறு சில, காலப் பெருஞ் சுழலில் தத்தளித்தபடி உள்ளன! போதிய கவனிப்பும். கண்காணிப்பும் அற்ற காரணத்தால் தூசுதும்பு படிந்து அழுக்குத் தழும்பேறித் தடித்துக் கிடக்கும் கருத்துக்களும் உள்ளன!
எனவேதான், நமது பண்டைய வாழ்வுப் பெருமைகளையும், பண்பாட்டு மரபுகளையும், அரசு முறைகளையும் பற்றி நமக்குத் தெரியக் காணோம்! நம்மைப் பற்றிய வரலாற்று விபரங்களை வெளிநாட்டுச் சரித்திராசியர்களிடம் கற்றுக் கேட்டிடும் அவலநிலையில் உள்ளோம்! இதிலிருந்து நாம் மீளவேண்டாமா? எப்போது?
தொய்வும் தேக்கமும் நீங்கிட!
முதுமைக்கு-வயதின் முதிர்ச்சிக்கு-காலத்தின் பழமைக்கு தக்க மதிப்பும் உரிய மரியாதையும் அளித்தே தீரவேண்டும். காலத்திற்கு வணக்கம் செலுத்திடும் பண்பு நல்ல மரபுமாகும்.
நமது காலத்தின் பழமைப் பண்பு குறித்து, அந்த நாள் நல்வாழ்வு குறித்து நாம் பெருமையும் பெருமிதமும் அடைந்திடுகின்றோம்! அத்துடன் சரி! கால வேகத்தால், வயதின் முதிர்ச்சியால் வலிமை குன்றி, உடல் தளர்ச்சியுற்று, கவர்ச்சி குன்றிடும் அளவுக்கு வடுக்களும் சுருக்கங்களும், தொய்வும் தேக்கமும் ஏற்பட்டிருப்பதை காண்கிறோமே! இழந்த வலிமை மீண்டிட மார்க்கந்தேடிட வேண்டும்; மங்கிய புகழ் மீண்டு, ஒளிபரப்பிட வேண்டும் அல்லவா?
காலத்தின் பழமையால் ஏற்பட்டுள்ள தொய்வையும் தேக்கத்தையும் மாற்றிடும் பெரும்பணியே இன்று நம்முன் உள்ளது!
நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் மீண்டும் வானுற ஓங்கி உயர்த்திக் காட்டிடுவோம்! பிறநாட்டு நல்லறிஞர்கள் காட்டிய வழிமுறைகளையும் நெறிகளையும், தேவையான அளவுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் முன்மாதிரியாகக் கொண்டிடத் தயங்கிடவே வேண்டாம்! நமது பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் புத்துணர்ச்சியூட்டிடுவோம்! புதுப்பொலிவு பூத்திடச் செய்திடுவோம்!
சீரிளமைத்திறம் காப்போம்!
வாழ்வின் எந்த ஒரு துறையிலும், சிறப்பாக நமக்கெனத் தனியொரு முறையும், வகையும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான சான்றுகள் இன்றும் உள்ளன. காலத்தாலும் அழியாச் செல்வங்கள் அவை!
அழியாச் செல்வங்களானாலும் அவற்றைச் சீரிளமைத் திறம் மிக்க செல்வங்களாகப் பாதுகாத்து வந்தோமில்லை. பசுமை குன்றாது, உரமிட்டு அன்றாடம் அறிவு நீர் பாய்ச்சிடத் தவறிவிட்டோம். ஆய்ந்தாய்ந்து மெருகேற்றாது துருப்பிடித்துக் கிடக்குமாறு செய்திருக்கின்றோம். செல்வங்களைப் பயன்படுத்தாது தேங்கச் செய்து, நமது ஊக்கத்தைக் குறைத்து, உழைப்பின் தீவிரத்தை மட்டுப்படுத்தி விட்டிருக்கின்றோம். இதன் விளைவாக நமது நற்பண்புகள் சிதைந்து, சீரிளமைத் திறம்கெட்டு முதுமைக் கோடுகளுடன் கவர்ச்சியற்றுக் காணப்படுகின்றனவே!
கவலையற்ற, கவனிப்புமற்ற இப்போக்கு, இனியாவது மாறவேண்டாமா? இன்றே, நன்றாக மாற்றிக் கொண்டாக வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றேன்!
குன்றாத இளமையின் வனப்பையும் வல்லமையையும் படைத்ததாகவே எந்த ஒரு வாழ்க்கை நெறியும், வாழ்ந்திடும் முறைமையும் இருந்திடல் வேண்டும். அதுமட்டுமல்ல, காலமாறுதலுடன் ஒட்டி உறவாடி காலத்திற்கேற்ற கருத்து மாறுதல்களையும் ஏற்றுப் போற்றிடத் தயங்கிடவும் கூடாது! இத்தகு தன்மைதான்—வாழ்க்கை நெறிதான்—வாழ்ந்திடும் முறைமைதான் நெடிது நிலைத்து நிற்கும்—நற்பயனுடையதாக விளங்கும்—விளங்கவும் முடியும்!
இக்கருத்தினை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பதை மறத்தல் கூடாது.
நெகிழ்ந்திடும் உளப்பாங்கு!
இளமைப் பருவம் இருக்கின்றதே அதைப் போன்றதொரு பக்குவமான பருவம் வேறேதும் இல்லையென்றிடலாம்! படிப்பது—படித்தது குறித்து ஆய்ந்தறிந்திடுவது, கேட்பது—கேட்பனவற்றைத் துருவித்துருவிப் பார்த்துத் தெளிந்திடுவது என்பதெல்லாம் இளமைப் பருவத்தில்தான் மெத்தவும், மிடுக்குடன் நடந்திடும்!
அறிவுத்தாகம், சிந்தனைப் பசி! இளைஞரிடந்தானே மிகத் தீவிரம்? பரந்து விரிந்த, கள்ளங்கபடற்ற திறந்த மனப்போக்கு இளமைப் பருவத்தின் இருப்பிடமாயிற்றே!
வளையும், நெளியும், துவளும், எப்படியும் அசைத்திட இடங்கொடுத்திடும்—ஆனால் உடைந்திடாது, ரப்பர், அதுபோல் எக்கருத்திற்கும் ஏற்ப நெகிழ்ந்து கொடுத்திடும் உளப்பாங்கு இளமைக் காலத்தில் மட்டுமே பெரிதும் காணக்கூடியதல்லவா!
முனைப்பான துணிபுத்திறன்
எதையும் தாங்கும் இதயம் உள்ளோராய்ப் பக்குவம் பெற்றிட இளமைதான் ஏற்றது! எதையும் கண்டுணர்ந்து, சிந்தித்துச் செயலாற்றிடும் துணிபுத்திறன் அக்காலத்தில்தானே முனைப்புடன் காணப்படும்!
எனவேதான் டாக்டர் இராதாகிருஷ்ணன், வாழ்க்கை நெறி—வாழ்ந்திடும் முறைமை என்பது “குன்றாத இளமையின் வனப்பையும் வல்லமையையும் எக்கருத்துக்கும் ஏற்ப நெகிழ்ந்து கொடுத்திடும் உளப்பாங்கினையும் பெற்றதாகவே இருந்திடல் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். நமது நெறியும் முறைமையும் இத்தன்மையானது தானா? எண்ணிப்பாருங்கள்!
சாகாத வரம் பெற்ற மானிடன்
ஈவோஸ் என்றொரு பெண் தெய்வம். மானிடன் ஒருவனைக் கண்டது; காதலித்தது! எனது காதலன் மானிடனாயிற்றே! மாளுந்தன்மை படைத்த பிறப்பல்லவா மானிடப் பிறவி! மாளாத தன்மை படைத்த—சாகாத வரம் பெற்றவள் நான். ஆனால் எனது காதலன் மாளும் நிலை ஏற்படின்...? இப்படி எண்ணிற்று! ஏங்கிற்று—கலக்கமுற்றது, ஈவோஸ் என்ற அப்பெண் தெய்வம்!
“ஆண்டவனே! எனக்குச் சாகாத வரம் கொடுத்தாய்! மெத்த நன்றி! எனது காதலனுக்கும் மாளுந்தன்மையிலிருந்து விடுதலை தாருங்கள்! சாகாத வரம் தந்திடுங்கள்!” என்று இறைவனை ஏற்றிப் போற்றித் தொழுதது, அப்பெண் தெய்வம்!
ஆண்டவன் அருள்பாலித்தார்! பெண் தெய்வத்தின் முறையீட்டுக்கு இரங்கினார். “தந்தோம், சாகாத வரம் உன் காதலனாகிய மானிடனுக்கு!” என்றார் இறைவன்!
தெய்வத்தின் அருள் பெற்றான், மாளுந்தன்மையிலிருந்து மீண்டான் அந்தக் காதலன்—மானிடன்! பெண் தெய்வத்திற்குப் பரமதிருப்தி!
ஏக்கப் பெருமூச்சு!
காலம் கடுகியோடியது—ஆண்டுகள் பல உருண்டோடின! மானிடக் காதலன் சாகவில்லை! ஆனால் காலம் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது! முதுமை மேலிட்டது! காலக்கோடுகள் மானிடனின் உருவில் ஆழப்பதிந்தன—உருவினை மாற்றின!
மூப்பு வயப்பட்டான் காதலன்! நரை விழுந்தது! நாடி, நரம்பு தளர்ந்தது! பிணி மேலிட்டது! உடல் உரமிழந்தான். தள்ளாடி நடக்கலுற்றான்! கண்கள் ஒளியிழந்தன. தேய்ந்து உருக்குலைந்த ஓவியமானான் அந்தச் சாகாத வரம் பெற்ற மானிடன்—பெண் தெய்வத்தின் காதலன்!காண்போரின் கண்களுக்கோர் நல்விருந்தாய் காட்சிக்கு இனியனாய் அழகின் மொத்த வார்ப்படத்தின் எழிலுருவாய் விளங்கினான் அந்த மானிடன், முன்பு.
எந்த அழகுருவங்கண்டு, ஈவோஸ்—தெய்வப் பிறவியேயானாலும் காதலித்தாளோ—அந்த அழகு மானிடன் இன்று கண்டோரெல்லாம் வெறுத்தொதுங்கி விலகியோடிடச் செய்திடும் அளவுக்கு அழகிழந்தான் வலுவிழந்தான்—பொலிவிழந்தான்! பார்க்கொணாத கோரக் காட்சியானான்!
வளமெலாம் குன்றி, வனப்பெலாம் மறைந்து, வலுவெலாம் வறண்டு, வாழ்வதைவிடச் செத்தொழிந்தால் போதும்; சாகாத வரம் வேண்டேன் என்று சாவினை வேண்டி நொந்து நைந்து கிடந்தான், அந்தச் சாகவே முடியாத மானிடன்! பயங்கரமான பரிதாபக் காட்சி!
“காதலன் மாளக்கூடாது என்று சாகாதவரம் கேட்டேன். மாளும் தன்மை படைத்த மானிடனைச் சாகாதவனாக்கி விட்டேன்! என்ன பயன்?”
“சாகாத வரத்தைவிட ‘குன்றாத இளமை’ வேண்டும் என்று வரம் பெற்றிருக்க வேண்டும்! என்னே! என் பின் புத்தி!” என்று ஈவோஸ்—பெண் தெய்வம் ஏக்கப் பெருமூச்சு விட்டது!
எண்ணங்கள், ஏற்பாட்டில் துப்புரவு!
குன்றாத இளமை வரம் கேட்காது சாகாதவரம் கேட்டு ஏக்கப் பெருமூச்சுவிட்ட ஈவோஸ் பெண் தெய்வத்தின் நிலையில்தான்—ஏறத்தாழ அந்த பரிதாபச் சூழ்நிலையில் தான் நாம் இன்று வாழ்ந்து வரும் நாடும் ஏடும், நிலையும் நினைப்பும், நடப்பும் நடைமுறையும் உளது எனக் கருதிட வேண்டியுள்ளது.நமது அழியாச் செல்வங்களான பண்பாடும் நாகரிகமும் காலத்தில் மூத்தவை! பழம் பெருமை படைத்திட்டவை! ஆனால், அவையெல்லாம் நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டபடி இளமை குன்றி, மூப்பு மேலிட்டு, வடுக்களும் சுருக்கங்களும் விழுந்து, நைந்து தொய்ந்த தேக்க நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு இளமை உரமிட்டு மீண்டும் கருத்துரம் பெற்றிடச் செய்திடல் வேண்டும். காலத்திற்கேற்ற புத்துணர்ச்சியும் புதுப் பொலிவும் ஊட்டுதல் வேண்டும்.
நமது சிந்தனைப்பூங்காவினை—எண்ணச் சோலையை புத்தம் புதியதாய்த் திருத்தியமைத்திடல் வேண்டும். பல்வண்ண மலரும், வாசம் வீசிடும் பூஞ்செடிகளும் கொடிகளும், முக்கனிச் சுவை தந்திடும் பல்வகை மரங்களும் சோலை தன்னில் பூத்துக் குலுங்கிடச் செய்தாகவேண்டும். இப்பெரும் பணி நம்மை நோக்கிக் காத்துக்கிடக்கின்றது.
காலத்தால் பழமை மெருகேறித் தும்பும் தூசியும் படர்ந்து, மாசுகள் மலிந்து கிடக்கும் தமது எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் துப்புரவு செய்தாகவேண்டும்!
தும்பு தூசிகளைத் தட்டித் துடைத்து, மாசுகளை அகற்றி, புதுச்சுண்ணப் பூச்சு எனத்தகு புதிய கருத்துக்களை, நமது எண்ணங்களிலும் ஏற்பாடுகளிலும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
பயன்படாக் காலம்!
துப்புரவு வேலையிலும், புத்தம் புதுக் கருத்தூட்டிச் சமுதாயத்திற்கு மெருகு ஊட்டிடும் காரியத்திலும் ஈடுபட வேண்டிய நாம் என்ன செய்து வந்தோம்! வருகிறோம்! செய்யப் போகின்றோம்!துப்புரவுக்குப் பதிலாக உருக்குலைந்த ஓவியத்தின் மீது, அங்கொன்றும் இங்கொன்றும் கோடிட்டுப் புள்ளி வைத்துவிட்டு “ஓவியம் உருக்குலையவே இல்லை” என ஓங்கி அறைந்து பேசி வாதிடும் போக்கினைக் கொண்டுள்ளோம். பழைய எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் துப்புரவு செய்ய மறுக்கிறோம்; மாறாகத் தும்பு தூசுகளுக்குப் புது விளக்கம் தந்து மறைக்கப் பார்க்கிறோம். வாதங்களுக்கு மறுப்புரைப்பதிலேயே நமது காலம் கழிகிறது, பயன் ஏதுமின்றி;
பூரிப்பு மட்டும் போதுமா?
பழம்பெருமையை மட்டுமே பேசிப் பேசிப் பொழுதினை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைதான் இன்று நம்மிடையே பெரிதும் காணப்பட்டு வருகிறது.
ஆனால், இதே நேரத்தில் உலகின் பல்வேறு நாட்டவரும் புதுப் புதுத் தத்துவங்களையும்; பயனுறு எண்ணங்களையும் தேடித் தேடித் துருவித் துருவி ஆராய்த்து, கண்டு தெளிவு பெற்ற வண்ணம் உள்ளனர், பழமையையும் புதுமையையும் இணைத்து மெருகேற்றிப் புதிய வாழ்வு—வளமெலாம் பெற்ற வாழ்வின் உச்சத்தை எட்டிப் பிடித்திடும் அளவுக்கு வேகவேகமான நடைபோட்ட வண்ணம் உள்ளனர்.
“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மூதுரை, எண்ணத் தெளிவிற்கும், நல்வாழ்வுச் சாதனைக்கான வழிவகைகளை ஆயந்து அறிந்திடும் அறிவுப் பசிக்கும் பொருந்தாது, பொருத்தமற்றது என்பதனைப் பிற நாட்டார் விடாப்பிடியாகக் கொண்டுள்ளனர். புதியன—மேலும் புதியன—மென்மேலும் புதியன என்று பொறுமையோடும், பொறுப்போடும் விடாது முயன்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர்.“பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற அருங்கருத்து, புத்தறிவுக்குத் தூண்டுகோலாகிடும் நற்கருத்து நம்மிடம் உண்டு, நீண்ட நெடுங்காலந்தொட்டே! ஆயினும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தோமா? இல்லையே!
ஆனால் உலகோர், இம்முதுமொழியைப் பொன்னேபோல் போற்றுகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் அங்கங்கெல்லாம் நித்தம் நித்தம் தீவிரமாகி வருகின்றன. நாமோ, நம்மிடம் அந்தக் கருத்து ‘அன்றிலிருந்தே’ உண்டு என்று பெருமைப்பட்டுக் கொள்வதோடு நின்று விடுகிறோம்; பூரிப்படைவதோடு வேலை முடிந்து விடுகிறது! அந்தப் பூரிப்பு மட்டும் போதுமா?
சீர்கேடுற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள்
புதியன புகுதலுக்கு இடந்தந்தோமில்லை; பழையன கழிதலுக்கும் ஒப்பிட மனமற்றவர்களாகத்தானே காணப்படுகிறோம்!
படித்தவன் பழங்கணக்குப் பார்த்துப் பார்த்துப் பூரித்தான் என்பதுபோல, இடிந்த கோட்டை கொத்தளங்கள், கூடகோபுரங்கள், மாடமாளிகைகளைக் கண்டு களித்திடுகிறோம்! அவற்றின் ஓரத்திலமர்ந்து பழங்கதை—பழம் பெருமை பேசி நமது புலமையைக் காட்டிக் கொள்கிறோம்! இது மட்டுமே போதுமா?
