அழகர் கோயில்/027
தோற்றம்
பிற்சேர்க்கை II : 7
ராக்காயி வர்ணிப்பு
(அச்சிடப்படாதது)
- சோலைமா மலை சுந்தரராசா அரிநமோ நாராயணா அச்சு தானந்தா
- அடர்த்தாய் ரகுராமா ஐயனே கோவிந்தா
- அரிஹரி மாதவா அனைவோர்க்கும் காட்சிதந்த ஐயனேவா கோவிந்தா
- கரியினிடர் தீர்த்தோன் பக்தர்களை கைதூக்கிவிட்ட கண்ணா
- 5 கண்ணா மணிவண்ணா பாற்கடல்வாசா கரியமாலே முகுந்தா
- விண்ணவர்க்காய் கடலை முன்னைநாள் கடைந்த வித்தகா மேகநிறம் போன்ற கண்ணா
- சிவசிவா நமசிவாயம் சிவனே நமசிவாயம்
- சிவசிவா என்ற சொல்லைச் சிந்தையிலும் நான் மறவேன்
- அரிஓம் நமசிவாயம் ஆதிலிங்க நமசிவாயம்
- 10 அரியும் சிவனை அனுதினமும் நான் மறவேன்
- அரியை வணங்கினேன் அப்பாதம் தஞ்ச மென்றேன்
- சிவனைத் தொழுதேன் சிவன்பாதம் தஞ்ச மென்றேன்
- சித்தி வினாயகா உன் திருவடியைப் போற்றி செய்தேன்
- பால சுப்பிரமணியா உன்பாதா ரவிந்தம் பணிந்து உன்னை நான் தொழுதேன்
- 15 தாயே கலைமகளே சரஸ்வதியே உன்னைத் தாள்பணிந்து தெண்டனிட்டேன்
- அந்தி பகல் அறுபதி நாழிகையும்
- முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாட் சுமந்திருந்து
- தொந்தி சரியச்சரியத் துடை நடிங்கிப் பெற்றெடுத்த
- மாதா பிதா அவர் மலரடியைப் போற்றி செய்தேன்
- 20 குருவைப் பணித்தேன் குருபாதம் போற்றி செய்தேன்
- எல்லை வணங்கினேன் எல்லை காக்கும் எங்கள் எஜமானைத் தஞ்சமென்றேன்
- மண்றை வணங்கினேன் எங்கள் மண்டு ஆரப்பாளையம் காக்கும் ஆதிசடாமுனியன்
- சலுப்பர் குடிகாத்த சாமிமுனியாண்டி உந்தனையும் தாள்பணிந்தேன்
- மண்றுக் கதிகாரி மகாமுனியோடு பக்கத் துணையிருக்கும் சோணையாஉன் பாதமலர் போற்றி செய்தேன்
- 25 சொல்ல வருந்தாய் அருள் கொடுக்கவேணும் சூட்டுக்கோல ராமலிங்கம் சொல்லியே உன்னை நான்பணிந்தேன்
- மண்றுக் குகந்த தெய்வம் அத்தனையும் நான்வணங்கி
- அட்டாளச் சொக்கலிங்கம் அங்கயற்கண்ணி அழகு மீனம்பாள் தலைவாசல்
- பித்தாளைக் கம்பம் பொற்றாமரைக் கரையும் சித்தி விநாயகனைப் போற்றிசெய்தே
- தெண்டனிட்டேன் தலங்காத்த பாண்டிமுனி பழமதுரைச் சாமி பாதாரம் நான்பணிந்தேன்
- 30 மதுரைக் கரசாட்சி செய்யும் வீரையாஉன் மலரடியை நான்பணிந்தேன்
- மதுரை வீரனோடு தேவதைகள் எல்லாம் மலர்தூவித் தெண்டனிட்டேன்
- படிவாசல் காக்கும் பார மலையாளி பகவானே கருப்பையா உன் பாதமலர் பணிந்தேன்
