இளையர் அறிவியல் களஞ்சியம்/நெருப்பு

விக்கிமூலம் இலிருந்து

நெருப்பு : இது 'தீ' என்றும் அழைக்கப்படும். இது ஒரு எரிதல் வினையாகும். இவ்வினை வெப்ப வெளிவிடு வினையாகும். நெருப்பை மனிதன் கண்டறிந்த பிறகே அவன் வாழ்க்கை விரைவாக வளரத் தொடங்கியது. ஒருவேளை மனிதன் மரத்தின் மீது இடி விழுந்து அம்மரம் எரிவதைக் கண்டு நெருப்பை அறிந்திருக்கலாம் அல்லது உலர்ந்த மூங்கில் போன்ற மரத்தோடு மரம் விரைந்து உராயும்போது தீப்பற்றியதைக் கண்டு நெருப்பை அறிந்திருக்கலாம். எப்படியோ நெருப்பை அறிந்த மனிதன், அதைக் கொண்டு உணவு சமைக்க பிற விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலானான். தான் விரும்பியபோது நெருப்பை உண்டாக்கச் சிக்கி முக்கிக் கற்களை விரைந்து உராயச் செய்தும், கடைகோலைக் கொண்டு கடைந்தும் நெருப்புண்டாக்கலானான். அதன் தொடர்ச்சிதான் இன்று தீக்குச்சியை உராயச் செய்து நெருப்புண்டாக்கும் முறை.

நீண்ட நெடுங்காலமாக ஐம்பெரும் பூதங்களில் நெருப்பும் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.

நெருப்பின் உண்மைத் தன்மையை ஆராய்ச்சி பூர்வமாகக் கண்டறிந்து முதன் முதல் கூறியவர் ஃபிரெஞ்சு விஞ்ஞானியான லவாசியர் ஆவார். எரியும் பொருளும் ஆக்சிஜனும் சேர்வதால் ஏற்படும் வேதிக் கலப்பே நெருப்பு என்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கிக் கூறி நிலை நாட்டினார்.

நெருப்பு எரியும்போது பலமாகக் காற்றடித்தால் அந்நெருப்பு கொழுந்துவிட்டெரிகிறது. இதற்குக் காரணம் ஆக்சிஜன் நெருப்புக்கு அதிகம் கிடைப்பதும் அதனால் விரைந்து வேதிவினை உண்டாவதுமே யாகும். எரியும் நெருப்பை மூடினால் அணைந்து விடுவதற்குக் காரணம் எரியும் நெருப்புக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போவதேயாகும்

நெருப்பு மூலம் வெளிப்படும் வெப்பம் ஒரு ஆற்றல் மூலம் ஆகும். மோட்டார் என்ஜினில் உள்ள பெட்ரோல் அல்லது டீசல் காற்றோடு கலந்து எரியும்போது உண்டாகும் வெப்ப விசையே இயந்திரங்களை இயக்குகிறது. இதே போன்று எரியும் நெருப்பிலிருந்து பெறும் அனலைக் கொண்டு ‘அனல் மின்சாரம்' உற்பத்தி செய்யப்படுகிறது.