நமதென்று கூறப்படும் மதம், மார்க்கம், நமக்கென்று வாய்த்துள்ள சமயம், சன்மார்க்கம்; நம்மிடையே உலாவரும் உபதேசங்களும் ஒழுக்கமுறைகளும் வாழ்க்கை நெறியிலிருந்து மாறி, முன்னைப் பழமைப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் சீர்கேடு அடைந்துள்ளனவே! அவையெல்லாம் இன்று வெறும் சம்பிரதாயங்கள்—சடங்குகள் என்றாகிவிட்டிருக்கின்றனவே! நன்றா இது?
சாதி சமய பேதமற்று, மேல் கீழ் என்ற வர்க்கபேதமற்ற சமுதாயமாகத் திகழ்ந்தவர்கள் நாம்—இது நமது பழம் பெருமைகளில் ஒன்று! ஆனால் இன்று?
நமது சமுதாயத்தில் சாதி சமய மத, இன வேறுபாடுகள் மலிந்துள்ளனவே! வர்க்க பேதம் கொடிகட்டிப் பறக்கின்றதா இல்லையா!
இப்பேதங்களையும் பிரிவுகளையும் பிளவுகளையும் பூசல்களையும் கட்டிக்காத்துப் பாதுகாத்துப் போற்றி வளர்த்திடும் கூடாரமாக, இரும்புத் திரை போட்டுத் தடுத்துள்ள தனிக் கொட்டடியாகவன்றோ நமது சமுதாயம் காணப்படுகிறது, மாறிவிட்டிருக்கிறது! இது மட்டுமா!
"கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகட்டும்" என்ற பழம்பாடலை நெஞ்சுருகப் பாடி மெய்சிலிர்த்துக் களிபேருவகையடைகிறோம்! அதே நேரத்தில் நம் கண்களிலே இன்றும் தட்டுப்படும் காலத்திற்கு ஒவ்வாத கண்மூடிப் பழக்கங்களைக் கண்டிப்பதில்லை! நேர்மாறாகக் கண்டும் காணாததுபோலக் கவலையற்று—வாய்மூடி மௌனிகளாகக் கிடக்கிறோம்! நல்லதா?
மூட நம்பிக்கைகளுக்கும், சாரமற்ற சடங்குகளுக்கும் புதுப் புது விமர்சனம் செய்து பாதுகாக்க முற்படுவதில் சிறிதும் சளைத்தோமில்லை! இது சரியா?
சுடுசொல் வீசிடும் வல்லமை!
சத்தற்ற, சாரமற்ற, தேவையுமற்ற எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் பயனற்ற முறைகளையும் நெறிகளையும் வாழ்வினைப் பாழ்படுத்திடும் போதனைகளையும் “தீதானவை, தேவையற்றவை” என்று சுட்டிக் காட்டிடுவோர் மீது சுடுசொல் வீசிடுவதில் மட்டும் மிக மிக வல்லவர்களாகி விடுகிறோம்!
எனினும், சமுதாயத்தைச் செல்லரித்துச் சீர்கெட வைத்திடும் எண்ணங்களையும், ஏற்பாடுகளையும்—அவற்றால் ஏற்பட்டிடும் கோரக்கொடுமைகளையும், ஆணவத் திமிர்த் தாண்டவங்களையுங் கண்டு மனங்குமுறிக் கொந்தளித்துக் கொதிப்படைந்தோர் சிலரேனும் தோன்றித்தான் வருகின்றனர். இச்சமுதாயக் கொடுமைகளைக் களைந்தெறியப் புறப்படத்தான் செய்கின்றனர் அவ்வப்போது!
சமுதாயக் கொடுமைகளைக் களைந்தெறிந்திட முனைந்திடும் சிந்தனைச் சிற்பிகள், சமுதாயத்தின் அறங்காவலர்கள், ஊருக்கு உழைத்திடும் உரமிக்க மாவீரர்கள், உலகைத் திருத்திடும் உத்தமர்கள், பகுத்தறிவுப் பாசறையின் முன்னோடிகள் நமது நாட்டிலும் இல்லாமல் இல்லை! இருந்திடத்தான் காண்கிறோம்!
சமுதாயத்தினில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளினை அகற்றி, அறிவுச்சுடர் கொளுத்திடும் அறிவியல் வாதிகளை ஊரும் உலகமும் உரத்த குரலில் இழித்தும் பழித்தும் பேசிடக் காண்கிறோம்!
தூர்த்தன், துன்மார்க்கன், சாத்திரத்தை—சன்மார்க்கத்தைக் கெடுத்திட வந்த குணக்கேடன், ஆசார அனுஷ்டானங்களை அழித்திட முனையும் அசடன், கசடன், கபோதி, கயவன் என்றெல்லாம் அறிவின் தூதுவர்களை அர்ச்சித்து வரும் போக்கு மாறிடவே இல்லையே!
புண் ஆறிடுமா? பொலிவு மீண்டிடுமா?
மனிதன் மனிதனாக வாழவேண்டும், சூது மதியும் சுரண்டலும் அறவே அகன்றிடல் வேண்டும் என்று மனித தர்மத்தைக் காத்திடத் தமது வாழ்வினையே அர்ப்பணித்துப் பாடுபட்டு வரும் “பொதுநலப் போர் வீரர்கள்” மீது வீசப்படும் கண்டனக் கணைகள் சொல்லுந்தரமன்று!
போச்சு! போச்சு! எல்லாம் பாழாய்ப்போச்சு! தர்மம் கெட்டு அலைகிறது! அதர்மம் தலைதூக்கி ஆடுகிறது! நாத்திகர் கொட்டம் பெருத்துப்போச்சு! என்றும் புத்தறிவுவாதிகளைப் பற்றிப் புரளி, பெரிதாகக் கிளப்பிவிடப்படுகிறதே!
அல்லதை அகற்றி நல்லது செய்திடுவோம் என்பதைச் சமய எதிர்ப்பு, சாஸ்திர விரோதம், சழக்கர்தம் பேச்சு எனத் திரித்துக்கூறித் தூற்றிடும் துடிப்பும் முனைப்பும் கண்டு எந்த நல்லறிவாளனும் நடுங்கிடவே மாட்டான்! மாறாக நல்வழிப் பாதையில் ஏறுநடை போட்டு முன்னேறிடத்தான் செய்வான், மேலும் முனைப்புடன்!
புண்ணுக்குப் புனுகு பூசி மறைப்பதுபோல, சத்தும் சாரமுமற்ற எண்ணங்களையும், ஏற்பாடுகளையும் புலமைப் பூச்சினால், வைதிக வேதாந்தப் பிரவசனத்தால் பூசி மெழுகினால் மட்டும் போதுமா? புண் ஆறிடுமா? புதுமை பூத்திடுமா? பொலிவு மீண்டிடுமா? எண்ணிப் பாருங்கள்!
அறிவுத் தந்தை! ஆற்றல் மறவன்!
எத்தகு புனுகுப்பூச்சுப் பேச்சுப் போக்கினாலும் சமுதாயக் கொடுமைகளை மறைத்திட முடியாது மக்களிடம்—சாமானிய மக்களிடம் புத்தறிவு மங்கிடாது. மேலும் வேக வேகமாகப் பரவித் தீரும் என்பது உறுதி!
சமுதாயச் சீர்திருத்தம்—எண்ணப் புரட்சி நோக்கித் தமிழர் சமுதாயத்தின் ஒரு பகுதியினர்—கணிசமான பகுதியினர் நடைபோடத் தொடங்கி விட்டனர்! எண்ணப் புரட்சி மூண்டு விட்டது! எங்கும் எழுச்சி! மறுமலர்ச்சி!ஆண்டாண்டு காலமாகச் சமுதாயத்தின் அடிமட்டத்திலேயே அழுத்தி வைக்கப்பட்டு, அறியாமையின் பிடியில் சிக்கிச் சீரழிந்திடும் மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர், செயலாற்றப் புறப்பட்டும் விட்டனர்!
தமக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்குக் காரணமான எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் அலசிப் பார்க்கத் துணிந்து விட்டிருக்கின்றனர்!
சமுதாயக் கொடுமைகளில் சிக்கிச் சீரழிந்து, செயல் திறம் குலைக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் தெளிவு பெறத் தொடங்கிவிட்டனர்! கொடுமை கண்டு குமுறுகின்றனர்! அறியாமையைக் களைந்தெறிய, அக்கிரமத்தை வேரோடு சாய்த்திடக் கொதித்தெழுந்தபடி உள்ளனர்!
வாயில்லாப் பூச்சிகள் என வர்ணிக்கப்பட்டோர், இன்று வேத வேதாந்தக் கருத்துக்களையும் ஆய்ந்தலசிச் சொற்போர் நடாத்திடும் சொல்லேருழவர்களாக மாறி வருகின்றனர்! அறப்போர் மூள்கிறது; அறிவுப் போர் முரசம் ஒலிக்கிறது, எங்கணும்!
ஏழை எளியவர்களின் எண்ணத்தின், எழுச்சியின் சின்னமாக, சமுதாயக் கொடுமைதனை அறவே களைந்திடத் துடித்திடும் தூயவர்களின் தூதுவனாக, அறிவுப்போர் முரசம் கொட்டிடும் பாசறையின் அறிவுத் தந்தையாக—ஆற்றல் மறவனாக, சிந்தனைச் சிற்பியாகப் பெரியார் இராமசாமி இன்று நம்மிடையே செயலாற்றி வருகிறார் என்பதை உணர்ந்து நடந்திட வேண்டுகின்றேன்!
ஆபத்தையும் அரவணைத்து...
எண்ணங்களும் ஏற்பாடுகளும் சமுகாயத்தைச் செல்லரித்துச் சீரழித்திடுவகைத் தடுத்திடாமல், அதே நேரத்தில் எண்ணப் புரட்சி பூத்திடும் சூழ்நிலையைத் தகர்த்திட எதிர்ப்புரட்சி செய்திட முனைவதும், அறிவின் தூதர் களை இழித்தும் பழித்தும் தூற்றிடுவதும் எந்த ஒரு சமுதாயத்திற்கும் நல்லதல்ல, நன்மையும் தந்திடாது! அதற்கு நேர்மாறாக அந்தச் சமுதாயத்தினை அழிவுக் கருத்துக்கள் மேலும் மிக அதிகமாகக் கப்பிச் செல்லரித்துச் சிதைத்துச் சீர்கெட வைத்திடும் என்பது உறுதி! பட்டதாரிகள் அனைவரும் இதனை உணர்ந்து நடந்திட வேண்டுகிறேன்! எண்ணப் புரட்சிக்கு எதிரான எதிர்ப் புரட்சியைத் தடுத்திடுவீர்! தகர்த்திடுவீர்!
விரிவான அறிவையும் விளக்கமான தெளிவையும் சீரான பேராற்றலையும் ஒருசேர ஊட்டிடும் கருத்தரங்கமாகப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டிட வேண்டும்.
சமுதாயச் சீரமைப்பு என்பது நீண்ட நெடுங்காலமாகக் கவனிக்கப்படாத துறையாகிவிட்டிருக்கிறது. இது குறித்துப் பட்டதாரிகள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும். சமுதாய மறுமலர்ச்சியின் தூதுவர்களாகப் பட்டதாரிகள் அனைவரும் வாழ்ந்திட வேண்டுகின்றேன்.
பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற நும்போன்ற நுண்ணறிவு மேதைகளைத்தான் நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது! முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டிகளாக, கஷ்டநஷ்டங்களைத் தாங்கிடும் முன்னோடிகளாக தேவைப்படின் எந்தவிதமான ஆபத்தினையும் விரும்பியேற்று அரவணைத்துக் கொண்டிடும் தியாக சீலர்களாகவும் நீவிரெல்லாம் பணியாற்றிட வேண்டுகிறேன்.
புனிதப் போர் நடாத்திடுவீர்!
சாதி பேதங்களைச் சாடுங்கள்—அவை ஜனநாயக மரபுகளுக்குச் சற்றேனும் பொருத்தமற்றவை என்பதால்!
மூட நம்பிக்கைகள் அனைத்தையும் மண்மூடிப்போகச் செய்யுங்கள்—அவை விஞ்ஞான யுகத்திற்குக் கிஞ்சிற்றும் ஒவ்வாதன என்பதால்!ஆணவம், அகங்காரம், அதிகாரச் செல்வாக்கு, செல்வச் செருக்கு ஆகியவை எந்த உருவத்தில் ஆதிக்கம் செலுத்தத் தலைதூக்கினாலும், அந்த ஆதிக்கக் கொடுமையை, அடக்குமுறைப் பிடியினை அடியோடு முறித்தெறியுங்கள்—சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சமரசக் கருத்தூட்ட வாழ்விற்கு, ஆதிக்கவுணர்வு பேரெதிரி என்பதால்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளே! உங்களையெல்லாம் அறைகூவி அழைக்கிறேன்! சாதி பேதம், மூட நம்பிக்கை, ஆதிக்கக் கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கெதிரான போர் தொடுத்திட அழைக்கிறேன்! அறிவுப் போர்—பொதுநலப் போர்—சமுதாயத்தைச் செம்மைப்படுத்திடும் புனிதப்போர் நடத்திட முன் வருவீர்! ஏறுநடை போட்டிடுவீர், முனைப்புடனே!
அவமதிப்பு அல்ல, நச்சரவுக் களையெடுப்பு!
பட்டம் பெற்று, வாழ்வினைத் தொடங்கிடும் நீவிரெல்லாம் பல்வேறு தொழில்களில், வாணிபத்தில், நிர்வாகத் துறையில் ஈடுபடலாம்! வாழ்க்கைக்கான வளமும் நலனும் பொருளின்றிக் கிட்டிடாது! உமது வாழ்வின் ஏற்றத்திற்கும், குடும்ப நலன்களிலும் கவனம் செலுத்திடும் போழ்தே சமுதாயக் கடமைக்கான எண்ணமும், எழுச்சியும், செயலும் உம்மை விட்டகலவே கூடாது என்பதனை மீண்டும் நினைவுறுத்துகின்றேன்.
பகுத்தறிவுச் சுடர்தனை ஏந்தி நடந்திடும் வழிகாட்டிகளாய், அறிவின் ஒளிக்கதிர்களாய் நீவிரெல்லாம் திகழ்ந்திட வேண்டும்! சமுதாய மறுமலர்ச்சிக்கான பேருழைப்பைத் தப்பாமல் தவறாமல் நல்கிடவும் வேண்டுகின்றேன்.
பகுத்தறிவு வாதம்—அறிவாராய்ச்சிக் கோட்பாடு என்றதும் ஏதேதோ எண்ணிடத் தோன்றிடலாம்! மருண்டிடவும் செய்திடுவர், சில பலர்! பகுத்தறிவு என்பது தான் என்ன?
அடிப்படைத் தத்துவங்கள்—ஆழ்ந்த அநுபவ உண்மைகள்—ஒழுக்கநெறி முறைகள்—அநுபவக் கோட்பாடுகள், மூதுரைகள்—சால்புரைகள், மேற்கொண்டிடத்தக்க மெய்ம்மையுரைகள் அனைத்தையும் அவமதிப்பதென்பது அல்ல! ஒதுக்கித் தள்ளிடுவதும் அல்லவே அல்ல, பகுத்தறிவு என்பது! நல்லதும் நல்லறமும் மதிக்கப்பட்டே தீரும் என்பது உறுதி!
ஆயின் பகுத்தறிவு என்றால் என்னதான் பொருள்? செயல்முறை!
நம்பகமற்ற, ஊசலாட்டமான, நம்பிடும் தகுதியுமற்ற முறைகள்—நெறிகள், செயல் விளக்கங்கள், செயற்படுமுறைகள், ஐயுறவுக்குரிய சிந்தனைகள்—தெளிவற்ற எண்ணங்கள்—ஏற்பாடுகள் எனப்படுவனவெல்லாம் உடலூட்டமும் உயிரூட்டமும் அற்றுப் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்பதே பகுத்தறிவு; அறிவாராய்ச்சிக் கோட்பாடு என்பது! பயிரைவிடக் களைகள் மலிந்திடின் என்ன பலன் கிட்டிடும்! நல்லெண்ணப் பயிர் தழைத்துச் செழித்திட வேண்டின் நச்சரவுக் கருத்தினைக் களைதல் மெத்தவும் தேவையன்றோ!
அறிவின் ஆட்சி! அன்பின் மாட்சி!
பட்டதாரிகளே! நீங்கள் மிகத் தெளிந்த தெளிவுடனும் தெம்புடனும், தீரத்துடனும் உழைத்திட வேண்டுகின்றேன். கடுமையான வேலைதான், எனினும் கால வேகத்தினும் கடுகிப் பாய்ந்து பறந்து காரியமாற்றுங்கள்!
ஆண்டாண்டு காலமாக, பலப்பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் படிந்துள்ள தும்பு தூசுகளைத் துடைத்துத் தட்டி, ஒட்டடைகளை அகற்றி, எண்ணத் துப்புரவு செய்திட வேண்டியுள்ளது! இலேசான காரியமா இது? இன்று தொடங்கி, நாளையோ மறுதினமோ அன்றி நான்கைந்து நாட்களிலோ முடிந்திடக் கூடியதா! எனவேதான் கடுகிப் பாய்ந்து காரியமாற்றுங்கள் என்று வலியுறுத்துகிறேன்.
