உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/006

விக்கிமூலம் இலிருந்து

5. அழகர்கோயிலும் சமூகத்தொடர்பும்

5. 0. ஆண்டாரும் சமயத்தாரும் என்ற முந்திய இயலில் ஆண்டாரின் சமயத்தார் வழியாக நாட்டுப்புற மக்களை இக்கோயில் வைணவத்திற்குள் ஈர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி காட்டப்பட்டது. நாட்டுப்புற மக்களோடு இக்கோயில் இன்றளவும் கொண்டுள்ள உறவு விரிவாக ஆராயப்படவேண்டிய செய்தியாகும்.

இக்கோயிலோடு தொடர்புள்ள நாட்டுப்புற மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதியாராகவே இருப்பதனை இக்கோயில் திருவிழாக்களை நேரில் காண்போர் எளிதில் உணர இயலும். ஆண்டாரின் சமயத்தார்களிலும் திருப்புவனம் சமயத்தாரைத் (நாயுடு) தவிர ஏனையோரனைவரும், கள்ளர், இடையர், பள்ளர்-பறையர் (அரிசனர்) ஆகிய சாதியோரே. இக்கோயில் திருவிழாக்களை ஆய்வாளர் கூர்ந்து நோக்கியபோது குறிப்பாகக் கள்ளர், இடையர், பள்ளர்-பறையர் (அரிசனர்), வலையர் ஆகிய சாதியினர் இக்கோயிலோடு உறவு கொண்டிருப்பது தெரிய வந்தது.

இக்கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியின் அடிவாரக் கிராமங்களில் வலையர்களில் ஒரு பிரிவினரான வன்னிய வலையர் மிகுதியாக உள்ளனர். கோயிலிலிருந்து கிழக்கே இருபத்தைந்து மைல் தொலைவுவரை உள்ள பகுதியில் பெருவாரியான ஊர்களில் கள்ளர்களே மிகுதியாக உள்ளனர். அண்மையிலிருப்பதன் (proximity) காரணமாக இவ்விரு சாதியாரும் இக்கோயிலோடு உறவு கொண்டிருப்பது இயல்பானதாகவே காணப்படுகிறது. வலையர்களைவிடக் கள்ளர்கள் எண்ணிக்கை வலிவும் (numerical strength) போர்க் குணமும் மிகுதியாக உடையவர்கள்.

மதுரை, முகவை மாவட்டங்களின் கிழக்குப் பகுதியிலிருந்து இடையரும். பள்ளர்-பறையரும் (அரிசனங்களும்) இக்கோயிலுக்கு மிகுதியாக வருகின்றனர். ‘கண்ணன் வளர்ந்தது ஆய்ர்க்குலம்’ என்பதனால் இடையர்கள் வைணவத்தின்மீது பற்றுக்கொள்வது நடைமுறையில் இயல்பான ஒன்றே. இடையர்களைப் போலவே பள்ளர்-பறையரும் (அரிசனங்களும்) இக்கோயிலில் காட்டும் ஈடுபாடு ஆய்விற்குரிய ஒரு செய்தியாகும்.

முறையே கள்ளர், இடையர், பள்ளர்-பறையர் (அரிசனர்), வலையர் ஆகிய சாதியினர் அழகர்கோயிலோடு கொண்டுள்ள உறவு இவ்வியலில் விளக்கமாகக் காட்டப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/006&oldid=1820730" இலிருந்து மீள்விக்கப்பட்டது