- கம்பைக் கதிகாரி அந்தக் காணிக்கருவலம் எங்க கட்டுப்படா மேனி கருப்பன் கயிறுபடா ராணுவம்
- பண்ணைக் கதிகாரி படிவாசல் காக்கும் பாரமலைக் கீதாரி
- 35 கோம்பைக் கதிகாரி பெரியகருப்பா நீ குடவரைக்குங் கீதாரி
- எல்லைக் கதிகாரி பெரியகருப்பு எஜமான் வாசலுக்குங் கீதாரி
- மலைக்கு மதிகாரி மண்மலைக்கும் கீதாரி
- படிக்கு அதிகாரி எங்க பாட்டமார் ஆண்ட பதினெட்டாம்படி காக்கவந்த கருப்பையா நீ பாரமலைச் சேவுகமே
- கதவில் அரிவாளாம் மலையாள வேங்கை உனக்குக் கற்படியில் சோலியுண்டாம்
- 40 படியில் அரிவாளம் கருப்பையா உனக்கு அந்தப் படிவாசல் சோலியுண்டாம்
- கோம்பை அரிவாளாம் கருப்பையா உனக்கு அந்தக் குடவரையில் சோலியுண்டாம்
- கருப்பன் வலதுபுறம் ராக்கு இடதுபுறம் இந்த விதமாகவே இருக்கும்
- ராக்காயி அம்மன் சிறப்பு சீராகப் பாடுகிறேன்
- .............இந்தப் பதியில் இருபுறமும் நதி ஓட
- 45 ............பச்சிகளும் தானெழுந்து ஏக்கும்பலாய்க் கூடி
- அடர்ந்து நீரில் குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து
- விண்ணில் பறந்துவந்து ராக்கப்பன் சாவடியில் வெகுவேக மாகத் தானமர்ந்து
- அரிஅரி யென்றே ஓலமிடக் கேட்டு என்ஆசான் அவரெழுந்து
- இடையினில் கமண்டலத்தைத் தான்பிடித்து வேகவதி தனிலே
- 50 அமர்ந்து நீரில் தான்குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து
- பூசை முதலான அத்தனையும் முடித்து
- நேமமுடன் நிமிசமதில் இடையினிற் பணிபூண்டு நித்ய பரிபூரணமாய்
- சாமமொடு ருக்குயஜுர் அதர்வணம் என்றுரைக்கும் சதுர்வேத ஆகமமும்
- நாமகளைப் போற்றிசெய்து நல்லகொடி நாட்டிக் கருட மேடையின் மேல்
- 55 அமர்ந்து கனி தொடுத்து தொடுத்ததோர் பாடலதை ஆழிய லைபோல் சபையில்
- தெரிந்தவரை பாடி வைத்தார் என்ஆசான் சிரிமொட்டையக் கோன் தெளிதமிழாய்
- ...........விஞ்சை படியாய்ப் புகன்று குதுகலமாய்ச் சிலகாலம்
- தளராது தொன்றுதொட்டுப் பிச்சையான் பெற்றுத் தனயன் வந்தேன் மாசபைக்கு
- நாவால் வரும்பிழைகள் ஊகித்துணரும் நாவலரும் பாவலரும்
- 60 ஓர்ந்து ஒருமனதாய்க் கேட்க அவை கூறுகிறேன் அந்தக் கோபாலன் பொன்னடிக்கே
- கருந்தேன் ஒழுகுதாம் அழகமலைக் காடு-என்னைப் பெத்தா ராக்கு நீயிருக்கும் கல்வயிரத் தொட்டியிலே
- செந்தேன் ஒழுகுதாம் செம்பவள வாயழகி செகநாதன் தங்கச்சி செல்வி ராக்காயி நீயிருக்கு மந்தச் சித்ரவர்ணத் தொட்டியிலே