அறிவும் ஆராய்ச்சித் திறனும் காரண காரியமிக்க சிந்தனையும் செயல்முறைகளும் போற்றி வளர்க்கப்படல் வேண்டும். அதுவே சமுதாய நெறியாகவும் வாழ்க்கை முறையாகவும் அமைந்திடல் வேண்டும்! இத்தகு அறிவின் ஆட்சியும் அன்பின் மாட்சியும் எங்கணும் எத்திசையும் பரவிப் பூத்துக் குலுங்கிடக் காண்போமாக!
ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
இன்று, விந்தையான செயல் ஒன்றினில் நாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்—நாமெல்லாம் ஒரே தேசிய இனமாக உருப்பெற்றிடும் சிந்தனையில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்திய ஒருமைப்பாட்டினை உருவாக்கிட வேண்டும் என்ற பேராவலின் முனைப்பு காரணமாகச் சிலர் சிந்தை குழம்பிச் செயலாற்றிடத் துடிதுடிக்கின்றனர்.
ஒற்றுமை! ஒருமைப்பாடு! இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறானவை. தனித்தனி பொருள் கொண்டவை! ஒத்துப்போதல்—ஒத்துழைத்தல் என்பதே ஒற்றுமை! ஓருருப்படுத்துதல்—பல உருவாய்ப் பலநிலையில் உள்ளவற்றை உருக்கி வார்த்து ஒரே உருவினதாகப் படைத்திடுதல் என்பதே ஒருமைப்பாடு.
ஒற்றுமை—ஒருமைப்பாடு என்ற இவ்விரண்டு சொற்களையும் ஒரே தன்மைத்தான பொருளில் கொண்டு சிந்தை குழம்பிச் செயல்பட்டிட முனைவது நன்றன்று என்று சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.அறிவும், பண்பும், பயிற்சியும் பெற்றுள்ள மூதறிஞர் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்குமுள்ள வேறுபாட்டினை—முரண்பாட்டினைத் தெளிவுபடுத்திடல் வேண்டும்.
கேளிக்கைக் குதியாட்டம்!
ஒற்றுமை—ஒருமைபாடு என்றெல்லாம் கூறிக்கொண்டே, நாட்டின் ஒரு பகுதியினரை மற்றொரு பகுதியின் ஆளடிமைகளாக, குத்தகைதாரர்களாக ஆளாக்கிடும் கொடுமைக்குச் சிறிதும் இடங்கொடோம்! துப்புரவு கெட்ட கேளிக்கைக் குதியாட்டங்களுக்குத் துணை நின்றிடோம்! அடிமைப்படுத்திடும் சூதாட்டத்தில் பங்கு கொண்டிடவே மாட்டோம் என்பதனைத் திட்ட வட்டமாகக் கூறிவிடுகிறேன்!
ஒற்றுமையின் பெயரால் பிறரை ஆளடிமையாக்கிட முனைந்திடுகின்றோம்; ஒருமைப்பாட்டினை உருவாக்கிடும் பேராவலின் முனைப்பால் நாட்டின் ஓர் அங்கத்தினை பிறிதோர் பரப்பின் அடிமைக்காடென மாற்றிடும் நிலை உருவாகிடும் என்பது தெரிந்திருக்கலாம்—தெரியாமலுமிருக்கலாம்! இதனை அறிந்து செய்திடினும் சரியே—அறியாமல் ஆணவத்தின் மேலீட்டால் புரிந்திடினும் ஆகட்டும், கொத்தடிமைத்தனத்திற்கு எப்படி நாம் துணை நின்றிட முடியும் என்று கேட்கிறேன்!
புனிதம் இருக்கட்டும், பயன் என்ன?
பயணத்தின் முடிவு—இலட்சிய முகடு—எத்துணை புனிதமானது—பளபளப்பானது—பரவசம் ஊட்டுவது—பாரெங்கும் பெருமதிப்பைத் தந்திடுவது தெரியுமா! என்றெல்லாம் கூறிடலாம்! காரணங்கள் பல மெத்தவும் காட்டிடலாம்! ஆனாலும்...!
பயணத்தின் முடிவு இலட்சிய முகடு எத்துணைப் புனிதமாகவேனும் இருந்திடட்டும்! பாரெங்கும் பெருமதிப்பு பெற்றிடுவோம் என்பதையும் ஒப்பிடுகின்றோம்! ஆனால் அதன் விளைவும் பயனும் எம்மைக் கொத்தடிமையாக்கிவிடும் என்றால், எப்படி ஒப்பிட முடியும்? துடிக்காமல், துடிதுடித்துக் கண்டித்துத் தடுத்திடாமல் இருந்திடுவோமா? நடவாது அது.
சுதந்திரத் திருநாளன்று—நமது நாடு அன்னியனின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற பெருவிழாவின்போது இராஜாஜி அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை இங்குக் கூறிடுவது மெத்தவும் பொருத்தம் என்றுதான் கருதுகிறேன்.
“இரும்பை மற்ற உலோகங்களுடன் கலந்து உருக்கி வார்ப்படத்தில் வார்த்துத் தேய்மான மற்ற இரும்பு உருக்காக மாற்றுகிறோம். நமது அரசியல் அநுபவமும் இரும்பு உருக்கு போன்ற உலோகக் கலவையைத் தயாரிக்கும் வேலையாகத்தான் இருக்கிறது. ஏனைய நாடுகளில் களிமண்ணால் செய்யப்படும் பீங்கானைப் போன்றதல்ல, இரும்பு உருக்கு! பிளாஸ்டிக் சாமான்கள் செய்வது எவ்வளவு சுலபமாக முடிகிறதோ, அவ்வளவு சுலபமாக மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை ஸ்தாபித்து விட்டார்கள். ஆனால் நமது நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாகும். பிளாஸ்டிக்கில் சாமான் செய்வதைப் போன்று சுலபமானதல்ல! இரும்பை உருக்கி வார்த்து, புதிய வார்ப்படம்—உருக்குத் தயாரிக்கும் வேலை என்பதை உணர வேண்டுகின்றேன்.”
இராஜாஜி அவர்களுக்கு மட்டுமே உரித்தான கூர்த்த மதிநுட்பத்தன் விளைவான இவ்வரும்பெரும் கருத்துக்களை அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டுகின்றேன்!நல்ல தீர்ப்பின் விளைவு!
தேசிய ஒருமைப்பாடு என்பது நல்ல குறிக்கோள்! மதித்திடத்தக்கதுதான். ஆனால் அதே ஒருமைப்பாட்டின் பெயரால் நாட்டின் மொழித் துறையிலோ அல்லது பொருளாதார மேம்பாட்டுத்துறையிலோ அநீதியும் ஆதிக்கமும் தலைதூக்கித் தாண்டவமாடிட அனுமதித்திடலாமா? சகித்துக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா? அது ஆகாத காரியம் மட்டுமல்ல! நடந்திடவே முடியாத நினைப்புமாகும்!
இன்றைய அரசு—தமிழக அரசு எதன் விளைவு? எத்தகு உணர்ச்சிப் பிழம்பின் எடுத்துக்காட்டு என்பதனைச் சிறிதேனும் எண்ணிப் பார்த்திட வேண்டுகின்றேன்!
தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் இந்திமொழி செலுத்திட முனைந்திடும் ஆதிக்க வெறியினை ஒப்பிடோம்! ஒருபோதும் ஏற்றிடோம் என்பதன் எடுத்துக்காட்டுதானே!
இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழக மக்கள் அளித்திட்ட தீர்ப்பு—நல்ல தீர்ப்பின் விளைவுதான் இன்றைய தமிழக அரசின் நடாப்பு! எமக்கு வாய்த்துள்ள நாடாளும் பொறுப்பு!
அச்சுறுத்தலுக்கு அடி பணிந்திடோம்!
இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டுமென்று நாம் கூறிடுவதைச் சிலர் முறை தவறாகத் திரித்துக்கூறிப் பழித்துரைக்கின்றனர் ! இழிமொழிகளை வீசிடுகின்றனர்! தவறான புள்ளி விவரங்களையும, பொருந்தாத வாதங்களையும் எடுத்துக் கூறுகின்றனர். ‘ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து!’ என்றும் கூடப் பூச்சாண்டி காட்டுகின்றனர். “இராணுவத்தை உம்மீது ஏவி விடுவோம்” எனவுஞ் சிலர் அச்சுறுத்தி ஆர்ப்பரித்திடவும் முனைகின்றனரே!
அச்சுறுத்தலும், ஆர்ப்பரித்தலும், ஆதிக்கவெறி முறையும் பிரச்சினைகளை நல்லபடி தீர்த்திடக் கிஞ்சிற்றும் உதவிடாது என்ற பேருண்மைதனை மறந்திடல் நல்ல தன்றே!
நம்மரும் வாழ்வதனின் வளம்—உயிர்—ஊட்டம்—இனிமையென ஊறிக் கலந்துகிடக்கும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் மீது, வேற்றுமொழி—இந்திமொழி ஆதிக்கம் செலுத்துவதை, அச்சுறுத்தலுக்குப் பயந்து அனுமதித்திடவே மாட்டோம்!
எம்மையும் எம்மரும் வழித்தோன்றல்களின் வாழ்வினையும் தாழ்த்திக்கொள்ளக் கிஞ்சிற்றும் ஒருப்படோம்! என்றென்றும் ஒருப்பட்டிடவே மாட்டோம் என்பது உறுதி! மெத்தவும் உறுதி!
பூனைக்கு உள்ளதுவே...!
தமிழகத்தில், தமிழ் அரசுமொழி! ஆங்கிலம், இந்திய நாட்டின் இணைப்புமொழி! என்று இருத்தல் போதும் என்பதே எமது திட்டவட்டமான கருத்து, இதனைத் தமிழக அரசு மிகவும் தெளிவுபடுத்தி விட்டிருக்கின்றது!
ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாகப் பயன்படுகின்றது என்பதை ஏற்காதார் இல்லை; மறுப்பாரும் இல்லை. இந்தி வெறியர்கள் கூட இக்கருத்தினை ஒப்பிடுகின்றனரே!
உலகத் தொடர்புக்கே ஏற்றதென ஏற்றுக் கொள்ளப்பட்டிடும் ஆங்கிலமொழியை, இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக ஏற்பதற்கு என்ன தடை—தயக்கம்? என்று தான் கேட்கின்றோம்!
உலக உறவுக்குப் பயன்படும் ஆங்கிலத்தையே உள்ளூரிலும் பயன்படுத்தினால் என்ன? உறவு எப்படிக் கெட்டுவிடும்?
பூனை, சுவரில் நுழைந்து செல்வதற்கு ஏற்ற—பெரிய துவாரம் உள்ளது ஏற்கனவே! ஆனால் அந்தத் துவாரம் பூனைக்குத்தான் உள்ளது என்று கூறி, பூனைக்குட்டி செல்வதற்கென்று புதிதாக மற்றொரு துவாரம்—முன்னதைவிடச் சிறிய துவாரம் போடப் போகிறேன். அதற்காகச் சுவரை மற்றுமோர் இடத்தில் இடிக்கப் போகிறேன் என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்?
பூனை செல்ல இடங்கொடுக்கும் பெரிய துவாரமே போதும்! பூனைக்குட்டி, பூனையைவிட அளவில், உருவில் சிறியது தானே! எனவே குட்டிக்கெனத் தனியாகப் புதிய தொரு துவாரம் தேவையற்றது—அர்த்தமற்றது—அவசியமற்றதும்கூட என்றல்லவா கூறிடுவோம்! புதிதாக மற்றுமொரு துவாரம போட்டிட மறுத்திடுவோம்!
உலகுக்கு ஆங்கிலம்! உள்ளூருக்கு இந்தி மொழி! என்பதெல்லாம், பூனைக்கு ஒன்று—குட்டிக்கு வேறு ஒன்று என்பது போலத்தானே உள்ளது? வேறென்ன?
கருத்துக் குழப்பம்!
ஆங்கிலம் அந்நியனது மொழி! அயல் மொழி! ஆகவே ஆங்கிலம் கூடாது என்பது மற்றொரு பொருந்திடா வாதமாகும்.
ஆங்கிலம் அயலானது என்று கூறிடும்போதே, நம்மில்—நமது நடையுடை பாவனையில்—நமது அறிவில்—அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகளில் கலந்துள்ள அந்நியத்தனம்—அயலார் தன்மை அனைத்தையும் அப்படியே உதறித் தள்ளிடப் போகின்றோமா? முடியுமா அது? நடக்கத்தான் நடக்கிறதா? இல்லையே!
அறிவு—ஆராய்ச்சி—ஆற்றல் எனும் துறைகளில் மட்டுமல்லாது, உணவும் பெருநிதியுமென நமக்குக் கிடைத்திடும்—நாமே கேட்டுக் கேட்டுப் பெற்றிடும் அந்நிய உதவிகள் தான் எவ்வளவு? கொஞ்சநஞ்சமா?
அதுமட்டுமல்ல, அந்நிய முறைகள் பலவற்றையும் ஏற்றுக்கொண்டு நமக்கென்றே உரித்தான சீரிய பண்புகளையும் விட்டொழித்துமிருக்கின்றோம், நம்மில் பலர்.
கிராமப்புற வளர்ச்சி மட்டுமே போதும், சுதேசீயமே வாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் என்று வாளா இருக்கின்றோமா? டிராம்பே அணுசக்தி நிலையம், எண்ணூர் அனல் மின்சார உற்பத்திக் கூடம் என்பனவற்றைச் சுதேசீயம் அல்லனவென்று ஒதுக்குகின்றோமா! அந்நியமென்றாலும் அவசியமென்று அமைத்துத்தானே இருக்கின்றோம்! மென்மேலும் அமைத்திடவும் முனைந்திடுகின்றோம்!
வாழ்வின் பெரும் பகுதி, மிகப் பலவான துறைகள் அனைத்துமே அந்நியத் தோற்றம்—தன்மையில் தானே உள்ளன! அவைபற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் மொழிப் பிரச்சனையில் மட்டும் புத்தம் புதிய நவநாகரிக தேசீயம்—சுதேசியம் பேசிட முனைகின்றோம்! எவ்வளவு கருத்துக் குழப்பம்! முரண்பாடு! நடைமுறைத் தடுமாற்றம்!
இணைப்பும் பிணைப்பும்
அந்நிய நாட்டுக் கோதுமையை அந்நியநாட்டு கப்பல்களில் நமது நாட்டுக்குக் கொண்டுவருகிறோம்! “அந்நியக் கோதுமையப்பா அது! அதுவும் அந்நிய நாட்டுக் கப்பலில் வந்ததப்பா” என்று அயல் நாட்டுக் கோதுமையை வெறுத்து ஒதுக்கிடும் போக்கு இல்லையே! அதனை உண்டிடாமலா உள்ளோம்!
நமது உணவு, உறையுள் அமைப்பு, உடுப்பு முறை என்று எதைத் தொட்டாலும், பார்த்தாலும் அந்நிய மணம் பெரிதும் கமழ்ந்திடத்தானே செய்கின்றது?
எத்தனையோ துறைகளில் அந்நியத்தன்மை மெத்தவும் ஊடுருவிப் பாய்ந்து பரவிப் பல்கிப் பெருகியும் வந்திடுகின்றது. ஆழப்பதிந்தும் விட்டிருக்கின்றது! நாம் நிலைமையில்—நினைப்பில்— நடப்பில் ‘அந்நியம்’ அல்லாதது எது எனக் கண்டறிந்திடுவது கூட மெத்தவும் கடினம் என்பேன்! அதையும் விட, அந்நியம் என்றிடத்தக்கன பலவும் ‘நம்மதே’ என்ற நினைப்பும் நடப்பும் நம்மில் பலரிடமும் ஊறிவிட்டிருப்பதையும் கண்டிடலாம்!
ஆட்சி மொழித்துறையில் மட்டுமே அந்நிய மொழி கூடாது என்று தீவிர தேசீயம் பேசப் புறப்பட்டு விடுகிறார்கள்! ஆனால் பிற துறைகளைப் பற்றிய நினைப்பே காணோமே!
பிறவற்றில் இணைப்பும் பிணைப்பும் பயனும் தந்திடும் ஆங்கிலம் நாட்டின் இணைப்பு மொழியாகவும் தொடர்ந்து இருந்திடுவதால் என்ன தவறு? தவறேதுமில்லை! சாலவும் பொருத்தந்தானே!
உலகப் பெருமக்கள்!
ஷெல்லி. பைரன், கீட்ஸ், கால்ரிட்ஜ், எமர்சன், பேக்கன் முதலிய ஆங்கிலப் பாவாணர்களும் பேரிலக்கிய நூலாசிரியர்களும் அளித்துள்ள நற்காவியங்களும், என்றும் அழியாத எழுத்தோவியங்களும் நமக்கு அந்நியந்தானா? அயலானதுதானா? அந்நியம் என்ற சொல்லின் நேரிடையான பொருளில் தான் அவற்றையெல்லாம் கருதிட வேண்டுமா? ஒதுக்கிடவும் வேண்டுமா?தமிழ் மறையாம் திருக்குறளைத் தீட்டிய திருவள்ளுவர், தமிழர் என்பதால் தமிழருக்கு மட்டுந்தான் வழிகாட்டியா? “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” வான்புகழ் படைத்த நாடு என்று பாடிப் பூரித்து மகிழ்கின்றோமே, என்ன பொருள் அதற்கு?
