என் சரித்திரம்/12 அரியிலூர் ஞாபகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—12

அரியிலூர் ஞாபகங்கள்


அரியிலூரில் முன்பு நாங்கள் இருந்த வீடு பாதுகாப்பின்மையால் சிதைந்து போயிற்று. அதனால் பெருமாள் கோயில் சந்நிதிக்கு நேர் வடக்கில் தெற்கு வடக்காக உள்ள தெருவில் கீழ் சிறகில் வைத்தியநாதையரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தோம்.

எங்கள் வரவைக் கேட்ட பழைய அன்பர்கள் மிக்க குதூகலம் அடைந்தனர். பலர் வந்து என் தந்தையாரைப் பார்த்து அன்போடு வார்த்தையாடிச் சென்றனர். அப்போது எனக்கு ஏழாம் பிராயம் நடந்து வந்தமையால் உலகத்துக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நன்றாக மனத்திற் பதிந்தன. நான் அக்காலத்திற் கண்ட இடங்களும் பார்த்த மனிதர்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் எனக்குப் புதிய சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் அளித்தன. அரியிலூர்தான் எனக்குப் பெரிய நகரம். அந்த ஊர் ஜமீன்தார்தான் கதைகளில் கேட்ட ராஜா. அங்கிருந்த அன்பர்களே பழைய வரலாறுகளில் வரும் உபகாரிகள்.

பழங் கணக்கு

அரியிலூ ரென்பது அரியிலென்றும் வழங்கும். அரிக்கு இல்லாக இருத்தலின் அப்பெயர் வந்தது. அரியதிருமால்; இல்=இருப்பிடம். இந்த ஸமஸ்தானம் அக்காலத்தில் அவரோகண நிலைமையில் இருந்தது. புதிய பெருமை இல்லாதவர்கள் பழம்பெருமை அதிகமாகப் பாராட்டிக்கொள்வது உலக இயல்வு. ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல்’ என்ற பழமொழி அதை விளக்கத்தான் எழுந்தது. ஆதலின் அக்காலத்தில் அரியிலூர் ஸமஸ்தானம் உயர்ந்த நிலையில் இராவிட்டாலும் அதன் பழைய வரலாறுகள் மிக்க பெருமையோடு யாவராலும் சொல்லப்பட்டு வந்தன. அச்சரித்திரங்கள் எனக்கு மிக்க சுவையுள்ளனவாகத் தோன்றும். நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்ட சரித்திரச் செய்திகளாதலால் அவற்றில் என் மனம் ஈடுபட்டது.

அரியிலூர் ஒரு ஸமஸ்தானத்தின் தலைநகரமாகையால் தமிழ்நாட்டு ஸமஸ்தானங்களைப் போலவே வீரர், புலவர், உபகாரிகள் ஆகியவர்களுடைய தொடர்புகொண்டது. ஒவ்வொரு ஸமஸ்தானத்திலும் ஜனங்கள் மனத்தைக் கவரும் இயல்புள்ள சரித்திர வரலாறுகள் உண்டு. அரியிலூர் ஸமஸ்தான சம்பந்தமாகவும் அத்தகைய வரலாறுகளுக்குக் குறைவில்லை.

அரியிலூர் உள்ள நாட்டுக்குக் குன்றவளநா டென்பது பழம்பெயர். அதைக் குன்றையென்றும் சொல்வார்கள். அரியிலூர் ஜமீன்தார்களுக்கு ‘ஒப்பில்லாதவள்’ என வழங்கும் தேவி குலதெய்வம். அத்தேவியின் அடியவர்களாதலின் அவர்களுக்கு ஒப்பிலாத மழவராயரென்பது குடிப்பெயராக அமைந்தது.

மழவராயரென்பதற்கு வீரர் தலைவர் என்பது பொருள். மழவர்கள் என்பார் தமிழ்நாட்டிற் பழங்காலத்தில் இருந்த சிறந்த வீரர்களில் ஒரு வகையினர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச் சென்றார். அக்காலத்தில் இங்கே ஜமீன்தாராக இருந்தவர் கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராய ரென்பவர்.

படியளந்த ஜமீன்தார்

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும் தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம் விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்து கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின் நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. ‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’ என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’ என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த
மாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இத்தகைய வரலாறுகள் பல உண்டு.[1]

அரியிலூரில் ஒரு கோட்டையும் அதற்குள் ஓர் அரண்மனையும் இருந்தன. அவை இடிந்து போயின. கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்த கோட்டைமுனி என்ற தெய்வத்தின் கோயில் இன்றும் இருக்கிறது இந்த ஸமஸ்தானத்துக்குத் தனியே படைகள் இருந்தன. இப்போதும் இவ்வூரில் தளகர்த்த பிள்ளை வீடென்று ஒரு வீடுண்டு. அதில் முன்பு படைத்தலைவர் வசித்திருந்தார். அதனால்தான் அப்பெயர் வந்தது. ஸ்தானாதிபதி குமாரசாமி பிள்ளை என்பவரது வீடொன்று உள்ளது. இவை இவ்வூரின் பழம்பெருமையைக் காட்டும் அடையாளங்கள்.

