உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாயச் சிறகுகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




ஆகாயச் சிறகுகள்

(முழு நாவல்)

மேலாண்மை பொன்னுச்சாமி

கங்கை புத்தகநிலையம்

23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை-17.

முதற் பதிப்பு : நவம்பர், 1996
இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2004
© உரிமை : ஆசிரியருக்கு
விலை ரூ. 35.00
Title AGAYA CHIRAGUGAL
Author MELAANAMAI PONNUSAMY
Subject NOVEL
Edition Second Edition, December - 2004
Pages 136
Published By Gangai Puthaga Nilayam
T.Nagar, Chennai-17.
Price Rs. 35.00

Laser Typeset by: Brilliant Graphics, Ph.: 22452912
Printed at: Nathan & Company, Chennai - 42.



சமர்ப்பணம்

மாதர்களும் சமமே என்கிற தன்னுணர்வை மாதர்களிடம் ஏற்படுத்தி... தமிழக மனித உரிமைப் பிரச்னைகளை நேருக்கு நேராக சந்தித்து... மாதர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி... மாதர்களுக்குள் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற மிகப் பெரிய சமுதாயப் பணியாற்றியிருக்கும் ‘தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தை’ நிறுவியவர்களில் முக்கியமானவரும்–

சகலராலும் ‘அம்மா’ என்று அர்த்த பூர்வமான அன்போடு அழைக்கப்பட்டவரும்–

தேச சுதந்திரப் போராட்டங்களிலும், சுதந்திரப் பாரதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் ஓயாமல் உழைத்தவரும் –

உயிர் பிரியும் வரை மார்க்ஸீய இயக்கத்தோடு தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டவருமான...

கே.பி. ஜானகியம்மாளுக்கு...

என்னுரை

ப்பொழுது என்று துல்லியமாக ஞாபகமில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. இன்னும்கூட சில வருடங்கள் கூடுதலாக இருக்கக்கூடும்.

நான் அப்போது ஆரம்ப நிலை எழுத்தாளன். செம்மலரில் மட்டுமே ஒரு சில கதைகள் பிரசுரமாகியிருந்தன. அப்போது –

ஓர் அரங்கக் கூட்டம். கட்சி ஊழியர்களுக்கான பேரவை. அதில் நானும் ஓர் ஊழியன்.

முக்கிய தோழர். தற்கால அரசியல் நிலவரம் பற்றிய ரிப்போர்ட்டை வழங்கிய பிறகு... ‘மாதர் சங்கத்தை கட்டுவதற்கு கட்சித் தோழர்களும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துப் பேசினார்... ‘அம்மா’ கே.பி. ஜானகியம்மா.

‘கட்சித் தோழர்கள் தத்தம் மனைவியர்களை இயக்கத்துக்குக் கொண்டு வர முதலில் முனைய வேண்டும்’ என்றார்.

அப்போது –

ஒரு சம்பவம் சொன்னார். “ஓர் இளம் தோழர் ஆர்வக் கோளாறு காரணமாக மனைவியை நிர்ப்பந்தப்படுத்தியதால்... அந்தப் பெண் இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்டவராக மாறிப் போனார்” என்பதை நாலு வரி செய்தியாக போகிற போக்கில் சொன்னார்.

அந்த நாலு வரிச் செய்தி மற்ற கட்சி ஊழியர்களிடம் என்ன விளைவித்ததோ எனக்குத் தெரியாது. ஆனால், எனக்குள் அந்தச் செய்தி ஓர் ஆல விதையாக விழுந்தது.

அந்த ஆல விதைதான்... இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பு... என்னுள்ளிருந்து ‘ஆகாயச் சிறகுகளாக...’ ‘கல்கி’யில் 15 வாரங்கள் ரெக்கையடித்தது.

பொதுவாக... ஒரு நூலுக்கு அணிந்துரை என்பது நூலாசிரியரின் மதிப்புக்குரிய பெரியவரிடம்தான் கேட்டுப் பெறப்படும்.

