உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு மாலை பூத்து வரும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





ஒரு மாலை
பூத்து வரும்

மேலாண்மை. பொன்னுச்சாமி

கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை — 600 017.

முதற் பதிப்பு : டிசம்பர் 2000

உரிமை ஆசிரியருக்கு
விலை : ரூ. 35–00
Title ORU MALAI POOTHU VARUM
Author Melanmai. Ponnusamy
Subject Short Stories
Language Tamil
Edition First Edition, December, 2000
Pages 180
Publication Gangai Puthaka Nilayam
13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai - 600 017.
Price Rs. 35-00

ஒளி அச்சு : நேரு அச்சகம், இராயப்பேட்டை, சென்னை - 600 014.

Printed at : Mani Offset
                           112/2, Bells Road, Triplicane, Chennai - 5.
                           Phones : 8555 249, 8588 186

சமர்ப்பணம்


தோழமைத் தோளாகவும்
பேரன்புப் பிரவாகமாகவும் திகழ்ந்து
என் இலக்கியப் பயணத்திற்கு
தெம்பும் நிழலும் தந்த
என் இனிய நண்பர்
‘சீ பி’ என்ற

சி. பாலசுந்தரம் அவர்களுக்கு....

முன்னுரை

1994 மே யில் ‘சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்’ என்ற எனது இலக்கியக் கட்டுரை நூல் வெளியாயிற்று. வந்த வருஷமே விற்றுத் தீர்ந்தது. ஏகப்பட்ட பாராட்டுகள். எழுதிக்கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களும், எழுதும் தினவோடு வலம் வந்து கொண்டிருந்த இளைஞர்களும் ‘அந்த நூல் தங்கள் சொந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பகிர்ந்து கொண்டு, வழிநடத்துகிற நூலாகத் திகழ்கிறது’ என்று பரவசத்தோடு பாராட்டினார்கள், பிரமித்தார்கள்.

வந்த வருஷமே விற்றுத் தீர்ந்துவிட்ட போதிலும் மறுபதிப்பே காணாமல் கிடக்கிறது என்பதொரு கசப்பான சோகம் ஒரு பக்கம் இருந்த போதிலும், அந்த நூலுக்கு இன்றளவிலும் பாராட்டுக் கடிதங்களும், ‘நூல் எங்கே கிடைக்கும்’ என்று கேட்டு எழுதுகிற கடிதங்களும் வந்தவண்ணமிருக்கின்றன. கேரளாவிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு கல்லூரிப் பேராசிரியர் அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கேட்டு நச்சரிக்கிறார். விற்பனையிலும், கைவசமில்லாத புத்தகம் பற்றி நான் என்னத்தைப் பதில் எழுத? மௌனம் கடைப்பிடிக்கிறேன். வேறு வழி?

இத்தனை பாராட்டுகளுக்கும் பிரமிப்புகளுக்கும் விசாரிப்புகளுக்கும், எல்லா ஆண்டுகளுக்கும் புதுமையான தேடல்களுக்கும் உள்ளாகியிருக்கிற அந்த நூலில் அப்படி என்ன மேதமையானதை எழுதிவிட்டேன்? சிறுகதை என்றால் என்ன என்று இலக்கணம் நிர்ணயித்துவிட்டேனா? இதுதான் சிறுகதை, இப்படித்தான் சிறுகதை என்று நிரூபித்துக் காட்டிவிட்டேனா? சிறுகதை இப்படி எழுதலாம், இவ்வாறு எழுதலாம், இன்ன இன்ன மாதிரியில் எழுதிக் கற்றுக்கொள்ளலாம் என்று விலாவாரியாக வெளிச்சம் காட்டியிருந்தேனா? சிறுகதை எழுதுவது எப்படி என்ற நுட்பத்தை—கலைப்பிரம்ம ரகசியத்தை—சிருஷ்டி மனோபாவ உள் வித்தைகளை—தொழில் நுணுக்க விஷயங்களை விளக்கியிருந்தேனா?

சிறுகதையின் வரலாறு சொல்லியிருந்தேனா? வளர்ச்சியின் வரலாறு சொல்லியிருந்தேனா? அழகியலின் தத்துவக் கூறுகள் பற்றிக் கூறியிருந்தேனா?

‘ஆகா, ஓகோ’ என்று பாராட்டுகிற அளவுக்கு, வாசிக்கப்படுகிற அளவுக்கு, வாசிக்க இன்னும் ஆசைப்படுகிற அளவுக்கு, அப்படி என்னதான் மேதமையாக எழுதியிருந்தேன்?