ஷெல்லி போன்றோர் ஆங்கிலத்திற்கோ அல்லது ஆங்கில நாட்டாருக்கு மட்டுமோ உரித்தானவரல்லர்! அது போன்றே திருவள்ளுவரும் தமிழுக்கோ அன்றித் தமிழர்களுக்கு மட்டுமோ உரியராகமாட்டார்! அவர்கள் அனைவரும், உலகினுக்கே சொந்தம்; உலகப் பெருமக்கள்—குடிமக்கள் அவர்கள்! உலகப் பேராசிரியர்களும் ஆவார்கள்!
இப்படிப்பட்ட உலகப் பேராசிரியர்கள் அனைவரும் தமது எண்ணங்களை யெல்லாம் எழுத்துருவில் வடித்துத் தந்துள்ளனர்; அவர்தம் ஏடுகள் பலவும் வெளிவந்துள்ளன! அயல்மொழிகளில் எழுதப்பட்டுள்ளன என்பதற்காக அவர்தம் எண்ணங்களையும் ஏடுகளையும் புறக்கணித்து விடவில்லையே, நாம்!
இதே கருத்தினைத்தான் இணைப்பு மொழித் துறையிலும் நாம் கடைப்பிடித்திடல் வேண்டும். அது நல்லது, நமக்கு—நாட்டுக்கும்கூட!
உரிமைக்குத் தமிழ்! உறவுக்கு ஆங்கிலம்!
இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை ஏற்பதால், ஆங்கிலத்திற்குத் தனித்ததோர் உயரிடம்—சிறப்பிடம் கொடுப்பதாகிவிடும் என்றும் தவறாகக் குறை கூறப்படுகின்றது.
மாநிலத்தில், தாய்மொழியில்—பிரதேச மொழியில் ஆட்சி! மத்திய அரசில், ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதால் கெடுதல் ஏதும் இல்லை! உரிமைக்குத் தமிழ், உறவுக்கு ஆங்கிலம் என்பதுதானே இதன் பொருள்?
இதோடு, கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக்கிடும் திட்டமும் படிப்படியாக—ஆனால்—தீவிரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றது. இதனால் தமிழும் அதே போல் பிற மாநிலங்களில் அந்தந்தப் பிரதேச மொழிகளும் வளமும் வல்லமையும் பெற்றுத் தங்கு தடையின்றி வளரும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டிட விரும்புகின்றேன்.
எனவே, இன்றுள்ள நிலையில் உரிமைக்குத் தமிழ்! உறவுக்கு ஆங்கிலம்! என்ற நிலையிலிருந்து மாறிடோம்! ஒட்டி உறவாடி வாழ்ந்திடுவோம்! அதே போழ்தில், தம் தம் உரிமைக்குப் பங்கமும் பழுதும் கிஞ்சிற்றும் உற்றிடாமல் பாதுகாத்திடவும் வல்லோம்; தப்பிடோம் அதனில்! என்பதனை எந்நாளும் காப்போமாக!
சிறப்புத் தொகுப்பு!
பல்கலைக் கழகப் படிப்பு—பட்டத் தகுதி பேறு என்பது சாதாரணமானதல்ல! சமுதாயத்தின் மொத்த அங்கத்தில் மிகச் சிலருக்கே கிட்டிடும் அரிய நல்வாய்ப்பன்றோ அது!
பட்டதாரிகள் பெற்றிடும் அறிவும் ஆற்றலும் போதனையின் பண்பும் பாங்கும் மிகவும் நேர்த்தியானவை: நெறி மிக்கவை; அறிவாழம் மெத்தவும் நிறைந்தவை!
உலக நல்லறிஞர் பல்லோரும் ஆழ்ந்தறிந்து, ஆராய்ந்து, போற்றிப் பேணி மேன்மையாகப் பக்குவப்படுத்தி உருவாக்கியுள்ள நற்சிந்தனைகளின் சிறப்புத் தொகுப்பு—செழுமையான எண்ணங்களின் செறிவான சுருக்கப் பதிப்புதான் பட்டப்படிப்பு! இஃது எத்துணை சிலாக்கியமானது, சீர்மிகுந்தது!பட்டதாரிகளே! நீங்கள் சிறப்பாகப் பெற்றுள்ள சிந்தனைத் தொகுப்பினை மக்கள் மன்றத்தில் விரித்து விளக்கவுரையாற்றிடுங்கள்! செறிவாகத் தெரிந்துள்ள செழுமையான எண்ணங்களை நாடெங்கும் விளக்கிப் பரப்பிடுங்கள்!
உலகளாவிய நற்கருத்தின் ஒளிக்கதிர்களாய், நாடு தழுவிய நல்மரபின் வழித்தோன்றல்களாய், எடுத்துக் காட்டுகளாய் வாழ்வீர்! வாழ்விப்பீராக!
செயல்படு திறம்
பட்டதாரிகளிடமிருந்து சமுதாயம் மிக அதிகம் எதிர்பார்க்கின்றது என்று குறிப்பிட்டேன்! அதற்கேற்ப, பட்டதாரிகளை மேலும் திறம்பட உருவாக்கிடவேண்டும் எனக் கருதுகின்றேன்!
பல்கலைக் கழகங்களின் நடைமுறைப் பாணியை—செயல்படு திறத்தினை மறு பரிசீலனை செய்து மாற்றித் திருத்தி மேலும் செம்மைப்படுத்திடுவது நல்லது, மேலும் பெரும் பயன் தந்திடும் என்றே கருதுகிறேன்!
போதித்திடும் முறைகள், நடைமுறை விதிகள் அனைத்தும் மாணவர்களை முழுமையான அறிவும் செறிவும், பண்பும், பாங்கும் படைத்தவர்களாக உருக்கி வார்த்திடும் முறைதனில் அமைந்திடுவது, பட்டப்படிப்பினை மேலும் சிறக்கச் செய்திடும்! பேராசிரியர்களின் எண்ணங்களையும் சிறப்புத்தன்மைகளையும் மாணவரெல்லாம் உடனிருந்து—தோழமை உணர்வோடு பகிர்ந்திடும் பாங்கும் ஏற்படுத்தப்பட்டாக வேண்டும் என்பதும் எனது அவா—பேராவல்.
போதிப்பது எப்படியெப்படி—செயல்படும் திறம் எத்தன்மையது என்பது குறித்தெல்லாம், போகிறபோக்கில்—பேச்சோடு பேச்சாய் ஏதும் சொல்லிவிடுவது பொருத்தமே அல்ல! அத்தகுதியும் எனக்கில்லை! இவை யெல்லாம் போதனைத் துறையிலும் செயல்பாட்டுப் பிரிவிலும் உள்ள மேதைகளும் நிபுணர்களும் ஆழ்ந்து கவனித்திட வேண்டியவையாகும்! அவர்களே இதற்குப் பொறுப்பான பாதுகாவலர்கள்! அவரெல்லாம் இதில் நிரம்பவும் கவனம் செலுத்திட வேண்டுகின்றேன்! மறுபரிசீலனை செய்திடும்படியும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
வள்ளன்மையின் உட்கருத்து!
பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் பொதுவான இயல்புகள்—ஒரே சீரான பணிகள் உள்ளன. ஆனால், அண்ணாமலைப் பல்கலைச் கழகம் மேலும் தனித்த, சிறப்பானதொரு பணியினையும் மேற்கொண்டிடும் வகையில் அமைந்துள்ளது என்பேன்!
அண்ணாமலை அரசர்—ராஜா சரி அண்ணாமலை செட்டியார் அவர்களின் மேதகைமையாலும் வற்றாத வள்ளன்மையாலும் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இப்பல்கலைக்கழகம்— அண்ணாமலைப்பல்கலைக் கழகம்! அண்ணாமலை அரசரின் நல்லறக் கொடைச் சிறப்பும் பெருந்தன்மையும் சான்றோரால் மெத்தவும் மெச்சிடப்படுகின்றது!
செட்டிநாட்டு அரசரின் வள்ளன்மைக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் விளங்கிடவில்லை; அவரது வள்ளன்மையின் உயிர் நாடியை—உட்கருத்தினை அவர் விரும்பிட்ட தனித்ததொரு சிறப்பான செயலினையும் செம்மையாகச் செய்து, வருகிறது— மிகச் சீராகச் செயல்படுத்தியும் வருகிறது.
படித்துப் பட்டம் பெற்றிடத்தக்க அறிவாலயமாக—வற்றாத அறிவு நீரோடையாக மட்டுமே இப்பல்கலைக் கழகம் விளங்கிட வேண்டும் என்று அண்ணாமலை அரசர் நினைத்திடவில்லை; ஆற்றல் வளர்த்திடும் சிந்தனைப் பாசறையாகவும் செயற்களமாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதும் அவரது பெருவிருப்பமாகும்.
படிப்பிப்பது—பட்டந்தந்திடுவது என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தின் பணி சுருங்கிட விடக்கூடாது—மேலும் பரந்து விரிந்து செயல்பட்டிடவேண்டும் என்றும் கருதி இருக்கிறார், அண்ணாமலை அரசர்!
தமிழர்தம் தொல்பெரும் பண்பாட்டு நலன்—அமைதியும் அமைப்பொழுங்கும் படைத்திட்ட அரசியற் சமுதாயமாக வாழ்ந்திட்ட தமிழக அரசு முறை ஆகியன அனைத்தையும் அலசி ஆராய்ந்திடல் வேண்டும். முன்னைப் பழம்பெரும் சால்பினையும் சீரினையும் வெளிப்படுத்திடல் வேண்டும். அந்நல்மரபினை ஊருக்கும் உலகுக்கும் அறிவித்துப் பரப்பிடவும் வேண்டும், அந்த மரபு வழியே நாமெல்லாம் நல்வாழ்வு வாழ்ந்திடவும் வேண்டும் என்பதுதான் அண்ணாமலை அரசரது வள்ளன்மையின் உட்கருத்து—உயிர்நாடி!
அந்த முன்னறிவுத் திறன்!
தமிழர்கள் தமது தனிப்பெரும் பண்பாட்டு நலனையும் சிறப்புறு ஆட்சிப் பாங்கினையும், இன்னபிற பழம் பெருந்தன்மைகளையும் பேராற்றல் மரபுச் செயல்கள் அனைத்தையும் மீண்டும் போற்றிடத் தலைப்படுவர்! வாழ்க்கை நெறியெனக் கொண்டிடுவர்! அந்தநாள்—தமிழர், தம்மை உணர்ந்து நடந்து, தமிழராகவே வாழ்ந்திடும் அந்த நல்ல நாள்—வந்தே தீரும் என்பதனை அன்றே கண்டார்—உணர்ந்தார், அண்ணாமலை அரசர். அவரது முன்னறிவுத்திறனின் எடுத்துக் காட்டுதான்—தீர்க்கதரிசனத்தின் விளைவுதான் அவர் தொடங்கித் தொடர்ந்து நடாத்திப் பெருவெற்றி கண்ட தமிழ் இசை இயக்கம்!தமிழிசையைத் தமிழ் கூறும் நல்லுலகில் வளர்த்திடல் வேண்டும்—பரப்பிடல் வேண்டும் என்று அண்ணாமலை அரசர் அன்று ஓர் இயக்கமே நடாத்தினார்.
தமிழ் நாட்டில்—தமிழ் பேசி வாழ்ந்திடும் தமிழர்கள், தம் தாய் மொழியாம் தமிழில் இசை பொழிந்து வாழ்ந்திடல் வேண்டும் என்பதனை வலியுறுத்தினார் அண்ணாமலை அரசர் அன்று, எதற்காக?
இசைபட வாழ்ந்தவர் தமிழர் என்பது உலகறிந்த உண்மைதான்! ஆனாலும், தமிழில் இசைபாடிடல் வேண்டும் என்பதற்காக ஓர் இயக்கம் நடாத்திடல் வேண்டும் என்ற அளவுக்குத் தமிழ் உணர்ச்சி மங்கி விட்டிருந்தது அன்று. எனவேதான் தமிழரிடம் மறுமலர்ச்சி—தமிழறியும் மறு மலர்ச்சிக்கென்றே ஓர் இயக்கத்தைத் தொடங்கினார்.
இசை கெட்டு வாழ்ந்த தமிழருக்கு, தமிழிசையின் இனிமையை—இன்பத்தை ஊட்டினார்—மீண்டும் இசை பட வாழுங்கள் என்று சுட்டிக்காட்டினார், அண்ணாமலை அரசர்! என்னே அவரது முன்னறிவுத் திறன்! தீர்க்கதரிசனம்!
இசைபட வாழ்வோம்!
வெற்றுரையும் வீண் ஆரவாரமும் தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் படைத்தவரல்லர், அண்ணாமலை அரசர். தூய்மையான சிந்தனையும், உறுதியான செயல் திறமும் படைத்திட்டவர், அவர்.
எனவேதான் அவர் தமிழரது எதிர்காலத்தின் மீது திடநம்பிக்கை வைத்திருந்தார். தமிழரது பண்பாட்டு நலன்—இலக்கியச் செறிவு ஆகிய துறைகளை வருங்காலத் தமிழர்கள் நிச்சயமாக ஆராய்வர்! ஆழ்ந்து தோய்ந்து உண்மைகளைக் கண்டிடுவர்! தமிழுக்கும் தமிழருக்கும் உரித்தான பெருநிதியை—இசைபட வாழ்ந்த வாழ்வினை மீட்டிடுவர் என்பதுறுதியெனக் கருதினார், அவர்! அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அறிவும் ஆற்றலும் தந்திடும் சிந்தனைப் பாசறையாக—செயற்களமாகவே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினார்!
தமிழர் இழந்த சீரினை, சிறப்பினை மீண்டும் பெற்றிடுவோம், இசைபட வாழ்வோம்—வாழ்விப்போம்! தமிழிசை இயக்கத்தின் மூலம் அண்ணாமலை அரசர் ஊட்டிய உணர்ச்சி வழி நடப்போம்! தமிழ் மணமும்—தமிழர் தம் மாண்பும மாட்சியும் உலகெலாம் பரப்பிடுவோம்—உணர்த்திடுவோம், வாரீர்! அண்ணாமலைப் பட்டதாரிகளே! வாரீர்! வாரீர்! என்றுமையெல்லாம் அழைக்கின்றேன்!
எழுத்தாண்மைத் துறையில்!
செழுமையான இலக்கிய வளம் நிறைந்த மொழி நமது மொழி—தமிழ் மொழி! இதில் கிஞ்சிற்றும் சந்தேகப்படத் தேவையில்லை!
உலகோர் முன்—அவர் எம்மொழியினராயினும் சரியே! எத்துணைக் கலையியல் வாய்ந்த எழுத்தாண்மைத் திறம் படைத்திட்ட நாட்டவராயினும் ஆகட்டும்—நாம் தலை நிமிர்ந்து கூறிடலாம் அவரிடம்—“எம்மொழி தமிழ் மொழி! மிகச் செம்மையான மொழி! கலைப் பண்பார்ந்த ஏட்டுச்சேம வளம்—காலக் கூற்றினுக் கேற்ற இலக்கியப் பகுதி ஏராளம் உண்டு எம்மிடம், எமது செந்தமிழில் என்று! இது வெறும் புகழ்ச்சியல்ல—உண்மை! தற்பெருமைக்கான குற்றத்தினைப் பொருட்படுத்திடவே கூடாத தன்மைத்தான தற்பெருமிதமுங்கூட!இலக்கிய உலகில்—எழுத்தாண்மைத் துறையில் தமிழர் தம் சாதனை மிகவும் எடுப்பானது—ஈடும் இணையும் அற்றதுங் கூட.
ஈடும் இணையும் அற்றதாக உள்ள இலக்கியப் படைப்புகள் யாவை என்பார்க்கு எடுத்துக்காட்டிடத் தக்க ஏடுகள் நம்மிடம் மிக நிரம்ப உண்டு.
இலக்கியப் படைப்பு—கலைப் பண்பார்ந்த ஏட்டுச் சேம வளம் நம்மிடம் எவ்வளவு உள்ளது? நிரம்ப மிக, மிக, மிக நிரம்ப. எடுத்துக்காட்டு வேண்டுமா, இதோ ஒரு பாடல்:—
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை"
இந்த ஒரு பாடலில் மட்டும் எட்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. எட்டுத் தொகையென்ற ஒரு சிறப்புத் தொகுதியின்கண் வருவன மட்டும் இவை, மெத்தச் சிறப்புடைத்தான நூல்கள் இவை. மற்ற தொகுதிகள்—தொகுப்பு பற்றிப் பேசிடலும் வேண்டுமோ?
காலக்கூற்றினுக்கேற்ற இலக்கியம்
எல்லாவற்றையும்விட திருக்குறள் குறித்து நாம் எவ்வவு பெருமைப்பட்டுக் கொண்டாலும் தகும். தவறேதுமில்லை, இது குறித்து நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில்.
மானுடப் பண்பியல்புகளுக்கோர் உறைவிடமாய்—வாழ்க்கை வழி, நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது நமது திருக்குறள். காலக் கூற்றினுக்கேற்ற இலக்கியம் இதுவன்றி உலகினில் வேறேது? என்றும் நாம் கேட்டிடலாம், எவரைப் பார்த்தும். உலகெங்கணும் பறைசாற்றிடலாம், அஞ்சிடத் தேவையில்லை!
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” நமது நாடு. எதனால் இப்படிக் கூறினார் பாரதியார்? அந்த வள்ளுவன், திருக்குறள் என்ற பொய்யாமொழியினை—வாழ்க்கை நெறிக் கோட்பாட்டு மறைதனைத் தீட்டியதால்தான்.