ஆனால்... இந்த நூலுக்கு வாசகர்களே அணிந்துரை வழங்கியிருக்கின்றனர். ‘ஆகாயச் சிறகுகள்’ தொடராக வந்த சமயத்தில் ‘கல்கி’ அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த கடிதங்களே... இங்கு அணிந்துரையாக அலங்கரிக்கின்றன.

வாசகர்கள் என்பவர்கள் எழுத்தாளன் எழுதிப் போட்டதை வாசித்து முடிப்பவர்கள் மட்டுமல்லர்; என்னைப் பொறுத்தவரை. வாசகர்கள், படைப்பாளியை விடவும் அறிவாளிகள். வாழ்க்கையை காகிதங்களிலல்ல; களத்திலேயே வாழ்ந்து அனுபவிப்பவர்கள். அனுபவங்களை வாழ்க்கையிலிருந்து சொந்தக் கைகளால் அள்ளிச் சேகரிப்பவர்கள். சொந்த மனசால் அனுபவங்களை அலசுபவர்கள். வாசித்தவற்றை சுய அனுபவங்களோடு உரசிப் பார்ப்பவர்கள். உரசிப் பார்த்த பிறகு... தங்கமா, பித்தளையா என்று தரம் பிரித்துச் சொல்லத் தகுதியானவர்கள். இலக்கிய விமர்சகர்களின் மதிப்பீடுகளை விடவும் வாசகர்களின் மதிப்பீடுகள் அசலானவை; நம்பத் தகுந்த நிஜமானவை; நேர்மையானவை. ஏனெனில், அவர்கள் சுயமானவர்கள்.

எழுத்தாளனை இயக்குகிற வலிமை, வாசகர்களுக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறேன். எழுத்தாளனை வசக்குகிற ஆற்றல் உண்டு. எழுத்தாளனின் கையிலுள்ள எழுதுகோலின் திசையை தீர்மானிக்கும் வலிமை உண்டு.

இது வெறும் புகழ்ச்சி வார்த்தைகளன்று; நிரூபிக்கப்பட்டு விட்ட உண்மை. மறுக்க முடியாத நிஜம்.

ஆதாரம் வேண்டுமா?

எதை எழுதுவது; எப்படி எழுதுவது என்கிற இலக்கிய சுதந்திரத்தை முழுக்க தன் பேனாவில் வைத்திருந்தவர், புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன். வெளிச் சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காத இலக்கியத் தன்னுரிமையைக் காப்பாற்றுகிற மனவலிமை மிக்கவர்.

அவர் ‘அக்கினிப் பிரவேசம்’ என்றொரு சிறுகதை எழுதினார். வாசகத்திரளுக்குள் ஓர் அதிரடியாக வந்து விழுந்த சிறுகதை... அது. அதிர்ந்து போன வாசகர்கள் ஆரவாரமாய் வரவேற்கவும் செய்தனர்; ஆவேசமாகக் கண்டிக்கவும் செய்தனர்.

கண்டனங்களின் வெக்கையும், ஆதரவுகளின் குளுமையும் அளவுக் கூடிக் கொண்டே போயிற்று.

சலனப்படாமல் பதில் சொல்லிப் பார்த்தார், படைப்பாளி. ஆயினும்... கண்டனங்களும், ஆதரவுகளும் வந்து கொண்டே இருந்தன.

வந்த எதிரும் புதிருமான வாதப்பிரதி வாதங்களுக்கு படைப்பு மூலமாகவே பதில் சொல்ல வேண்டிய நிலைமை.

அந்தச் சிறுகதை முடிந்த இடத்திலிருந்து... அதே பாத்திரங்களை (பிரபு - கங்கா) இயங்க விட்டுக் காட்டினார். அதுதான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக முடிந்தது.