- மலைத்தேன் ஒழுகுதாம் மாதாளரசி நீயிருக்கும் மாசிமலைக் காடு மாணிக்கத் தொட்டியிலே
- பசுந்தேன் ஒழுகுநாம் பாரமலைக்காடு பத்தினியாள் ராக்காயி நீயிருக்கும் பவளவர்ணத் தொட்டியிலே
- 65 தீர்த்தம் ஒழுகுதாம் தேக்கமலைக் காடு திருமாலுட தங்கையிருக்கும் அந்த தேக்கமலைப் பண்ணை திருமஞ்சனத் தொட்டியிலே
- பத்தினியாள் ராக்காயி பாரமலைக் காடு பளிங்குவர்ணத் தொட்டியிலே பாங்குடனே குலவையிட்டாள்
- குலவைச்சத்தம் தான்போட்டு கோம்பைமலைக் காடு கோல வர்ணத் தொட்டியிலே குடியிருந்தாள் ராக்காயி
- சிட்டுவந்து நீரருந்தும் செல்ல மலையாளி கருப்பன் கூடப்பிறந்த ராக்காயி நீயிருக்கும் சித்ரமணித் தொட்டியிலே
- பச்சிவந்து நீரருந்தும் பாரமலைக் காடு பாரளந்தோன் தங்கையிருக்கும் பஞ்சவர்ணத் தொட்டியிலே
- 70 மயிலுவந்து நீரருந்தும் மாதாளிருக்கும் மாசிலைக் காடு மஞ்ச வர்ணத் தொட்டியிலே
- குயிலுவந்து நீரருந்தும் கோம்பைமலைக் காடு கருப்பன் கூடப் பிறந்த ராக்காயி நீயிருக்கும் அந்த குளிர்ந்தவனத் தொட்டியிலே
- அன்னம்வந்து நீர்குடிக்கும் அருவிமலைக் காடு அன்னக்கிளியாள்
- அருங்கிளியாள் ராக்கு நீயிருக்கும் அழகுவர்ணத் தொட்டியிலே
- தீர்த்தம் குறித்ததுமே திருமாலுட தங்கச்சி திருமஞ்சன நீராட
- 75 குளித்து நீராடினாள் கோவிந்தன் தங்கை கோலவர்ணத் தொட்டியிலே
- வாகுடனே தானெழுந்து வாரிக் குளித்தாளாம் வச்ரமணித் தொட்டியிலே
- குளித்து முழுகியங்கே கோலவர்ணத் துகிலுடுத்தி கோவிந்தன் தங்கச்சி
- கோதி பயிருணத்தி கோடாலிக் கொண்டையிட்டு குங்குமப் பொட்டுமிட்டு
- வாரி மயிருணத்தி வலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டையிட்டாள்
- 80 தாரி மயிருணத்தி தலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டையிட்டாள்
- அள்ளி மயிருணத்தி அழகுவர்ணக் கொண்டையிட்டாள்
- அப்போ காலநேர மாகுதென்று கருமலையைவிட்டு
- காட்டு இடைச்சி மலையாள மெச்ச கருப்பனுட தங்கச்சி
- கட்டழகி ராக்காயி அப்போ வெகுநேர மாகுதென்று அண்ணனுட குடவரையப்
- 80 பார்வையிட வேணுமென்று சொல்லி விமலி பரமேஸ்வரி
- சாம்பிராணி வாசகத்தி சாமளன் தங்கச்சி சதிருடனே தானெழுந்து
- மாசிப் பிறையழகி மகுடகும்பத் தேரழகி
- வார்ப்புச் சிலையழகி ராக்காமி வச்ரமணிப் பொட்டழகி
- செப்புச் சிலையழகி செகதாதன் தங்கச்சி செந்துருக்கப் பொட்டழகி அம்மம்மா!