ஆழ்ந்த கவனம்
உலகெங்கணும் பறைசாற்றிப் பெருமையும் பெருமிதமுங் கொண்டிடத்தக்க இலக்கியச் செழுமை நம்மிடம் எத்துணை இருந்தென்ன? அத்துறையில், நமது ஏட்டுச் சேமவளத்துறையில் போதிய கவனம் செலுத்தியிருக்கின்றோமா? இலக்கியப் பண்ணையின் பக்கம் நமது பார்வை அழுத்தமாகத்—தேவையான அளவுக்குப் பதிந்து வருகின்றதா? கவின்மிக்க கருத்துக் கருவூலங்களைத் தக்கபடி பாதுகாத்துப் பயன்படுத்திடுகின்றோமா? சிறப்பான எண்ணக்குவியல்களை ஏத்தியேத்தித் தொழுதிடா விடினும்—நித்திய வாழ்க்கை நெறியுடன் இணைத்துச் செயல்பட்டிருக்கின்றோமா?
இத்துணைக் கேள்விகளுக்கும் “ஆம்! ஆம்! போதிய கவனம் செலுத்திவருகின்றோம்” என்று பதில் கூறிடத்தக்கவர்—நம்மில் எத்தனைப் பேர் உள்ளனர்! சிலர் இருக்கக்கூடும்—எவருமே இருந்திடாமல் இரார் என்பதனை மிக நன்றாக அறிவேன்! ஆனாலும் அந்தச் “சிலர்” “பலர்” ஆகி—“எல்லாரும்” என்றாகிடும் நாளும் வந்திடல் வேண்டும்! விரைவில்—மிகமிக விரைவாக!
கடந்த பத்தாண்டுக் காலத்திற்குச் சற்றைக்கு முற்பட்ட காலத்திலிருந்துதான் நமது இலக்கியப் பண்ணையில் விளைந்துள்ள கருத்துக் கதிர்மணிகளைத் துருவிக் காண முற்பட்டவர் தொகை பெருகிடத் தொடங்கியது. இத்தன்மையோர் தொகை மென்மேலும் பெருகிடல் வேண்டும். எண்ணிலடங்காதனவாகிடவும் வேண்டும் என்பதே எனது ஆவல்—பேராவல்—அடங்காப் பேராசையுங்கூட!
ஏக்கமும் ஏற்றமும்!
நம்மருங் கலைஞானங்களை—சிந்தனைப் பூங்காவினை—கருத்துப் பெட்டகந்தன்னை—எண்ணக் களஞ்சியத்தை “ஏறெடுத்தும் பார்த்திடோம்” என வாழ்ந்தவர்—வாழ்ந்தும் வருபவர் பலராவர், நம்மில்!
தமிழகத்தின் தரம்மிக்க அறிவுப் பண்ணையைப் பற்றிச் சிறிதும் அக்கறையற்று இருந்து பின்னர் அது குறித்து மெத்தவும் வருத்தப்பட்டு, ஏங்கித் தம்மைத் திருத்திக் கொண்டு, இலக்கிய உலகில் ஏற்றம் பெற்றவரும் இல்லாமல் இல்லை, இருக்கத்தான் செய்கின்றனர், இருந்திடவும் இருந்தனர். அப்படிப்பட்ட ஏக்கமும் ஏற்றமும் பெற்றவர்களில் நமைவிட்டு மறைந்திட்ட மாமேதை சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களும் ஒருவர்!
பைபிள் தெரியும் குறள் அறியேன்
இதே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1943-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாப் பேருரையினை அம் மாமேதை—சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் நிகழ்த்தியபோது குறிப்பிட்ட சில கருத்துக்கள் நமக்கெல்லாம் நல்வழி காட்டிடுவதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:—
“பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால், தமிழிலக்கியங்களைப் படித்தேனில்லை. அவற்றை அடியோடு அலட்சியப்படுத்திவிட்டேன்—ஒதுக்கிவிட்டேன்! உண்மையில் வெறுத்தும் வந்தேன்.
“ஆங்கில மொழி இலக்கியங்களைக் குறிப்பிடும் அளவுக்குச் சீராகக் கற்றுத் தெளிந்தேன். ஆங்கில வரலாற்று அறிவிலும் வல்லவன் என்று சொல்லிக் கொள்ளலாம், அது மட்டுமல்ல, பழங்கால ஆங்கில மொழியான ஆங்கிலோ—சாக்சன் மொழியோடு கிழக்கு ஜெர்மனியின் பழங்குடிகளது மொழியான கோதிக் மொழியையும் ஓர் அளவுக்குக் கற்றுக் கொண்டேன்.”
“கிறுத்துவர் வேதமான விவிலிய நூலைப் படித்தேன் - அதுவும் கோதிக் மொழியில்; ஆனால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் படிக்கவே இல்லை! சாசரின் இலக்கியங்களைப் படித்துப் போற்றினேன்; ஆனால் இளங்கோவடிகள் என்பது ஒருவரது பெயர் என்பதைத் தவிர அவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்தேன்!”
கல்லூரி நாட்களுக்குப் பிறகும் படிப்பதில் பேரார்வமும் பேரூக்கமும் செலுத்தி வந்தேன். நூல்நிலையம் ஒன்றையும் எனக்கெனவே அமைத்துக் கொண்டேன்! ஆனால் எனது நூல் நிலையத்தில் எனக்கென வாய்த்திட்ட தனியொரு உலகில்—வாழ்க்கை என்பது என்ன என்பது பற்றிய கவலையும் பொறுப்புணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும் அறவே அற்ற நிலையில்—எனது இளமைப் பருவம் கழிந்தது. ஆனாலும் எனது ஆங்கில அறிவுப் புலமை குறித்து மட்டும் மெத்தவும் இறுமாந்து மகிழ்ந்து கிடந்தேன்!ஆண்மைத் தமிழனானேன்!
“இளமை கழிந்தது—பொறுப்பற்ற தன்மை அகன்றது! முழு வளர்ச்சியுற்ற ஆண்மை விழிப்புற்றது. பொறுப்பு மேலிட்டது—மனிதனானேன். வாழ்வின் பொறுப்புச் சுமைகளை—நடைமுறைச் சிக்கல்களை உணரத் தலைப்பட்டேன்; உலகம் தெரிந்தது—புரிந்தது எனக்கு!
எனது குடும்பத்தாரோடு முழுமையாக மனதார ஒட்டி உறவாடிட முடியாதவனாக இருப்பதை உணர்ந்தேன்; வேற்று மனிதனாக—வெளியானைப் போல் வாழ்வது கண்டு மெத்தவும் வருந்தினேன்!
எனது வாழ்க்கை முறையை, நான் அமைத்துக்கொண்ட விதமும்—வாழ்வு குறித்த எனது போக்கும் பிறர் எள்ளிநகையாடிடத் தக்க விதத்தில் இருப்பதைப் படிப்படியாக உணர்ந்தேன்! எனது வாழ்வுக் கருத்துக்களை—வாழும் விதத்தினைத் திருத்திச் செம்மைப்படுத்தினேன்!
வாழ்வின் தொடக்கத்தில் விடுபட்டுப் போனவற்றையெல்லாம் தீவிரமாக இட்டு நிரப்பினேன்; ஒரு பக்கம் மிகச் சாய்ந்து நின்ற வாழ்க்கைத் துலாக் கோலைச் சமன் செய்து சரிநிலைப் படுத்தினேன்! தமிழ் வாழ்வு குறித்த அறியாமை அகன்றது ஆண்மைத் தமிழனானேன்!
தன்னேரில்லாத் தமிழேடுகள்!
அன்றொரு நாள்—இளமைப் பருவத்தில் அக்கறையற்று அலட்சியப்படுத்திப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்கித் தள்ளிய புகழ்சான்ற தமிழ் ஏடுகளையெல்லாம் எடுததேன்—படிக்கத் தலைப்பட்டேன்! கடுவேகமாகப் படித்தேன்; கருத்தூன்றிக் கற்றேன்! ஆழ்ந்தாழ்ந்து அறிந்தேன்; ஆராய்ந்தறிந்தேன்! அகமகிழ்ந்தேன்!
உலகப் பேரிலக்கியங்கள்—என்றும் அழியாக் கருத்துக் கருவூலங்கள் என்று கூறப்படும் எந்த நாட்டு மொழி நூல்களுடனும் ஒப்பிடத்தக்க—தன்னிகரற்ற—தன்னேரிலாப் புகழ்சான்ற ஏடுகளாக நமது இலக்கியப் படைப்புக்கள் அமைந்திருப்பதைக் கண்டு களிபேருவகையடைந்தேன் !
நம்மகத்தே—நம்தம் தமிழகத்தே உள்ள கருத்துக் கருவூலத்தை, எண்ணக் களஞ்சியத்தை அறிவுப் புதையல் தன்னை ஏறெடுத்தும் பாராது இருந்தோமே! இத்துணை நாளாக அக்கறையற்று—அலட்சியப்படுத்தி விட்டோமே! வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டோமே! என்றெல்லாம் ஏங்குகின்றேன்; மெத்தவும் மனம் வெதும்புகின்றேன்!
சூளுரை செயலுருப் பெற்றது
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளிடையே, சர். சண்முகம் செட்டியார் அவர்கள் அன்று குறிப்பிட்டுச் சென்றுள்ள இக்கருத்துக்கள் மிக மேன்மையானவை. மெத்தவும் கருத்தாழம் படைத்தவை, பேரழுத்தம் பொதிந்த சொற்றொடர்கள்! என்பதனை நீவிரெல்லாம் உணர்ந்திட வேண்டுகிறேன்!
தன்னைத்தான் நொந்து நைந்து நெஞ்சமுருகப் பாடப்படும் கழிவிரக்கப் பாடல் அல்ல, அவரது ஏக்கம்! தமது மாற்றத்தின் மாண்பினை, இனி மாறிடவே மாட்டேன்! என்று கொண்டிட்ட முடிந்த முடிபினை, புத்தெண்ணச் சால்பின் செயலுறுதிப்பாட்டினை வெளிப்படுத்திடும் சொற்றொடர்கள்தாம் அவை! ஆண்மைத் தமிழனின் சபதம்! சூளுரை!
ஆம்! சர்.சண்முகம் அவர்கள் தமிழை உணர்ந்தார், தமிழ்மொழியின் புகழ் சான்ற ஏடுகளைக் கற்றுத் தெளிந்து ஆண்மைத் தமிழனாக ஏற்றம் பெற்றார்! அவரது கழிவிரக்கப் போக்கு நீங்கியது; சபதம் ஈடேறியது! சூளுரை செயலுருப்பெற்றது.
முன்னோடியான எண்ணங்கள்!
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
“யாதும் ஊரே! யாவரும் கேளிர்”
“வினையே ஆடவர்க்கு உயிரே”
“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
“செல்வத்துப் பயனே ஈதல்”
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
இத்தகு, நம்மருந் தமிழுரைகளை—உலகத்தின் முன்னோடியான எண்ணங்களை—தன்னேரில்லாப் புகழ் சான்ற ஏடுகளின் ஏற்றத்தை உலகெலாம் பரப்பிடுவாரன்றோ, அந்தச் சண்முகம் இன்றும், இருந்திடின்?
இட்டு நிரப்பிடுவோம்
அம் மாமேதை இன்று இல்லையே! அந்தச் சான்றான்மைத் தமிழ் மகனைச் சாவு அணைத்துக் கொண்டுவிட்டதே! இன்றேல்...
அவர்—அந்தச் சண்முகம்—தமிழாய்ந்த தலைமகன் சண்முகம் இன்றும் இருந்திடின்......! என்று ஏங்குகின்றோம்.அந்தச் சண்முகம் இன்று இல்லை. இறவாத புகழுடம்பு பெற்று விட்டார்.
அந்தச் சண்முகம் இல்லாத குறைதனையே நினைந்து மெத்தவும் ஏங்கிட வேண்டாம். எழுச்சி பெற்றிடுவோம் அவரை நினைத்து. இட்டு நிரப்பிடுவோம் நாம், அவரில்லாத குறையை. நாமெல்லாம் அவராவோம்—அந்தச் சண்முகம் ஆகிடுவோம்.
சூளுரைத்துத் தமிழ் கற்றுத் தெளிந்து சான்றான்மைத் தமிழன் ஆகிடுவோம், நாமெல்லாம். தரணியெங்கும் தமிழ் மணம் கமழச் செய்திடுவோம். பார் முழுதும் பரப்பிடுவோம், தமிழர்தம் பண்பாட்டுப் பேரிலக்கியப் படைப்புக்களை. வாரீர் வாரீர் என்று அழைக்கின்றேன்.
கடமைப் பொறுப்பு! கடும் உழைப்பு!
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளே! தமிழர் சமுதாயத்திற்கான பெரும்பணி காத்துக் கிடக்கின்றது—கடும் உழைப்பு உங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குத் தயாராகிடுங்கள்; உம்மைத் தயார்படுத்திக் கொண்டிடுங்கள்.
உலகனைத்துக்கும் உரிய அரும் பெருங்கருத்துக்கள் அனைத்தும் நமது இலக்கியப் படைப்புக்களில் ஆழப் பொதிந்துள்ளன—உள்ளடங்கியுள்ளன என்பதை உலகெலாம் அறிவித்திடும் கடமைப் பொறுப்பு—கடும் உழைப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, நவநாகரிகக் கருத்து—பகுத்தறிவுக் கொள்கையென்றெல்லாம் இன்று உலகோர் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிடும் கருத்துக்கள் பலவும் பெரிதும் நமது பண்டைய இலக்கியங்களில், மிகத்தொன்மையான காலந்தொட்டே இருப்பன—இருந்து வருவன என்பதனைப் பாரறியப் பறைசாற்றிடுங்கள். அழுத்தந் திருத்தமாக, அறைகூவல் விடுத்தும் உலகறியச் செய்திடுங்கள் என்றுமையெல்லாம் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
திராவிடத்தின் தனியுரிமை!
நனிசிறந்த தொன்மைப் பழம்பெரும் பண்பாட்டின் பிறப்பகம், நாகரிக வகையின் தாயகம்—நல்வாழ்வு நயத்தின் வாழ்விடம் எனத்தகும் சிறப்பு, நாமெல்லாம் வாழ்ந்திடும் தென்னகத்திற்கே சொந்தமாகும். தென்னிந்தியாவிற்கே—திராவிடத்திற்கே உரித்தான சிறப்பான தனியுரிமையுமாகும்.
திராவிட நாகரிகத்தின் உயர் பண்பும் உண்மையுருவமும், உலகத்தின் பார்வையில், அண்மைக் காலம் வரையில் சரியாகப்பட்டிடவில்லை; தெரிந்திடவுமில்லை. ஏன்?
நமது மேம்பாட்டினை அறியாமைக் காரிருள்—நெருக்கமான மூடுபனியின் மூட்டம் சூழ்ந்து பரவலாகக் கப்பிக்கொண்டது, உலகோர் பார்வையை மட்டுப்படுத்தியது, பெருமளவுக்கு மறைத்தும் விட்டது.
அந்தக் காரிருள் அகன்றுவிட்டது; கதிரவனின் ஒளிக்கதிர்கள் பாய்கின்றன. மூடுபனியின் மூட்டம் கரைந்தது. பார்வையை மறைத்திட்ட படலம் இன்று இல்லை.
திராவிட நாகரிகத்தின் உயர்வும் பண்பும், உண்மை உருவும், தொல் பெரும் பழமைத் தோற்றமும் இன்று பலராலும் கண்டறியப்பட்டுள்ளது; உலகோர் இதனை ஒப்பிடவும் செய்கின்றனர்.
கிறித்து பிறப்பதற்கு இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலக் கட்டத்திலேயே திராவிட நாகரிகம் நனிசிறந்தோங்கி விளங்கியது என்பதை வரலாற்று அறிஞர் அனைவரும் கண்டறிந்து வெளிப்படையாகக் கூறியும் வருகின்றனர்.இன்றைக்கு நான்கைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னைய நாட்களிலேயே தோன்றியது திராவிட நாகரிகம். அந்த நாகரிகம் மிக உன்னதமானது. பண்பட்ட பழக்க வழக்கங்களைப் படைத்திருந்தது, வளமான வாழ்க்கை நெறிமுறைகளைத் தனது சிறப்பியல்புகளாகப் பேணிப் போற்றிக் கடைப்பிடித்து வந்தது என்பதையெல்லாம் உலகம் இன்று உணரத் தொடங்கியுள்ளது.
தமிழின் தனிச் சிறப்பு!
வாழ்க்கை நெறி முறைகளிலும் நாகரிக நல்வாழ்வு நயத்திலும் மிக மேம்பாடுடன் வாழ்ந்திட்ட பண்டை திராவிடர் தம் மொழியாம் தமிழ் மொழி, எல்லாம் வல்லதாய், பல்வளமும் பல்கிப் பெருகியதாய் நீண்ட நெடுங் காலந்தொட்டே நிலைபெற்று நீடித்து வழங்கி வருகின்றது என்பதும் மொழிப் பேரறிஞர் அனைவராலும் போற்றப்படுகின்றது, இன்று.
திராவிடர்தம் மொழியாம் செந்தமிழ் மொழியின் மேன்மையும் மேம்பாடும் சீரும் சிறப்பும் உலகப் பார்வையில் சிறப்பிடம் பெற்று வருகின்றது.
தமிழின் சிறப்பியல்புகளை—செம்மொழிக்கேற்ற சீரிளம் இயல்புகளை மொழிவல்லார் பலரும் மெத்தவும் மெச்சிடுகின்றனர்.