அந்த நாவலின் முடிவு மீதும்... ஏகப்பட்ட அபிப்பிராயங்கள். வாசகக் கருத்துக்கள். அடர்ந்து தொடர்ந்த ஆட்சேபங்களும் ஆதரவுகளுமாய்...

படைப்பாளியின் மூடிய பேனா மீண்டும் திறக்க வேண்டிய நிலைமை.

‘கங்கை எங்கே போகிறது’ என்ற நாவலாக நீண்டு முடிந்தது.

ஆம்... ‘அக்கினிப் பிரவேசம்’ எழுதியது மட்டுமே ஜெயகாந்தன். அதன் தொடர்ச்சியான இரு நாவல்களை படைத்தவர்கள் வாசகர்கள்தான். ஜெயகாந்தன் மூலமாக வாசகர்களே படைத்தார்கள்.

இப்படிப் பல ஆதாரங்களைச் சொல்லிக் கொண்டே போக முடியும். வாசகர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதன் காரணம், அவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமல்லர்; சிருஷ்டிப்புத் தன்மை மிக்க மக்கள் திரளின் ஒரு பகுதி அவர்கள். படித்த பகுதி.

மக்கள் இலக்கியம் படைக்கிற முற்போக்காளர்கள். மக்களே இலக்கியம்தான் என்றும் நம்புகிறார்கள்; நேசிக்கிறார்கள்; மதிக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையும், நேசமும் மதிப்பும் அசலானவை; ஆழ்ந்த நிஜங்களில் வேர்விட்ட வலுவானவை.

ஆகவே... சரித்திரச் சக்கரத்தைச் சுழற்றும் ஆற்றல் மிக்க மக்கள் சக்தியின் ஒரு பகுதியான வாசகர்களின் கருத்துகளே எனது நூலின் அணிந்துரையாக அமைந்திருப்பது ரொம்பப் பொருத்தம்; ரொம்பப் பெருமை எனக்கு.

உண்மையில் இந்த நாவல் எழுதுகிறபோது ‘கல்கி’யில் பிரசுரமாகும் என்றே நான் நினைக்கவேயில்லை. இதை பதிப்பகத்திற்கு நேரடியாகத் தர வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதினேன்.

ஒரு முரட்டு தைரியத்தில்... ஒன்பதாம் அத்தியாயம் எழுதி முடித்தவுடன் ‘கல்கி’ அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். அப்போதும் பிரசுரமாகும் என்ற நம்பிக்கை என்னிடமில்லை. 90 சதவிகிதம் அவநம்பிக்கையே என்னுள் இருந்தது.

எனது தொண்ணூறு சதவிகிதம் நம்பிக்கையின்மையை தூள் தூளாக்குகிற மாதிரி, ‘கல்கி’ ஆசிரியரிடமிருந்து வந்த கடிதம், வரவேற்பான கடிதம்.

இதில் ‘கல்கி’ ஆசிரியரின் கண்ணியமும் அன்பும் முழுசாக வெளிப்பட்டது. என் எழுத்தில் ஒற்றை எழுத்தைக் கூட அவர்கள் மாற்றவில்லை.

இத்தனை வாரத்திற்குள் முடித்தாக வேண்டும் என்கிற நிர்பந்தமோ கட்டாயமோ துளிக்கூட இல்லை. முழுமையான சுதந்திரம் தந்தார்கள் என்பதே நூறு சதவிகித உண்மை.

ஆனால்... நாவலின் உச்சகட்டத்தை இதற்கு மேல் விரிப்பது, இலக்கிய நேர்மையன்று; நீர்த்துப் போகிற ஆபத்தும் உண்டு என்று மனதாரக் கருதினேன்.

‘இன்னும் முடியலியா...’ என்ற சலிப்பு வந்த பிறகு நிறுத்துவதை விட ‘அதற்குள் முடிந்து விட்டதா?’ என்ற ஆச்சர்யத்தோடு நிறுத்தியதே... நாவலின் கட்டமைப்பு உரிய கச்சிதத்தோடு வெற்றி பெற்றதற்கான ஆதாரமாக நான் நினைக்கிறேன்.