- 90 உன் ஆடை கொடியிலே ராக்காயி உன் ஆபரணம் பொட்டியிலே
- சேலை கொடியிலே ராக்காயி உன் செல்லநகை பொட்டியிலே
- மாலை கொடியிலே ராக்காயி உன் மஞ்சணையோ பொட்டியிலே
- பூசினாள் மஞ்சனையை அவ பூமானுட தங்கச்சி அது பொன்னுங் கழுத்திருக
- இட்டாள் சிவப்பு இழுவினாள் மஞ்சனையை
- 95 தொட்டாள் சிவப்பு தொடுத்திட்டாள் பூஞ்சரத்தை
- வெகுநேர மாச்சுதென்று விமலி பரமேஸ்வரி வெள்ளிமலை விட்டெழுந்து
- மக்கள் பதினாறும் மாதரசி தானழைத்தாள்
- புள்ளை பதினாறும் பெருமையுடன் அழைத்தாள்
- வாருங்கள் மக்களா என் கூடப்பிறந்த அண்ணன் கருப்பன்
- 100 உங்க தாய்மாமன் மலையாளி இருக்குங் கதவழக நாமபோய்ப் பார்த்து வருவோ மென்றாள்
- மக்களே மாலைப் பொழுதாச்சு மாடடையும் நேரமாச்சு
- கால நேரமாகுது உங்கமாமன் கருப்பனுட கதவழக பார்ப்போமென்று
- இக்கலிலே புள்ளையாம் இடையிலே செம்பனொண்ணாம்
- கக்கத்திலே புள்ளையாம் கனக்கையில் செம்பனொண்ணாம்
- 105 மடியிலே புள்ளையாம் மார்பிலே மைந்தனொண்ணாம்
- அட்டத்தில் புள்ளையாம் அருகிலே மைந்தனொண்ணாம்
- பக்கத்தில் மைந்தரெல்லாம் பண்பாய் நடக்கவிட்டு
- பாரமலை ராக்காயி அவ பாரவழிகூடி
- பாலகர்களைத் தான் கூப்பிட்டழைத்து பாரக் குலவையிட்டாள்
- 110 குலவைச்சத்தங் கேட்டவுடன் குழந்தையெல்லாம் ஓடிவந்து
- சீறிக் குலவையிட செம்பன்மார் முன்னடக்க
- மாதாள் குலவையிட மைந்தன்மார் முன்னடக்க
- தாயார் குலவையிட நீபெத்த தனயன்மார் முன்னடக்க
- செல்வி குலவையிட செய்யன்மார் முன்னடக்க
- 115 அன்ன நடைநடந்து அழகமலைக் காடு அருவிமலைவிட்டு
- செல்ல நடைநடந்து சித்ரவர்ணக் கதவு சீரழகப் பார்வையிட
- பாலர்களைக் கூட்டி பாங்காய் வழிநடந்து
- பண்ணை யிடைச்சி பந்தானச் செல்வி பலபுள்ளைக் காரி பத்தினியான் பொன்ராக்கு
- கோம்பை யிடைச்சி மலையாளி கூடப்பிறந்த கொம்பனையாள் ராக்காயி
- 120 குழந்தைகளைக் கூட்டி அண்ணன் கருப்பன் குடியிருக்கும்
- குடவரைக் கதவு கொல்லிமலைப் பொன்படியை பார்வையிட வேணுமென்று
- கருப்பன் இருக்கும் பதினெட்டாம்படிக் கதவழகப் பார்ப்பதற்கு என்னைப்பெத்தா ராக்காயி
- மக்களைக் கூட்டிமாதரசி வாராளாம் வடக்குக் கதவு தெற்குக்கதவு
- சுப்பக்கோன் பச்சக்கோள் நாட்டிவச்ச செல்லக் கதவழக பார்வையிட
- 125 வாசல் திறந்து வண்ணக் குலவையிட்டு வடக்குக் குடவரையத் தேடி ராக்காயி வாராளாம்
- செல்லி நடைநடந்து ஏழுமலைக் காடு இந்திரவர்ணத் தொட்டிவிட்டு இளவரசி வாராளாம்
- சொல்லி நடைநடந்து சுந்தரராஜன் தங்கச்சி சோலைமலை விட்டு சுருக்குடனே வழிநடந்து
- நடையாம் நடையழகி நாராங்கிப் பட்டழகி
- நாராயணன் தங்கை நடுமலைப் பாப்பாத்தி
