என் சுயசரிதை/மது விலக்குப் பிரசாரம் செய்தது

விக்கிமூலம் இலிருந்து

மது விலக்குப் பிரசாரம் செய்தது

எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புஸ்தகத்தில் 1895-ஆம் வருஷம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்ஸ் பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருங் கஷ்டம் அநுபவித்த விஷயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றை சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாக காசு சம்பாதித்தாலொழிய எந்த சங்கத்தையும் சேரக்கூடாதென தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருஷம் நான் வக்கீலாகி பணம் சம்பாதித்த பிறகுதான் சென்னையில் ஸ்தாபிக்கப்பட்ட H.G.T.L. என்னும் மது விலக்கு சங்கத்தில் ஒரு அங்கத்தினனாக சேர்ந்தேன். இச்சங்கத்தின் இரண்டு முக்கிய கோட்பாடுகள் ஒன்று ஆயுள் பர்யந்தம் எந்தவிதமான மதுவையும் தீண்டலாகாதென்பது. இரண்டு அங்கத்தினர் எல்லாம் சகோதரர் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பவைகளாம். அதுமுதல் இந்த 64 வருடங்களாக அச்சங்கத்திற்கு முக்கியமாக புதன்கிழமைகளில்போய் உழைத்து வருகிறேன். இச்சங்கத்தின் சார்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப்போய் மதுபானம் செய்வதினால் உண்டான தீமையைப்பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஆங்கில அரசாங்கத்தார் சென்னை ராஜதானி முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் செய்யவேண்டுமென்று ஒரு கமிட்டியை ஏற்படுத்தியபோது என்னை அக்கமிட்டி தலைவனாக ஏற்படுத்தினார்கள். இதன் மூலமாக பழைய சென்னை ராஜதானியில் பல ஜில்லாக்களுக்குப்போய் நான் மதுவிலக்கு பிரசாரத்தின் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்து வந்தேன்.