ந்த இருபதோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் - மனித உரிமை குறித்த பிரச்னை, உலக அரசியல் பிரச்னையாக முன்னுக்கு வந்திருக்கிற இந்நாளிலும் ‘பெண்ணுரிமை தேவையா’ என்ற குரல் ஒலிப்பது ஆச்சர்யமான வேதனை.

ஒரு நல்ல சமுதாயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு ஆணும் பெண்ணும் இரண்டு கால்களாக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் சமத்துவ வலிமையோடும். தோழமையோடும், ஒற்றுமையோடும் இருந்தால்தான்... பயணம் முழு வெற்றி பெறும்.

பெண்ணை மட்டும் ஒடுக்கி, அடுப்பங்கரைப் பிராணியாகவும், படுக்கையறைப் பொருளாகவும் மட்டுமே சிறுமைப்படுத்தி அடிமை செய்தால்... என்னவாகும்?

சமூகமே ஒன்னரைக்கால் நொண்டியாகத்தான் கெந்திக் கெந்தி நடக்க வேண்டும். சமூகமே ஊனச் சமூகமாக பலவீனப்பட்டுவிடும்.

ஆகவேதான்... சமுதாய மாற்றம் குறித்து சிந்தித்த பாரதி போன்ற மகாகவிகளும், அறிவியலாளர்களும், சிந்தனாவாதிகளும் பெண்ணுரிமை குறித்தும் போராடியிருக்கின்றனர். அந்தத் தடத்தில் நானும், எனது ‘ஆகாயச் சிறகுகளும்’ சரி... முழு வடிவம் பெற்ற நூலாக உங்களிடம் வருகிறது.

தொடராக வெளியிட்ட ‘கல்கி’ ஆசிரியருக்கும், அணிந்துரை வழங்கி உற்சாகமூட்டிய ஆக்கபூர்வ வாசக அறிஞர்களுக்கும், நூலை நன்கு அச்சிட்டு வெளியிடும் புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலைய’ அதிபர் அவர்களுக்கும் என் நெஞ்சாந்த நன்றிகள்.

நாவல் உங்கள் கையில். வாசித்த மனநிலையோடு ஓர் அஞ்சல் போடுங்கள்.

உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு மையூற்றும்; உங்கள் விமர்சனமும் என் பேனாவை இன்னமும் கூர்மையாக்கும்.

நன்றி.

மேலாண்மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்

என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி

விமர்சனப் பூக்கள்

திரு. மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகள்’ அருமையான படைப்பு. கூட்டுப் புழுவாய் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க விரும்பிய பிரேமா ‘ஆகாயச் சிறகுகள்’ பெற்று, புதுமைப் பெண்ணாக நாட்டு வானில் பறக்கும் நிலையை எட்டியதை. அழுத்தமான நடையில், கிராமியப் பின்புலத்தில் சிறப்பாகத் தீட்டியுள்ளார். திடீரென்று முடிந்துவிட்டது போல் தோன்றினாலும் முத்திரை பதித்த சிறந்த நாவலை வழங்கியுள்ளார். பாராட்டுகள்; வாழ்த்துகள்.

திருச்செந்தூர்

டாக்டர் மா.பா.குருசாமி


திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய ‘ஆகாயச் சிறகுகள்’ என்னும் குறுநாவல் மிகவும் சிறப்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. ‘தங்கம்மாள்’ என்னும் பாத்திரம் சிறந்த போராட்ட வீராங்கணையாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.பி. ஜானகி அம்மாளை (மதுரை) என் போன்ற வாசகர்களுக்கு நினைவு படுத்தியது.

சாதாரணப்பட்டிக்காட்டு பெண் எவ்வாறு போராட்டத்திற்கு தயாராகிறாள் என்பதைக் கருக் கொண்டு இந்நாவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நன்றி.