உண்மை என்னவென்றால்.... இத்தனை கேள்விகளுக்கும் நேர் விரோதமாக எழுதியிருந்தேன். கூச்சமில்லாத நேர்மையோடு ஒப்புக்கொள்வதென்றால்... எனது பேதமையைப் பட்டியலிட்டிருந்தேன், அந்த நூலில்.

சிறுகதை எழுதத் தெரியாமல் தத்தளித்த கதை... எழுத முயன்று தோற்ற கதை... இலக்கணம் புரியாமல் தடுமாறிய கதை... கதையின் இலக்கணம் புரியாமல், வடிவ உண்மை புரியாமல்... மனசுக்குப் பட்ட நிசத்தை வெள்ளந்தியாக எழுதிக் குவித்த கதை என்று எனது பேதமைகளையே பட்டியலிட்டிருந்தேன்.

இத்தனை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிற எனக்கு இன்றைக்கும் ‘சிறுகதை என்றால் என்ன’ என்ற கேள்விக்கு நேர்மையாக—உண்மையாக—நுட்பமாக பதில் சொல்லத் தெரியவேயில்லை என்ற சத்தியத்தை வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டிருந்தேன், அந்த நூலில். அந்தத் தர்ம பலத்தில் படைப்பனுபவங்களை அதன் சறுக்கல்களை—தைர்யமாகப் பகிர்ந்திருந்தேன்.

சரி... இதெல்லாம் 1994ல் வெளிவந்த ‘சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்’ என்ற நூலில். இப்போது 2000. ஆறாண்டுகள் கடந்து விட்டன.

+2 முடித்துவிட்டு, கல்லூரி போனால் ஆறாண்டுகளில் ஐ.ஏ.எஸ். ஆகிவிடலாம். அந்த ஆறாண்டு கால நீட்சியில் நான் என்னவாகியிருக்கிறேன்? தேறியிருக்கிறேனா?

இன்றைக்கும் ‘சிறுகதை என்றால் என்ன’ என்ற கேள்விக்கு என்னால், நான் ஒப்புக்கொள்கிற அளவுக்கு சரியான நுட்பத்தில் சொல்லத் தெரியாது என்பதே சத்தியம்.

இலக்கணம் தெரியாமலேயே இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பது பலமா, பலவீனமா என்பதெல்லாம் தெரியாது, எனக்கு. ஆயினும் வாழும் வாழ்க்கையை—படியும் உண்மையை—நுட்ப மாறுதல்களை—பண்பாட்டு உணர்வு வித்தியாசத்தை நான் புரிந்திருக்கிற விதத்தில் பகிர்ந்து கொண்டேயிருக்கிறேன், படைப்புகளாக.

இலக்கணம் தெரியாமல் விமர்சகராவதுதான் பிழை. இலக்கணம் தெரியாமல் இலக்கியம் படைப்பது பிழையல்ல. இலக்கணம் என்பது மொழியின் கணிதம். வார்த்தைகளின் விஞ்ஞானம்.

கணிதம் தோற்கிற இடத்தில்தான் இதயம் நெகிழ்கிறது; ஈரம் படர்கிறது; அன்பு மலர்கிறது; வாழ்க்கை எழுகிறது; உள்ளம் மெருகேறுகிறது; இலக்கியம் பூக்கிறது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது என்றென்றும் மாறாத—உலர்ந்த கணிதம். ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால்... ஒன்று என்பது காதலின் வெற்றி. தாம்பத்ய முகிழ்வு. ஒன்றும் ஒன்றும் மூன்று என்றால் தாம்பத்யத்தின் வெற்றி. ஒரு மழலையின் முகிழ்வு. ஓருருவான ஈருயிர்களின் ஓர் உயிர். ஓருயிர்களான ஈருருவின் ஓருரு.

மொழியின் கணிதமே, இலக்கியமாகிவிடாது. வடிவமையாத வாழ்வனுபவ ஆழ்மன உணர்வுகளில் மொழி கரைகிறபோதுதான் இலக்கியத்தின் வர்ணமே எழுகிறது.

இன்றைக்கும் எழுத்துக்குள் பிடிபடாத நாட்டுப்புற இலக்கியங்கள் உன்னத இலக்கியங்களாக ஒளி வீசுகின்றன. அதைப் படைத்த வியர்வை மக்களுக்கு இலக்கணம் தெரியாது. எழுத்து தெரியாது. ஆனால் வாழ்க்கை தெரியும். வாழ்வின் அடிகள் தெரியும். அடியின் ரணம் தெரியும். அந்த ரணத்தின் துடிப்பு தெரியும். வலியில் துடிக்கும் இதயத்தின் ஆழ்நிலைப் பெருமூச்சுதான், உன்னத இலக்கியமாகிறது.

