கடவுள் கைவிடமாட்டார்/தேடி வந்த திரவியம்!

விக்கிமூலம் இலிருந்து
6. தேடிவந்த திரவியம்!


இராப்பிச்சை எடுப்பதற்காகத் தன் பிச்சைப் பாத்திரத்தை அலம்புவதற்காக, ஆற்றுப் படித்துறைக்கு வந்த ‘பத்மா’ என்னும் பத்து வயதுச் சிறுமி, அந்தப் பொட்டலத்தைப் பார்க்கிறாள்.

பளபளவென்று உள்ளே ஏதோ மின்னுகின்றன. பக்கத்தில் வா என்று அழைப்பது போல அது இருந்தது. ஒன்றும் புரியவில்லை. எடுத்துக் கண்ணருகில் வைத்துப் பார்க்கிறாள். பத்மாவுக்கு புரியவில்லை, என்ன பொருளாக இருந்தாலும் சரி, அதைக் கொண்டு போய், ஊர்க்கோடி சத்திரத்தில் தங்கி இருக்கும் தன் தாயிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

பத்மாவின் பழக்கம் அது தான். எது கிடைத்தாலும் அதைக் கொண்டு போய் தாயிடம் கொடுப்பது தான் பத்மாவின் வழக்கம். தாய் எது சொன்னாலும், சரியாகவே இருக்கும் என்பது


அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது படித்துத் தெரியாமலே கற்றுக் கொண்ட பண்பாடு.

ஆகவே, பாத்திரத்திற்குள்ளே பொட்டலத்தை மடித்துப் போட்டு, அதைத்தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக ஒடிக் கொண்டிருந்தாள். செல்வம் தேடிவந்திருக்கிறது என்று புரியாமலே பறந்தோடிக் கொண்டிருந்தாள்.

நான்கு ரோடு சந்திக்கும் இடம். அது பரபரப்பு நிறைந்த இடம். எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மறுபுறம் ஐந்தாறு சைக்கிள் ஒட்டிகள் சேர்ந்தாற் போல் பேசியவாறு ஒட்டிக் கொண்டு வந்தனர். இன்னொரு புறம் வாடகைக்கு ஆள் ஏற்றும் குதிரை வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஆசையும், ஆவேசமும் விரட்ட ஓடிக் கொண்டிருந்த பத்மா, லாரியைப் பார்க்காமல் குறுக்கே ஓடி வந்தாள். லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுவிடவே, லாரி கொஞ்ச தூரம் ஓடி குதிரை அருகிலே போய், பெருஞ்சத்தம் போட்டு நின்றது.

பயந்து போன குதிரை, ஒருபுறம் திரும்பிக் குதித்தது. லாரியைப் பார்த்து பயந்து, வண்டியின் பின்புறமாக ஓடிய பத்மாவை, திரும்பிய வண்டி திடீரென்று தாக்கியதும் அல்லாமல், தூக்கியும் எறிந்தது.

தலையைத் தாக்கியதால், ‘ஐயோ’ என்று அலறியபடி கொஞ்சதூரம் போய் தள்ளி விழுந்தாள் பத்மா, தலையிலிருந்த பாத்திரமும் தூக்கி எறியப்பட்டது. அலுமினியப் பாத்திரத்தின் உள்ளே இருந்த பொட்டலமும், பந்து போல மேலே பறந்து, அங்கே தூரத்தில் போய்க் கொண்டிருந்த ஒருவரின் கையிலிருந்த பைக்குள் சென்று விழுந்தது.

பொட்டலம் ஒன்று விழுந்தது என்றுதெரிந்ததும், பையைப் பிடித்திருந்த அந்த மனிதர், தன் தோள்மீதிருந்த துண்டை எடுத்து, பையை ‘லபக்’ கொன்று மூடிக் கொண்டு, தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

அதனுள் என்ன இருக்கும் என்று அவருக்கே தெரியாது. பின் ஏன் அப்படி மூடினார் என்றால், அதுதான் அவருடைய தனித்தன்மை.

அவரின் பெயர் அற்புதசாமி, அவர் பெயரைப் போலத்தான் ஆளின் குணமும், பெரிய கஞ்சன் என்று பேர் எடுத்தவர். வாழைப்பழம் தின்றால் வாழைத்தோலை வீசி எறிய அவருக்கு மனம் இருக்காது. அருகில் யாரும் இல்லாவிட்டால், அப்படியே தோலோடு விழுங்கி விடுவார். இல்லையேல், அவருக்குத் திருப்தியே இருக்காது.

அப்படி யாராவது பார்த்துக் கேட்டுவிட்டால், அதில் ருசி இல்லாமலா ஆடும்மாடும் அவ்வளவு சுவையாக ரசித்துச் சாப்பிடுகின்றன என்று எதிர் வினா போடுவார்.