சேலையூர்

ஜி.மாரியப்பன்

ஒரு கணவன் மனைவியையோ, ஒரு மனைவி கணவனையோ நல்வழிப்படுத்த அடிப்படையாக அன்பு, அரவணைப்பு, வெளிப்படையான பேச்சு, மனித நேயம் எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவையே மிகவும் உயர்ந்தது என்பதை ஒரு சமுதாய கண்ணோட்டத்தோடு தெளிவாக ‘ஆகாயச் சிறகுகள்’ மூலம் சொல்லப்பட்டுள்ளது. தீர்க்கமான நடை. ஒவ்வொரு வாரமும் மிகவும் ஆவலோடு படித்த அனுபவம். இப்படியொரு சிறப்பான வாய்ப்பைத் தந்த மேலாண்மை பொன்னுச்சாமிக்குக நன்றி கலந்த பாராட்டுகள்.

அம்பத்தூர்

ஐ. சாந்து உஸ்மானி

வீடே உலகமென்று முடங்கிக் கிடக்கும் பெண்கள், ஊரிலுள்ள வீடுகளின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வர வேண்டிய கட்டாயத்தை உணர்வுகளின் கலவையாய் தந்த மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகள்’ போல் இன்னும் பல சிறகுகளை ‘கல்கி’ பிரசுரிக்கட்டும். சமுதாயம் விழிக்கட்டும்.

விருதுநகர்

பி. மகாலிங்கம்

மாருதி அண்டை வீட்டு பிரேம(ர்) பறவை சிறகு கோதிய விதமும், கூண்டை விட்டுப் பறந்த வேகமும், பெட்ரோல், கேஸ் (Gas) விலை உயர்வைப் போல் அபாரமாய் இருந்தாலும் மேலாண்மையுடன் ரசிக்க முடிந்தது.

மண்ணில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் போராடுவது என்பது இயற்கை குணம் என்ற கதையின் உள்ளடக்கம் மனத்தில் பதிந்தது.

‘கம்யூனிஸம்’ மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வரும் இந்த காலக் கட்டத்தில் இம்மாதிரி கதைகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை

என். ரேவதி

‘ஆகாயச் சிறகுகள்’ தொடர்கதை ‘ஆனந்தச் சிறகுகள்’ விரித்துப் பறப்பதாக அமைந்திருந்தது. மனத்திற்கு இதமளித்த நல்லதொரு நெடுங்கதை படித்த சந்தோஷம். நன்றி கல்கி. நன்றி திரு. மேலாண்மை பொன்னுச்சாமி.

சுப்பராயர்புரம்

‘மணி மதியண்ணன்’

ஆண்களுக்கு எந்த விதத்திலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்ததாய் அமைந்திருந்தது மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகள்’. ஆசிரியரின் கை வண்ணமும் மாருதியின் ஓவியமும் மனத்தில் ‘பன்ச்’ ஆகி விட்டன. பாராட்டுகள்.

விசலூர்

ஜி.ஜி. கிருஷ்ணன்


பதினைந்து வாரங்களாக எங்கள் மனத்தை இதமாக வருடி வந்த ‘ஆகாயச் சிறகுகள்’ இன்னும் சில வாரங்களுக்குத் தொடராதா என்று ஏங்க வைத்து விட்டது.

திருநெல்வேலி - 7

என். பாஸ்கர்

ஆகாயச் சிறகுகளில் விரிவான அடித்தளமிட்டு கதையைத் தொடங்கியவர்; பொசுக்கென்று முடித்து விட்டாரே இந்த மேலாண்மை பொன்னுச்சாமி. ஏதேனும் நிர்பந்தம் காரணமாக இருக்குமோ?

என்போன்ற அவரின் நீண்ட நாளைய வாசகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்தான்.