- 130 இடையாம் இடையழகி இளையானுட தங்கை இருண்டமலைப் பாப்பாத்தி
- இண்டஞ்செடி காடு ஏழுமலைப் பண்ணை இருண்டமலை கடந்தாள்
- மஞ்சமலைக் காடு அன்னங்கள் வாழும் மாவூத்துப் பண்ணைவிட்டு
- மக்களைக் கூட்டி மாதரசி வாராளாம்
- தேக்குபலா நிறைந்த செல்லிமலைக் காடு
- 135 வீரமலை விட்டு விமலியவள் வாராளாம்
- காட்டுமாடு மேஞ்சடையும் கமுகு தென்னை நிறைந்த
- கருமலையை விட்டுக் கட்டழகி வாராளாம்
- சிட்டுமாடு மேயும் செவலைப் பசுமேயும்
- செங்கமலை விட்டு செல்வியவள் வாராளாம் அண்ணன்
- 140 கருப்பனுட கதவு சீரழகப் பார்வையிட
- மயிலைப் பசுமேயும் மண்மலையை விட்டு
- மக்களைக் கூட்டி மலையாளி கருப்பன் மணிக்கதவத்- தேடி மாதரசி வாராளாம்
- புள்ளிப் பசுமேயும் பொருந்துமலைக் காடு பொய்கைக்கரைவிட்டு
- பூமானுட தங்கச்சி புள்ளைகளைக் கூட்டி பொற்படியாள் வாராளாம்
- 145 மலைப்பசு மேயும் மாசிமலையை விட்டு மக்களைக் கூட்டி
- மைக்காரி ராக்காயி மாதாள் குலவையிட்டு வாராளாம்
- வரும் வழிதனிலே பாரமலை யருகே பாலர்களெல்லாம்
- அம்மா அம்மா என்றழைத்து பசியால் நினைத்து
- பாலர் பரிதவிக்க, பசியமர்த்த வேணுமென்றாள்
- 150 பழம்பிறக்கிப் பசி தீர்த்தாள் பத்தினியாள் ராக்காயி
- கூடைகொண்டு பழம்பிறக்கி, கொய்யாப் பழம்பிறக்கி ராக்கு
- மாதுளம் பழம்பறித்து மக்கள் பசி தீர்த்தாளாம்
- நவ்வாப் பழம்பறித்து நல்லபசி தீர்த்து நாலுமலை கடந்து
- சீத்தாப் பழப்பறித்து செம்பன்மார் பசி தீர்த்தாளாம் செல்வியந்த ராக்காயி
- 155 கொய்யாப் பழம்பறித்து கோம்பை மலைமேலே குழந்தைபசி தீர்த்தாளாம் அப்போ
- எலுமிச்சம் பழம்பறித்து ஏழுமலை கடந்து இருந்துபசி தீர்த்தாளாம்
- கோவைக் கனிபறித்து குழந்தைகளோட கூடி வழிநடந்தாள் அப்போ
- பேரீச்சம் பழம்பறித்து பெருமாள் மலையிலே ராக்காயி பிள்ளப் பசி தீர்த்தாளாம்
- பழம்பிறக்கிப் பசியமத்தி வாழப்பழம் பறிக்க வடமலையைச் சுத்திவந்தாள்
- 160 கொடிமுந்திரி பறித்து குழந்தை பசியமத்தி
- மாங்கனியும் தேங்கனியும் வாழை பலாக் கனியும்
- மக்களுக்கே பறித்து மதலைபசி தீர்த்தாளாம்
- பழமுதிர் சோலைவிட்டு பாலர்களே வாங்க உங்கமாமன்
- கருப்பனுடைய படியழகப் பார்ப்போமென்று
- 165 பத்தினியாள் ராக்கு பக்குவமாய்த் தானழைத்தாள்
- அந்த மாதாள் அரசி ராக்காயி மக்களைக் கூட்டி மைக்காரி வரும் பாதையிலே
- மயிலுவந்து பாக்குது மலையாளி யிருக்கும் மணிக்கதவப் பார்வையிட மைக்காரி போறாளென்று
- கரடிவந்து பாக்குதாம் கருப்பனுடைய கதவழகத் தேடி ராக்கு கட்டழகி போறாளென்று
- சிட்டுவந்து பாக்குதாம் செங்கமலை விட்டு அண்ணன் கருப்பனுட கதவு