வீதியில் எது கிடந்தாலும், காலால் எத்திப்பார்த்து விட்டால் தான், கொஞ்சமாவது மனதில் நம்மதி இருக்கும். வீதியில் கிடக்கும் வெற்று நெருப்புப் பெட்டியை எடுத்துப் பிரித்துப் பார்ப்பது அவரது பொழுதுபோக்கு, ஒரு முறை பத்து ரூபாய் நோட்டுடன் ஒரு தீப்பெட்டியைக் கண்டு பிடித்ததில் இருந்து, இப்படி ஒரு அசட்டு எண்ணம்.

பத்து பைசாவை செலவு செய்வதற்குள், பத்துத்தரம் யோசனை செய்வார். சின்னவயதிலேயே இலங்கை போய் அங்கே தங்கி விட்டவர். ஆனால் எப்பொழுதாவது தம் சொந்த ஊராகிய பேரூருக்கு வந்து போவார்.

இந்த முறை வந்து. இலங்கைக்குப் போகின்ற கெடுவும் முடிய இருந்தது. மறுநாள் புறப்படுவதாக இருந்ததால், அவர் கடைவீதிக்குச் சென்று,

தேவையான துணிமணிகளை மற்றும் வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கி வர வந்தார்.

அவ்வாறு வந்த பொழுத தான், பொட்டலம் வந்துதானாக அவர் பையிலே விழுந்தது.

பிச்சைக்காரி பாத்திரத்தில் இருந்து விழுந்த பொட்டலம், நிச்சயமாக காசு மடித்திருக்கும் பொட்டலமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, வீட்டிற்குள் போனதும் கதவை சார்த்திக்கொண்டு, பொட்டலத்தை அவிழ்த்தார் அற்புதசாமி.

குப்பையிலேதான் குண்டுமணி கிடைக்கும் என்று அவர் அடிக்கடி அனைவரிடமும் சொல்வதுண்டு.

பொட்டலத்தை ஏளனமாகவும், அதே சமயத்தில் பயபக்தியுடனும் அவிழ்த்தார்! என்ன ஆச்சரியம்! அவரது வாய் “ஆ வெனப் பிளந்து, அதிக நேரம் அப்படியே திறந்தே கிடந்தது.”

அப்பா அப்பா! என்று அவருடைய மகன், பத்து முறைக் கத்தி அழைத்துக்கொண்டே வந்து, உடலை ஆட்டி அசைத்த பொழுதுதான், அவருக்கு இந்த உலகத்தைப் பற்றிய நினைவு வந்தது. திறந்தவாயும் மூடியது.

குப்பையைக் கிளறிய கோழி, சிலிர்த்து இறக்கைகளை விரித்து உலுக்குவதுபோல, உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டார்.

அப்படியே வைரக்கற்களைக் கொண்டுவந்து முகத்திலும் கண்களிலும் ஒத்திக் கொண்டார். தழுவிக் கொண்டார். வாயார முத்தமிட்டார். சின்னக் குழந்தைபோல, அங்குமிங்கும் ஓடினார். ஆடினார், பாடினார். வீட்டிற்குள்ளேதான், வெளியிலே யாருக்கும் கேட்காமல் தான். அவர்தான் பேர் எடுத்தக் கஞ்சன் ஆயிற்றே!

வெளியே தெரிந்தால், தன் உயிரே போனதுபோல் தான் என்ற நினைவு வந்தவுடன், அவரைக் கவலை சூழ்ந்துகொண்டது.

தன் அப்பா அற்புதசாமி செய்கின்ற காரியங்கள் எல்லாம், சிறுவனுக்கு அதிக ஆச்சரியமாக இருந்தது. மின்னுகின்ற கற்களைப் பார்த்தான். மீன்போலத் துள்ளுகின்ற தந்தையைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆடிப்பாடிய அப்பா, ஏன் அசையாமல் இப்பொழுது நிற்கிறார்?

இந்த வைரக்கற்களை இலங்கைக்கு எப்படி எடுத்துக் கொண்டுபோவது என்ற கவலையால்தான் அப்பா இப்படி நிற்கிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? பத்துவயது பாலகன் ஆயிற்றே!

‘அப்பா பசிக்குது! அப்பா பசிக்குது’ என்று அழுகையோடு மகன் பேய்க் கூச்சல் போட்டவுடன் தான், அற்புதசாமிக்கு ஒரு அபூர்வமான யோசனை தோன்றியது.

அப்படியே தன் மகனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடத் தொடங்கிவிட்டார்.

ஆமாம்! மகனால்தானே இப்படி ஒரு மாபெரும் யோசனை மூளைக்கு வந்தது!