புதுவை- 4

ஆர்.தாமோதரன்

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் ‘ஆகாயச் சிறகுகள்’ உதிர்த்த ‘பொல்லாதவங்களைக் கொண்டாடுற முட்டாள்தனத்தை விட, நல்லவங்களைக் கொண்டாடாம இருக்குற மொராட்டுத்தனம்... ரொம்ப கொடுமையானது’ எனும் கருத்து ரொம்ப அருமையானது ஸார்.

புருஷானூர்

பா. திருவேங்கடம்

மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகள்’ கதை 15 வாரங்கள்தான் வந்ததென்றாலும் மிக நன்றாக, யதார்த்தமாக, அருமையாக இருந்தது. இன்னும் சில வாரங்கள் தொடரக்கூடாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது இக்கதை.

கோவில்பட்டி

மோ. ஸ்டாலின்

மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகள்’ என்றென்றும் எங்கள் இதயக் கூட்டுக்குள் சிறகடித்துக் கொண்டேயிருக்கும்.

சேலம்-9

மு. இரவிச்சந்திரன்

காந்தத்தைப் பற்றிக் கொள்ளும் இரும்புத் துகள்களுக்கும் காந்தத்தின் தன்மை வந்துவிடுவது போல பால்ச்சாமியின் பொதுநலத் தொண்டு பிரேமாவையும் தொற்றிக் கொள்வதில் வியப்பேதும் இல்லை. கூச்சம் என்னும் சிறையில் தன்னைத் தானே அடைத்துக் கொண்டு சிறைப் பறவையாய் வாழ்ந்த பிரேமா, சுதந்திரப் பறவையாக தனது ஆகாயச் சிறகுகளோடு பறக்கும் போது, இக்கதையைப் படிப்பவர்களின் உள்ளமும் சிறகடித்துப் பறக்கத் துவங்குகிறது.

தஞ்சாவூர்

வெ. முருகானந்தம்

மேலாண்மை பொன்னுச்சாமி தனது ‘ஆகாயச் சிறகு’களை 15 வாரத்துக்குள் வெட்டி விட்டாரே... மேலும் சில வாரங்கள் பறக்க விட்டிருக்கலாமே...?!

சேலம்-2

சூர்யநிலா

நம் இந்தியப் பெண்களுக்கே உரிய கூச்ச, அடக்க சுபாவத்தை பிரேமா மூலம் எடுத்துக் காட்டி அந்த பெண்மையும் தன் கணவன் பெயருக்கு ஓர் அவமானம் என்று வந்தபொழுது எப்படி வீறு கொண்டு எழுகிறது என்று தமக்கே உரிய பாணியில் எடுத்துக்காட்டிய ஆசிரியர்–மேலாண்மை பொன்னுச்சாமிக்கு எங்கள் வாழ்த்துகள். வெளியிட்ட ‘கல்கி’க்கும் எங்கள் பாராட்டுகள்.

சென்னை - 59

ரொசாரியோ ரவிச்சந்திரன்

ஆகாயச் சிறகுகளுக்கு ஏன் இந்த சினிமாத் தனமான முடிவு? எழுதியது யார்? மேலாண்மை பொன்னுச்சாமியா? நம்பவே முடியவில்லை.

திருவெண்ணெய் நல்லூர்

பா. சித்ரா

மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘ஆகாயச் சிறகுகளை’ப் படித்தபோது நம்மை ஒன்றிவிட செய்து விடுகிறார். பிரேமா போன்ற பெண்ணை இனிமேல் கதைகளில் மட்டுமே பார்க்க முடியும் என நினைக்கையில் ஏதோ அடைக்கிறது. கடைசியில் பிரேமாவையும் சாவனிஸ்டாக காட்டி விடுகிறார் ஆசிரியர். நளினத்தை விட்டு விட்டு ஆகாயத்தில் பறக்க தொலைத்து விட்டாரோ? ஒருநாள் இந்த உண்மையின் தீவிரம் புரியும். அப்போது எல்லா பெண்ணும் ஆணும் முரணாகவே இருப்பர். இனிமேலாவது விழித்துக் கொண்டிருப்பவர்களை ‘விழித்துக் கொள்’ என்று கூறாமல் இருந்தால்தான் ஓரளவாவது Manage செய்ய முடியும் என நினைக்கிறேன்.