தமிழ்மொழி, காலத்தால் மிக மிகத் தொன்மையானது. இலக்கண இலக்கிய விதிகளையும் வரை முறைகளையும் செவ்வனே பெற்றுள்ளது. தூயது—தூய்மையானது துல்லியமாக எண்ணங்களை வெளிப்படுத்திடும் சொல் வளம் மிகவும் படைத்தது. உணர்வுகளை நுட்பமாகவும் நுண்ணியமாகவும், நேர்மையாகவும் நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் மெத்தவும் மிக்கது. எண்ணங்களை, ஏற்பாடுகளை—கொள்கை கோட்பாடுகளை வழுவாமல், பிறழாமல் குறித்துணர்த்திக் கூறிடும் சொல்லாட்சியும் உடைத்தானது.சூடு, சுவை, சூட்சுமம், மதி நுட்பம் வாய்ந்த குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை அத்தனையும் ஆற்றிட வல்ல சொல்லாரம் தமிழ்க் களஞ்சியத்தில் ஏராளம் ஏராளம், மிசமிக ஏராளம், எடுக்க எடுக்கக் குறையாதது, கொடுக்கக் கொடுக்க மாளாதது நம் தமிழ் மொழியின் வளம்—வல்லமை.
தமிழ் இனியது, அழகியது, ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறிவும், பொருட்செறிவும், நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது. அது தொன்மையானது, தூயது! என்றும் அழியாத வியத்தகு சீரிளமைத்திறம் உடைத்தானது என்பதெல்லாம் உண்மை—வெறும் புகழ்ச்சியுல்ல என்பதை ஊரும் உலகும் ஒப்பிடத் தொடங்கியுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்கின்றோம்?
உண்மையான மதிப்பீடு!
உலகும் நாமும் நமது தொல்பெருமைப் பண்பாட்டைக் குறித்துத் தெரிந்துள்ளது கொஞ்சந்தான், அறிந்து ஆராய்ந்துள்ளது மிக மிக சொற்பந்தான், உணர்ந்து துய்த்ததும், துய்த்து வாழ்ந்திடுவதும் மெத்தவும் குறைவான அளவினதுதான்.
முன்னைத் திராவிடத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டுத் தத்துவ நெறிகள், வாழ்க்கை முறைகள், சிற்ப சித்தரவிசித்திர நுட்பங்கள். எழல்மாடக் கூட கோபுரங்களின் கட்டமைப்புகளின்—கட்டுக்கோப்புத் திறன் அத்துணையும் எத்துணையோ எழிலும், ஏற்றமும், வலிவும் பொலிவும் படைத்தவையாயிற்றே? அவற்றையெல்லாம் காண்போம்; முழுமையாகக் கண்டறிவோம், ஆழ்ந்தாழ்ந்து தோண்டி தெரிந்திடுவோம், நுட்பமாக ஆராய்ந்து தெளிந்திடுவோம் என்றுமையே அழைக்கின்றேன்!
நமது பழம் பெருமையினை, வாழ்க்கை மேம்பாட்டினை நாகரிகச் சிறப்பினை அலசி ஆராய்வது எதற்காக? துருவித் துருவித் தேடித் தெளிந்து காண்பதும் எதன்பொருட்டு? பழம் பெருமை கண்டு பூரித்துக் களித்திட மட்டுமே அல்ல, அதற்காக மட்டுமே அல்ல!
நமது மூதாதையரின் பெருவாழ்விலிருந்து சிந்தனைத் தெளிவு—பாங்கான வாழ்க்கை முறைகள் ஆகியனவற்றின் உண்மையான மதிப்பீட்டை, ஆழ்ந்து தெளிந்திட உதவிடுவதாகவே அவை அமைந்திடல் வேண்டும். அந் நல்வழியினில் நாமெல்லாம் ஒழுகிடவும் வேண்டும்.
நம்பிக்கை அரசு
அண்ணாமலைப் பட்டதாரிகளே! அரசியற்கலை அரங்கில்—ஆட்சியியல் துறையில்—அரசியல் சார்ந்த செயற்களத்தில் நீவிர் ஆற்றிட வேண்டிய செயல்—பொறுப்பு குறித்து விரிவாகப் பேசிடத் தேவையில்லையென்றே கருதிடுகின்றேன். ஆயினும் ஒன்றே ஒன்றினை மட்டும் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டி, அதனை மட்டும் உமது சிறப்புப் பணியாக, அரசியல் அரங்கத்தில் தப்பாமல் தவறாமல் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டுமென்று வலியுறுத்திக் கூறிட விரும்புகின்றேன்.
நமது அரசியற்கலை—ஆட்சியியல்—ஜன நாயக அரசு முறையைக் கொண்டது. நமது, மக்களாட்சியின், குடியரசுக் கோட்பாட்டின் அச்சாணி, ஆணிவேர் எனத்தகும் சில பல நிரந்தரமான நெறிமுறைகளை நிச்சயமாகக் கடைப்பிடித்துச் சிறப்புப் பணியாற்றிட வேண்டுகின்றேன்.
நமக்கு வாய்த்துள்ள ஜனநாயக அரசு முறையை மெத்தவும் பத்திரமாகவும் சிறிதும் சேதமுறாமலும் பாதுகாப்பது நும் போன்ற பட்டதாரிகளின் முதற் பெரும் கடமையாகும், அதாவது ஜனநாயக அரசுமுறை என்பது மக்களது அன்றாட வாழ்க்கையிலுள்ள தட்டுத் தடுங்கல் எதனையும் தகர்த்துப் பாதுகாப்பு அளித்திடும் என்ற நம்பகமான—நம்பிக்கை தந்திடும் அரசு முறையாக ஜனநாயகத்தை மிளிரச் செய்திடல் வேண்டும். இதுவும் உமது பொறுப்புத்தான்.
நல்விளைவுகளின் நிலைக்களன்!
ஜனநாயக அரசு முறையினைச் சிறிதும், சேதமுறாமல், மெத்தவும் பத்திரமாகக் காத்துப் பாதுகாத்திடுவதுடன் உமது பணி முற்றுப் பெறாது—பெற்றிடவும் கூடவே கூடாது.
மக்கள் அனைவரது உடல்—உள்ளம்—உணர்வு—உயிர் அனைத்திற்கும் உகந்த—நலமார்ந்த, எழிலான, செழிப்புடைத்தான செம்மையும் செழுமையும், ஆக்க வளமும் ஆதாயமான நல்விளைவும் நல்கிடும் முறையாக மக்களாட்சியை மாண்புறச் சிறக்கச் செய்திடும் செம்மல்களாகவும் நீவிர் கடமையாற்றிடல் வேண்டும் எனவுங் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
சுருக்கிச் சொல்வதானால் ஜனநாயக முறையைச் சேதமுறாமல் பத்திரமாகப் பாதுகாத்து நல்விளைவுகளின் நிலைக்களனாகப் பரிமளிக்கச் செய்திடுவதே உமது பணி, அரசியற் செயற்களத்தில்.
செய்தாக வேண்டிய பணி!
பட்டதாரிகளே, பல்கலைக் கழகம் உம்மிடம் ஊட்டி உரம் பெறச் செய்துள்ள அறிவுச் சுடர்தனை ஏந்தி நடவுங்கள்! மறவாதீர், இதனை என்றென்றும்.
என்றும், எங்கும், எப்போதும், எவ்விடம் சென்றிடினும். எத்தகு வாழ்க்கை நிலை உமக்கு அமைந்திடினும், எத்தன்மைத்தான பணியும் பணியிடமும் வாய்த்திட்டாலும் சமுதாயத்தின் எந்தப் படிநிலையினில் நீவிர் நிற்க நேரிடினும் சாமானிய மனிதனை உயர்த்திடும் மறுமலர்ச்சிப் பணிக்கென உம்மால்—முடிந்தவரையில் சிறிதேனும் செய்தாக வேண்டும், நீங்கள்.சாமானியனை—சராசரி மனிதனை உயர்த்துவதென்றால் என்ன?
சாமானியன்—சராசரி மனிதனது அறிவினைப் பெருக்கி, ஆற்றல் பண்பினை எழுச்சியுறச் செய்து, செயல் திறத்தினைச் செம்மைப்படுத்தி, உழைப்பினைப் போற்றிடல் வேண்டும். அதோடு அவனது உழைப்பிற்கு உகந்த, உரிய பலனையும் பயனையும் தப்பிடாமல் பெற்றிடச் செய்திடுதலும் நும் ஆழ்ந்த கவனத்திற்கு என்றும் உரித்தாகட்டும். மேன்மையும் மேம்பாடும் கொண்டதாகவே அவனது வாழ்வினை அமைத்து மகிழ்வித்திடல் வேண்டும்; சமுதாயத்தின் படிநிலையில்—எழிலும் ஏற்றமும் மிகுதியும் பெற்ற மேல்படி நிலையினில் இருத்திடவும் வேண்டும், அவனை—அந்தச் சாமானியனை.
முதுகெலும்பு! முக்கிய ஆதாரம்!
சமுதாயத்தின் பேரங்கமாக—மிகப்பெரும்பாலோனாக உள்ளான் அந்தச் சாமானியன்—சராசரி மனிதன். சமுதாயத்தின் கீழ்ப்படி நிலையில் உள்ளவன் அவன். ஆனால் அந்தச் சாமானியன் தான்—சராசரி மனிதன்தான் நாட்டுக்கு—நமது நாட்டிற்கு மட்டுமல்ல, உலக சமுதாய முழுமைக்கும் அச்சாணியன்னவன்—ஆணிவேர் எனப்படுபவன். மனித குலமனைத்திற்கும் முதுகெலும்பானவன்—முக்கிய ஆதாரமே அவன் தான்—அந்தச் சாமானியன் தான்.
சொற்சித்திரம் காணீர்!
சாமானியன்—சராசரி மனிதன் எனப்படுவோன் எங்குள்ளான்; எப்படிப்பட்டவன் அவன்; வாழ்ந்திடும் வகையும் விதமும் எவ்வாறு உளது; அவனது எண்ணம்—ஏக்கம் யாது? எதிர்காலத்தைக் குறித்து என்னென்ன எண்ணிடுகின்றான் என்பதையெல்லாம் உங்களுக்குக் காட்டி விளக்கிட விரும்புகிறேன், சொல்லோவியமாக!இதோ! அந்தச் சாமானியன்! சொற்சித்திரமாக, உங்கள்முன், எண்ணத் திரையில்! கண்டிடுங்கள் அவனை:
- சாமானியன்—சராசரி மனிதன் எனப்படுவோன் குறிப்பிடத்தக்கவனல்லன்—பொருட்படுத்திடவும் கூடாதவன் என்பதாகவே தோற்றமளிக்கிறான்! ஆனால் உண்மையில், மனித குலத்தின் மூன்றில் இரண்டு பகுதியினனாக உள்ளவன் அவன்தான்! பெரும்பகுதி மக்களின் சின்னம்—பிரதிநிதித்துவமும் அவனே!
- குடிசைதான் அவனது பிறப்பிடம்—இருப்பிடம்—வாழ்விடம்! கல்லாதவன்—கற்றுணரும் வாய்ப்பினையிழந்தவன்! எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளாதவன்—பாமரன்! அவனே சாமானியன்!
- நோய்—நோக்காடு காரணமாக வீரியமற்றுப் போனவன்! மனத்தின் சீரழிந்த நிலையின் விளைவால் சத்தும் சாரமும் உறிஞ்சப்பட்டுவிட்ட சக்கை போன்றவன்! வலிவும் பொலிவும் குன்றி, உரமும் ஊக்கமும், ஊட்டமும் வடித்தெடுக்கப்பட்டுவிட்ட வடிவம்—அந்தச் சராசரி மனிதன்!
- உழைப்பு! ஓயாத உழைப்பு! நாளொன்றுக்குப் பதினைந்து மணி நேரமும் உழைத்திடுபவன்! கழனி காடுகளிலேயே பெரிதும் உழைத்திடும் அவனுக்கென்று கையளவு நிலமும் இல்லை; சொந்த நிலமற்ற உழைப்பாளி! உழைத்துப் பிழைத்திடுபவன்!
- பெரும்பாலும் பசித்திருக்கும் வயிற்றினையே தோழமையாய்ப் பெற்றிருப்பான், அவன்! அவன் மட்டுமல்ல—அவனது குடும்பத்தாரும் அப்படியே!
- சாமானியனது வாழ்வினை, சாவு சடுதியில் சூழ்ந்து கொள்ளும்! இளம் வயதினில் இறப்பு, முதிராத வயதில் வாழ்வின் முடிவு, தேடி வந்துவிடும் அவனை!
காக்கைக்கும் தன் குஞ்சு...!
- நித்திய வாழ்வு—நிகழ்காலம் நடக்கிறது. எப்படியெப்படி யெல்லாமோ; நடந்து விட்டுப் போகட்டும் என் வாழ்வு, என்கிறான்! ஆனாலும் எதிர்காலம் எப்படி! என்னரும் மக்கள்—நான் பெற்ற செல்வங்கள் எப்படியிருப்பர்—இருந்திடல் வேண்டும்! வாழ்வர்—வாழ்ந்திடல் வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்திடத்தான் செய்கிறான் அந்தச் சாமானியன்—சராசரி மனிதன்!
- ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பரே! அவன், சாமானியன்தான் என்றாலும் பிள்ளைக் கனியமுதின் சுவை எப்படியவனிடம் அற்றுப் போய்விடும்? எதிர்காலததின் ஏற்றத்தை, தன் மக்களின் எழிலான வாழ்வினைப் பற்றித் திட்டமிடுகிறான்!
- சாமானியனது எதிர்காலத் திட்டத்தின் வழி—கருத்தோட்டத்தின் நடைமுறைப்படி அவனது வழித்தோன்றல்கள் கட்டுடலும் வலிவும் பொலிவும் பெற்றிருப்பர்! நோய் நொடியற்று வாழ்ந்திடுவர். வீரியம் படைத்தோர்—உரமும் ஊக்கமும், ஆண்மையும் ஆற்றலும் குடிகொண்டிருக்கும் மக்களென வாழ்வர்.
- கற்றவராய், கசடறக் கற்றவற்றை—கேட்டனவற்றைப் படித்துக்கூறிடும் பாங்கும், எழுதிக்காட்டி உணர்த்திடும் ஆற்றலும் மிக்கோராய்த் திகழ்ந்திடுவர். அந்தச் சாமானியனின் வழித் தோன்றல்கள்!
- சாந்தியும் சமாதானமும் சமரசக் கருத்தூட்டமும் நிறைந்த உலகில் தனி மனிதனது உரிமை—உடைமை—கடமை ஆகியவற்றைத் தெற்றெனத் தெரிந்து உணர்ந்து நடந்திடும் சுதந்திர மனிதராய்—வாழ்ந்திடுவர், சராசரி மனிதனது வருங்காலச் சந்ததிகள்!
உலகின் சாமானியனது கருத்தோட்டம்—சொற்சித்திரப் படைப்பு இதுதான்
தன்னை உணர்ந்த சாமானியன்!
சாமானியன்—உலகெங்கிலும் உள்ள சராசரி மனிதன் தன்னை உணர்ந்து, சமுதாயத்தில் தனக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை உணரத் தலைப்பட்டுவிட்டான்! அக்கிரமத்தைத் தெரிந்து கொண்டுவிட்டான்! ஆளடிமைத்தனம் மெத்தவும் தன்னை அழுத்திப் பிடித்துச் சமுதாயத்தின் கீழ்ப்படியில் சத்தற்று, சாரமற்று, உரமுமற்ற சக்கை வாழ்வு வாழ்ந்திடும் நிலைக்குத் தான் தாழ்த்தப் பட்டிருப்பது குறித்து மெத்தவும் வேதனையுறத் தொடங்கிவிட்டான்!
அந்தச் சாமானியனுக்கு வாழ்வளிப்போம், வாரீர் என அழைக்கின்றேன்.
விழிப்புணர்ச்சியின் முனைப்பு!
பட்டதாரிகளே! சாமானியனுக்கு வாழ்வளிப்போம் என்பது சாமானியமான வேலையல்ல, அது சாமானியமற்ற செயலுமாகும்.
இன்றைய சூழ்நிலையில் சாமானியன்—சராசரி மனிதன் சாமானியத் தன்மையிலிருந்து விடுபட்டு வருகிறான் வேகமாக.
சமுதாயத்தில் தனக்கு இழைக்கப்படும் பொல்லாங்கினைப் பூரணமாக உய்த்துணரமுடிகிறது, அவனால், நேர்மைக் கேடான போக்கினை, முறையற்ற செயல்களை தீங்கிழைப்புகளை உணர்கிறான்; விழிப்புணர்ச்சியின் முனைப்பு—எண்ணத் தெளிவின் எழுச்சி மேலோங்கிவிட்டது, சாமானியர்களிடம்
எண்ணப் பேரொலிகள்!
சாமானியர்களிடம் ஏற்பட்டுள்ள இத்தகு வியத்தகு விழிப்புணர்ச்சியின் முனைப்பின் விளைவாக ஆதிக்கத்தை எதிர்த்து எங்கும் கலகம், கலக்கம், கிளர்ச்சி, குழப்பம் தோன்றிடுவதைக் காண்கிறோம்.
சராசரி மனிதனிடம் கிளர்ந்துள்ள எண்ணத் தெளிவின் எழுச்சியின் காரணமாக, அதன் தொடர்பாக அநீதியை எதிர்த்து அணிவகுப்புகளும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நித்தம் நித்தம் நடைபெற்று வருவதும் தெரிந்தது தானே.
