ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/யார் பிரிவினைக்காரர்கள்

விக்கிமூலம் இலிருந்து

யார் பிரிவினைக்காரர்கள்?

மக்களைக் குலங் குலமாக, சாதி சாதியாகப்
பிரித்த நீங்களா? அல்லது, அவர்களை
ஒன்றுபடுத்த முயற்சி செய்யும் நாங்களா?

திருச்சி மாவட்ட உ.த.மு.க. தொடக்க விழாவில் பார்ப்பனர்களைப் பார்த்துப் பாவலரேறு கேள்வி.

1982ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் பக்கல், திருச்சிராப்பள்ளி உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா திருச்சி நகர அரங்கத்தில் (Town Hall) சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், பார்ப்பனர்களும் சில தேசியத் திருடர்களும் எங்களைப் பிரிவினைக்காரர்கள் (பிரிவினைவாதிகள்) என்கின்றனர். நாங்களா பிரிவினைக்காரர்கள்? நீங்கள்தாம் பிரிவினைக்காரர்கள். மக்களைக் குலங்குலமாக, சாதி சாதியாகப் பிரித்து ஒன்றுபடவிடாமல் சிதைத்தவர்கள் யார்? நீங்களா, நாங்களா? என்று வீறு முழங்கக் கேட்டார். அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழினத்தை ஏமாற்றி முன்னேற விடாமல் தடுக்கின்ற முயற்சியைப் பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்துகொண்டு தான் உள்ளார்கள். அறிவியல் உலகில் வாழும் இக்காலத்திலும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பெரிய பெரிய பொத்தகங்களாக அச்சிடப்பெற்று அதற்குத் தெய்வத்தின் குரல் என்று தலைப்பும் இடப்பெற்று இந்த நாட்டில் வெளிவருகின்றது என்றால் இதைவிடக் கொடிய ஏமாற்று இவ்வுல்கில் இருக்க முடியுமா?

பட்டுக்கோட்டையில் பிறந்து, தஞ்சையில் இரப்பு (பிச்சை) எடுத்துக்கொண்டு அலைந்து, காஞ்சியில் ஒதுங்கிய ஒரு ஊசைப் பார்ப்பான் லோக குரு ஆகிவிட்டான். அவனின் வேதமதப் புராணப் புளுகுத் தொகுப்புகளுக்குத்தான் தெய்வத்தின் குரல் என்று பட்டம் சூட்டுகின்றார்கள். சங்கராச்சாரியின் குரல் தெய்வத்தின் குரல் என்றால் எங்கள் குரல் என்ன பேயின் குரலா? நீ தெய்வம் என்றால் எல்லோருக்கும் சோறு போடு பார்க்கலாம்.

உச்சக் கட்டம்:

பெரியார் ஊட்டிய தன்மான உணர்வால் தமிழினம் தலைதூக்கத் தொடங்கிய அதே வேளையில், தலைதூக்கும் தமிழினத்தின் மேல் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பாதந் தாங்கிகளும் சம்மட்டியடிகளைக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அதன் உச்சக் கட்டம்தான் இன்று தமிழ்நாட்டில் ஆர்.எசு.எசு. இயக்கம் தலைகாட்டுவதும் அதற்குச் சங்கராச்சாரியும் ஏனைய பார்ப்பனர்களும் அணிவகுத்து ஆதரவு காட்டுவதும் ஆன இன்றைய இழிநிலை!

தமிழினத்திற்குப் பாடுபடுபவனைப் பாடுபட நிற்பவனைப் பார்ப்பான் எதைச் செய்தாகிலும் தனக்கும் தன் இனத்திற்கும் உரிய அடிமையாக ஆக்கி வைத்துக் கொள்வான். பார்ப்பான் அவர்களிடம் நேரே சென்று ஆசைமொழி பேசுவான். முடியாத பொழுது தன் மனைவியை அனுப்பிப் பேச வைப்பான்; அதிலும் முடியாத போது தன் மகளை அனுப்பிப் பேச வைப்பான். இப்படியாகத் தன்னால் அடிமையாக்கி வைத்துக்கொள்ளப்பட்ட தமிழனைப் பார்ப்பான் எப்படியும் புகழ்ந்து உயர்த்திக் காட்டுவான். அப்படி உயர்த்திக் காட்டித் தனக்கு, தன் இனத்திற்கு உழைப்பவனாக ஆக்கிக் கொள்ளப்பட்ட ஒருவர்தாம் கண்ணதாசன். கண்ணதாசனை எப்பொழுதும் அவாள்கள் மாதொருபாகனாக (அர்த்தநாரீசுவரன்) ஆக்கி வைத்திருந்தனர்.