திப்பிராஜபுரம்

தா.ராஜேந்திரன்

மென்மையான - பூவாய் பொலிந்திருப்பவர்கள், சமூகத்தில் சிறுமையைக் கண்டு அஞ்சாது, போரிட்டு புரட்சிப் பெண்ணாக தொடருக்குள் வீறு நடைபோட்ட ‘பிரேமா’ போல் பல பெண்கள் உருவாகியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். 15 வாரங்களாக ‘புயலுக்கு நடுவே பூவின் போராட்டம் கூட முயற்சியை நம்பிக்கை கொண்டு வெல்வது’ என்ற அருமையான கண்டிப்பான கேரக்டர் கொண்டு மேலாண்மை பொன்னுச்சாமி தொடரில் லயிக்கச் செய்து விட்டார். ‘ஆகாயச் சிறகுகள்’ அற்புதமான படைப்பு. பாராட்டுகள்.

விழுப்புரம்-2

வை. சண்முகவேல்

நடைமுறை வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் படித்து, அலுத்துப் போன போது, ‘ஆகாயச் சிறகுகள்’ உண்மையிலேயே கால் கொண்டு பூமியின் மீது நடக்க வைத்ததோடு மட்டுமின்றி, பொய்யான மாயத் தோற்றங்களில் இருந்து விடுபட்டு, நிஜத் தோற்றத்தை, நிஜ வாழ்க்கையை நிஜக் கண்களால் காண வைத்தது.

சென்னை-97

சு. பட்டாபிராமன்

‘ஆகாயச் சிறகுகள்’ அற்புதமான படைப்பு. ஒரு பெண்ணின் அறிவு, பூ மலர்வது போல் மலர்ந்து மணம் வீசுவதாக சித்திரித்திருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

சென்னை

சரளா

மேலாண்மை பொன்னுச்சாமி ‘ஆகாயச் சிறகுகள்’ தொடரை இவ்வளவு விரைவில் முடித்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. பாரதி கண்ட ‘நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்’ உடைய புதுமைப் பெண்ணாக பிரேமாவை மாற்ற பால்ச்சாமி வித்திட்டபோதும், அவன் ஊரில் இல்லாதபோது நடந்த சம்பவங்களே நீரூற்றி, அவனது இலட்சியங்களை அவளிடத்தில் வேரூன்ற வைத்தன. கணவன் மேல் அவள் கொண்ட இயற்கையான ஆழ்மனக் காதலும் அதற்கு உரமிட்டன என்பது மறுக்க முடியாதது! மேலாண்மை பொன்னுச்சாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மதுரை

ரோகிணி சபாபதி

‘கம்யூனிஸ்ட் பால்ச்சாமி’யை பதினைந்து வாரம் சுதந்திரமாக உலவ விட்டதின் மூலம் தனது நடுநிலைமைப் பதாகையை உயர்த்திப் பிடித்துள்ளது ‘கல்கி’. “நாம் தழுவியிருக்கின்ற கொள்கைகளுக்கு முரணான ஒரு கொள்கையை மற்றவர் தழுவியிருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களுடைய மனோதர்மத்தையும் அந்தரங்கச் சுத்தியையும் சந்தேகிப்பது தவறு” என்ற பரந்த மனோபாவம் இல்லாமல் இது சாத்தியமாகாது! மேலாண்மை பொன்னுச்சாமியும் தன் பங்குக்குக் குறை வைக்காமல் கண்ணியமான, அற்புதமான ஒரு கதையைத் தந்திருக்கிறார். பாராட்டுகள்.

சேலம்

எஸ். முரளி

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆகாயச்_சிறகுகள்&oldid=1808146" இலிருந்து மீள்விக்கப்பட்டது