ஓயாது உழைத்தும் பசித்திருக்கும் நிலைதனையே தோழமையாகக் கொண்டு வாழ்ந்திடும் உழைப்பாளி—தனது உழைப்பின் அருமைபெருமைகளை உயர்த்துணர்ந்திடும் படித்தறியாப் பாமரன், சமுதாயத்தில் தனக்குரிய முக்கியத்துவத்தை—மேம்பட்ட வாழ்வினை—மேல்படி நிலையினைக் கேட்கிறான், அடைந்திடத் துடிக்கிறான், எட்டிப் பிடித்திடவும் முனைகின்றான், இன்று.
இதன் பயனாக சமுதாயத்தில் மேல், கீழ் என்ற சண்டையும் சச்சரவும், கருத்து வேறுபாடும், மாறுபாடும் மேலிடத் தொடங்கியுள்ளன. முரண்பட்ட தன்மைகளின் எதிரெதிர்த் தாக்குதல்களால் கலகங்கள் விளைகின்றன. எழுச்சி முழக்கங்கள்; எண்ணப் பேரொலிகள், அழுத்தந்திருத்தமான ஆர்ப்பாட்டப் போர்க் குரல்கள் கேட்டபடிதானே உள்ளன?கேலிக்குரியதல்ல
விழிப்புற்ற எழுச்சியின் பேர் விளைவுகளை நாடுகள் பலவும் உணர்ந்துள்ளன! கால வேகத்தினையொட்டிக் கருத்து மாற்றத்தை மேற்கொண்டு விட்டன! காலக் கூறின் கூர்மைக்கேற்ப வளைந்து கொடுத்து முன்னேறி வருகின்றன! சமுதாயத்தில், சாமானியருக்கு உரிய, உகந்த மதிப்பிடம் தரப்பட்டுவிட்டது. வாழ்வு நிலை மேன்மைப்படுத்தப் பட்டிருக்கிறது, அங்கெல்லாம்!
உழைப்பின் உயர்வும், பண்பும் பலனும் பயனும் உறிஞ்சப்பட்டு வந்த நிலை மாறிவிட்டது! ‘எல்லாம் அவனுக்கே—சாமானியனுக்கே!’ என்ற தலைகீழ் நிலைமை—தகுதியான தன்மை கோலோச்சுகிறது, நாடுகள் பலவற்றிலும்! காலத்திற்கேற்ற கோலம் இது! ஆயினும் கேலிக்குரியதல்ல! கண்ணியமான நடத்தை! நல்லுலகின் உன்னதமான போக்கு!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
பட்டதாரிகளே! நீங்கள் அனைவரும் ஓர் உறுதிப்பாட்டினை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும், இன்றே, இங்கேயே, இப்போதே!
ஆம்! சாமானியனை—சராசரி மனிதனது வாழ்வினை உயர்த்திடும் உன்னதமான பணிக்கு உங்களை, உமது சிந்தனையை, செயலின் சிறப்பை அர்ப்பணித்திடல் வேண்டும்! “எம்மை அர்ப்பணித்திடுவோம், அந்தப் புனிதக் கடமைக்கு” எனச் சபதமேற்றிடுங்கள்! நலன் விளையும் செயலுறுதிச் சூளுரையுங்கள்!
நல்லுலகின் உன்னதமான போக்கினில் நடந்திட நாம்—நமது நாட்டவர் ஒரு சிறிதும் பின்னடைந்திடோம்! பின் தங்கிவிடவே மாட்டோம்! சாமானியனை—சராசரி மனிதனைச் சமுதாயத்தின் கீழ்ப்படியிலேயே பின் தங்கவிட்டுத் தத்தளித்துத் தவித்திடச்செய்திடோம்! காலத்திற்கேற்ற கோலம் கொண்டிடுவோம்! கருத்து மாற்றம் பெற்றிடுவோம்; கடமையாற்றுவோம்! கண்ணியமாக நடப்போம்; இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து பிறழ்ந்திடவே மாட்டோம்! இதுவே நும் சபதம் ! சூளுரையாகட்டும்! உறுதிப்பாட்டின் செயலுமாகட்டும்!
கெட்டியான அடித்தளம்
சமுதாயத்தின் அடித்தளமான—மனித குலமனைத்துக்கும் முதுகெலும்பான முக்கியமான ஆதாரமுமான சாமானியனது வாழ்வு நிலை, கெட்டியாக—உறுதியாக—எச் சுமைதனையும் தாங்கிடும் பெருந்திறன் படைத்திட்டதாக அமைந்திடல் வேண்டும். அமைக்கப்பட்டதாகவும் வேண்டும்! அப்போதுதான் சமுதாயத்தின் மேல்தளம்—கட்டிடம் வலிவும் பொலிவும் கொண்டதாகிட முடியும்—வானுயர் மாடங்கள் கூடங்கள், கூட கோபுரங்கள் எனத்தக்க பேரெழில் மாளிகைகளை மணி மண்டபங்களைச் சமைத்திடவும் முடிந்திடும்!
அடித்தளம் கெட்டிப்பட்டிராவிட்டால் கட்டிடம் கலனாகி விடும், மிகக் குறுகிய காலத்திலேயே! முதுகெலும்பு குறையுடைத்து என்றால் கூனன்தானே மனிதன்! ஆதாரம், அற்பம் சொற்பம் என்றிருந்தால் சுமைதாங்கி சுக்கு நூறாகி உடைந்தழிந்து போய் விடத்தானே செய்யும்! பளுவினைத் தாங்கிடுமா அது?
முதற்கோணல் முற்றுங்கோணல் என்பர்! மூலமே தொடக்கமே தவறானது—சீர்கெட்டது என்றிட்டால் சிதைந்த சித்திரந்தானே உருப்பெறும்! எனவே சமுதாயப் பணியினைச் சீராகத் தொடங்கிடுவோம்! அடித்தளத்தைக் கெட்டிப்படுத்திடுவோம்! கூனிக் குறுகிக் கிடக்கும் சாமானியனது வாழ்வினைச் சிறக்கச் செய்திடுவோம்! நிமிர்த்தி நேர் ஆக்கிடுவோம்!நல்லுலகந்தனை நோக்கி...
வலுவற்ற, சுமைதனைத் தாங்கிடும் திறனற்ற அடிப்படையிட்டுக் கட்டிடம் கட்டுவது, இடிந்த வீட்டுக்கு முன்கூட்டியே அடிக்கல் நாட்டுவதற்குத்தான் ஒப்பாகும்! சாமானியர்கள் கூனிக் குறுகி வாழ்ந்திடும் நிலையிலையே தவித்து தத்தளித்திடும் நிலையினைச் சீர்ப்படுத்திடாமல், சமரசமும் சன்மார்க்கமும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த சீரான சமுதாயம் அமைத்திட முனைந்தால் என்ன ஆகும்? சமரும் சச்சரவும், போரும் பூசலும் மேலிட்டுக் காடென மண்டிக் கிடக்கும் சீர்கெட்ட சமுதாயந்தானே உருப்பெற்றுவிடும்! சீர்கெட்ட நிலைமைக்கு முன்கூட்டி வித்திடும் பழிகேட்டுக்கு அச்சாரந்தானே இச்செயல்!
கேடுபாடுகளுக்கு இடங்கொடோம்! பழிகேட்டுக்கு வித்திடவே மாட்டோம்! காலத்திற்கேற்ற கோலம்—கருத்து மாற்றம் கொள்வோம்! சாமானியனை வாழ்விக்கும் நல்லுலகந்தனை நோக்கி நடந்திடுவோம். வாரீர், வாரீர்!
மேதக்க உயர்குடித் தமிழ் மரபின் வழித் தோன்றல்களே! தமிழ் மரபின் சீர்மிகு மாண்பினையும், ஏற்றமிகு பண்பினையும், உச்சிமேல் வைத்து மெச்சிடத்தக்க செயல்பாட்டுத் திறனையும் வழிவழிச் சொத்தாகப் பெற்றுள்ளவர்களே! பட்டதாரிகளே! சாமானியனை வாழ்வித்திடும் நல்லுலகந்தனை நோக்கி நடந்திடும் உன்னதமான பணிக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்! மெத்தவும் பொருத்தமானவர்கள் நீங்கள் தான் அதற்கு!
நல்லுலகந்தனை நோக்கி நீவிர் தொடங்கிடும் பயணத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் நமது வாழ்வும் வளமும் நாட்டின் உருவும் திருவும் அமையப்போகின்றன. மறவாதீர் இதனை! வெற்றி நடை போட்டிடுங்கள், மிகவும் விரைவாக!பேரியக்கச் சக்தி
சமுதாயச் சீரமைப்பு என்பது என்ன? அதற்கெனவே ஆற்றப்பட வேண்டிய காரண காரியங்கள் யாவை? என்பது குறித்து ‘உட்ரோவில்சன்’ அவர்கள் தெரிவித்துள்ள கருத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் காணுங்கள்:—
“சமுதாயச் சீரமைப்பு என்பது கீழ மட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டுமே தவிர, மேல் மட்டத்திலிருந்து அல்ல. சாதாரண சராசரி மனிதனது எண்ணங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் எண்ணியுணர்ந்து இணைத்துச் சிந்தித்துச் செயலாற்றிட வேண்டும். அதுதான் மனிதத் தன்மை, மேம்பட்ட அறிவு—ஆற்றல் என்பது.”
“சுவைக்கத்தக்கதான கனி குலுங்கிடும் நல்மரத்தின் எழிலான வளர்ச்சியைப் போன்றதே சமுதாய வாழ்வு.”
“நில வளமும், நீர் வளமும், உர வளமும் மெத்தவும் பொருந்திடின் கனிமரம் செழித்துக் கொழித்து வளர்ந்திடும்; பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்திடும்.”
“சமுதாயம் முழுமையும் நல்ல மன வளமும் சீரிய பண்பும், பயனுறு செயல் திறமும் படைத்ததாக அமைந்திடல் வேண்டும்; அப்போதுதான் வாழ்வு சிறக்கும். பயனுள்ளதாகவும், உரமுள்ளதாகவும் ஆதாயமுள்ளதாகவும், விளங்கிடும்!”
“குறிப்பிட்ட வகையில் புறக்கண்களுக்குத் தெரியாவிட்டாலும் சமுதாய முழுமையிலும், உலகு எங்ஙணும் பல்கிப் பெருகி நீக்கமற நிறைந்திருக்கும் சாமானிய மனிதர்களது எண்ணமும் எழுச்சியும் வாழ்வும் தாழ்வுந்தான் சமுதாயச் சீரமைப்பின் பேரியக்கச் சக்தியாக—செயல்பாட்டுத் திறனாக உள்ளது.”
“சாமானிய சராசரி மக்களின் எழிலையும் ஏற்றத்தையும் பொறுத்தே எந்த ஒரு நாட்டின் சமுதாயத்தின் பெயரும் பெருமையும் சீரும சிறப்பும் அமையும்; கணிக்கப்படும்.”
உட்ரோவில்சனின் திருவாசகம் நமது தினசரிக் கடமையாகட்டும்!
எச்சரிக்கை விழிப்புணர்வு
மொட்டவிழ் மலர்களே! மலர்ந்திடும் அறிவுப் பருவத்தினரே! இளம் பட்டதாரிகளே!
பெற்றிடும், ஏற்றிடும் நோக்கம்தனிலே நுமக்கோர் உறுதி—கொண்ட கொள்கை தன்னில் மாற்றமுடியாப் பேருறுதி மெத்தவும் தேவையாகும். அதேபோழ்து அடம்பிடித்தாடும் பிடிவாதம்—வளைந்து நெகிழ்ந்திட மறுத்திடும் மூர்க்கத்தனம் உமைச் சற்றேனும் அண்டிடாமல் தீண்டிடாமல் காத்துக் கொள்வீராக! மிக முக்கியம் இது!
கருத்தினிலே தெளிவுண்டாக்கும் எண்ணக்கலவையாக சிந்தனைக் கோவையெனத் திகழுங்கள்! பொருட்படுத்திடவும் கூடாத ஏமாற்றுப் போலிப் பகட்டுரையை ஒருபோழ்தும் ஏற்றிடாதீர்! தீங்குறும் கேடான எண்ணக் கூட்டு வேண்டாம், உமக்குத் தினையளவுங்கூட!
தப்பெண்ணத் தவறான மதிப்பீட்டுக் கோட்பாட்டுக்கு ஆட்படாதீர்—வெறிக் கருத்தின் வயப்பட்டு அலைக்கழிந்து சள்ளைப்பட்டிடவே கூடாது, நீவீர்! கவனம்! கவனம்! மெத்தவும் கவனம் இதில்! அம்மட்டோ!
தவறான மதிப்பீட்டுக் கோட்பாட்டை—வெறிக்கருத்தினையே ஒழுக்கமுறை விதியென்றும் நெறியென்றும் செயல்முறைக் கொள்கை கோட்பாடென்றும் தவறாகக் கொண்டிடாதீர்! ஒன்றை மற்றொன்றாய்த் திரித்துணர்ந்து இடர்ப்பாட்டில் சிக்கிடவும் ஆகாது, நீங்கள்! எச்சரிக்கை! ஏமாறிடவே கூடாத எச்சரிக்கை! விழிப்புணர்வு—இருக்கட்டும் உம்மோடு, எப்போதும்!
காலந்தோறும் கடைப்பிடிப்பு
ஆர்வக் கொள்கைப் பித்தந்தன்னை—போலி விளக்கப் பகட்டுரையை அறிவாதார அனுபவமென்றும், மெய்ம்மையுண்மையென்றும் இடம்மாற்றிப் பொருள் மாற்றம் கொண்டிடும் மயக்கம்—மருள், மருட்சியிவையெதுவும் உமைப்பற்றிப் பிடித்தாட்டிடுதல் ஆகாது! தக்கதுவே அன்று அது—அப்போக்கு! விழிப்போடிருங்கள், எப்போதும் தப்பாமல்!
“வெய்யிலின்போதே உலர்த்திக்கொள்!” “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” “தருணம் பார்த்துத் தாக்கிடுங்கள்” என்பர் ஆன்றோர். காலம் கனிந்திருக்கும்போதே மின்னலெனக் கடுகிப் பாய்ந்து காரியத்தைச் சாதித்திடுங்கள். இசைவான இளக்கம் ஏற்பட்டதுமே இரும்புருக்குக் கலவைக் குழம்பினை வார்ப்படத்தில் வார்த்தால்தான் நேர்த்தியான உருக்கிரும்பும் நல்வடிவம் பெற்றிடும் என்பதனை மறவாதீர்! இந்தச் செயல்பாட்டுத் திறனை மறவாதீர் கடைப்பிடித்திடுங்கள் காலந்தோறும்.
அடிமை நிலை—அடிவருடிப் பிழைத்திடும் வாழ்க்கை முறைதனைத் தவிர்த்திடுங்கள்! அஞ்சியஞ்சிக் கெஞ்சிடும் நிலை கொஞ்சமும் வேண்டாம் நுமக்கு! விலகி நில்லுங்கள்—மெத்தவும் தூரத்தே! தொலை தூரத்தே! முடிவில்லை, இதன் எல்லைக்கு.
நேர்மைக் கேட்டினை, நியாயமற்ற போக்கினை—அநீதி அக்கிரமத்தை, முறையற்ற உரிமைப்பறிப்புத் தீங்கிழைப்புச் செயல்களைக் கண்டிக்க முன்வருவீர்! மறுப்புரைத்துச் செயலாற்ற இயலாதாராகிடாதீர். உறுதுணையாய் உதவிடும் ஆற்றலற்று ஒதுங்கிப் போய்விடவும் கூடாது, உம்மில் எவரும்! முனைந்து, அநீதிக்கு எதிரான வழக்குரைப்பீர். ஆர்வமுடன் வாதிட்டுப் பெருவெற்றி கண்டிடுவீர்! தப்பாதீர், தவறாதீர் இத்துணியில் ஈடுபடத் தயங்காதீர்! தட்டுத் தடங்கலின்றித் தொடரட்டும், இப்பணியும்!
முக்காலும் உண்மை!
நும் நோக்கம் நன்னோக்கம் என்றிட்டாலும் நும் கருத்து மேலான கருத்தெனவே இருந்திட்டாலும், நும் நோக்கைப் பிறன் மீது எல்லைக்கடந்து முழுதாக ஏற்றிடவே முனைந்திடுதல் நன்றன்று! நும் கருத்தினையே மற்றவர்பால் முந்தித் துருத்தி முடிபாகத் திணித்திடத் துடித்திடுதல் ஆகாது. முறையுமன்று! உணர்வீர் இதனை என்றென்றும் உணர்வீராக. முற்றுப்புள்ளி வேண்டாம் இதற்கும்.
பண்டைத் தொன்மைப் பழமொழியாம், “கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்னும் மூதுரையை, மூத்தோர் சொல்வாக்கினையே கவனத்தில் இருத்திடுங்கள். மேற்கொண்டும் ஒழுகிடுவீர், மெத்தவும் உண்மை இது முக்காலும் உண்மை.
ஊரறிய ஏற்றிப்போற்றிடும் சொல்தனைச் செயலுருப்படுத்திடுங்கள். கிஞ்சிற்றும் தயக்கம்— தள்ளாட்டம்—தடுமாற்றம் எட்டிப்பார்த்திடவும் இடமின்றிச் செயற்படுங்கள். உலகறியப் பறைசாற்றிப் பரப்பிடும் நன்முறை நெறியை நடைமுறைப் படுத்திடத் தவறிடவே கூடாது! எத்துணை இடரும் இடர்ப்பாடும் இடையிடையே வந்துற்று உமைவாட்டி வதைத்திடினும் வளையாதீர், அஞ்சிப் பின் வாங்கிடாதீர், காரியம் நடக்கட்டும்! காலமெல்லாம் நீளட்டும், இந்த நெறியும் முறையும்.முடியவில்லை, தொடரும்!