எழுத்துக் குப்பை

கண்ணதாசன் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தப் பார்ப்பனர்களுக்கு மனநிறைவை உண்டாக்க எழுதித் தள்ளிய குப்பை நூல் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’

இந்து மதத்தில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது? வேறு மதங்களில் ‘அர்த்தம்’ இல்லையா? புத்த மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இசுலாம் மதத்தில் ‘பொருள்’ இல்லையா? கிறித்துவ மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இந்துமதக் கயவர்களே உங்கள்

மதம்தானே தமிழர்களைச் ‘சூத்திரர்கள்’ ஆக்கி வைத்திருக்கிறது. எந்த மதத்தில் உங்கள் மதத்திற்குரிய நூற்றுக்கணக்கான சாதிப் பிரிவுகள் இருக்கின்றன?

இந்து மதத்தையும் இந்து மதத்தின் கயமையையும் நாங்கள் விளக்கிப் பேசித் தமிழினத்தை மீட்க உழைத்தால் உடனே எங்களுக்குப் பிரிவினைக்காரர்கள் என்று பட்டம் சூட்டுகின்றீர்கள். யார் பிரிவினைக்காரர்கள்? கோடிக் கணக்கான ஒரின மக்களை இவன் பறையன், இவன் பள்ளன், இவன் முதலி, இவன் கவுண்டன் என்று கூறு கூறாகப் பிரித்துப் போட்டு, இவனோடு பழகாதே. இவனோடு உறவு வைத்துக் கொள்ளாதே. இவனைவிட நீ உயர்ந்தவன். இவனை விட நீ தாழ்ந்தவன் என்று உயர்ந்த ஒரு மக்களினத்தைப் பிரித்துப் போட்ட நீ பிரிவினைக்காரனா? ஒரு மொழி, ஓர் இனம், ஒரு பண்பாடு, ஒரு நாகரிகம் என்னும் பெயரில் மக்களினத்தை இணைக்கின்ற நான் பிரிவினைக்காரனா? யாரை ஏய்க்கின்றீர்கள்? இனியும் இந்தப் பிரிவினைப் பேச்சும் மிர்ட்டலும் பயனளிக்க மாட்டாது. மக்களுக்குப் பயன்படுகின்ற வினைகளை உருப்படியாக என்ன செய்தீர்கள்?

பயன்படாத சட்டங்கள்:

மக்களுக்கென்ற நீங்கள் போட்ட சட்டங்கள் என்ன ஆயின? போட்ட சட்டங்கள் பயனை விளைத்திருக்குமாயின் நாட்டில் வறுமை இருந்திருக்குமா? சாலை ஓரத்துச் சாக்கடையில் மக்கள் புழுக்களாய் நெளிந்து சாவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பாடத் திட்டத்தை மாற்றவில்லையா? மூன்று ஆண்டுக்கு முன் படித்த பாடத்தைப் பழைய பாடம் என்று திருத்திக் கொள்ளும் நீங்கள் மக்களுக்குப் பயன்படாத சட்டங்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்தாலென்ன?

சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்தபோது அந்த நாட்டின் சிறப்பைக் கண்டு வியந்தேன். அப்பொழுது அந்த நாட்டு அலுவலகங்களின் சுவர்களை என் கண்கள் துழாவின. அன்பர்கள் என்ன தேடுகின்றீர்கள் என்றனர். இவ்வளவு சிறப்பாக இந்த நாட்டை அமைத்து ஆளுகின்ற தலைமை அமைச்சரின் ஒளிப்படத்தைத் தேடுகின்றேன் என்றேன். அதற்கு அவர்கள் “எதற்கு அலுவலகங்களில் இந்த நாட்டுத் தலைமை அமைச்சரின் படம் மாட்ட வேண்டும்? அவ்வாறு எங்கும் நாங்கள் மாட்டுவதில்லை. அப்படி மாட்ட வேண்டும் என்ற உத்திரவும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதற்கு அவரின் படம்? ஒரு தாய்க்கு அன்றோ தான் பெற்ற மக்களைப் பற்றிய நினைவு இருக்கவேண்டும்?” என்று விடை கூறினர்.

நம் நாட்டை நினைத்துப் பாருங்கள்! சுவரின் அளவை வைத்துக் கொண்டு அதன் நீள அகலகங்களுக்கேற்ப அடித்து ஒட்டிக்கொள்ளும் பெரிய பெரிய சுவரொட்டிகள்! எங்குப் பார்த்தாலும் இந்திரா காந்தி! எங்குப் பார்த்தாலும் ம.கோ.இரா. (எம்.சி.ஆர்) எண்ணிப் பார்க்க வேண்டும்! ஆரவாரங்களும் அச்சடித்த சுவரொட்டிகளும் மக்களை ஈடேற்ற முடியுமா? இவைதாம் அரசியலா? அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்வியல் கட்டுமானம் என்பதை என்றாவது நாம் பின்பற்றி இருக்கின்றோமா?

மனம் கெடாதா?

மேலாடையில்லாது பெண்ணொருத்தி தெருவில் நடந்து போவாளானால் அவளைக் காவலர்கள் உடனே தளைப்படுத்தி அழைத்து வந்து வழக்குப் போடுவர். பொது மக்களின் மனவுணர்வைக் கெடுக்கின்ற குற்றத்தை நீ செய்தாய் என்று தண்டனை கொடுப்பார்கள். ஆனால் பெண்ணொருத்தியின் உடை களைந்த கொழுப்பு மேனியை வழுவழுப்பு அட்டைகளில் படமெடுத்துக் கடைக்குக் கடை தொங்க வைத்துள்ளார்கள்? திரைப்படத்தில் எல்லாம் வெளிச்சம்! சாலையில் மேலாடையில்லாமல் சென்ற பெண்ணின் செயல் மக்கள் மனவுணர்வைக் கெடுக்கும் என்றால் இதழ்களிலும் திரைப்படத்திலும் வெளிப்படுத்தும் படங்களால் மனம் கெடாதா?

நாங்களும் காவலர்கள்தாம்?

காவலர்கள் எண்ணவேண்டும். இந்த நாட்டின் காவலர்களும் காவல் துறை அதிகாரிகளும் எங்கே மதிக்கப்படுகின்றனர்? அமைச்சர்களை வரவேற்கவும் வணங்கவும் அவர்களுக்கு கையாட்களாகவும் அன்றோ பயன்படுத்தப்படுகின்றனர். மக்களின் நலனுக்கென்று மக்களின் வரிப் பணத்தால் இயங்கும் காவலர்களும் இக்கொடிய அரசியலால் குலை நடுங்குகின்றனரே! அருமைக் காவலர்களே! நீங்கள் மட்டுமேதான் காவலர்களா? நாங்களும் காவலர்கள்தாம். நாங்கள் மொழிக் காவலர்கள், இனக் காவலர்கள், பண்பாட்டுக் காவலர்கள்.

தமிழினம் இன்று புறப்பூசலாலும் உட்பூசலாலும் அலைக்கழிக்கப் படுகின்றது. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தமிழினத்தின் நலங்கருதித் தோற்றுவிக்கப்பட்ட ஓர் உண்மை உழைப்பியக்கம். தமிழர்களும் தமிழினத் தலைவர்களும் அகப்பூசலை விட்டொழித்துக் கொண்டு புறப்பூசலையும் அப்பூசலை விளைப்போரையும் தகர்த்தெறிய அணியமாக வேண்டும். அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது.

- தமிழ்நிலம், இதழ் எண் : 1, 1982