குளங்களும் கோயில்களும்

இவ்வூரில் செட்டிகுளம், குறிஞ்சான்குளம் என இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. குறிஞ்சான் குளக்கரையில் அரசு நட்ட பிள்ளையார் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அந்தப் பிள்ளையார் சம்பந்தமாகவும் ஒரு கதை உண்டு: ஒரு ஜமீன்தார் தம்முடைய பகையரசருக்குப் பயந்திருந்தாராம். அப்பால் ஒருவாறு தைரியமடைந்து பகைவர்களை எதிர்க்கச் சென்றார். செல்லும்போது அந்த விநாயகரை வேண்டிக்கொண்டு சென்றாராம். பகைவர்களுடன் நடத்திய போரில் அவர் வென்றார். விநாயகருடைய திருவருள்தான் தமக்குப் பலமாக இருந்ததென்று நம்பினார். அந்தப் பிள்ளையாருக்குக் கோயில் அமைத்துப் பூஜை செய்வித்தார். அவரது அரசைப் பகைவர்கையில் சிக்காதபடி பாதுகாத்து நிலைநாட்டியமையால் விநாயகருக்கு அரசு நட்ட பிள்ளையார் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. அந்த ஜமீன்தார் பிறகு அரசு நட்டான் ஏரி என்பதையும் அருகில் வெட்டுவித்தார்.

குறிஞ்சான் குளத்துத் தென்கரையில் மீனாட்சி மண்டபமென்ற இடத்தில் விநாயகர் கோயிலும் சிவ விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. அம்மண்டபம் முதலியன இந்த ஸமஸ்தானத்தில் அதிகாரியாக விளங்கிய ஸ்ரீ மீனாட்சி தீக்ஷித ரென்பவராற் கட்டப்பட்டவை. அங்குள்ள மூர்த்திகளுக்கு உரிய பூஜைகள் நன்றாக நடைபெற்று வந்தன.

இங்குள்ள விஷ்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப் பெருமா ளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக அழகாக அமைந்திருக்கின்றன.

இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள் வழங்குகின்றன. ஜமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும் துர்க்கையின் கோயிலும், காமாக்ஷியம்மன் கோயில், விசுவநாதஸ்வாமி கோயில். சஞ்சீவிராயன் கோயில், காளிங்க நர்த்தனர் கோயில், அனுமார் கோயில், முதலிய வேறு கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன. என் இளமையில் இவ்வளவு கோயில்களிலும் ஜனங்கள் ஈடுபட்டு வழிபட்டு வந்தனர்.

இந்த ஊரில் அந்தணர்களில் வைஷ்ணவர்கள், ஸ்மார்த்தர்கள், மாத்வர்கள் என்னும் மூன்று மதத்தினரும் வாழ்ந்தனர். ஸ்மார்த்தர்களில் எங்கள் உறவினர் பலர் உண்டு. வேறு சாதியினரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் வசித்தனர். கார்காத்த வேளாளச் செல்வர்கள் இவ்வூரில் அதிகமாக இருந்தனர். அவர்கள் தெய்வபக்தியும் பரோபகார சிந்தையும் மிகுதியாக உடையவர்கள். கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் அரண்மனை யாருடைய ஆதரவில் முன்பு நடந்து வந்தன நாளடைவில் ஜமீன்தாரது செல்வநிலை குறையவே அவ்வேளாளச் செல்வர்கள் அக்கடமையை மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் குறிஞ்சான் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் கார்காத்த வேளாளச் செல்வர்களாகிய ஆடவரும் பெண்டிரும் நீராடிவிட்டுத் தூய்மையே உருவாக அமர்ந்து பூஜை செய்வதையும் தியானம் செய்துகொண்டிருப்பதையும் காணலாம். அப்பக்கங்களில் அத்வைத சாஸ்திரப் பயிற்சி அதிகமாகப் பரவியிருந்தது. பல துறவிகள் அங்கங்கே மடம் அமைத்து வேதாந்த சாஸ்திரங்களைப் பாடஞ் சொல்லியும் தியானம் செய்தும் அடக்கமாகக் காலங்கழித்து வந்தனர். அவர்களுடைய முகத்திலுள்ள தெளிவிலிருந்தே உள்ளத்திலுள்ள அமைதியை அறிந்து கொள்ளலாம்.