பட்டதாரிகளே! உமக்கிடப்பட்டிடும் பணி, மெத்தவும் பெரியது. சமுதாயத்திற்காகவெனச் செய்தாக வேண்டுமென்று சுட்டிக்காட்டிக் கட்டளையிடப்பெறும் வேலையின் சுமை கூடுதலானது. கடமைப் பொறுப்புக்கான உழைப்பு மிகவும் கடுமையானது.
பெருத்த மருட்சித் தோற்றம். மிகமிகப் பெரிய அளவினது தான் செயற்களம். சமுதாயச் சீரமைப்புப் பணியின் பேருருவெளித் தோற்றங்கண்டு மலைப்பும் மருட்சியும் தோன்றிடத்தான் செய்யும், எவருக்கும்! மலைக்காதீர்! மருளாதீர்!
எங்கும் பரந்து விரிந்துகிடக்கும் சமுதாயப் பணியின் எல்லைக்கோடு—வகை முறை—ஓய்வறியாக் கடும் பேருழைப்பு—அளவிட்டுக் குறிப்பிட்டுக் கூறிடவும் கூடுமோ, இதனை! மெத்தவும் பொருத்தமான சொல்தான் ஏது? நம்பமுடியாத் திகைப்பூட்டும் அண்டம்—பேரண்டம்—பிரம்மாண்டம் என்பதும் பொருத்தமாகிடாதே? அதையும் விடப் பெரிதன்றோ அது. “முடியவில்லை—தொடரும்” என்றிருப்பதே அப்பணி...சமுதாயப்பணி!
ஊட்டமே உறுதுணை!
மலைப்பும் மருட்சியுமான முற்றுப் பெறாத பெரும் பரப்பில் ஓய்வறியாக் கடும் பேருழைப்பு—சமுதாயப் பணிக்குத் தேவைப்படுகிறது நிரம்ப. மிகவும் நிரம்ப!
எனினும் பணியின் அளவினைக் கண்டு நீங்கள் மலைத்திடத் தேவையில்லை. ‘நம்மால் ஆகுமா! முடியுமா’ என்ற அச்சமோ ஆயாசமோ கொண்டிடுவதும் அர்த்தமற்றது.
இப் பெரும்பணிக்கு சமூகப் பணிக்கு ஏற்ற அறிவும் ஆற்றலும், செயல்முறை நெறியும் வகையும் உம்மிடம் நிரம்ப ஊட்டப்பட்டிருக்கிறது. அஃது உமக்கு உறுதுணையாக உதவிடும் என்பதில் தப்பேதுமில்லை.பட்டப்படிப்பு மட்டுமே போதும். பல்துறையினிலும் சிறந்திடலாம். பணியெதுவும் புரிந்திடலாம் என்றிருக்கக் கூடாது. அத்தகு மெத்தனமும், மதமதப்பும் அசட்டையும் அலட்சியப்போக்கும் உமை ஒருபோழ்தும் அணைத்துக் கொள்ள இடங்கொடாதீர், என்றுமை இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.
படித்தீர். பட்டம் பெற்றுள்ளீர். மெத்தவும் சரியே! ஆனால் அதுமட்டுமே போதுமா, வாழ்வு முழுதாக மலர்ந்திட! போதாது போதவே போதாது என்பேன்!
மொட்டவிழ்ந்த மலராகத்தான் உள்ளீர்கள், மலர்ந்திடும் அறிவுப் பருவத்தினரான நீவிர்.
மொட்டவிழ்ந்த மலர், முழு வளர்ச்சியுற்றுப் பூத்துக் குலுங்கிடல் வேண்டும். பிஞ்சுவிட்டுக் காயாகி, சுவை தந்திடும் கனியாகப் பழுத்திடவும் வேண்டாமா? வேண்டும். சுவையும் பயனும் வேண்டாதார் யார், எவர்?
படித்ததை—படிப்பிக்கப்பட்டதை, தெரிந்ததை—தெரிவிக்கப்பட்டதை, அறிந்ததை—அறிவிக்கப்பட்டதை, மென்மேலும் ஆய்ந்தோய்ந்து தெளிந்திட வேண்டும் நீங்கள்.
உகந்த தோழமை!
உலக நல்லறிஞர்களின் நற்சிந்தனைகளின் சிறப்பான தொகுப்பு—செழுமையான எண்ணங்களின் செறிவான சுருக்கப் பதிப்புதான், இன்று நீங்கள்!
சிறப்புத் தொகுப்பினை விரித்தும், பிரித்தும், பகுத்தும் பாகுபடுத்தியும் உயர்த்துணர வேண்டும். சுருக்கப் பதிப்பினை விளக்கமுற மேலும் தொடர்ந்து படித்தாய்ந்து வாழ்க்கைத் தொடர்புடன் பொருத்தித் தெளிந்திடுவதும் மிக முக்கியம்.
அறிவும், ஆற்றலும், சிந்தனைச் சிறப்பும் எண்ணத் தெளிவும் பல்கலைக் கழகப் பட்டத்துடன் முற்றுப் பெற்றிடவில்லை—முழுமையானதாகிடவுமில்லை.கற்பது என்பதும், தெளிவு என்பதும், சிந்தனையின் சிறப்பு—செயல்முறை என்பதும் பல்கலைக் கழகத்திற்கு அப்பாலும் உம்மிடம் தொடர்ந்திடல் வேண்டும். அதுவே உமது வாழ்வின் உறுதுணை; உகந்த தோழமை!
நடைச்சித்திரம் பயின்றிடுங்கள்!
இத்தருணத்தில் லாபாயெட்டீ என்ற நல்லறிஞர் தீட்டியுள்ள சொல்லோவியத்தை உம்முன் படைக்கிறேன். நீவிரெல்லாம் நாளும் நடைச் சித்திரமாகப் பயின்றிட வேண்டிய அந்தச் சொற்சித்திரத்தைக் காணுங்கள்:—
“கற்கின்றேன், நான்
கற்பவை கசடறக் கற்றுக்
கருத்தூன்றித் தெளிகின்றேன்!
கேள்விச் செல்வம்
பெரும் விருந்தெனக்கு!
கேட்பன யாவையும்
ஏற்றுப் போற்றி
எதிரொளிக் கதிர்கள்
வீசிப் பாய்ச்சிடும்
நிலைக்கண்ணாடி யாவேன்
நான்! பெற்றிடும்
அத்துணை
அறிவும், செறிவும்
உருவும்
திறனும் மிக்க
புதுக் கருத்தொன்று
என்னுள்
பூத்து, மலர்ந்திட
வழிவகை
செய்திடுவேன்!
நல்லறிவனைத்தும்
மெத்தவும் பொதிந்த
கருத்தாம் அது!
எந்தன்
புதுவாழ்வுக் கருத்தும்
அதுவே!"
நல்லறிஞர் ‘லாபாயெட்டீ’ அவர்களது சொற்சித்திரத்தை மீண்டும் காணுங்கள்—பாடுங்கள்—பயின்றிடத் தொடங்குங்கள் அதனை—உம் வாழ்வின் துவக்கத்தின் நடைச் சித்திரமாக!
நடமாடும் நற்சித்திரங்களாய் உலவிடுங்கள்! நல்லறிவுக் கருத்துக்கள் பொதிந்த புதுக் கருத்துக்கள் பூத்திடும் கருத்துச் சோலையெனத் திகழுங்கள். மொட்ட விழ்ந்த மலரின் முழுமையான வளர்ச்சி-சுவைமிகு கனி குலுங்கிடும் காட்சியன்றோ அது!
உள்ளொளியின் உறுபயன்
அண்ணாமலைப் பட்டதாரிகளே! உமது வாழ்வின் சீரும் சிறப்பும் சீர்மையும் நீங்கள் கடைப்பிடித்து ஒழுகிடப் போகின்ற நடைமுறையினைப் பொருத்துத்தான் அமையும்.
நல்ல நடைமுறைகளை மனமுவந்து மேற்கொண்டிடத் தக்க செம்மையான மனவளத்தை மிகவும் உடைத்தவராக உம்மைப் பரிபக்குவப் படுத்திக்கொண்டாக வேண்டும். உமது பயணத்தின் தொடக்கம் இம்மேன்மையான அடிப்படையின் வழி நடக்கட்டும்.
பயணத்துள் எல்லாம் பெரும் பயணம்—நெடுநீள் பயணம்—நீடுநிகழ்கின்ற பயணம் என்பது நம்மை நாமே உணர்ந்து, தெரிந்து, புரிந்து பரிபக்குவமடைந்து நல்மனவளம் பெற்றுப் பண்புடையோராய் வாழ்ந்திடுதல்தான்.
இதனைத்தான் ஆன்மீகவளம்—வன்மை, ஆத்மார்த்தப் பண்பு—பலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
உள்ளியல்பு—உளப்பண்புணர்வு! உளப்பாங்கு! உள்ளொளி! இதைத்தான் ஆன்மீகம், ஆத்மார்த்தம் எனக் கூறுகின்றனர், குறிப்பிடுகின்றனர்!
உள்ளியல்பின் நல்லுறுதி! உள்ளப் பண்புணர்வின் பக்குவச் செழுமை! உளப்பாங்கின் மேம்பாட்டுச் செறிவு! உள்ளொளியின் உறுபயன் கொழித்திடும் கதிரியக்கத்தின் வீறார்ந்த வீச்சு! இத்துணையும் மெத்தவும் பொருத்தமாக, மொத்தமாக, ஓருருவாய்—ஒரேயுணர்வாய் இருப்பதுதான், செயற்படுவதுதான் ஆன்மவளம்; ஆத்மார்த்த பலம்!
நல்வெற்றிச் செய்தி!
இத்தகு, மேதகு ஆன்மவளமும், ஆத்மார்த்த பலமும் பெரிதும் உடைத்தானவர்களாக, உறுதுணையாய் உற்ற தோழமையைப் பெற்றவர்களாக நீவிரெல்லாம் உம்மைப் பரிபக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்! நீங்கள்தான், நீங்களே தான், உம்மையுணர்ந்து உள்ளொளி பெருக்கி உளப்பாங்கின் செறிவினைப் பெற்றிடல் வேண்டும் என்பதனையும் நினைவுறுத்துகிறேன்!
பயணத்துள் எல்லாம் பெரும் பயணமான, நீடுநிகழ்ந்திடும் இந்நீண்ட பயணத்தின் தலைவாயிலில், முதற்படியில் அடியெடுத்து வைத்திடும் பட்டதாரிகளே! உமது பயணம் சிறக்கட்டும்! நல் வசதியும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்று நற்பயன் விளைவித்திடுவீராக! அந்த நல்வெற்றிச் செய்தி விரைந்திடுமாக! என வாழ்த்துகின்றேன். நும் வழிநோக்கி ஏறுநடை போட்டிடுங்கள்.
வாழ்வின் நல்லிலக்கு நோக்கி நெடும்பயணம் தொடங்கினோரே! எழிற்சித்திரந் தீட்டிடப் புள்ளியிட்டுள்ளவரே! நீவிர் நும்போல் பிறரையும் ஏனைய மக்களையும் உடன் கொண்டு சென்றிடுவீர்! விளக்கமளித்து வெற்றிப் பயணத்தின் துணையாய்த் தோழமையாய்ப் பெற்றிடுவீர் ! ஈதும் நும் கடனே!கவனத்தில் இருத்துங்கள்!
பட்டதாரிகளே! உமது பெரும் பயணத்தின் இலக்கும் நோக்கும் வெற்றியின் குறிக்கோளும் பெற்றிடும் நற்பயன் விளைவும் எங்ஙனமெல்லாம் இல்லாமல் இருந்திடுதல் வேண்டும்; எவ்வண்ணமெல்லாம் பொருத்தம் பெற்று அமைந்திடுதல் நன்று; எத்தன்மைத்தான் உறுபயன் தந்திடும் வகைதனில் வெற்றி உருப்பெறல் வேண்டும் என்பது குறித்துச் சில கூறிடுகின்றேன். கருத்தூன்றிக் காணுங்கள்; கவனத்தில் இருத்துங்கள்:—
நாம்
வாழ்ந்திடும்
ஊரும் உலகும்
எப்படியிருத்தல்
வேண்டும்
என்றிடின்
மெய்யது தளர்ந்து
கையது ஏந்திப்
பிச்சை கேட்டு
இரந்திடும் மாந்தர்
இரக்கமென்ற
ஒரு பொருளிலாப்
பேராசைக்
கல்லாய்ச் சமைந்த
கஞ்சனின்
உருட்டுவிழியும்
மருட்டிடும்
பார்வையும்,
கடுந்தேவைப்
பாட்டின்
ஓயா ஓலம்,
உளமதை
உலுக்கிடும்
புலம்பல்
களை தனை
இழந்த
குற்ற நெஞ்சின்
வெளிறிய
வதனம்,
பொய்தனை யுரைத்துக்
கறைமிகப்
படிந்து
கன்றிய உதடுகள்,
இகழ்ச்சிக்
கொடுமையில்
இன்பங்
கண்டிடும்
குரூரக்
கண்கள்,
இவையாவையும்
இல்லாதொழிந்த
ஊரில், உலகில்—
நோயும் நொடியும்
பற்றிடா
உள்ளமும் உடலும்
உருவும் திருவும்
இரண்டறக் கலந்த
இல்லறவாழ்வின்
வடிவும் வழக்கமும்,
மக்கள் தம் வாழ்வினில்
மெத்தவும் பொருத்திடின்—
மாந்தர்தம்
வாழ்நாள் நீண்டிடும்;
அச்சம் அகன்றிடும்;
களிப்பு ஊறிடும்;
அன்பு செழித்திடும்,
ஊரில், உலகில்
என்பது உறுதி!
மனிதனின் மாண்பும்
மீண்டிடும்
ஊரில், உலகில்!
பட்டதாரிகளே! ஊரும் உலகும் மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டின், எப்படியில்லாதிருந்திடல் வேண்டும்! எவ்விதம் அமைந்திடல் நன்று! எப்பயன் விளைந்திடும் அதனால்! என்பது குறித்து எனது கருத்தோட்டத்தை உம்மிடம் படைத்துள்ளேன்! நும் கவனத்தில் இருத்திடுங்கள்.
“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
என்ற குறளினுக்கோர் இலக்கணமாய், வான்புகழ் வள்ளுவனின் வாய்மொழிக்கோர் நடைச் சித்திரமாய் நாட்டினைச் சமைத்திடுவோம்! சீர்திருத்திடுவோம்!
சென்றிடுவீர், வென்றிடுவீர்!
அண்ணாமலைப் பட்டதாரிகளே! இத்தகு மேதகு பணியினைச் செய்திடத்தான் நீவிரெல்லாம் பட்டத் தகுதிப்பேறுபெற்றுச் செல்கின்றீர் என்பதனை மறவாதீர்! அழியாப் புகழ்படைத்த அறிவாலயத்தின் பெருந்திறனும் பேருணர்வும் உமக்குப் பெருந்துணை புரிந்திடும் என்பது உறுதி! வெற்றியாக்கப் பேருறுதி நிச்சயம் உம்மிடம் உளது. வாழ்வினைத் தொடங்கிடுங்கள், வாழ்வுக்களம் நோக்கிச் சென்றிடுவீர், வென்றிடுவீர்!
கவலையற்ற சமுதாயம்!
வளமெலாம் பெற்ற வாழ்வு—புகழொளி மயமான வாழ்வு—உலக முழுமைக்கும் அறிவொளி பரப்பிடும் பெருமித வாழ்வு வாழ்வீராக!
வாழ்த்துகின்றேன் உம்மை, வாயார, மனதார, மகிழ்ச்சிப் பெருக்கோடு வாழ்த்துகின்றேன். வெற்றிநடை போட்டிடுங்கள், சீரணி வகுத்துச் சென்றிடுங்கள்!
கவலையற்ற, களிப்பு நிறைந்திட்ட சமுதாய நலன் நோக்கி, புன்னகைபுரி நோக்கி நடவுங்கள்! “இன்பபுரிப் பயணம்” தொடங்கிடுங்கள்! கவலையற்ற சமுதாயம் சமைத்திடுங்கள்!
வெற்றி நமதே!
- எமது நூல்கள்
- தமிழ் விடு தூது
- பழமொழி நானூறு
- முத்தொள்ளாயிரம்
- நந்திக் கலம்பகம்
- நாலடியார்
- நன்னூல் காண்டிகையுரை
- அஷ்டப்பிரபந்தம்
- பத்துப் பாட்டு
- நம்பியகப் பொருள்
- கல்லாடம்
- தொல்காப்பியம் பொருள்
- தொல்காப்பியம் எழுத்து
- தண்டலையார் சதகம்
- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- கல்லாடம்
- தனிப்பாடல் திரட்டு
- ஒளவை குறள்
- கைவல்ய நவநீதம்
- காளமேகம் தனிப்பாடல்கள்
- ஒளவையார் தனிப்பாடல்கள்
- ஒட்டக்கூத்தர் பாடல்கள்
- தமிழ் வழிபாடு
- செல்வப்பெட்டகம்
- பாஞ்சாலி சபதம்
- குயிற்பாட்டும் புரட்சிக்கவியும்
- கண்ணனின் காதல் ஓவியம்
- தில்லைத் திருநடனம்
- தம்மபதம்
- ★
- முல்லை நிலையம்
- 43, புதுத்தெரு, மண்ணடி
- சென்னை-600 001.
- எழில் ஆர்ட் பிரிண்டர்ஸ்,
- சென்னை-5