நானும் ஒருவகையான நாட்டுப்புற இலக்கியக்காரன்தான். படிப்பேயில்லை. வெறும் ஐந்தாம் வகுப்பு. ‘எழுவாய் பயனிலை’ என்றால் என்னவென்று இப்போதும் தெரியாது, சத்தியமாக. ‘மனப்பூ’ தொகுப்பின் தயாரிப்பில் கடைசி ஃப்ரூப் வந்தது. ‘இ’ ‘ப்’ ‘க்’ ‘ல்’ போன்ற எழுத்துக்களைப் போடக்கூடாத இடத்தில் நான் போட்டிருந்ததையும், போட வேண்டிய இடங்களில் போடாமல் விட்டிருந்ததையும் பதிப்பகத்தார் திருத்தியிருந்தபோதுதான். எது சரியான பிரயோகிப்பு என்ற வெளிச்சமே எனக்குள் வந்தது.

இலக்கணத்தில்தான் நான் பலவீனம். வாழ்க்கையிலல்ல. யாரும் பார்த்தறியாத—பார்க்கக் கிடைக்காத—கரிசல் காட்டு வாழ்க்கையின் ஆழ் ரணங்கள் தெரியும். அந்த ரணங்களின் வலியதிர்வு தெரியும். ரணம் உதிரும் வாழ்வின் சீழும் தெரியும். சீழின் நாற்றமும் தெரியும்.

தெரியும் என்றால், வாசித்தறிந்த தெரியுமல்ல; பட்டறிந்த தெரியும். பட்டதை—பாடுகளின் ரணத்தை—வலியை என் எழுத்துகள் கதறிச் சொல்கிறது.

ஆகவேதான் சிறுகதை இலக்கணம் கற்றுத் தேறாமலேயே சிறுகதைகள் படைக்க முடிகிறது.

நான் படைக்கிற சிறுகதைகளும் ஒரே அளவில் இருப்பதில்லை. பக்கவரம்புகளோடு எழுதச் சொல்கிற இதழ்களின் உறவுகளை எனது சிறுகதைகள் பேணுவதில்லை; மாறாகத் தவறவிட்டுவிடுகின்றன.

என் சிறுகதைகள் ‘சற்றே பெரிய சிறுகதை’ ‘இருவாரச் சிறுகதை’ என்ற அடைமொழிகளுடன்தான் பிரசுரமாகின்றன.

இந்த நூலில் ‘போல் ஆகிவிட்டான்’ சிறிய வடிவிலான கதை. ‘அம்பலம்’ என்ற இணைய இதழில் வந்தது. மற்ற கதையெல்லாம் சற்றுப் பெரியவை.

சிறியதும், பெரியதும், மிகப் பெரியதுமான கதைகளாககவே இந்த நூலில் அமைந்துள்ளன.

‘ஆட்டுக்கம்பும் பூ மொட்டும்’ எனக்கு மிகமிகப் பிடித்தமான கதை. குழந்தை உழைப்பு என்பது தீப்பெட்டியாபீஸில் மட்டுமில்லை. ‘வளரும் குழந்தை இடறும் உளவியல் பிரச்னைகள்’ என்பது வாழ்வின் ஆழத்தில் நுட்பமான இடுக்குகளில் புதைந்து கிடக்கிற சோக உண்மைகள்.

ஆனந்தவிகடனில் வெளியான ‘ஆட்டுக்கம்பும் பூ மொட்டும்’ என்ற இதே சிறுகதை, நாலைந்து மாதம் கழித்து ‘இந்தியா டுடே’ இதழிலும் ‘பீர்க்கை’ என்ற தலைப்பில் பிரசுரமானது. ஒரே கதை இரு இதழ்களில் பிரசுரமான இந்த விபத்துக்கு நான் எந்த அளவிலும் காரணமாக இல்லை.

அதேபோல ‘ருசி’ மொத்தச் சிறுகதை உலகமே இதுவரை தொட்டிராத ஒரு புதிய உண்மையைச் சொல்கிறது. பெண் சிசு கொலை பற்றிய சமூகக் கொடுமைகள் பற்றிய கதைகள் வருகிற ஒரு காலத்தில்... ‘ஆண் பிள்ளைகள் பெற்று வளர்த்தவன் கஞ்சிக்கில்லாமல் அலைகிறான். பெண் பிள்ளைகள் பெற்று வளர்த்தவன் மரியாதை பெறுகிறான்’ என்பது சாமான்யப் புதுமையல்ல; அசாதாரண உண்மை.