- 170 சீரழகக் காண்பதற்கு செல்வி போறாளென்று
- அன்னம்வந்து பார்வையிட அண்ணன் கதவழகப் பார்ப்பதற்கு அருங்கிளியாள் போறாளென்று
- பறவைகளும் சிட்டுகளும் பஞ்சவர்ணக் கிளிகளெல்லாம்
- பத்தினியப் பாத்து பட்சியெல்லாம் வழியனுப்ப
- நடந்தாள் ராக்காயி நடுமலையத் தான்கடந்து
- 175 பாலர்களைக் கூட்டி போய்வாரே னென்றுசொல்லி
- பத்தினியான் ராக்காயி பாரவழி நடந்து
- குழந்தைகளைக் கூட்டி ராக்காயி குலவையிட்டு முன்னடந்தாள்
- கதவழகப் பார்க்க பொற்படியாள் வருகையிலே அங்கு
- காட்டுப்புறா வந்தடையும் கருக்குவாச்சிப் பண்ணை கல்லூத்துச் சோங்குவிட்டு
- 180 கருப்பன் கதவநாடி கட்டழகி வரும்பாதை
- மாடப்புறா வந்தடையும் மாசிமலைக்காடு மாணிக்கத் தொட்டிவிட்டு
- மான்மயிலு தேன்கூவும் தேமாங்குயில் கூவும் தேனொழுகும் பாறை
- தேவி வழிநடந்தாள் மகிழம்பூப் பாறை
- வயித்துவலி தீத்துவைக்கும் பாறை வண்ணான் அருவி வழுக்குக் கல் மேடு
- 185 நளமகா ராசன் கோட்டை நாரணராயர் தெப்பம் மண்டையிடிக் கல்லு வயிராவி மண்டபம்
- சிறுனிப்புதரு சீர்குறிஞ்சிப்பண்ணை செங்கமலக்காடு நாரண ராயர் தெப்பம் நல்லதண்ணிக் கிணறு
- ஊறாக் கிணறு உள்கோட்டையும் தாண்டி உக்ராணக் களஞ்சியம்
- அண்ணனுடைய கோட்டைவாசல் முன்ன நின்று அண்ணனப் பாத்து ராக்காயி
- கோவிந்தா என்று குலவையிட்டாள் முன்னாலே
- 190 குலவைச் சத்தந் தான்கேட்டு தங்கச்சி மக்களையும் கோயிலுக்குள் தானழைத்து
- தங்கச்சி என்னை விட்டுப்பிரியாத சகோதரி
- கருப்பன் சகோதரி கட்டழகி ராக்காயி
- அண்ணா அண்ணாஎன்று அடிவணங்கித் தெண்டனிட
- அந்த தாமோதரக் கண்ணன் தங்கச்சி நம்மதம்பி மலையாள மெச்ச
- 195 கருப்பன் கதவை நீ கண்டு மனங் குளிர்ந்து
- கருப்பன் கதவு கட்டழகு பாருமம்மா என்று காயாம்பூ வழியனுப்ப
- ராக்காயி வடக்குக் கோட்டைவாசல் வண்ணக் குலவையிட்டாள்
- தெற்குக் கோட்டைவாசல் தேவி குலவையிட்டாள்
- கிழக்குக் கோட்டைவாசல் கெம்பீரமாய்க் குலவையிட்டாள்
- மேற்குக் கோட்டைவாசல் முன்ன நின்று குலவையிட்டாள்
- 200 குலவைச் சத்தங் கேட்டவுடன் கருப்பன் கொண்டாட்டங் கொண்டெழுந்து
- தங்கயரே வாருமம்மா அண்ணன் பதினெட்டாம் படிக்கதவு பகுமானம் பார்வையிட
- சுப்பக்கோன் பச்சக்கோன் நாட்டிவச்ச கதவழகப் பாத்து கட்டழகி ராக்காயி
- மக்களா உங்கமாமன் கதவழகு மகுத்துவத்தப் பாருங்களென்று
- பாலருக்கு கதவழகக் காட்டி பாரமலை போரேனென்று
- 205 மலையாளியிடத்தில் பாங்காகச் சேதிசொல்லி
- குழந்தைகளைக் கூப்பிட்டு மாமனுடகதவு குடவரைக்கதவு குளிர்ந்தமுடன் பாருங்களென்றாள்
- தெற்குக் கதவுலே திருமாலுட அம்சமாம்
- வடக்குக் கதவுலே வாமனர் அம்சமாம்