அரியிலூரில் சில நந்தவனங்களும் இருந்தன. அங்கங்கே சில சிறுகாடுகள் உண்டு. அந்தக் காட்சிகள் என் கண்களுக்கு விருந்தாக இருக்கும். காவிரி நீர் பாய்ந்து வளம் பெருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள வயல்களையும் வரப்புகளையும் பார்க்கும் போதுகூட எனக்கு அந்தப் பழைய சந்தோஷம் உண்டாவதில்லை. என் இளமைக் காலத்திற் கண்ட அக்காட்சிகளைத்தான் என் உள்ளத்துக்குள் உயர்வாகப் போற்றி வருகிறேன்.

கிருஷ்ண வாத்தியார்

அரியிலூருக்குச் சென்ற பிறகு கிருஷ்ண வாத்தியார் என்பவரிடம் முதலிற் படித்தேன். அவர் பெருமாள் கோவிலுக்கு வடக்கேயுள்ள வேளாளத் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். அவரிடம் நான் ஒரு வருஷம் படித்தேன்.

கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.

அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.

ஏறாத தெலுங்கு

எனது கல்வி விஷயத்தில் என் தந்தையாருக்கு மனத்துக்குள் கவலை இருந்து வந்தது. என்னையும் சங்கீதத் துறையில் பழக்க வேண்டுமென்றே அவர் நினைத்திருந்தார். அக்காலத்தில் சங்கீத வித்வான்கள் யாவருக்கும் தெலுங்கு மொழியிற் பழக்கம் இருந்தது. தமிழ், தெலுங்கு, ஸம்ஸ்கிருதம் என்னும் மூன்று பாஷைகளிலும் உள்ள கீர்த்தனங்களை அவர்கள் பாடுவார்கள்.

சங்கீதப் பயிற்சிக்குத் தெலுங்கு உதவியாக இருக்குமென்ற எண்ணத்தின்மேல் என் தந்தையார் கிருஷ்ண வாத்தியார் பள்ளிக்கூடத்தைவிட்டு என்னை வேறொரு பள்ளிக்கூடத்திற் சேர்த்தார். பெருமாள் கோவிலுக்குத் தெற்கேயுள்ள காமாக்ஷியம்மன் கோவிலில் அந்தப் பள்ளிக்கூடம் இருந்தது. அதன் தலைவராகிய முத்து வேலாயுத பண்டாரமென்னும் வீரசைவர் தெலுங்கும் கற்பித்து வந்தார். அவரிடம் தெலுங்கு கற்கத் தொடங்கி, குணிதம் முதலியனவும் வேமன்ன சதகம், ராமதாச சதகமென்னும் சிறுநூல்களும் கற்றேன்.

சங்கீதத்திலும், தமிழிலும் என் புத்தி சென்றது போலத் தெலுங்கிற் செல்லவில்லை. என் நிலைமையை உணர்ந்த தந்தையார் சிறிது வருத்தத்தை அடைந்தார்; “நீ ஒரு காரியத்திற்கும் உபயோகம் இல்லாதவன்; பரிசாரக வேலைக்கு கூடப் பயன்பட மாட்டாய்” என்று என்னைக் கடிந்து கொண்டார். அன்று அவர் கூறின அவ்வார்த்தைகள் என் மனத்தைப் புண்படுத்தின. நான் என்ன செய்வேன்! எனக்குப் படிப்பில் விருப்பம் இருந்தது; தமிழும் சங்கீதமும் எனக்கு இன்பத்தை அளித்தன. தெலுங்கில் அந்த இன்பத்தை நான் காணவில்லை. எனக்கும் அதற்கும் வெகுதூரமென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே எனக்கு உண்டாயிற்று. நான் வேண்டுமென்று அதை வெறுக்கவில்லை.

தெலுங்கு கற்பதனால் வீண்சிரமம் உண்டாவதைத் தந்தையார் உணர்ந்தமையால் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டார். வீட்டில் தாமே சதகங்களையும் வேறு நூல்களையும் கற்பித்து வரலானார். சங்கீதத்திலும் சரளி, வரிசை, அலங்காரம் முதலியவற்றைக் கற்றுத் தந்தார். நான் சிறிதளவேனும் அயர்வாக இருந்தால் கடுமையாகக் கண்டிப்பார். அவர் செய்யும் தண்டனையினால் நான் துன்புறுவேன்; என் துன்பத்தைக் கண்ட என் தாயாரும் வருந்துவார்.


  1. நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற் பாகத்தில் மற்ற வரலாறுகளைக் காணலாம்.