‘அகலிகையாகி’ கதை பிரசுரமான புதிதில் பரவலாக எதிர்மறை விமர்சனத்துக்குள்ளான கதை. ஆண்மகன் உதைபடுவதையும்... ஓழுக்கக்குறைவான பெண் உதைப்பதையும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

என்ன செய்வது! இந்திரர்களும் அகலிகைகளும் எல்லாக் காலத்துக்குமானவர்கள். கல்லாகச் சபிக்கப்பட்ட அகலிகை, புராணத்தில். என் அகலிகையோ... வேறொரு உளவியல் தாக்குதலில் இந்திரனை வெறும் சருகாக்கி விடுகிறாள்.

எனக்கென்னவோ... இப்போதும் இக்கதை மிக நுட்பமான—புதிய—பெண்ணியக் கதைதான் என்றுதான் படுகிறது.

ஆனந்தவிகடனில் ஏழுவாரத் தொடராக வெளிவந்த ‘ஒரு மாலை பூத்து வரும்’ என்ற கதையும் இத்தொகுப்பில் சேருகிறது. மிகப் பெரிய வரவேற்புகளையும், பாராட்டுகளையும் எனக்குப் பெற்றுத் தந்த கதை.

ஒரு பூ பூத்து வரும் என்பது சாதாரண வார்த்தை. ‘ஒரு மாலை பூத்து வரும்’ என்பது கவித்துவமான வார்த்தை. பல மனங்கள் கூடிக் கலந்து பேசி... ஓப்புதல் ஆகி... பலபேரின் ஒத்துழைப்புகளோடு கைகூடி வருகிற திருமண ஏற்பாட்டை... இலக்கணமோ மொழியோ அறியாத கிராமத்து மக்கள் ‘மாலை பூத்துருச்சு’ என்று வார்த்தைப்படுத்துவார்கள். அர்த்தமுள்ள வார்த்தைப்படுத்தல். ஆகவே கவித்துவமானது.

அந்த வார்த்தைப்படுத்தலிலிருந்து எழுந்ததுதான் ‘ஒரு மாலை பூத்து வரும்’ என்ற தலைப்பு.

எனது படைப்பு மொழியின் நதிமூலமே, இதுதான். கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்கிற நான், கிராமத்து மக்களின் வாழ்வின் புறச் சிக்கல்களையும், மனசின் அகச்சிக்கல்களையும் அவர்கள் மொழியிலேயே எழுதுகிறேன். கிராமத்து மொழிக்கேயுரிய பாமரத்தனம், வெள்ளந்தி, ஆழ்நுட்பம், கவித்துவம் எல்லாமே எனது கதை மொழியிலும் காண முடியும்.

வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு மன நிலைகளில் எழுதப்பட்டு வெவ்வேறு இதழ்களில் பிரசுரமான இக்கதைகளின் ஊடாக உள்ள ஓர் ஒற்றுமை என்னவென்றால்... இவையின் இயங்குதளமும், மொழியும் கிராமம்.

இவை தொகுக்கப்பட்டு ஒரு நூலாக உங்களிடம் வருகிறது.

இக்கதைகளை தத்தம் இதழ்களில் பிரசுரித்து என்னைக் கௌரவித்த செம்மலர், ஆனந்தவிகடன், அம்பலம் இண்டர்நெட், கல்கி, ஓம்சக்தி, அமுதசுரபி ஆகிய இதழ் ஆசிரியர்களுக்கும், நூலாகத் தொகுத்து வெளியிட முன்வந்த புகழ்மிக்க கங்கை புத்தக நிலையம் அதிபர் திருமிகு. ராமு அவர்களுக்கும், மிகச் சிறந்த முகப்போவியம் வழங்கிய ஓவியர் அவர்களுக்கும், தொகுப்புக்கான கதைகளைத் தேடிச் சேகரித்து, பாதுகாத்து, ஒழுங்கு செய்து தந்த என் மூத்த மகள் பொ. வைகறைச்செல்வி (பி.ஏ.தமிழ்)க்கும் என் ஆணிவேரான என் தம்பி கரிகாலனுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.

இதோ புத்தகம் உங்கள் கையில். வாசித்து முடித்தவுடன் மனசிலிருந்து எழும் பெருமூச்சை கடிதமாக்கி எனக்கு அனுப்பிவையுங்கள், தயவுசெய்து.

உங்கள் பெருமூச்சின் குளிர்வும் என்னைத் தெம்பூட்டும். வெம்மையும் என்னைப் பதப்படுத்தும். இரண்டுமே எனக்கும், இலக்கியத்துக்கும் நல்லது. நன்றிகள்.


என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி


மேலாண்மறைநாடு—626127
இராஜபாளையம் வழி,
விருதுநகர் மாவட்டம்

உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரு_மாலை_பூத்து_வரும்&oldid=1808380" இலிருந்து மீள்விக்கப்பட்டது