- பக்கக் கதவுலே பகவான் அம்சமாம்
- 210 பெரிய கதவுலே பெருமாள் அம்சமாம்
- அண்ணனுட அம்சமும் அந்தக் கட்டையினால் சேகரித்து
- கணக்குடனே நாட்டிவைத்த கருப்பனுடைய கதவ ராக்காயி
- கண்டு மனமகிழ்ந்து கதவழகத் தான்பார்த்து
- சிரித்து மனமகிழ்ந்து செம்பன்மாரோட செல்வப் படியழகு தான் பார்த்து
- 215 பதினெட்டாம் படிக்கு முன்னே பாலர்களோடு பார்த்து குலவையிட்டாள்
- குலவைச்சத்தம் கேட்டவுடன் கருப்பன் கொண்டாட்டங் கொண்டெழுந்து
- அண்ணா எனக்கு கரந்தமலைத் தீர்த்தமும் கருப்பையா எனக்கு
- காத்தட்டி வத்தலும் கானெல்லுச் சோறும் கருங்குட்டி ரத்தமும்
- காட்டுத் துளசிக்கும் கானகத்துத் தீர்த்தத்துக்கும் கதம்பநல்ல மாலைக்கும்
- 220 கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை சூரியாள் சந்திராள் உள்ள பரியந்திரம்
- இந்தக் கதவடியில் காத்திருத்து கரத்துமே உனக்கு
- தொட்டியிலே முந்தாமல் வட்டிலிலே சிந்தாமல்
- தங்கச்கி ராக்காயி என்று கருப்பன்
- கச்சை வரிஞ்சுகட்டி கருங்கச்சை சுங்குவிட்டு
- 225 இடையிறுக்கிக் கச்சைகட்டி இந்த்ரவர்ணச் சுங்குவிட்டு
- தாளிறுக்கிக் கச்சைகட்டி தாமரைப்பூச் சுங்குவிட்டு
- கச்சை வரிஞ்சிக்கட்டி காணிக் கருப்பன் கள்ள மலையாளி
- கத்தி இடையிலிட்டு கட்டாரி தோளில் வைத்தான்
- குத்தி ஈட்டி வல்லயம் குடங்கையில் தான்செருகி
- 230 அந்த குடவரைக்கு முன்னே பெரியகருப்பன் கூத்தாடி முன்ன நின்று
- கதவடியக் காத்து முத்தையா காணிக் கருவலமே கற்படிக்குச் சேவகமே
- அண்ணா அண்ணாஎன்று ராக்காயி அண்ணனுட
- கத்தி ஈட்டி வல்லயம் கட்டாரி தோளழகை கட்டழகி தான் பார்த்தாள்
- சிரித்துக் குலவையிட்டாள் கெண்டை உருமா திமிக்கிவச்ச முண்டாசு
- 235 வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம்
- சட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு சரிகைபோட்ட லேஞ்சி யொண்ணாம்
- வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம்
- கோணத் தலைப்பாவாம் கருப்பனுக்கு கொங்குநாட்டு வல்லவட்டாம்
- சீட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு செல்லநாட்டு வல்லவட்டாம் அணிந்துமே நெற்றியிலே
- 240 மாற்றிவைக்கும் கால்களுக்கு மாதளம்பூச் சல்லடம்
- தூக்கிவைக்கும் கால்களுக்கு துந்திப்பூச் சல்லடம்
- சல்லடமுங் கச்சையுடன் கச்சை கலகலங்க கருங்கச்சை கூத்தட்ட
- கருப்பனும் முன்ன நின்று கதவழகப் பார்த்தது மலையாளி கடுகி ஒரு சத்தமிட
- அண்ணாஉன் கதவழகப் பாத்தேனென்று ராக்காயி
- 245 பாலர்களோட பகுமானமாய் பாத்துக் குலவையிட்டு
- பாரமலை போரேவென்று பொன்ராக்கு பாரவழி நடந்தாள்